Friday, May 19, 2023

அலை-85

 அலை-85

“அன்றைய சினிமாவும் கல்லூரிக் காதலும்”
ரெண்டையுமே பிரிச்சுப் பார்க்க முடியுமான்னு தெரியலை. சினிமா பார்த்து பார்த்து கெட்டுப்போயி இந்தப் பிள்ளைங்க எல்லாம் காதலிக்க ஆரம்பிச்சுட்டாங்க என்று எங்க காலத்து பெருசுங்க அடிக்கடி சலிச்சுப்பாங்க. கொஞ்சம் மிகையாகத் தோன்றினாலும் எங்க காலத்து காதல் சினிமாவோடு இரண்டறக் கலந்துதான் இருந்துச்சு.
நிரந்தர முதல்வர் மாதிரி , நித்திய பொழுதுபோக்கு எங்களுக்கெல்லாம் சினிமாதான். கல்லூரி நேரம் முடிந்ததும் சினிமா தியேட்டர் வாசலில்தான் பெரும்பான்மையான மாணவர் கூட்டம் இருக்கும். கல்லூரி நேரத்திலேயும்கூட திரை அரங்கிலேயே குடியிருந்த கோமகன்களும் உண்டு. திருநெல்வேலி மாதிரி சிறிய நகரங்களில் அடுத்தடுத்து நிமிர்ந்து நிற்கும் திரையரங்குகளில் கண்டதும் களித்ததும் ஏராளம்.
விமர்சனம் தெரியும் முன்பே படம் பார்த்தால்தான் தனி ஸ்வாரஸ்யம் என்று புதுப்படத்தின் முதல் காட்சிக்கே நெரிசலில் முண்டியடித்து பார்ப்போம். அந்தந்த சீசனில் வரும் படத்திற்கேற்ப கல்லூரிக் காதல்கள் பலவித பரிணாமங்களை எடுக்கும். பெல்பாட்டம் ஹீரோவைப் பார்த்து பாவாடை ரேஞ்சுக்கு புரளப் புரள பேண்ட் அணிந்து வந்து பெண்கள் விடுதி முன்பு பரேடு நட்த்தும் ஆண்கள் ஒருபுறம். நேர்வகிடு துறந்து சைடு வகிடுடன் சந்தோஷமாகத் திரியும் பெண்கள் மறுபுறம்.
சினிமாவால் நாங்கள் ஆட்கொள்ளப் பட்டோமா இல்லை எங்களால் சினிமா உலகம் தழைத்தோங்கியதா என்று பிரித்து சொல்ல முடியாது. ஆனால் ஒவ்வொரு காதலுக்குப் பின்னும் ஒரு சினிமா இருக்கும். சினிமாப்பாடல்களின் வரிகள் நிறைய காதல் சங்கமங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இளையராஜா, எம் எஸ் வி போன்றோரின் இன்னிசை; கண்ணதாசன் , வாலி போன்றோரின் கவிதை வரிகள் காதலுக்கு துணை போனது மட்டுமல்ல, தூதும் போனது.
’16 வயதினிலே’ ஆரம்பித்த காதல் கதைகள் ’அன்னக்கிளி’களை ’நினைத்தாலே இனிக்கும்’ அளவுக்கு மந்திரக்கோலாகக் கட்டிப் போட்டது. மயிலு, பாஞ்சாலி எல்லாம் அவரவர் மனசுக்குப் பிடித்தவர்களின் செல்லப் பெயர்களானது. கடுப்பேத்தும் காளையர்கள் பரட்டையாகவும் பாவப்பட்ட ஜென்மங்கள் சப்பாணியாகவும் கலாய்க்கப்பட்டார்கள். ஆங்காங்கே ’நெஞ்சத்தைக் கிள்ளாதே’ சுஹாசினிகளும் உண்டு. மனதுக்குப் பிடித்த பெண் கண்டுகொள்ளாமலே இருந்தால் ‘ஒருதலை ராகம்’ ராசியில்லா ராஜாவாக முகம் முழுக்க தாடியுடன் அலையும் ஒரு கூட்டம். தாடி மழிக்கப்பட்டால் காதல் ஓகே ஆகிவிட்டதை உலகமே தெரிந்துகொள்ளும்.
தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்னு சொல்லுவாங்க. மத்தவங்களையெல்லாம் குமைக்கிறவங்களுக்குக் கூட தன் காதலை சொல்லும் போது ஏக பிரச்னையாகிவிடும். இப்போ மாதிரி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மூலமே single ஆ committed ஆன்னு சுலபமா சொல்லிட முடியாது. அந்த மாதிரி சமயத்தில் எல்லாம் ஏதாவது ஒரு சினிமாதான் உதவிக்கு வரும்.
’புதிய வார்ப்புகள்’ படத்தில் பாக்யராஜ் சொல்ற மாதிரி “நீங்க இதயத்தைக் கொடுத்தா வாத்தியார் குங்குமம் கொடுப்பாராம்” என்று நேராகச் சொல்ல முடியாது. ஆனால் அந்த வசனத்தை ஜாடையாக மேற்கோள் காட்டலாம். ஓகே ஆகிறமாதிரி இருந்தால் ஏதாவது குறிப்பு கிடைக்கும், சந்தோஷமாக தாடி எடுத்துடலாம். முடியாத மாதிரி தெரிஞ்சாலும் ஒண்ணும் நடக்காத மாதிரி விலகிப் போயிடலாம். என்னே ஒரு அறிவாளிகள் இந்த 60’s Kids!!
”கிளிஞ்சல்கள்” படத்துலே மோகன் பைபிள் வரிகளுடன் “உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” ன்னு சொன்ன பிறகு மதநூல்களிலில் இருந்தும் புராணங்களில் இருந்தும் தீவிரமா மேற்கோள்களைத் தேடி அலைந்தவர்களும் உண்டு. எத்தனை பேர் அப்படி முயற்சி செய்து வெற்றி பெற்றார்கள் என்ற கணக்குதான் இல்லை. ’மரோ சரித்ரா’வுக்குப் பின் டேபிள் விளக்குகள் பட்ட பாடும், ‘இளமை ஊஞ்சலாடுகிறது’க்குப் பின் தொலைபேசி போட்ட சத்தங்களும் சூப்பரோ சூப்பர்.
இதெல்லாம் ஓரளவுக்கு எங்களுக்குத் தெரிந்த கதைகள்தான். ஆனால் எத்தனை ‘ஒருதலை ராகம்’ இருந்ததுன்னு யாருக்கும் தெரியாது. நம்மைச் சுத்தியே ரெண்டுமூணு பேராவது இருந்திருப்பாங்க. ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ என்று பெருமூச்சுக்களுடன் வருடங்களை முழுங்கிவிட்டு சொல்ல மறந்த கதைகளுடன் பெட்டியைக் கட்டினவர்களும் இருந்திருக்கலாம்.
ஜாதி, மதம், பொருளாதார பிரச்னைகளால் காதல் ஜோடிகளுக்கு ஏற்படும் பிரச்னை பற்றி ஏதாவது ஒரு படம் வந்துகொண்டேதான் இருக்கும். ’அலைகள் ஓய்வதில்லை’ மாதிரி பூணூலையும் சிலுவையையும் தாங்கிப் பிடித்த ஜோடிகளும் உண்டு, ’தப்புத் தாளங்கள்’ போன்று பிரிந்து சென்றவர்களும் உண்டு. இன்னும் இருபது முப்பது வருடங்களில் இந்த வேறுபாடுகளெல்லாம் நீங்கி, காதல் என்பது சுகமான அநுபவமாகிவிடும் என்று கனவு கண்டோம். ஆனால் நாற்பது ஆண்டுகள் கடந்த பின்னும் ஆவணக் கொலைகள் என்ற புது அத்தியாயத்துடன் நிலைமை கவலைக்குரியதாக மாறிவிட்டது,
கல்லூரிப் பருவத்தில் காதலிக்காமல் சென்றவர்கள் மிகக் குறைந்த விகிதத்திலேதான் இருந்திருப்பார்கள். அவர்களையெல்லாம் ‘புத்தகப் புழு’க்களாகவும், சமுதாய காவலர்களாகவும் உயர்ந்த அந்தஸ்து கொடுத்து நாலடி தள்ளியே வைச்சிடுவாங்க. அது மட்டுமில்லாமல் காதலில் சொதப்பல்கள் வரும்போது நடுநிலையில் நின்று அறிவுரைகள் வழங்க அவங்களைவிட்டா ஆள் கிடையாது. நானும்கூட ஒருதலை ராகத்தில் விழுந்து, அறிவுரை சொல்லும் நிலைக்கு உயர்ந்து, மறுபடியும் காதலில் சொதப்புவது எப்படின்னு ஆராய்ச்சி பண்ணும் நிலைமைக்கு வந்துவிட்டேன். இத்தனை பேருக்கும் கண்கண்ட தெய்வமாக இருந்த சினிமா என்னை மட்டும் எப்படி கைவிடும்.
சினிமா பைத்தியம் என்று சொல்லுமளவுக்கு வாரத்துக்கு ஏழு சினிமா பார்க்கக்கூடிய எனக்கு, இருபது வயதுக்குள் ரெண்டோ மூணோ சினிமா மட்டுமே பார்த்திருந்த Dr. எழில்வேந்தன் MBBS அவர்களைத் துணை சேர்த்தது விதி. மோதலில் ஆரம்பித்து நட்பாகத் தொடர்ந்து காதலாகப் பரிணமித்த சமயத்தில், அதை வெளிப்படுத்தத் தடுமாறியபோது ’பாலைவனச் சோலை’ படத்தின் ’நாம நட்புங்கறதை மீறி அடுத்த கட்டத்துக்கு எப்படிப் போனோம்னு தெரியலை” என்ற வசனம்தான் உதவிக்கு வந்தது.
கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற வேண்டிய சூழலில் அதற்குத் தோதாக ஒரு பெயர் தேர்ந்தெடுக்கும் வேளையில் சட்டென மனதுக்குள் வந்த பெயர் ‘ராஜ பார்வை’ நான்சி.
கல்லூரிக் கடலைகள், கலாய்ப்புகள், ஓடிப்போகும் காதல், உருப்படியான காதல், லவ் பெயிலியர், முறைப்படித் திருமணம், பதிவுத் திருமணம், திருட்டுக் கல்யாணம் என எத்தனை எத்தனையோ நிகழ்வுகளில் இரண்டறக் கலந்துவிட்ட அன்றைய சினிமாவுக்கு இணை இன்றைய FAST-FOOD type சினிமாக்களில் இல்லை

0 Comments:

Post a Comment

<< Home