Tuesday, December 13, 2022

அலை-75

 அலை-75

”முன்னாள் மாணவர்கள் கூடுகை”
தி-லி மருத்துவக் கல்லூரியின் இந்தக் கூடுகை வரும் செப்டம்பர் 25ஆம் நாள் நடைபெற இருக்கிறது. நானும் ட்ரெயின் டிக்கட் எல்லாம் எடுத்துட்டேன். வருடாந்திர கூடுகை, நண்பர்கள் வீட்டு விசேஷங்கள் போன்றவற்றில் வகுப்புத் தோழர்களை அடிக்கடி சந்திப்பது உண்டு. ஆனாலும் சமகால நண்பர்களைச்(contemporaries) சந்திக்க இது போன்ற சந்தர்ப்பங்கள்தான் சரியானதாக இருக்கும். நாம அக்கா, சார் என்று கூப்பிட்டவர்களும், நம்மை அக்கா என்று அழைத்தவர்களும் முட்டி மோதிக்கொள்ளப்போகும் முக்கிய சந்திப்பு.
திருநெல்வேலியில் படித்து அங்கேயே குடியேறியிருக்கும் நண்பர்களின் இடைவிடாத முயற்சியால் முன்னாள் மாணவர்கள் சங்கம் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து கொண்டு வருகிறது. அதை கெளரவிக்கும் வகையில் விழாவில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். அதிலும் கலை நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாக தோழி பானு இருக்கும்போது தோள் கொடுக்க வேண்டியதும் அவசியமாகிவிட்டது. அப்பப்போ திருநெல்வேலி காற்றை முகர்ந்தால்தான் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
பழனியப்பன் சார் கல்லூரிக்கு சென்று பார்த்துவிட்டு மாணவர் சங்க ஏற்பாடுகள் பற்றி அழகாக எழுதியிருந்தார்கள். இன்று செப்-1 , “நெல்லை தினம்” கொண்டாடப்படும் நேரத்தில் தி-லியில் செட்டில் ஆகவில்லையே என்ற ஆதங்கத்தை அதிகமாக்கியது அவ்வரிகள். ஆனாலும் ஊரைவிட்டு வந்து 38 ஆண்டுகள் ஆனபோதும் “நீங்க திருநெல்வேலியா, பேச்சு அப்பிடியே இருக்கு” ன்னு சொல்றமாதிரி நெல்லைத்தமிழ் நாவில் ஒட்டிக் கொண்டுள்ளது.
கல்லூரியின் வளர்ச்சி, புதிய கட்டிடங்கள் , மேம்படுத்தப்பட்ட சுற்றுச் சூழல் எல்லாம் நிறைவைத் தந்தாலும் எங்க கல்லூரி என்று அழைக்கப்பட்ட 70’s சூழல்தான் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது. நாங்க படிக்கும்போது ஒரே கட்டிடம்தான். அது சொல்லும் ஓராயிரம் கதைகள். பெண்கள் விடுதியில் இருந்து பார்த்தால் கல்லூரியின் தெற்குப்பகுதிகள் முழுவதும் தெரியும். மேற்குப் பகுதி அடைப்புகள் இன்றி இருப்பதால் அங்கு யார் நடந்தாலும் இங்கிருந்தே தெரியும்.
கீழே பிஸிக்ஸ் ஆய்வகம், முதல் மாடியில் பாரன்ஸிக் , இரண்டாம் மாடியில் டேஸ்-காலர்கள் (பெண்கள்)உணவருந்தும் அறை இருக்கும். நடுப்பகுதியை சைக்கிள் ஸ்டாண்ட் மறைத்துவிடுவதால் எதுவும் தெரியாது. MBBS படிப்புக்கான அத்தனை துறைகளும் அந்த ஒரே கட்டிடத்துக்குள் அடங்கிவிடும். எல்லா வருஷமும் அதே குண்டு சட்டிக்குள்தான் குதிரை ஓட்டணும். விரிவுரையாளர்களும் ஆய்வகங்களும் மட்டும் மாறும். அதனால் கல்லூரியை அங்குலம் அங்குலமாக அறிந்தவர்கள் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம்
கட்டிடத்தின் மேற்கு மூலையில்தான் பிணவறை (mortuary)இருக்கும். பிரேதப் பரிசோதனைகளின் போது உறவினர்களும் காவல் அலுவலர்களும் இருந்து கொண்டே இருப்பார்கள். மற்ற நேரங்களில் அந்த இடம் ஒரு அமாநுஷ்யத்துடனேயே இருக்கும். அதற்கு நேர் மாறாக சைக்கிள் ஸ்டாண்ட் கலகலப்பாக இருக்கும்.
தினமும் கல்லூரியை சுற்றி நடைப்பயிற்சி செய்வது எங்கள் வழக்கம். ரோட்டுக்கு அந்தப் புறம் உள்ள சதக்கதுல்லா கல்லூரி மாணவர்களும் அந்த சாலைகளையே பயன் படுத்துவதால் அவ்வப்போது சில தகறாறுகளும் வரும்.
இரண்டாவது மாடியின் கடைக்கோடியில் நூலகம் உண்டு. நெறைய படிப்ஸ் கோஷ்டிகள் தினமும் அங்கு சென்று படிப்பாங்க. நாங்களெல்லாம் மழைக்குக் கூட அங்கு ஒதுங்கியதில்லை. முதல் காரணம் அங்கே சத்தம் போடக்கூடாது, பேசக் கூடாது. ரெண்டுமே நமக்கு சரிப்பட்டு வராது. ட்ரான்ஸிஸ்டரில் பாட்டுக் கேட்டுக் கொண்டே படிக்கும் ஆசாமிகள் நாங்கள்.
சிரட்டைப் பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் வழியில்தான் எங்கள் ஃபைனார்ட்ஸ் அறை உண்டு. அதைக் கடந்து போகும்போது கொட்டு சத்தமோ, கிடார் சத்தமோ கேட்கும். அந்த அறைக்குள் சென்று பார்த்ததே இல்லை. தி-லி பொறியியல் கல்லூரி கட்டும் முகாந்திரமாக அந்த அறையையும் அரசு எடுத்துக் கொண்டுவிட்டது. கல்லூரியின் கிழக்குப் புறமாக பெரிய மைதானம் உண்டு. அங்குதான் சகல விதமான விளையாட்டுகளும் நடக்கும்.
கல்லூரியின் முகப்பில் இரண்டு பிரம்மாண்டமான வாயில்கள் இருந்தபோதும், யாருமே அதை உபயோகித்ததில்லை. சைக்கிள் ஸ்டாண்ட் அருகிலும், அனாடமி ஹால் அருகிலும் உள்ள சிறு வாயில்கள்தான் எங்களின் திட்டிவாசல்கள். நூலகத்தின் நேரம் முடியும் வரை அந்த வாயில்கள் திறந்தே இருக்கும்.
அனாடமி ஹாலின் வெளிப்புரம் இருக்கும் சிறிய மைதானத்தில் திறந்த வெளி சினிமா போடுவார்கள். கேலியும் கிண்டலும் விசில் சத்தமும் கைதட்டலுமாக ரொம்ப ஜாலியாக இருக்கும். வயதும் வாலிபமும் கடலையும் காதலும் பெருக்கெடுத்து ஓடும். அதைக் குமைப்பதற்கும் ஒரு கூட்டம் வரும். தன்ணியடித்து வந்து தகராறு செய்பவர்களும் உண்டு. ஜாலியான சேஷ்டைகள் செய்து எல்லோரையும் சந்தோஷப்படுத்தும் கூட்டமும் உண்டு.
நாங்கள் படித்த எழுபதுகளில், பொழுதுபோக்கு அம்சம் என்பது சினிமா மட்டுமே. தொலைக்காட்சிகூட மிகக் குறைந்த அளவுதான். வெள்ளிக்கிழமை “ஒளியும் ஒலியும்” ஞாயிற்றுக் கிழமைகளில் சினிமா என்ற அளவில்தான் உண்டு. அதனால் கல்லூரிதான் எங்களின் பொழுது போக்குக் களமுமாக இருந்தது. விடுதியின் பக்கவாட்டில் கைப்பந்து விளையாடுவது, கல்லூரியில் அலுவலக அறை முன்னால் உள்ள இடத்தில் இறகுப் பந்து விளையாடுவது என்று எந்நேரமும் துறு துறுவென்றுதான் சுற்றித் திரிவோம்.
எங்க கல்லூரி வளாகம் அத்துவானக் காடுபோல்தான் இருக்கும். சாயங்காலத்துக்குப் பிறகு வெளியே இருந்து சுடுகுஞ்சு உள்ளே வரமுடியாது. கும்மிருட்டாக இருந்தாலும் பயமே வந்ததில்லை. பாதுகாப்பு அரணாக எங்கள் கல்லூரி மாணவர்கள் எப்போதும் இருப்பார்கள் என்ற தைரியம் உண்டு. அதற்கு ஏற்றாற்போல் அர்த்த ராத்திரியில் கூட விடுதி முன்னால் சைக்கிள் பவனி அவ்வப்போது நடக்கும்.
மருத்துவமனை வளாகமும் ஒரே பெரிய கட்டிடம்தான்.தீப்பெட்டி அடுக்கி வைத்ததுபோல் அங்கங்கே கண், தோல், TB, ID என்று குட்டி குட்டி பிரிவுகள் இருக்கும். மகப்பேறு மட்டும் கொஞ்சம் பெரிதாகத் தனிக் கட்டிடத்தில் இருக்கும்.ஒரு யூனிட்டில் இருந்து எட்டிப் பார்த்தால் அடுத்த யூனிட் தெரியும். ஒரே வெராண்டாவில் அத்தனை புற நோயாளிகள் பிரிவும் அடங்கிவிடும். வார்டுகள், மருந்தகம், பரிசோதனைக்கூடம், எக்ஸ்ரே என்று சகல விஷயங்களையும் ஒரே இடத்தில் வைத்திருந்தார்கள்.
“சிறுகக் கட்டி பெருக வாழ்” என்று சொல்வார்கள். உண்மையாகவே சின்ன வட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்ததால் எல்லோருக்குள்ளும் ஒரு பரிச்சியம் இருந்தது. எங்களுக்கு முன்னாலும், பின்னாலும் இருந்த ரெண்டு மூணு வருட மாணவர்களை இன்றளவும் ஞாபகத்தில் வைத்திருக்க முடிகிறது. தற்போதைய மாணவர்களுக்கு அவர்கள் வகுப்புத் தோழர்களையே முழுவதுமாகத் தெரியவில்லை.
முன்னாள் மாணவர் கூடுகையின்போது ”நடை பயின்ற கால்கள் தன்னின் தடயத்தை”ப் பார்க்க வேண்டும்.
Arumuga Nainar, Illayaravi Dharmalingam and 25 others
6 comments
1 share
Like
Comment
Share

0 Comments:

Post a Comment

<< Home