Friday, May 19, 2023

அலை-79

 அலை-79

“பள்ளிக்கூடம்”
இந்த வார்த்தையை உச்சரிக்கும் போது இன்பத் தேன் வந்து காதில் பாய்வது மாணவப் பருவத்தைக் கடந்த அனைவருக்கும் பொதுவானதுதான். மழைக்குக் கூடப் பள்ளிக்கூடத்தில் ஒதுங்காதவர்களுக்குக் கூட பள்ளிக்கூடம் என்பது பெரிய சமாச்சாரம்தான். பள்ளிப் படிப்பு தாண்டி உச்சங்களைத் தொட்டவர்கள் கூட பள்ளியைப் பற்றி நினைக்கும்போது குழந்தைகளாகிப் போவதை அடிக்கடி பார்க்கலாம்.
அத்தைகைய பெருமைக்குரிய பள்ளிக்கூடத்தின் முன்னாள் மாணவர்கள் கூடுகை என்பது பெரிய திருவிழா என்றே சொல்லலாம். எங்களை உருவாக்கி வளப்படுத்திய கா.ஆ. மேல்நிலை பள்ளியில் முதல் முதலாக அதுபோன்ற திருவிழா டிசம்பர் மாதம் நடைபெற்றது. கிறிஸ்துமஸுக்கு முந்திய வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் நடைமுறைச் சிக்கல்களால் கலந்து கொள்ள முடியாததுபோல் இருந்தது. ஆனாலும் வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்று இரவு நேர பேருந்தில் இடம் பிடித்து சென்றுவிட்டேன்.
காயல்பட்டினம்-ஆறுமுகநேரி (கா.ஆ.உயர்நிலைப் பள்ளி) என்ற இரு ஊர்களுக்கும் பொதுவான கல்விக்கூடமாக விளங்கி எண்ணற்ற சேவை புரிந்த பள்ளி.ஜாதி மத இன பாகுபாடற்ற தலைமுறையை வளர்க்க உதவியாக இருந்தது என்றும் சொல்லலாம். அதன் தாக்கத்தை அந்தக் கூடுகையின் போது கண்கூடாக காண முடிந்தது. சுமார் 45 வருடங்களுக்கு முன்பு பார்த்திருந்தவர்களை அன்று பார்த்து அடையாளம் காண முடிந்தது வியப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.
ரொம்ப நாளைக்கு பிறகு தாணக்கா(தாணு அக்கா) என்னைத் தெரியுதா என க்விஸ் நடத்திய ஏகப்பட்ட தம்பி தங்கைகளைப் பார்க்க முடிந்தது. எங்க வீட்டு எட்டு பேரில் பெரியண்ணனும் வடிவு அக்காவும் தவிர ஆறுபேரும் எங்கள் பள்ளி முன்னாள் மாணவர்கள்தான். அதனால் நிறையபேர் அவர்களை நினைவூட்டி அறிமுகம் செய்து கொண்டார்கள். செக்கண்ணன் (சிவகாமிநாதன்) விழாக்குழுவில் இருந்ததால் செக்கன்,நயினார் தங்கை என அறிமுகப் படுத்தியதுமே ”டாக்டர் தானே” என்று பரிச்சியம் செய்து கொண்டு பேசியவர்கள் அதிகம்.
காலையில் முதல் நிகழ்வாக பள்ளிக்கூடத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம். 45 வருடங்களுக்கு முன்பு நாங்கள் அமர்ந்து படித்த அதே பெஞ்சுகளில் உட்கார்ந்து புகைப்படம் எடுத்தபோது de javu வாக எண்ணற்ற நினைவுகள். அத்தனை வருடம் கழித்து வந்த பிறகும் பள்ளி அதே போல் இருந்தது மனதுக்கு நெருக்கத்தைக் கொடுத்தாலும் கட்டமைப்புகளில் முன்னேற்றமே இல்லாமல் இருந்தது வருத்தத்தையும் கொடுத்தது.
மதிய உணவிற்குப்பின் கைகழுவும் கிணற்றடியும் தொட்டியும், தலைமை ஆசிரியர் அறை முன்பு பரந்து கிடக்கும் வேப்பமர நிழலும், ஆய்வகமும், விளையாட்டு அறையும் எங்களை எழுபதுகளுக்கே அழைத்துப் போய்விட்டது. SP மஹாலில் விழா தொடங்கும் நேரம் நெருங்கிவிட்டதால் பிரியா மனதுடன் பள்ளி வளாகத்தைவிட்டுக் கிளம்பினோம்.
விழா மண்டபத்தில் கூட்டம் ஜேஜே என்று இருந்தது. ஒவ்வொரு வருடத்தினரும் குறிப்பிட்ட இடங்களில் அமரும் வகையில் பதாகைகள் ஒட்டப் பட்டிருந்தன . எதிர்பார்த்ததைவிட அதிக நண்பர்கள் இணைந்திருந்ததால் அதெல்லாம் நடைமுறை சாத்தியப் படவில்லை. ராம்கி மட்டும் பொறுப்புடன் 1976 வகுப்புக்கான இடத்தில் அமர்ந்து கொண்டான்.எங்கள் வகுப்பும் நானா வகுப்பும்தான் அதிக நண்பர்களை பதிவு செய்திருந்தோம். சரசக்காவும் நானும் தோதுவான இடத்தில் அமர்ந்துகொண்டோம்.
சமீபத்தில் பங்கு கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவர்சங்க கூடுகையின் போது அனைவருமே மருத்துவர்கள் என்பதால் எல்லா முகங்களும் ஓரளவு பரிச்சியமானதாக இருந்தது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் அதிகமாகத் தென்படவில்லை. ஆனால் பள்ளிக்கூடக் கூடுகை வித்தியாசமாக இருந்தது. பல மட்டங்களில் உள்ள மனிதர்களின் கூடுகையாக இருந்தது. ஊடகவியலாளர்கள்,ISRO விஞ்ஞானி,IAS அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், உயர் நீதிமன்ற நீதிபதி, ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள், ஆசிரியர்கள் என உச்சங்களைத் தொட்ட பல பேரைப் பார்க்க முடிந்தது. அதேபோல் வகுப்புத் தோழர்களிடம்கூட சகஜமாகப் பேசமுடியாத தயக்கத்துடனும் ஒரு சாரார் அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு நிகழ்விலும் தங்கர்பச்சானின் “பள்ளிக்கூடம்” சினிமா மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தது.
எங்களது வகுப்புக் கூடுகை சில வருடங்களுக்கு முன்புதான் நடந்திருந்ததால் நாங்கள் எல்லோருமே பரிச்சியத்துடன் பேசிக் கொண்டிருந்தோம். வேல்கனி, அமராவதி, வத்ஸலா போன்ற வகுப்புத் தோழிகளை நாற்பத்து ஐந்து வருடங்களுக்குப் பின்னர் பார்க்க முடிந்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சி நிரல் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கவில்லை. அரைத்த மாவுபோன்ற தோற்றம்தான். உயர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு. ஜகதீஷ் சந்திரா, IAS அதிகாரி சுந்தரேசன் போன்றோரின் பேச்சு ஈர்க்கக்கூடிய வகையில் இருந்தது. நண்பன் ராம்கி(ஜென்ராம்)யின் பேச்சு நேரமின்மை காரணமாக தட்டிப்போய்விட்டதில் எங்கள் வகுப்புத் தோழர்கள் அனைவருக்கும் ஆதங்கம்தான்.
தம்பி நானாவின் வகுப்புத் தோழர்கள் முனைப்பாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். பதிவு செய்வதிலிருந்து விளையாட்டு போட்டிகள் நடத்துவதுவரை எல்லாவற்றையும் இழுத்துப்போட்டு செய்து கொண்டிருந்தார்கள். ராமருக்கு அணில் மாதிரி நானும் தம்பியுடன் சேர்ந்து விளையாட்டுகளை நடத்தினேன். அவங்க வகுப்பு மாணவர்கள் ஒருபடி மேலே போய் விழாக்குழுவினர் அனைவரையும் பரிசுப் பொருட்களுடன் சிறப்பித்தது நிறைவாக இருந்தது.
நினைவுப் பரிசுகள் அடங்கிய பையை வாங்குவதற்கு ஏக தள்ளு முள்ளுவாக இருந்தது. சென்னை ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர். அதனால் எல்லோருக்கும் பட்டுபுடவை நினைவுப் பரிசாக வழங்கியிருந்தார். இன்னும் நிறைய நண்பர்களும் வழங்கியிருந்த பரிசுப் பொருட்களுடன் செம கலெக்‌ஷன் ஆயிடுச்சு. வரமுடியாத நண்பர்களுக்குக் கூட வகுப்பு லீடர் மூலம் பைகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
குழுவாக புகைப்படங்கள் எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆங்காங்கே நின்றிருந்த நண்பர்களையெல்லாம் கூட்டி வந்து போட்டோ எடுத்துக் கொண்டோம். விழா முடிந்து அனைவரும் சென்றபிறகு கூட நான்,ராம்கி, சுந்தரேசன் எல்லோரும் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தோம். இரவு புகைவண்டியில் என்னை ஏற்றிவிடும்வரை அந்தப் பேச்சு தொடர்ந்துகொண்டே இருந்தது.
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
என்ற பாடல் மனதில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது

0 Comments:

Post a Comment

<< Home