Friday, May 19, 2023

அலை-82

 அலை-82

“முதுமையில் கல்”
இந்த மார்ச் மாதத்துடன் பணிமூப்பு அடைந்து ஐந்து வருடங்கள் முடிந்துவிட்டது. வயதும் 63 இலிருந்து அறுபத்து நான்கை எட்டிப் பார்க்கிறது. வயது என்பது எண்ணிக்கைதான் என்று எங்கோ கேட்டது நினைவுக்கு வருகிறது. உடுத்தும் உடையிலிருந்து உண்ணும் உணவு வரை அதீத மாற்றங்கள் எதுவும் இல்லை. எடை அதிகரிக்கக்கூடாது என்பதற்காக சர்க்கரை சாப்பிடுவது மட்டும் நிறுத்தியிருக்கிறேன்.
பணிமூப்புக்குப் பிறகு நேரத்தை எப்படியெல்லாம் செலவிட வேண்டுமென்று ஏகப்பட்ட காணொளிகள் சமூக வலைதளங்களில் உலாவிக் கொண்டே இருக்கின்றன. அப்பப்போ அதைச் செய்யலாமா இதைச் செய்யலாமா என்று தோண்றதுதான். ஆனால் எதுவும் செய்யலை. கொரோனாவுக்குப் பிறகு வந்த வாழ்க்கை முறை மாற்றங்களே வாழ்க்கையில் நிறைய செய்ய வைத்துவிட்டது. உணவும் , உறக்கமும் , உடற்பயிற்சியும் ஒரு ஒழுங்குக்குள் வந்துவிட்டது.
சித்தோடு தோட்டமும், வீடு மற்றும் மருத்துவமனையின் மாடித்தோட்டங்களும் விவசயத்தில் மிகுந்த ஈடுபாட்டைக் கொண்டு வந்துவிட்டது. விவசாயம் செய்வதை விட அதில் கிடைக்கும் விளைச்சலை வீணாக்காமல் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பிரித்து அனுப்புவதே பெரிய பொறுப்புதான். எங்க வீட்டுக்கு யார் வந்தாலும், நாங்க யார் வீட்டுக்காவது போனாலும் காய்கறிகள்தான் பரிசுப் பொருட்கள். இவ்வளவு காய்கள் விளைச்சலாகும்போது ஆன்லைனில் விற்பனை செய்யலாமே என்று நிறையபேர் ஆலோசனை சொன்னார்கள். மற்றவர்களுக்குக் கொடுத்துக் கிடைக்கும் இன்பமே போதும் என்பதில் எனக்கும் எழிலுக்கும் ஒரே கருத்துதான். விவசாயத்தில் நாட்டம் வந்த பிறகு அசைவம் சாப்பிடுவது குறைந்து காய்கறிகள் உட்கொள்வது அதிகமாகிவிட்டது. “நம்ம ரெண்டு பேருக்கும் ஒருநாள் கொம்பு முளைச்சிடப் போகுது” என்று நான் விளையாட்டாக எழிலைச் சீண்டுவதும் உண்டு.
மருத்துவமனைக்கு ரெண்டு வேளையும் போவதும் நின்று போனது. ஒரே தரமாக பகல் முழுக்க இருந்துவிட்டு இரவு வேளைகளில் அவசர நோயாளிகள் மட்டும் பார்த்தால் போதும் என்று மனது தெளிந்துவிட்டது. அதனால் சாயங்கால வேளைகளில் கணவருடன் இருக்கும் பொழுதுகள் அதிகரித்துவிட்டது. சேர்ந்து நடைப்பயிற்சி போவது, தோட்ட வேலைகள் செய்வது போன்ற அந்நியோன்ய பொழுதுகள் மனநிறைவைத் தருகிறது. மரு.சோம்ஸ் பக்கத்து தெருவிலேயே இருப்பதால் தினமும் வருகை தந்துவிடுவார். கொரோனா சமயத்தில் கூட எங்கள் கூட்டுறவு தடைபடாமல் தொடர்ந்தது.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் வீட்டை ஒதுங்க வைக்க ஆரம்பித்ததில் நிறைய படிப்பினை கிடைத்தது. கடந்த காலங்களில் எங்க வீட்டுக்குள்ளேயே எந்தெந்த பொருட்கள் எந்த இடத்தில் இருக்கிறது என்றே எனக்கு சரியாகத் தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாக பழையன கழிக்க ஆரம்பித்த பிறகுதான் தேவையில்லாத பொருட்கள் ஆங்காங்கே திணிக்கப்பட்டுக் கிடப்பது தெரிகிறது. எழிலோட இசை சம்பந்தப்பட்ட கோப்புகளே ஒரு ரூம் அளவுக்கு இருக்கின்றன. தூசி தட்டி வரிசைப்படுத்த வேண்டும்.
அதற்கு அடுத்ததாக அலமாரி அலமாரியாக அடைந்து கிடக்கும் துணிமணிகள். அலீஸ் பிறந்தபோது (30 வருடங்களுக்கு முன்பு) எடுத்த புடவைகள் கூட நிறம் மாறாமல் புதுசு போல் இருந்ததால் கழிக்காமல் வைத்திருக்கிறேன். நம்மைச் சுற்றித் தேவைப்படுபவர்களுக்கு கொடுப்பது நல்லது என்று மொத்தம் மொத்தமாகக் கழித்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் அமுத சுரபிபோல் வந்து கொண்டே இருக்கிறது. அன்பு மிகுதியால் நண்பர்களும் உறவினர்களும் தரும் பரிசுகளே துணிமணிகள்தான்.
காலையில் எழுந்ததிலிருந்து நடைப்பயிற்சி, சமையல், வீட்டு வேலைகள், மருத்துவமனை வேலைகள், அது போக மகப்பேறு மருத்துவ சங்கப் பணிகள் என பரபரப்பாக இயங்கினாலும் அது போகவும் நிறைய நேரம் இருப்பது போலவே இருக்கும். நான்சிக்கு “வேதாளத்துக்கு வேலை கொடுக்கிற மாதிரி” ஏதாவது புதுசு புதுசா வேலை கொடுத்துகிட்டே இருக்கணும் என்று என் தோழி மரு.சித்ரா கூட அடிக்கடி கேலி பண்ணுவாங்க.
வீட்டையே சுற்றிக் கொண்டிருந்தால் ஒரு சலிப்பு வந்துவிடக் கூடாது என்பதால் உலகத்தைச் சுற்றினால் என்ன என்ற எண்ணம் வந்தது. அரசுப் பணியில் இருந்தபோது அதிக இடங்களுக்கு பயணம் செல்ல முடியாது. விடுமுறை கிடைக்காது, வெளிநாடு செல்வதென்றால் முன் அனுமதி வாங்க வேண்டும் என்று ஏகப்பட்ட கெடுபிடி. இப்போ விடுதலை கிடைச்சாச்சு. பொண்ணு கல்யாணம் ஆகி செட்டில் ஆகிவிட்டாள். பையன் படிப்புக்கு எங்க வீட்டு ATM ( Dr.எழில்) இருக்கிறாங்க. அதனால் எனக்கு சேர்த்து வைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதனால் உலகம் சுற்றும் “வாலிபி” ஆகிவிட்டேன்.
எனது எண்ணத்துக்குத் தோதாக எங்கள் வகுப்பு நண்பர்கள் ஒரு குழுவாக சேர்ந்தோம். எல்லோருக்கும் கிட்டத்தட்ட ஒரே நோக்கம். இத்தனை நாட்கள் குடும்பத்துக்காக வாழ்ந்துவிட்டோம், இனிமேல் அப்பப்போ நமக்காகவும் வாழ்வோம் என்பது போன்ற எண்ணம் கொண்டவர்கள். ஒத்த வயது, ஒரே மனநிலை, ஒரே உடல்நிலை என்பதால் இலகுவாக கைகோர்த்துக் கொண்டோம். மூணுமாசம் போலே அமைதியா உக்காந்து வேலை செய்வது. அதுலே சம்பாதிச்சதை வைச்சு அடுத்த டூர் போயிடறது. பிறகென்ன, அதிரடி ஆரம்பமாகிவிட்டது.
வகுப்புத் தோழர்கள் நிறைய பேருக்கு எங்கள் அணுகுமுறை பிடித்திருந்தாலும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் எல்லோராலும் எங்களுடன் பயணிக்க முடிவதில்லை. என்னோடு எல்லா சந்தர்ப்பங்களிலும் துணை நிற்பது நளினிதான். அடுத்து மாரி, பரா இரண்டுபேரும் சேர்ந்திடுவாங்க. இடையிடையே சால்ட், பானு, பாஸ் அண்ணா, முத்தையா, ஸ்டீபன், சைமன் என ஒரு கூட்டமே இருக்கு. இப்போ தில்லையும் சேர்ந்திருக்காங்க. எல்லோமே “தானா சேர்ந்த கூட்டம்” – தாணுவுடன் சேர்ந்த கூட்டம்.
ஏழெட்டு பேர் சேர்ந்திட்டா போதும் அடுத்த ட்ரிப் பத்தி முடிவெடுத்துவிடுவோம். எங்களுக்கு ஏத்த மாதிரி ஒரு ட்ராவல்ஸும் கிடைச்சிது. போக வேண்டிய இடம் முடிவாகிவிட்டால் எங்க செளகரியத்துக்கு ஏத்த மாதிரி மாற்றியமைத்து ஒரு பயணத்திட்டம் உண்டாக்கிவிடுவோம். பயணங்களில் மிகவும் ரசிப்பது கூடிக் கும்மாளமிட்டு அடிக்கும் அரட்டைகள்தான். உறங்கப்போகும் முன்பு பெண்கள் அனைவரும் ஒரே அறையில் முகாமிட்டு மொத்த ஊர் வம்பும் பேசி ‘பிரண்டை’ துவையல் செய்வதுதான் உச்சகட்ட மகிழ்ச்சி. இடையிடையே குடும்ப சுற்றுலாக்கள், மகப்பேறு மருத்துவ சங்கத்தின் சுற்றுலா என வரிசையாக பயணத்திட்டம் இருக்கும். ஊரிலிருந்து யாராவது என்னைப் பார்க்க வருவதாக இருந்தால்கூட முன்னதாகவே உறுதி செய்துவிட்டுதான் வர வேண்டியிருக்கிறது.
முதுமை என்பது உடம்புக்கு மட்டும்தான். மனது என்றுமே இளமைதான். தடி ஊன்றி நடக்கும் பருவம் வரும் வரை எங்களுக்கெல்லாம் இளமை ஊஞ்சலாடிக் கொண்டேதான் இருக்கும்.

0 Comments:

Post a Comment

<< Home