Tuesday, December 13, 2022

அலை-76

 அலை-76

“ பொன்னியின் செல்வன்”
தமிழை நேசிப்பவர்களின் தவப்புதல்வன் என்றே சொல்லலாம். வரலாற்று நாவல்களில் சாண்டில்யன் அவர்களின் எழுத்துக்களே முதல் வரிசையில் நின்றாலும் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் தனித்து நிற்கிறது. கதை சொல்லப்பட்ட விதமா,பாத்திரப் படைப்பா, கதாபாத்திரங்களின்பால் ஏற்பட்ட தோழமையா என்று அறுதியிட்டு சொல்லமுடியாத எண்ணற்ற விஷயங்கள் பொ.செ.வை மனதுக்கு மிக நெருக்கமாக்கியிருக்கிறது. நாம் சுற்றிக் கொண்டிருக்கும் தஞ்சை, காஞ்சி,காவிரி,கொள்ளிடம் என கதாபாத்திரங்கள் பயணிக்கும்போது நாமும் அவர்களுடனேயே சேர்ந்து பயணிக்கிறோம்.தமிழகத்தையே கதைக்களமாகக் கொண்ட முழுநீள நாவல்.
எத்தனையோ முறை நாவலாக வாசித்திருந்த அதே பொ.செ. உயிரோவியமாக திரையில் வரப்போவதை ஆவலுடன் எதிபார்த்திருந்த எண்ணற்ற ரசிகர் கூட்டத்தில் நானும் ஒருத்தி. பொதுவாக நாவல்கள் திரைப்படங்கள் ஆகும்போது மொழி, நடை,கதை எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு compromise இருக்கும். அதனால் ஒரு பயம் கலந்த எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் மணிரத்னத்தின் பொ.செ.இன்னும் மேம்படுத்தப்பட்டே வந்திருக்கிறது.
அதிகாலையிலேயே எனது தம்பி நாராயணனின் திரைவிமர்சனத்தை வாசித்தபொழுதே எனது “அலை” யும் ஆர்ப்பரிக்கத் தொடங்கிவிட்டது.
“பொன்னியின் செல்வன்” நாவலை எத்தனை முறை வாசித்திருப்பேன் என்றே கணக்கு வைக்கவில்லை. ஒருமுறை கையில் எடுத்துவிட்டால் ஐந்து பாகங்களையும் ஒரே மூச்சில் படிக்காமல் கீழே வைக்கமுடியாது. வந்தியதேவன் ,நந்தினி, குந்தவை,பழுவேட்டரையர் என சரித்திர காலத்திலேயே மனசு சுழன்று கொண்டிருக்கும் .எனது வீட்டு நூலகத்தின் நிரந்தர தொகுப்பு கல்கியின் பொ.செ. இரவல் வாங்கிச் செல்பவர்கள் திருப்பித் தர மறந்தாலும் அடுத்து வரும் புத்தகத் திருவிழாவில் புதுசாக வாங்கி வைத்துவிடுவேன். பொ.செ. கதாபாத்திரங்களுடன் அத்தனை நெருக்கம். அத்தகைய
கதாபாத்திரங்களைத் திரையில் உயிரோவியங்களாக முதல்நாள் காட்சியாக பார்த்த்போது மனசுக்குள் பட்டாம்பூச்சி படபடக்கத்தான் செய்கிறது.தோழி வீட்டுத் திருமணம் பட வெளியீட்டு அன்றே இருந்ததால் சென்னையில் முதல்நாள் காட்சி பார்க்க முடிந்தது. அதுவும் ஒத்த ரசனையுள்ள அண்ணன் தம்பியுடன்.
கடந்த கால வரலாற்றை நிகழ்கால மக்களும் ரசிக்கும்படியாக காட்சிகளும் வசனங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தது மிகச் சிறப்பு. செந்தமிழில் செப்பாமலும் கொடுந்தமிழில் கொல்லாமலும் இயல்பாகக் கதையைப் புரிந்து கொள்ளும்படி உரையாடல்கள் இருப்பதே படத்தின் வெற்றிக்கு சான்றாகும். அந்நிய மொழி பேசப்படும்போது subtitle களும் இணைந்து வருவது சமூக மாற்றத்துக்கேற்ப வளைந்து கொடுத்திருப்பதை புலப்படுத்தியது. இதுபோன்ற கூடுதல் இணைப்புகளால் தமிழ் கலாச்சாரம் அகில இந்தியாவும் ரசிக்கும் வண்ணம் Pan-India திரைப்படமாக வெற்றிபெறும் வாய்ப்பு பெற்றுள்ளது.
அனைத்து உழைப்பிற்கும் பின்புலமாக மணிரத்னம் என்ற மந்திரவாதி இருப்பது ஒவ்வொரு frame-இலும் தெரிகிறது. மனுஷன் என்னமாதிரி யோசித்து ஆராய்ச்சி செய்து படமாக்கியிருக்கிறார் .அந்த மந்திரவாதியையே மகுடி ஊதி மயக்கும் பின்னணி இசையின் சொந்தக்காரர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். பாடல்கள் ரொம்ப பிரமாதமாகத் தெரியவில்லை. ஆனால் பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்துவிட்டார்(இது தமிழ் வார்த்தையான்னு தெரியாது). அடுத்து மனதைக் கவர்ந்தது வெளிப்புறக் காட்சிகளும் செட்டிங்குகளும்தான். சோழர் காலத்திற்கே நம்மை அழைத்துப்போவது போல் இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக வியப்பில் ஆழ்த்தியது கதா பாத்திரங்களின் தேர்வு. இந்த கதாபாத்திரத்தை இவரைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது என்று சொல்லுமளவுக்கு ஒவ்வொருவரும் அந்தந்த பாத்திரமாகவே மாறிவிட்டார்கள். சரத்குமார்,பார்த்திபன்,பிரகாஷ்ராஜ், பிரபு போன்ற சீனியர்கள் முதல் கார்த்தி,ஜெயம் ரவி,விக்ரம் பிரபு போன்ற இளைய தலைமுறை நடிகர்கள் வரை அப்படியொரு அற்புதமான நடிப்பு. மிகைப்படுத்தப் பட்ட நடிப்போ பஞ்ச் வசனங்களோ இல்லாத இயல்பான நடை. சுட்டித்தனத்துக்கும் குறும்புக்கும் ஏற்ற மாதிரி கார்த்தி எங்கள் கற்பனை வந்தியத்தேவனுக்கு வடிவம் கொடுத்துவிட்டார்.
கதையின் நாயகன் அருள்மொழி வர்மன் என்றாலும் ஆக்ரோஷமான ஆதித்த கரிகாலனைச் சுற்றியே முதல் பாகம் நகர்கிறது.மிகப் பொருத்தமாக விக்ரம். அந்தக் கோபமும் மூர்க்கமும் சூப்பர். “ராவணன்” படத்தில் ஐஸுவுக்கும் விக்ரமுக்கும் இடையில் காணப்படும் காதலுக்கும் பொ.செ.வில் வரும் காதலுக்கும் ஒரு ஒற்றுமை இருப்பது போலவே எனக்கு தோன்றுகிறது. மோதலுடன் இணைந்த காதல்.
நாயகிகளாக த்ரிஷாவும் ஐஸ்வர்யாவும் போட்டி போட்டுக்கொண்டு நடிக்கிறார்கள். த்ரிஷாவின் இதழோரத்தில் சதாகாலமும் சுழன்று கொண்டிருக்கும் குறும்புப் புன்னகைக்கு நானே மயங்கிவிட்டேன். உலக அழகி பற்றி சொல்லவே வேண்டாம் “காந்தக் கண்ணழகி”தான்.
ஆனால் எல்லோரையும்விட எனக்கு ரொம்பப் பிடிச்சது ஆழ்வார்க்கடியானாக வரும் ஜெயராம்தான். மேக் அப் , நையாண்டி எல்லாம் அப்படியே நாவலில் வரும் திருமலை போலவே இருக்கிறது.
திரைப்படத்தில் இன்னும் சில குறைகளும் தவறுகளும் விமர்சிக்கப்படலாம்.மணி இந்த காட்சியை அப்படி வைத்திருக்கலாம், இந்த காட்சியில் ஏதோ சாயல் தெரிகிறது என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் தொடரலாம் .அதற்கெல்லாம் முன்பாக தெளிந்த மனதுடன் நாவலைத் திரைப்படமாக ரசிக்கவேண்டும் என்பதால் முதல்நாள் காட்சியே பார்த்தாச்சு.சுமார் மூன்று மணிநேரக் காட்சி. முதல் பாகம் முடிந்தது,இரண்டாம் பாகம் 2023 இல் என்று திரையில் அறிவித்த பின்பும் கூட இருக்கையிலிருந்து எழுந்திரிக்க மனமில்லாமல் சிலர் அமர்ந்திருந்தார்கள்.
ஒருசில கற்பனப் பாத்திரங்கள் தவிர இது நமது மண்ணின் உண்மைச் சம்பவங்களுடன் தொடர்புடையது என்று உணர்ந்து பார்க்கவேண்டும். இன்றைய தலைமுறையினருக்கு science fiction,alien characters போன்ற ரசனைகளிலிருந்து மாறுபட்ட களமாக இருக்கும்.ஆனால் ரசிக்கும்படியும் இருக்கும்.நாவல் வாசிக்காதவர்கள்கூட ரசிக்கும்வண்ணம் தான் எடுக்கப்பட்டிருகிறது.

0 Comments:

Post a Comment

<< Home