Monday, May 09, 2022

அலை-70

 அலை-70

“அன்னையர் தினம்”


ஆண்டுதோறும் மேமாதத்தின் இரண்டாம் ஞாயிறு அன்னையர் தினமாகக் கொண்டாடப் படுகிறது. ஆனா ல் வருடத்தின் எல்லா நாட்களுமே அன்னையர் தினம்தான். அன்னையன்றி ஒரு அணுவும் அசையாது இவ்வுலகில் என்பதுதான் உண்மை.

ஏப்ரல் 30ஆம் நாள் எங்கள் அம்மாவின் நினைவு நாள். அதுகுறித்து தம்பி எழுதியிருந்த பதிவு மிக நெகிழ்ச்சியாக இருந்தது. அம்மாவின் நினைவுகளை மேலும் மேலும் புரட்டிப் போட்டது.


அம்மா என்ற சொல்லுக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான நினைவலைகள் இருக்கும். அதில் அன்பு, அம்மாவின் கை மணம், கண்டிப்பு, கரிசனை, கவனிப்பு என்று ஏகப்பட்ட விழுமியங்களாக அவை பரிணாமித்துக் கொண்டிருக்கும்.


 ஆயிரம் கையுடைய அம்பிகைகளின் உருவகம் அம்மாதான். தாயிற் சிறந்தொரு கோவிலுமில்லைதான்.

எங்கள் குடும்பக் கோவிலின் முதல் தெய்வம் எங்கள் அம்மா “நாகம்மாள்”தான். அதனால் எங்கள் குடும்பத்தின் விலாசமே  “NAG 500” (நாகம்மாள் ஐநூற்று முத்து) தான்.


பெண் கல்வி, பெண் விடுதலை, பெண்கள் முன்னேற்றம் என்ற எந்தவிதமான சொற்பூச்சுகளும் புரியாத படிப்பறிவில்லாத அப்பாவி அம்மா. தனது கையெழுத்தை மட்டும் சில கோடுகளுக்குள் உள்ளடக்கி மனப்பாடமாகப் போடத் தெரிந்து கொண்டவள். நாகரீக சமூகத்தில் அம்மாவை நீங்கள் வாங்க போங்க என்று கூறித் திரியும்போது நாங்கள் எல்லோரும் அம்மாவை ஒருமையில்தான் அழைத்திருக்கிறோம். அது மரியாதைக் குறைவால் சொன்னதல்ல, அம்மாவுடனான நெருக்கமும் வாஞ்சையும் தந்த ஈருடல் ஓருயிர் பாசத்தால் சொல்வது.


சராசரி பெண்களைவிட சற்று உயரமாகவே இருப்பதால் அப்பாவின் உயரத்துக்கு ஏற்ற துணையாகவே தெரிவார்கள். எப்போதோ அம்மாவும் மூத்த மதினியும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று உள்ளது. அம்மாவின் உயரத்தில் பாதிதான் மதினி இருப்பாங்க. அம்மாவுக்கு மூக்கின் வலப்புறம் மிளகு அளவிற்கு மச்சம் உண்டு. அதுவும் கம்பீரத்தைக் கூட்டிக் காட்டுவது போலவே இருக்கும். 


அப்பாவின் படிப்பால் வந்த சாதூரியங்களை விட அம்மாவின் நடைமுறை அறிவால் வந்த நிபுணத்துவமே எங்கள் குடும்பத்தை வழி நடத்தியது என்று சொல்லலாம். அப்பா கம்யூனிஸ சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்ததால் வேலைக்குப் போவது பொருள் ஈட்டுவது போன்ற சம்பிரதாய விஷயங்களில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை. ஆனாலும் அதையெல்லாம் சமாளித்து எங்களை ஆளாக்கியதில் அம்மாவின் பங்கு மிக அதிகம். 


அம்மா அடுக்களையில் சமையல் செய்யும்போது குச்சிவீட்டு மரப்பெட்டியின் மீது அப்பா அமர்ந்து கொள்வார்கள். அப்போது நடைபெறும் உரையாடல்கள்தான்  வீட்டு நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை முடிவு செய்யும். கல்யாணம் முதல் கல்லூரி செலவுகள்வரை அனைத்தும் அங்கேதான் அலசப்படும். 


சமமான இடைவெளியில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு குழந்தை என்று எட்டு மக்களைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கியதை நினைத்தாலே பிரமிப்பாக 

இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் கற்பனை செய்தே பார்க்க முடியாத விஷயம். ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளவே ஆயிரம் அலட்டல் பண்ணும் இன்றைய அன்னையர்க்கு அம்மா மாதிரி 

ஆட்களெல்லாம் மியூசியம் 

கதாபாத்திரங்கள்தான்.  தான் படிக்காவிட்டாலும் அத்தனை குழந்தைகளையும் படிக்க வைத்து சமுதாயத்தில் உயர் நிலைக்கு கொண்டுவர செய்த தியாகங்களை நினைவு கூறும் தினமாகவே அன்னையர் தினம் அமைந்துள்ளது. 

வீட்டில் நடக்கும் சகல விஷயங்களும் அம்மாவைச் சார்ந்தே இருக்கும் என்றாலும் அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பதுபோல் சக்கரமாகச் சுழன்று கொண்டிருக்கும் அம்மா ஒரு சகாப்தம்தான். 


எங்கம்மா யாரையும் கொஞ்சியோ அரவணைத்தோ பார்த்ததில்லை. நாங்கள் எல்லோரும் சுற்றி இருப்பதை உணர்ந்த மாதிரிகூடத் தெரியாமல் முழுநேரமும் சமையல் செய்து கொண்டிருப்பதாகவே தெரியும். அடுத்தடுத்து பிறக்கும் குழந்தைகளை பெரிய குழந்தைகளே சீராட்டிக் கொள்வதால் அம்மாவுக்கு குழந்தை வளர்ப்பு பெரிய பாரமாக இருந்ததில்லை. பள்ளிக்கு அனுப்புவதிலிருந்து சாப்பாடு போடுவது வரை எல்லாமே அக்கா மதினி போன்றோர்தான் செய்வார்கள். ஆனால் அம்மாவின் கரிசனைகள் அவ்வப்போது வெவ்வேறு நிழ்வுகளாய் வெளிப்படும்.


கடைக்குட்டிப் பையன் என்பதால் தம்பி நாராயணனுக்கு மட்டும் ஏகச் செல்லம். அம்மாவின் புடவைத் தலைப்பைப் பிடித்தால்தான் தூங்குவான். அதனால் நாட்கள் செல்லச் செல்ல அம்மாவின் புடவை ஒன்று அவனுக்கு போர்த்தி விட்டுறுவாங்க. அதை சுருட்டி கொக்கு மாதிரி வைத்து முகத்தில் வருடினால்தான் தூங்குவான். பெரிய பையன் ஆகும் வரைக்கும் கூட அந்தப் பழக்கம் இருந்தது. 


எங்க ஆச்சி (அம்மாவின் அம்மா) பெயர் எனக்கு என்பதாலும் கடைக்குட்டி பெண் என்பதாலும் என்னிடம் வாஞ்சை அதிகமாக இருப்பதுபோல் தெரியும். ஆனாலும் அரைக்கால் டவுசருடன் ஆம்பிள்ளைப் பசங்ககூட விளையாடிட்டு வந்து அடி வாங்குவதும் நானாகத்தான் இருப்பேன். 


அவ்வளவு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அம்மா, எனக்கு டைபாய்ட் காய்ச்சல் வந்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோது கணநேரமும் பிரியாது என்னுடனேயே தங்கியிருந்த நாட்கள் பசுமரத்தாணியாக மனதில் தங்கியிருக்கிறது. 

காய்ச்சல் விட்டவுடன் குடல் புண் அதிகமாக இருக்கும் என்று சொல்லி காரமே இல்லாத தேங்காய்ச் சட்னியும், புளி இல்லாக் குழம்பு எனும் பத்தியக் குழம்பும் வைத்து பரிமாறிய கணங்கள் நெகிழ்ச்சியானவை. PUC  படிக்கும்போதும் மருத்துவக் கல்லூரியில் இணைந்த பின்பும் டப்பாக்களில் அடைத்துத் தரும் பொறி அரிசி மாவில் தெரிவது அம்மாவின் அன்பு. தன் குழந்தைகள் மட்டுமல்லாது அவர்களின் தோழர் தோழியரிடத்தும் அதே அன்பைக் காட்டியதில் அம்மாவுக்கு நிகர் யாருமில்லை. 


எங்க வீட்டுக்குப் பெயரே மங்கம்மா சத்திரம்தான் . எப்போதும் உலையில் சோறு கொதித்துக் கொண்டேயிருக்கும். வீட்டுக்கு யார் வந்தாலும் முதலில் சோறு சாப்பிட வைப்பதுதான் அம்மாவின் வழக்கம். எங்கள் வீட்டின் சிற்றுண்டி நேரம் கூட அரிசி சோறுதான். அதில் மணப்பது அம்மாவின் வாசமும் கூட.


 தனக்கு திருமணமாகி வந்த உடனேயே தன் தங்கைகளுக்கும் அருகருகிலேயே வரன் பார்த்து மணம் முடித்து குடும்பத்தை அனுசரணையாகப் பார்த்துக்கொண்டது பெரிய பொறுப்பு. அதனால் எங்களுக்கும் சித்தி குடும்பங்கள் சுற்றி இருந்து அக்காக்கள் அண்ணன்கள் தம்பி தங்கைகள் என உறவுகள் பெருகி பெரிய குடும்பமானோம்.


அலங்காரத்துக்கென்று அம்மா நேரம் செலவிட்டதே இல்லை என்று சொல்லலாம். என்றைக்காவது திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது மட்டும் தலைவாரி பூச்சூட்டிக்கொண்டு நெற்றி நிறைய குங்குமத்துடன் பார்க்கும்போது அவ்ளோ அழகு. வெற்றிலை போட்டு சிவந்த உதடுகளுக்கு முன் சாயம் பூசப்படும் உதடுகள் போட்டி போடவே முடியாது.

அப்போதெல்லாம் வெற்றிலை போட கொட்டைப்பாக்குதான் கிடைக்கும். அதை உடைக்கவென்றே இரும்பால் ஆன சின்ன உரலும் கம்பியும் இருக்கும். வேலையெல்லாம் முடித்துவிட்டு வெராண்டாவில் காலை நீட்டி உட்கார்ந்து வெத்தலை உரலில் பாக்கை உடைத்துக் கொண்டே ஊர் நியாயமெல்லாம் பேசுவதுதான் அம்மாவுக்கு நிரந்தர பொழுது போக்குன்னு நினைக்கிறேன். அந்தக்கால முதியோர்களுக்கு வெற்றிலை போடுவதில் அப்படியொரு அலாதி ஆனந்தம். ஆனால் புகையிலை சேர்த்துப் போடுவதில்லை. 


பிள்ளைகள் பெரியவர்களாகி பேரக்குழந்தைகள் வந்த பிறகு பேச்சுத் துணைக்கு நிறைய பேர் கிடைத்துவிட்டதால் வீடு எப்போதும் கூச்சலும் சத்தமுமாக கலகலப்பாக இருக்கும். எல்லோரும் ரவுண்டு கட்டிக் கொண்டு அம்மாவைச் சீண்டுவதும் கேலி பேசுவதும் மறக்க முடியாத நாட்கள். ஏதோ நினைவாக நேற்று சொன்னதை மறுநாள் மாற்றிச் சொல்வது அம்மாவின் வாடிக்கையாக இருக்கும். அதனால் பாண்டிச்சேரி MLA என்று கிண்டலாகக் கூப்பிட்டுக் கொள்வோம். 


அம்மா பெரிய தைரியசாலியும்கூட. என்னைத்தவிர எங்கள் வீட்டுப் பெண்கள் அனைவருக்கும் வீட்டிலேயே பிரசவம் பார்த்து மணிமணியாக முத்துக்களைப் பெற்றெடுக்க வைத்த கிராமத்து மருத்துவர் அம்மாதான். துணைக்கு கிறிஸ்டிபாய் என்ற மருத்துவச்சியைக் கூப்பிட்டுக் கொள்வார்கள். ஏதேதோ பொருட்களை அம்மியில் அரைத்து பிரசவித்தவர்களுக்குக் கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன். எனக்கு மட்டும்தான் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. நான் மூன்றுமாத கர்ப்பமாக இருந்தபோதே எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார்கள். அம்மாவே மகளாகப் பிறந்ததாகத் தோன்றியதால் என் மகளை இன்று வரை குட்டிம்மா (குட்டி அம்மா) என்றே அழைக்கிறேன்.


எல்லா குழந்தைகளிடமும் ஒரே மாதிரியான பாசம்தான் என்றாலும் மருத்தக் கல்லூரியில் சேர்ந்த பிறகு என்மீது கொஞ்சம் பெருமையுடன் கூடிய அன்பு வந்துட்ட மாதிரி தெரிந்தது. “அவள் பரணி நட்சத்திரம் தரணி ஆளுவாள் ” என்று எல்லோரிடமும் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டதுண்டு. அப்பாவின் மறைவிற்குப் பிறகு தைராய்டு புற்றுநோய் பாதித்ததிலிருந்து என் துணையின் அவசியத்தை உணர்ந்து கொண்டதால் கடைசிக்காலம் வரை என்னுடனேயே இருந்துட்டாங்க. 


எனக்குத் திருமணமான புதிதில் கொஞ்ச நாள் அண்ணன் வீட்டில் இருந்தார்கள். எனக்கு மசக்கை என்று கேள்விப்பட்டதும் வாஞ்சையாகக் கவனித்துக் கொள்ள ஓடோடி வந்தார்கள். புற்றுநோயின் இரண்டாம் அலை புரட்டிப்போட்டதில் கடைசி காலங்களை எண்ணத் தொடங்கிவிட்ட நிலையில் சொன்ன கடைசி வர்த்தைகள் இன்றளவும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. “அம்மாவுக்கு சமமாக உன்னைக் கவனித்துக் கொள்ளும் கணவர் கிடைத்திருக்கிறார். இனி நான் நிம்மதியாகக் கண்ணை மூடுவேன்” என்ற சத்தியமான வார்த்தைகள் இன்றும் என் வாழ்க்கையின் சாட்சியாக  இருக்கிறது.


அம்மாவின் நினைவலைகளே அன்னையர் தின சிறப்பு.

0 Comments:

Post a Comment

<< Home