Saturday, September 02, 2023

அலை-97

 அலை-97

“வர்க்கலா போனோமே கலக்கலா ”

உலகம் சுற்றி ஊரெல்லாம் பார்த்து அதிசயித்து கிடந்தாலும். அருகிலிருக்கும் இடங்களில் சிலவற்றைப் பார்க்கும்போது கிடைக்கும் பரவசம் அளவிடமுடியாதது. இந்தமுறை எங்களின் கேரளா பிரயாணமும் அப்படித்தான் அமைந்தது. ஈரோட்டின் மகப்பேறு மருத்துவர்களின் “மகளிர் மட்டும்” பிரயாணம் கடந்தவாரம் 65 நபர்களுடன் புகைவண்டியில் தொடங்கியது. கெளதமியின் நாலுவயது பேரன் முதல் 74 வயது தங்கம் மேடம் வரை பலதரப்பட்ட முகங்கள். புகைவண்டி நிலையத்தின் நடைமேடையில்   “No தங்கமணி enjoy” ன்னு சந்தோஷப்பட்டுகிட்டது வழியனுப்ப வந்த கணவர்களா பிரயாணம் செல்ல இருந்த மனைவியரான்னு சொல்ல முடியாதபடி ஒரே களேபரம். 


இரவு சாப்பாடு முடித்துவிட்டு வரும்படி சொல்லியிருந்தாலும் கோபி, அந்தியூர் போன்ற இடங்களிலிருந்து வருபவர்களைக் கருத்தில் கொண்டு கொண்டு கொஞ்சம் சாப்பாடு பொட்டலங்களும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. எங்க குழுமத்தின் ‘அன்னபூரணி’ பூர்ணிமா வீட்டு இட்லியும் காரச் சட்னியும் கொண்டு வந்திருந்தாள். ஏற்கனவே சாப்பிட்டுவிட்டு வந்தவங்ககூட சட்னி வாசத்தால் பந்தியில் பாய்ந்துவிட்டோம். 65 பேருக்கும் ஒரே கோச்சில் இடம் கிடைக்காததால் ஆங்காங்கே செட்டில் ஆகி சீக்கிரமே தூங்கிவிட்டோம். காலையில் கொல்லம் புகைவண்டி நிலையத்திலேயே இறங்கி வர்கலா அகில் ரிஸார்ட்டுக்குப் போய்விட்டோம். 


வர்கலாவில் மிகவும் பிரசித்தி பெற்ற 2000 ஆண்டு பழமை வாய்ந்த ஜனார்த்தனசாமி திருக்கோவிலுக்கு முதலில் சென்றோம். அங்கிங்கெனாதபடி எல்லா சுவர்களிலும் தீபம் ஏற்றும் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து விளக்குகளும் ஏற்றப்படும் இரவு பூஜைக்கு வந்திருந்தால் கண்களுக்கும் விருந்து கிடைத்திருக்குமென்று தோன்றியது. நாங்கள் சென்றபோது துலாபாரத்தில் வைத்து ஒரு குழந்தைக்கு எடைக்கு எடை சர்க்கரை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். 

அங்கிருந்து நேராக ஜடாயு சிற்ப பூங்காவிற்கு சென்றோம். 200 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்ட உலகத்திலேயே மிகப் பெரிய பறவை சிற்பம். ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றபோது போரிட்டு இறக்கை வெட்டப்பட்ட நிலையில் ஜடாயு கீழே விழுந்த இடம் என்ற சிறப்புப் பெற்றது. ஒரு கம்யூனிஸ்ட் ஆட்சியில் இத்தைகைய இதிகாச வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து மிகப் பிரம்மாண்டமான பூங்காவை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. கடல் மட்டத்திலிருந்து 1200 அடி உயரத்தில் செதுக்கப்பட்டுள்ள பறவையைக் காண தரமான ரோப் கார் வசதி உள்ளது. ப்ளாஸ்டிக் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டிருப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ராமர் பாதம், வற்றாத நீரூற்று போன்ற அடையாளச் சின்னங்களும் சுற்றி இருந்தன. 


பஸ் பிரயாணத்தின்போது நேரம் செலவழிக்க ஏகப்பட்ட விளையாட்டுகளைத் தமிழ்செல்வி எடுத்து வந்திருந்தாள். குழந்தைகளும் பெரியவர்களும் ரசித்து விளையாடினார்கள். மதிய உணவிற்குப்பின் வர்கலா Cliff க்குப் போனோம். பாறைகளுடன் கூடிய கடற்கரை கோவாவிற்குப் பிறகு இங்குதான் இருக்கிறது. அதனால் மினி கோவா என்றே அழைக்கிறார்கள். ஒருபக்கம் அரபிக் கடல் மறுபக்கம் கடைத்தெரு நடுவில் வளைந்து செல்லும் பாதை என்று ஒரு சொர்க்கபுரியே அங்கு இருந்தது. பாறை விளிம்பில் நடந்து செல்லும்போது ரசிக்கும் கடலின் அழகு கொள்ளையோ கொள்ளை. பாலித் தீவில் டைனோசர் பாறையை பார்க்க போன அநுபவம் நினைவுக்கு வந்தது.தென்மேற்குப் பருவக்காற்று சீசன் இன்னும் முடிவடையாததால் கடலில் குளிக்க தடை இருந்தது. அதனால் கீழே இறங்கிச் செல்லும் கூட்டமும் குறைவாகவே இருந்தது. மற்ற நேரங்களில் குளிப்பதற்கு உகந்த கடற்கரையாக இருக்குமாம். போட்டோ எடுப்பதற்கு மிகச் சிறந்த இடம். தலைவி ரேவதி எனக்கு அன்புடன் கொடுத்த ‘இதயம்’ தொட்ட காஃபி பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருந்துச்சு.


எங்கள் ரிஸார்ட்டின் அருகிலேயே கடலுக்கு இறங்கும் பாதை இருப்பதால் எல்லோரும் கடற்கரைக்கு ஏதுவான உடை மாற்றிக்கொண்டு செல்ல ஆரம்பித்தார்கள். ஒரு கூட்டம் கடற்கரை ஷாப்பிங் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். நடக்கக் கஷ்டப்பட்ட சிலர் ஹோட்டலின் நீச்சல் குளத்தில் தஞ்சமடைந்தார்கள். சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கியதும் நானும் நீச்சல் குளம் வந்துவிட்டேன். தண்ணீரில் இறங்க பயந்து கொண்டிருந்தவர்களை உள்ளே இழுத்துப் போடும் வேலையை ஆரம்பித்தோம். வெற்றிகரமாக தங்கம் மேடத்தை உள்ளே இறக்கி அவர்களை சந்தோஷப்படுத்தியது மறக்க முடியாத நிகழ்வு. எல்லோருக்கும் அசதியாக இருந்ததால் உள்விளையாட்டுகள் நாளை பார்த்துக் கொள்ளலாம் எனத் தூங்கச் சென்றோம். ஆனால் பொடிசுகளுக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான்.


அதிகாலையிலேயே அலாரம் வைத்து எல்லோரையும் கிளப்பி 9 மணிக்குள் பத்மநாபசாமி கோவிலுக்கு சென்றுவிட்டோம். லோட்டஸ் மருத்துவமனை மருத்துவர் உஷா சஹாதேவன் அவர்கள் முயற்சியால் எல்லா ஏற்பாடுகளும் சரிவர செய்யப்பட்டு அமைதியான முறையில் கோவில் தரிசனம் நடந்தது. உள்ளே வராத சிலர் கோவிலைச் சுற்றியுள்ள கடைகளுக்குச் சென்றார்கள். உள்ளே சென்றவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து தனித்தனி வழிகாட்டிகளுடன் ஸ்தலபுராணம் விளக்கப்பட்டு நன்றாக ஸ்வாமி தரிசனம் செய்தார்கள். 


போட்டோ எடுக்க அனுமதி கிடையாது, உடை கட்டுப்பாடு உண்டு, பிற மதத்தினருக்கு அனுமதியில்லை என்று ஏகப்பட்ட கெடுபிடி. கோவில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும் நிலவறைகளும் சன்னிதிக்கு அருகிலேயே இருந்தபடியால் ஆயுதம் தரித்த காவலர்களின் கூரிய பார்வையும் தொடர்ந்தது. ஆனால் ரோட்டரி தலைவர்களின் பரிந்துரை இருந்ததால் தள்ளு முள்ளு இல்லாமல் அமைதியாக தரிசனம் நடந்தது. பாதம், உடல், தலை என மூன்று பாகமாக சாமி தரிசனம் இருந்தது. ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் லட்சார்ச்சனையின்போது கோவில் முழுக்க தீபம் ஏற்றி வழிபாடு நடக்குமாம். உள்ளே கொட்டப்பட்டிருக்கும் மணல் முழுவதும் அகற்றி புது மணல் நிரப்புவார்களாம். 


பூவார் ரிஸார்ட் நோக்கி செல்லும் வழியில் கிடைத்த கொஞ்ச நேரத்தில் ஆழிமலை சிவன் கோவிலுக்குள்ளும் எட்டிப் பார்த்துவிட்டோம். அமர்ந்த நிலையில் சிவபெருமானின் கைகளில் உடுக்கையும் திரிசூலமும் அழகாக செதுக்கப்பட்டிருந்தது. எங்க டாக்டரம்மா பூங்கோதையின் போட்டோகிராபி திறமையால் சூரிய ஒளி சிவபெருமானின் உச்சியில் இறங்குவது போன்ற தோற்றம் சூப்பராக வந்திருந்தது. பூவார் ரிஸார்ட்டுக்கு செல்லவே படகில்தான் செல்ல வேண்டும். அருமையான ஓணம் சாப்பாடு சாஸ்திரப்படி பரிமாறப்பட்டது. மூணு பாயாசம் வரும் என்று நிச்சயமாக எங்கள் மக்கள் எதிர்பார்க்கவில்லை. வெயில் மிக அதிகமாக இருந்ததால் கோவளம் செல்லும் யோசனையைக் கைவிட்டு பூவார் கடற்கரையிலேயே நேரம் செலவிட்டோம். போன வருஷம் முட்டம் கடற்கரையில் ஏற்பட்ட அநுபவம் காரணமாக யாரையும் தண்ணீருக்குள் அதிகமாக இறங்கவிடாமல் தடுப்பதிலேயே எனது நேரமெல்லாம் ஓடிவிட்டது. சூரிய அஸ்தமனம் பார்த்துவிட்டு ரிஸார்ட்டில் உள் அரங்கு விளையாட்டுகளில் மூழ்கிவிட்டோம். 


பலூன், பட்டியல், பொட்டட்டோ என ஏகப்பட்ட விஷயங்களை வைத்து குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் விளையாட்டுகளில் ஈடுபட வைத்த தமிழ்செல்விக்கு பெரிய “ஓ” போடலாம். Black Thunders மாதிரி கறுப்பு உடையில் தோன்றி கலக்கலா நடனம் ஆடி அதிர வைச்சாங்க அஷ்ட தேவிகள். அம்மாவும் பொண்ணுமாக ஜோடி சேர்ந்துகிட்டது சூப்பர். மறுநாள் காலையில் கோவளம் பீச் போனதுதான் பிரயணத்தின் High-light. மங்கிய அதிகாலை வெளிச்சத்தில் பறவைகளின் சத்தமும் கடல் அலைகளின் ஓசையும் மட்டும் கேட்ட மந்தகாசமான வேளையில் படகில் சென்ற அனுபவம் அனைவரையும் மெய்மறக்க வைத்துவிட்டது.கோவளம் கடற்கரை மழை சீசனுக்குப் பிறகு அன்றுதான் திறக்கப்பட்டதாம். அதனால் எங்களை கடலில் விளையாட அனுமதித்துவிட்டார்கள். ஆனாலும் குளிக்கும் அளவுக்குத் துணை இல்லாததால் கால்களை நனைத்துவிட்டுத் திரும்பிவிட்டோம். வரும் வழியில் செக்ரெட்டரி தரணி சோப் குமிழிகளைக் கையில் பிடிப்பதுபோல் எல்லோரையும் விதவிதமாக போட்டோக்கள் எடுத்து அசத்திவிட்டாள்.


மதிய உணவு வரை ரிஸார்ட்டில் இருந்த அட்வென்சர் விளையாட்டுகளில் பங்கேற்றும், விதம் விதமாக போட்டோக்கள் க்ளிக்கியும், போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கியும் பொழுது பறந்துவிட்டது. நச்சுன்னு நண்டுக்கறியும் நளபாகமுமாக சாப்பிட்டுவிட்டு முத்தாய்ப்பாக லூலூ மால் சென்று எட்டிப்பார்த்துவிட்டு புகைவண்டி நிலையம் வந்து சேர்ந்தோம். இறங்கியதுமே பேரதிர்ச்சி. “நடுவுலே கொஞ்சம் பக்கத்தைக் காணோம்” பாணியில் எங்களில் கொஞ்சம் பேருக்கு பதிவு செய்யப்பட்டிருந்த  HA1 coach ஐ எங்கு தேடியும் காணவில்லை. ஆகட்டும் பார்த்துக்கலாம் என்று 16 பேரும் H1 முதல் வகுப்பில் ஏறிக் கொண்டோம். உஷாவின் மருமகள் ஷ்ருதி ரொம்ப ஸ்மார்ட்டாக TTE யின் லேப் டாப்பில் இருந்து லிஸ்ட் கண்டுபிடித்து இருக்கைகளை A1 இல் உறுதி செய்து எங்களை ஆசுவாசப் படுத்தி விட்டாள். ஓணம் காரணமாக ஏற்பட்ட குழப்பம் அது. 


பசுமை  நிறைந்த நினைவுகளுடன் அடுத்த டூர் எப்போது என்ற எதிர்பார்ப்புடன் அனைவரும் பத்திரமாக ஈரோடு வந்து சேர்ந்தோம்.

0 Comments:

Post a Comment

<< Home