Tuesday, December 13, 2022

அலை-77

 அலை-76

“குமரி அலை”
ஈரோடு மகப்பேறு மருத்துவர்கள் குழுமத்திலிருந்து வருடம் தோறும் ‘மகளிர் மட்டும்’ சுற்றுலா செல்வது வாடிக்கை. கொரோனா காரணமாக இரண்டு வருடங்கள் எங்குமே செல்லவில்லை. நான் தலைமைப் பொறுப்பு ஏற்றபின்பும்கூட எங்குமே செல்ல முடியவில்லை. அந்த சமயத்தில் கார்டிலியா பயணக் கப்பல் சென்னையிலிருந்து சுற்றுலா கூட்டிச் சென்றதை அடுத்து மும்முரமாக பயண ஏற்பாடுகள் ஆரம்பித்தோம். ஆனால் அதன்மீது அவ்வளவாக மக்களுக்கு ஈடுபாடு ஏற்படாததால் பார்க்காத இடத்திற்குப் போகலாமே என்று சில தோழியர் சொன்னார்கள்.
எல்லோரும் பிஸி மருத்துவர்கள், ரெண்டு அல்லது மூன்று நாட்களுக்குமேல் வெளியூர் வர முடியாது. ஏற்கனவே விசாகப்பட்டினம் போய் வந்தாச்சு. கூட்டிக் கழிச்சுப் பார்த்து ரெண்டு இடங்கள் தேறிச்சு. ஹைதராபாத் அல்லது வதோதரா சரிப்பட்டு வருமென்று தோன்றியது. கான்பரன்ஸ், மீட்டிங் என்றெல்லாம் ஹைதராபாத்துக்கு நிறைய பேர் போய் வந்துவிட்டதால் வதோதரா என்று முடிவாச்சு. எங்க ஆஸ்தான ட்ராவல் ஏஜண்ட் GT Holidays மூலம் ஒரு பயண தொகுப்பும் வாங்கி EOGS group இல் போட்டு விட்டாச்சு.
நானும் செயலாளர் பூர்ணிமாவும் தினமும் க்ரூப்பைத் திறந்து பார்த்தால் மொத்தமே 7-8 பேர்தான் விருப்பம் தெரிவித்தார்கள். நாப்பது அம்பதுன்னு போற கூட்டம் ஏழுபேராகப் போனால் சரி வராதுன்னு நாங்களே அதை ரத்து செய்துவிட்டோம். நாம தலைவியாக இருக்கும்போது நம்ம ஊரை சுத்திக் காட்டினால் நல்லாருக்குமேன்னு தோணுச்சு. கன்யாகுமரி போலாமான்னு கேட்டப்போ நிறைய பேருக்கு உடன்பாடு இல்லை.
ஈரோட்டிலிருந்து வெள்ளி இரவு புகை வண்டியில் கிளம்பினால் சனி மற்றும் ஞாயிறு ஊர் சுற்றிப் பார்த்துவிட்டு திங்கள் காலை ஈரோடு வந்து சேர்துவிடலாம். பயணம் இலகுவாக இருக்கும், இரண்டு நாட்கள் முழுதாகக் கிடைக்கும், சேர்ந்து போவது எந்த இடமாக இருந்தாலும் ஜாலி பண்ணிக் கொள்வோம் என்று சொன்னவுடன் ஒரு கும்பல் ரெடியாகிவிட்டாங்க. புகைவண்டி டிக்கெட் எடுப்பது , லோக்கலில் சுற்றிப் பார்ப்பது, ரிஸார்ட் ஒழுங்கு பண்ணுவது எல்லாம் நம்மாலே முடியாது என்பதால் GT Holidays கிட்டேயே பொறுப்பை விட்டுட்டோம்.
நாகர்கோவிலில் அனந்தியா ரிஸார்ட்தான் வேண்டுமென்றும் சொல்லியாச்சு. A/C train, Resort, லோக்கலில் சுற்ற A/C bus , ஆறுவேளை உணவு எல்லாம் சேர்த்து 10000/ ரூபாய்தான் என்றவுடன் எல்லோருக்கும் சந்தோஷமாகிப் போனது. உறவினர்கள், நண்பர்கள் (பெண்கள் மட்டும்) அழைத்து வரலாம் என்று சொன்னதும் எண்ணிக்கை அரை சதத்தைத் தாண்டிவிட்டது.
இத்தனை பேர் போகும்போது ஸ்பெஷல் ஆடை அலங்காரங்கள் வேண்டுமென்று ஒரே கலரில் ட்ரெஸ் எடுத்துக் கொண்டோம். இதுவரை மாடர்ன் ட்ரெஸ் போடாதவர்கள் எல்லாம்கூட சுடிதார் தைத்துக் கொண்டார்கள்.
அத்தனை பேருக்கும் ஒரே கலரில், (மயில் வண்ண நீலம்) 150 மீட்டர் அளவில் துணி கிடைக்காமல் கடை கடையாக ஏறி இறங்கியது தனிக்கதை. எப்படியோ பூர்ணிமா ஒரு ஆளைப் பிடிச்சு துணி ஏற்பாடு செய்துவிட்டாள். அதை வாங்கி தனித் தனி அளவுகளாக வெட்டி அனுப்பி வைத்த நாளில் இருந்தே டூர் மூட் களை கட்டிவிட்டது. இடையிடையே பயணத் தொகுப்பில் சில மாற்றங்கள் செய்வது பற்றி யாராவது பேசிக்கொண்டே இருப்பார்கள்.
பயனம் தொடங்க சில நாட்கள் இருக்கும்போதே ரெண்டு மூணுபேர் வரமுடியாத சூழல் ஏற்பட்டது. கடைசி நேரத்தில் வர ஆசைப்பட்ட சிலரை அதில் இணைத்துக் கொண்டோம். பயணச்சீட்டு ரத்து செய்து மாற்று சீட்டுகள் வாங்கி அதே எண்ணிக்கை மாறாமல் ஏற்பாடாகிவிட்டது. தோழி கிருஷ்ணவேணி குடும்பத்தினர் பன்னிரெண்டுபேர் வர இருந்ததால் எங்கள் குழுமத்தில் இணைக்க முடியவில்லை. ஆனாலும் அவர்களே தனிப்பட்ட முறையில் பதிவு செய்து எங்களுடனேயே பயணித்தார்கள்.
பார்த்துப் பார்த்து தீபாவளிக்கு அடுத்தவாரம் ஒழுங்கு பண்ணினால், அந்த ஞாயிறு அன்று முஹூர்த்த நாளாம். முக்கியமான திருமணங்களுக்கு வீட்டுக்கு ஒருவர் போனால் போதும் என்ற கணக்கில் கணவர்களுக்கு ஹோம் ஒர்க் கொடுத்துவிட்டு பயணத்துக்கு ரெடியாகிவிட்டோம். சனிக்கிழமை முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்க இருப்பதால் கன்யாகுமரியில் அதிக மழைக்கு வாய்ப்புன்னு செய்திகள் வேறு. மழை பெய்தால் முழு நேரமும் விடுதியிலேயே உட்கார்ந்து எஞ்சாய் பண்ணவேண்டியதுதான்னு நினைச்சுகிட்டோம். இரவு 8.50க்கு ட்ரெயின் என்பதால் யாரும் சரிவர சாப்பிட்டு இருக்க மாட்டார்கள் என்று சிம்பிளாக மினி ஸ்னாக்ஸ் எற்பாடு செய்யப்பட்டது.
எங்களுடன் பயணம் முழுவதற்கும் உதவி செய்ய இரண்டு டூர் மேனேஜர்கள் ஆஜராகிவிட்டார்கள். வெள்ளிக்கிழமை இரவு ஸ்டேஷன் வளாகத்தில் காரை நிறுத்த இடமில்லாமல் ஜே ஜே என இருந்தது. ஆறிலிருந்து எழுபதுக்கு மேலும் வயதுள்ளவர்கள் ப்ளாட்ஃபாரத்தில் கும்பலாக அரட்டை அடித்து குதூகலமாக இருந்ததைப் பார்க்கவே அழகாகவும் அற்புதமாகவும் இருந்தது. புகைவண்டியில் ஏறியதும் அன்னதான style இல் எல்லோருக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
நாகர்கோவிலில் இறங்கியதும் குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள் நேராக ரிஸார்ட் போயிட்டாங்க.
மற்றவர்களெல்லாம் ஹோட்டலில் செக் இன் ஆகி ரெடியாவதற்கு முன்னரே காஃபி குடிக்க விரும்பியதால் அனைவரும் ரோட்டோர கடையில் சுடச் சுட குடித்தோம். யாருமே பந்தா பரமசிவமாக இல்லாமல் எல்லோரும் எளிமையாக நடந்துகொண்டது மிகச் சிறப்பு. எல்லோரும் ரெடியானதும் ஆரியபவனில் ஆவி பறக்கும் இட்லி, தோசை, பூரி என அனைத்து ரகங்களையும் ஒரு கை பார்த்துவிட்டு கோவிலுக்குக் கிளம்பினோம்.
முதலில் நாகராஜா கோவில் சென்றோம். நாகலிங்கப் பூ கொத்தொ கொத்தாகப் பூத்திருந்த அழகைப் படமெடுத்து கொண்டோம். அடுத்ததாக சிறப்பு வழிபாடு, என் பெயருடைய சுசீந்திரம் தாணுமாலையன் கோவிலுக்குச் சென்றோம். (தாணு- சிவன், மால்- திருமால், அயன் – பிரம்மா) என மூன்று கடவுள்களும் இணைந்த காட்சியளிக்கும் தலம். நண்பர் மூலம் வழிகாட்டி ஏற்பாடு செய்திருந்ததால் நன்கு விளக்கிச் சொல்லக் கேட்டோம். பெரிய ஆஞ்சநேயர் உடம்பு முழுக்க வெண்ணைய் பூசிக் கொண்டிருந்தார்.
அங்கிருந்து முட்டம் கடற்கரை சென்றோம். பருவமழை சீசன் என்பதால் வெயில் குறைவாகத்தான் இருந்தது. “கடலோரக் கவிதைகள்” படம் எடுத்த இடம் என்பதால் நிறைய பேர் ஜென்னிஃபர் டீச்சர் மாதிரி குடையுடன் அலைகள் முன்னர் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். நானும் ஜென்னிஃபர் டீச்சர் மாதிரி கையில் குச்சி எடுக்காத குறையாக எல்லோரையும் கடலுக்குள் இறங்காதபடி எச்சரித்துக் கொண்டே இருந்தேன். அதனால் ஒரு போட்டோவில்கூட நான் இருக்க மாட்டேன்.
[1:29 pm, 07/11/2022] Nancy Jio: எப்படி தடுத்தாலும் ஆர்வ மிகுதியில் ஓடுபவர்களை ஒண்ணும் செய்ய முடியவில்லை. குழந்தைகளாகிப் போன பாட்டிகள் அதிகம்தான். ஆர்ப்பரித்துவந்த அலைகளில் சிலர் புரண்டனர், சிலர் பாறைகளில் காலை இடித்துக் கொண்டனர், முதலில் தயங்கி தயங்கி நின்ற சிலரும் தண்ணீரில் கால் நனைக்கும் ஆசையில் அலை முத்தமிட்ட இடங்களில் நடந்ததால் எல்லோர் உடைகளும் நன்கு நனைந்துவிட்டது. கடல் தண்ணீரின் கச கசப்பு பழக்கமில்லாததால் பத்மனாபபுரம் அரண்மனையைப் பார்ப்பதை ஒத்திவைத்துவிட்டு ரிஸார்ட்டுக்கே போய்விட்டோம்..
மதிய உணவு ரெடியாக இருந்தது. எற்கனவே மீன் குழம்பு கண்டிப்பாக வேண்டும் என்று சொல்லியிருந்ததால் சுவையான உணவு கிடைத்தது. கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு நீச்சல் குளத்தில் இறங்கிவிட்டோம். பெரிய ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் ரிஸார்ட் இருந்தது. மலைகளும் ஏரியும் காடும் கலந்த மிக அற்புதமான இயற்கை சூழல். புல்வெளிகள், தோட்டங்கள் என ரம்யமான இடம்.
அந்தி சாயும் வேளையிலிருந்தே எங்கள் getogether உம் ஆரம்பித்துவிட்டது.
தமிழ்ச்செல்வி மிக சுவாரசியமான விளையாட்டுகளுக்கான பொருட்களை சேகரித்துக் கொண்டு வந்த்ஹிருந்தாள்.கலகலப்பாக நடத்தி அனைவரையும் கவர்ந்துவிட்டாள். குட்டிகள் முதல் பாட்டிகள் வரை அனைவரையும் ஈடுபட வைத்த போட்டிகள் அநேகம். முத்தாய்ப்பாக பாட்டுக்குப் பாட்டு (அந்தாக்ஷாரி) களைகட்டியது. யாருக்குமே சாப்பிடப் போக இஷ்டமில்லாமல் ஒரே பாட்டுதான். எதற்கும் இருக்கட்டுமென்று நிறைய பரிசுப் பொருட்கள் வாங்கி வந்திருந்தோம். எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம் கொடுத்துவிட்டோம்.
காலையில் எழுந்து சின்ன நடைப்பயணம் முடித்துவிட்டு மறுபடியும் நீச்சல்குளத்தில் தஞ்சம் அடைந்தோம். திருப்பரப்பு நீர்வீழ்ச்சி செல்வதுதான் ஏற்பாடு. ஆனல் வெள்ளம் காரணமாக அருவியில் குளிக்க தடை. எனவே நீச்சல் குளமே கதியென்று கிடந்தோம். அங்கும் பாட்டுக்கு பாட்டு, தண்ணீரில் நடை போட்டி என ஏக ரகளை.பூர்ணிமா க்ரூப் போட்டோவுக்கு ஏற்பாடு செய்திருந்ததால் வேறு வழியின்றி வெளியே வந்தோம். எல்லோரும் ஒன்றுபோல் நீலக் கலர் உடைகளில் வந்தபோது பாரதிராஜாவின் கனவுக் கன்னிகள் போலவே தெரிந்தோம்.
ஒரே போட்டோ ஷூட்தான். ஏரிக்கரை, புல்தரை, நீச்சல்குளம் என வெவ்வேறு லொக்கேஷன்களில் படப்பிடிப்பு நடந்து கொண்டே இருந்தது. கிளம்ப மனமில்லாமல் பேருந்தில் ஏறினோம். இன்னும் ஒருநாள்கூட இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் எழுந்திருக்கும்.
விடு ஜூட் என்று வண்டி கன்யாகுமரி நோக்கி ’பறந்தது’ 20கிமீ வேகத்தில். பேருந்து ஓட்டுநர்தான் ஒத்துழைப்பே இல்லாத ஆள். சீக்கிரம் போனால் படகு சவாரியும் போயிட்டு பகவதி அம்மன் கோவிலுக்கும் போகலாம் என்று கணித்திருந்தோம். ஆனால் வண்டி ஓட்டம் காரணமாக இரண்டு குழுக்கள் தனிதனியாகப் போகவேண்டி வந்தது.
ஒருவழியாக வானிலை முன்னறிவிப்புப் படி , படகில் ஏறச் செல்லும்போது செம மழை. விவேகானந்தர் பாறையில் இறங்கும் போது மழை விட்டுவிட்டது. நம்ம மக்களெல்லாம் முக்கடல் சங்கமத்தில் டைட்டானிக் போஸ் கொடுத்து போட்டோக்கள் க்ளிக்கிக் கொண்டார்கள்.
திரும்பிவரும் வழியில் எப்போதும் டூர் முடிக்கும் வழக்கமாக ரோட்டோர ஷாப்பிங் நடந்தது.
நான், தமிழ்ச் செல்வி, சுகந்தி மூவரும் ஜாலியாக நடந்து வரும்போது கொப்பரைகளில் இருந்து ஆவி பறக்கும் இட்லிகள் தட்டப்படுவதைப் பார்த்தோம். நைஸாக உள்ளே நுழைந்து ஆளுக்கு ரெண்டு இட்லிகளை உள்ளே தள்ளிவிட்டு ஒண்ணும் தெரியாதது போல் பஸ் வரும் வழி பார்த்து நின்றோம். பூர்ணிமா காதில் இதை மெதுவாக சொன்னதும், தனக்கும் வாங்கித் தந்தால்தான் ஆச்சுன்னு கிளம்பிட்டாள். மறுபடியும் அதே கடைக்கு சென்று அதே ரெண்டு இட்லி. பஸ் கிளம்பும் வரை இதுபற்றி யாரிடமும் மூச்சு விடவில்லை. தலைவியும் செயலாளரும் மட்டும் தனியாகப் போயிட்டு வந்தீங்களான்னு அடி போட்டுறுவாங்க. நம்ம ஊரு இட்லி சாம்பாருக்காக ரெண்டு அடி வாங்கிக்கலாம்தான்.
நாகர்கோவில் புகைவண்டி நிலையத்தில் எஸ்கலேட்டர் வேலை செய்யாததால் சிரமத்துடன் பொருட்களை சுமந்து வந்து ரயில் பெட்டிகளில்ல் ஏற் இரவு சாப்பாடு பொட்டலங்களைப் பிரித்தோம். அதிக அளவில் சாப்பாடு இருந்ததால் இரண்டுபேருக்கு ஒரு பார்சல் போதும் என பங்கு போட்டுக்கொண்டு மீதி இருந்தவற்றை டிக்கட் பரிசோதகர் மூலம் அங்கிருந்த பணியாளர்களுக்குக் கொடுத்துவிட்டோம். எத்தனையோ முறை பார்த்த குமரிமுனை தான். ஆனாலும் என் சக தோழியருடன் பார்த்தபோது இன்னும் சிறப்பாகத் தெரிந்தது. மழையில் அவதிப்படாமல்,பிரச்னைகள் ஏதுமின்றி அனைவரும் நலமாக வீடு சேர்ந்ததில் மனம் நிறைவுற்றது.
இனிய பயணம் இன்புற அமைந்ததில் எல்லோருடைய பங்கும் இருந்தது. சிறப்புற ஏற்பாடு செய்திருந்த GT holidays, எப்போதும் புன்னகையுடன் எங்களின் தேவைகளைக் கவனித்துக் கொண்ட சந்தோஷ்& அஸ்வின், திறமையாக ஒருங்கிணைத்த பூர்ணிமா என அனைவரின் பங்கும் பாராட்டப்பட வேண்டியது.

0 Comments:

Post a Comment

<< Home