Friday, August 18, 2023

அலை-95

 அலை-95

“கையெழுத்தும் தலையெழுத்தும்”

பழைய புத்தகங்களைத் தூசிதட்டிவிட்டு புத்தகத் திருவிழாவில் வாங்கி வந்த புதுப்புத்தகங்கள் அடுக்கும்போது சின்ன நோட்டு ஒன்று கிடைத்தது. ஏதோ ஒரு புத்தகத்திலிருந்த மேற்கோள்களை எடுத்து எப்போதோ எழுதி வைத்திருக்கிறேன். அதைப் பார்த்ததும் ரொம்ப மலைப்பாக இருந்தது. நூறு பக்கங்களுக்கு மேல் கையால் எழுதியிருக்கிறேன்,அதுவும் நீட்டாக அழகாக . இப்போ அதுமாதிரி எழுத முடியுமான்னு சந்தேகமா இருக்கு. அதிக பட்சமாக நோயாளிகளின் மாத்திரை சீட்டிலோ உள்நோயாளி அட்டைகளில் தினசரி முன்னேற்றம் குறித்தோ எழுதுவதுதான் இப்போதைக்கு பேனா பிடித்து எழுதுவது. யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை என்பதால் அதுவும் கோழிக் கிறுக்கல்களாகத்தான் இருக்கும். மற்ற எண்ணங்களும் எழுத்துக்களும்  கணிணியில் தட்டச்சு செய்துவிடுவதால் கோர்வையாக எழுதும் வழக்கமே மறந்து போய்விட்டது.


முதல் முதலில் மணலில் “அ” எழுதியதிலிருந்து ரிடையர்ட் ஆகும்வரை அரசு மருத்துவமனைப் பணியில் எழுதிக் கொண்டே இருந்த கைகள் எப்படி திடீரென எழுத மறந்தன என யோசிக்கிறேன். வாட்ஸ் அப், முகநூல் எல்லாம் டைப் செய்யத் தூண்டித் தூண்டி எழுதுவதையே மறக்கடித்துவிட்டன. அறிவியல் முன்னேற்றத்தின் அடுத்த தீங்கு. தினமும் கொஞ்சமாவது எழுதுவது மூளையின் செயல்திறனுக்கு ரொம்ப நல்லது என்று எப்போதோ படிச்சது. ஆனாலும் அதைக் கடைப்பிடிக்கத்தான் அந்த மூளையே அனுமதிப்பதில்லை.


பள்ளிப் பருவத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு கையெழுத்து பயிற்சியெல்லாம் எடுப்போம். நாலு கோடு போட்ட நோட்டில் குனிஞ்சு குனிஞ்சு அழகா எழுதணும். கோட்டுக்கு வெளியே போயிடக் கூடாது, கொம்பு போடுறது அளவாக இருக்கணும். ரெண்டு கோடு போட்ட நோட்டில் capital letters, small letters , கோடு போடாத நோட்டில் கோணலாகப் போகாமல் நேராக எழுதுறது என எத்தனை வித்தைகள் கற்றிருந்தோம். கையெழுத்துக்குன்னு தனியா மார்க் வேறே போடுவாங்க. அவ்வளவு கஷ்டப்பட்டு கற்ற வித்தையை எவ்வளவு எளிதில் புறம் தள்ளியிருக்கிறோம்.


எங்க வீட்டில் சரசக்காவின் கையெழுத்துதான் ரொம்ப அழகாக இருக்கும். தமிழ் பண்டிட் என்பதால் தமிழில் உருட்டி உருட்டி எழுதுவாள்.அச்சுக் கோர்த்த மாதிரி இருக்கும். ஆனால் அவள்தான் வாழ்க்கையில் அநேக கஷ்டங்களை அனுபவிச்சாள். செக்கண்ணன் எழுத்தும் அதே மாதிரி அழகாக இருக்கும், வீட்டில் விசேஷங்கள் சம்பந்தமான விஷயங்களெல்லாம் அவன்தான் எழுதுவான். அவனும் ரொம்ப கஷ்டப்பட்டுதான் முன்னேறினான். கையெழுத்து அழகா இருந்தால் தலையெழுத்து நல்லா இருக்காதுன்னு சொல்றது உண்மைதானோன்னு எண்ணத் தோன்றும். மத்தவங்க கையெழுத்தெல்லாம் கொஞ்சம் சுமார் ரகம் தான். 


நயினார் அண்ணன் எழுத்துக்கள் classic ஆக இருக்கும். தனது திருமணப் பத்திரிக்கையை சொந்தக் கையெழுத்தில் எழுதி அச்சில் வார்த்திருந்தான். நானெல்லாம்  ஆஹா என வியந்து பார்த்த நாட்கள். நான் மூட் நல்லாயிருந்தால் சரசக்கா மாதிரி அழகா எழுதுவேன். போரடிச்சா கோழி கிண்டிடுவேன். காதல் கடிதங்களும் கவிதைகளும் கண்ணுலே ஒத்திக்கிற மாதிரி எழுதியிருக்கிறேன். பரீட்சை பேப்பரில் முதலில் உருட்டி அழகாக எழுத ஆரம்பிச்சுட்டு முடிக்கும்போது நேரம் பத்தாமல் கிறுக்கலில் முடிப்பது எல்லோருக்குமே பொதுவானதுதான். 


அந்தக்கால கதாசிரியர்கள் எல்லாம் பக்கம் பக்கமாக கைகளால்தான் எழுதியிருக்கிறார்கள். கதாசிரியர் என்றாலே பேனாவும் பரீட்சை அட்டையில் சொருகப்பட்ட பேப்பரும்தான் நம் கண்முன்னால் வரும். ஒரு கதை எழுதுவதற்கு எத்தனை ரீம் பேப்பர்கள் செலவாகியிருக்குமோ தெரியாது. இன்றைய “பொன்னியின் செல்வன்” அன்று கல்கியின் கைகளில் உருவானது எத்தனை மாதங்களோ வருடங்களோ தெரியாது. ஆனால் ரசித்து எழுதும்போது நேரம் ஒரு பொருட்டல்லதான்.


எண்பதுகளில் எங்க ஊர் “ஸ்டேஷன் பெஞ்ச்” நண்பர்கள் கூட்டமெல்லாம் சேர்ந்து கையெழுத்துப் பிரதிகளில் சினிமா விமர்சனம் செய்வார்கள். ‘பாலைவனச் சோலை’ படத்துக்குக் கூட அப்படி ஒரு கைப்பிரதி பார்த்த மாதிரி நினைவிருக்கிறது.நாலைஞ்சு பேர் சேர்ந்து கையால் எழுதியே circulate பண்ணுவாங்க. நாழிதளில் வரும் போட்டோக்களை வெட்டி ஒட்டி அது குறித்து கட்டுரை எழுதுவார்கள். அதைப்பார்த்து எனக்கு அப்போதே எழுதுவதற்கு ஒரு inspiration வந்திருக்கிறது.

அவ்வப்போது சின்ன கவிதைகள் எழுதுவேன் , ஆனால் பாதுகாத்து வைத்திருக்கவில்லை. கல்லூரியின் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து எழுதும் கவிதைகளுக்கு தோழி விசாலாட்சிதான் ஒரே ரசிகை. வகுப்பெடுக்கும் வாத்தியாரிலிருந்து எதிர் புறம் அமர்ந்திருக்கும் மாணவர்கள்வரை எதைப்பற்றியாவது கைக்கூ கவிதைகள் கிறுக்கிக் கொண்டிருப்பேன். சத்யமூர்த்தி சார் , நடனசபாபதி சார் எல்லாம் வகுப்பெடுக்கும்போது கடைசி பெஞ்ச் வரை கேட்கவே செய்யாது. போரடிக்காமல் இருக்க அவர்களைப் பற்றிகூட கவிதை எழுதிக் கொண்டிருப்பேன்.


கொஞ்ச காலத்துக்குத் தோழிகளுடன் கடிதப் போக்குவரத்து இருந்தபோது Inland letter இல் நுணுக்கி நுணுக்கி பெரிய கதைகளோடு கடிதம் போகும். பதில் வந்ததும் திரும்பத் திரும்ப வாசித்து மகிழ்வதுமுண்டு. அந்த அநுபவத்துடன் எழில் ஈரோடு சென்ற புதிதில் பெரிய கடிதம் எழுதி அனுப்பினேன். ரசித்து படித்திருப்பாங்க என்று புளகாங்கிதத்துடன் காத்திருந்தேன். தொலைபேசியில் பேசியபோது கடிதம் எப்படி இருந்தது என்று ஆர்வத்துடன் கேட்டேன். Composition மாதிரி ரொம்ப நீளமா இருந்தது பாதிதான் படித்திருக்கிறேன் மீதி நாளைக்கு படிக்கிறேன்னு சொன்னாங்க. அதுதான் அவங்களுக்கு நான் எழுதிய முதலும் கடைசியுமான கடிதம். ஆனால் அதிலிருந்து ஒரு விஷயத்தைத் தெளிவா  கத்துகிட்டேன். என்ன எழுதினாலும் நச்சுன்னு எழுதணும், வழ வழண்ணு எழுதக்கூடாது. படிக்கிறவங்களுக்கு போரடிக்கிறதுக்குள்ளே முடிச்சிடணும்னு முடிவெடுத்துகிட்டேன்.அதனால்தான் என்னோட “அலை” எல்லாமே 30mb க்கு மேலே போகாது.  


என்னோட பதிவுகளைப் புத்தகமாகப் போடச் சொல்லி நிறைய நண்பர்களும் உறவினர்களும் யோசனை சொல்லியிருக்கிறார்கள். எனக்கும் கொஞ்சம் நப்பாசை இருக்குது. ஆனால் தயக்கமும் இருக்குது. புத்தகக் கண்காட்சிக்குப் போனபோது குமுதம் பப்ளிகேஷனில் நண்பன் ராம்கியின் “எரிதழல்” என்ற புத்தகத்தின் இரண்டு பாகங்களும் கிடைத்தது. அவனை பாதித்த விஷயங்கள் பற்றி சின்னச் சின்ன கட்டுரைகளாக எழுதியிருந்த பதிவு. வாங்கிட்டு வந்த அன்னைக்கே முழு புத்தகத்தையும் வாசித்துவிட வேண்டும் என்று உத்வேகத்துடன் ஆரம்பித்தேன், ஆனால் இன்னும் பத்து கட்டுரை கூட வாசித்து முடிக்கவில்லை. நம்ம எல்லோருடைய வாசிப்பு threshold உம் அவ்வளவுதான். புத்தகம்தான் கையில் இருக்கிறதே அப்பப்போ வாசித்துக் கொள்ளலாம் என்று தோன்றிவிடும். என் எழுத்துக்களை புத்தகமாக்குவதற்கான  தயக்கத்துக்குக் இந்த மாதிரி காரணமும் இருக்குது.


தொலைத் தொடர்புகள் முன்னேற ஆரம்பித்துவிட்டதால் கடிதம் எழுதும் வழக்கமும் ரொம்பவே குறைய ஆரம்பித்துவிட்டது. வாழ்த்து மடல்கள் மட்டுமே கடிதத் தொடர்பாகிவிட்டது.இப்போ அதுவும் சமூக ஊடகங்கள் வாயிலாகவே போய்விடுகிறது. தட்டச்சுகூட செய்வதில்லை, just forward.தான். என்னிடம் கூட நிறையபேர் கேட்டாங்க. எப்படி இவ்வளவு நீளமா எழுதுறீங்க, மைக்கில் பேசி ரெக்கார்ட் பண்ணுவீங்களா என்றெல்லாம் கேட்டாங்க. தமிழ் Font மூலம் தட்டச்சுதான் செய்கிறேன். ஆனால் வேகமாகச் செய்துவிடுவேன். காசோலையில் கையெழுத்துபோடுவதே வேறுமாதிரி இருக்கிறது என்று திரும்பி வந்துவிடுகிறது. பக்கம் பக்கமாக கையில் எழுதுவதெல்லாம் இனிமேல் சாத்தியமே இல்லை. ஆனாலும் தாளில் பேனா கொண்டு எழுத வேண்டும் என்ற ஆசை மனதின் ஒரு மூலையில் உறங்கிக் கொண்டிருக்கிறது. 

SAVE PAPER SAVE TREES என்ற எண்ணமும் இடைச் சொறுகலாக ஓடுகிறது.

0 Comments:

Post a Comment

<< Home