Sunday, January 22, 2006

திருப்பரப்பு அருவி



புது வருடம் பிறந்ததிலிருந்தே ஒரே ஊர் சுற்றல்தான். பிரயாண அனுபவங்கள் பற்றியே ஆறேழு பதிவுகள் போடலாம் போல. ஆனாலும் போனவருடத்தின் கடைசி நாள் சென்றதிருப்பரப்பு அருவி ரொம்ப பிடிச்சிருந்தது.தமிழகத்தின் தென் கோடியில் உள்ள சிறிய, அழகான அருவி. நாகர்கோவிலில் இருந்து வந்தால் சுமார் 40 கி.மீ. தூரம் இருக்குமென்றார்கள். நாங்கள் திருநெல்வேலி தடத்தில் வந்ததால் ஆரல்வாய்மொழி கணவாய் வழியாக சென்றோம். ரோடு ரொம்ப மோசமாக இருந்தாலும்கூட சுற்றிலும் தெரிந்த இயற்கை வனப்புகள் சோர்வு தெரியாமல் செய்துவிட்டது. மரகதப் பச்சை விரித்த வயல்களும், தண்ணென்ற நிழல் பரப்பிய ரப்பர் தோட்டங்களும், கூடவே ஓடி வந்த வாய்க்கால்களும்-கொள்ளையோ கொள்ளை அழகு. மிக சமீபத்துக்கு போகும்வரை கூட அருவி இருக்கும் சுவடே தெரியவில்லை. மிகச் சின்ன அருவி,ஆனாலும் அதிலிருந்து விழும் நீரின் வேகம் அதிகம்தான். நீர் விழும் இடத்தில் அழகாக சிமெண்ட் தரை கட்டி விடப்பட்டுள்ளது. வழுக்கி விழும் அபாயமில்லை;காலில் முள்ளோ கண்ணாடித் துண்டுகளோ குத்தும் பயமில்லை; மேலிருந்து கற்களோ பாறையோ விழும் அபாயமுமில்லை. அருகிலேயே சின்ன நீச்சல் குளம் கட்டி விட்டிருக்கிறார்கள். அருவியின் சீற்றத்துக்கு பயந்த சின்ன வாண்டுகள் அதில் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அருவியின் நடை தளர்ந்து அமைதியான ஆறாக இறங்கி ஓடும் இடத்தில் ஏகப்பட்ட சினிமா படப்பிடிப்புகள் நடந்திருப்பது பார்த்த கணத்தில் புலனானது. `கடலோரக் கவிதைகள்’ முதல் `ஆண் பாவம்’ உள்ளிட்ட பல படங்களை நினைவு கூர்ந்தோம். அவரவர் சினிமா அறிவைப் பொறுத்து ஏகப்பட்ட சினி க்விஸ்கள் அரங்கேறியது.சிறு குழந்தைகள், பெற்றோர், பெரியோர் என்ற பலதரப்பட்ட கூட்டத்துடன் செல்வதற்கு ஏற்ற பாதுகாப்பான அருவியாகத் தெரிகிறது. அருகிலேயே படகுத் துறை, பெரிய இந்து வழிபாட்டுத்தலம் , சின்ன அணைக்கட்டு போன்ற அமைப்பு என சிறந்த பொழுது போக்கு இடமாக உள்ளது.கொல்லிமலை அருவி, ஏற்காடு கிள்ளியூர் அருவி,பாபநாசம் பாணதீர்த்தம் அருவி போன்றவை கிளர்ச்சியூட்டும், அட்வென்ச்சர் தனமான அருவிகள். ஆனால் திருப்பரப்பு `குடும்ப அருவி’ன்னு சொல்லலாம். இந்த பதிவு எழுத எழுதவே `நான் பார்த்த அருவிகள்’ன்னு ஒரு தொடரே போடலாம் போல் நிறைய சரக்கு கைவசம் இருப்பது நினைவுக்கு வருகிறது.எல்லோருக்கும் காலம் கடந்து சமர்ப்பிக்கும் என் `புத்தாண்டு வாழ்த்துக்கள்’

15 Comments:

At 9:04 AM, Blogger தாணு said...

டெம்ப்லேட்டில் ஏதோ குளறுபடி செய்துவிட்டேன் போலும், அருவி கொட்டோ கொட்டென்று மூணு முறை வந்துவிட்டது. பரவாயில்லை, குளிக்க பயப்படாதவர்கள் மீண்டும் மீண்டும் நனையலாம்!!!

 
At 9:21 AM, Blogger G.Ragavan said...

தாணு, திற்பரப்பு (திருப்பரப்பு அல்ல) நீர்வீழ்ச்சி எனக்கும் மிகவும் பழக்கமானதே. அற்புதமான இடம். துளசி டீச்சர் சொல்ற மாதிரி எனக்கு கொசுவத்திச் சுருள் எக்கச்சக்கமா வருது. அதுனால பின்னூட்டத்த இங்கயே நிப்பாட்டீட்டுக் கனவுக்குப் போறேன்.

 
At 9:35 AM, Blogger rv said...

அத்தை,
அப்பாடா.. விடுமுறைல்லாம் முடிஞ்சு வந்தாச்சா? இருந்தாலும் ரொம்ப லாங்க் லீவுதான்.. பேஷண்டுகள் கிட்ட வாங்கிகட்டிகிட்டா மாதிரியே என் கிட்டேயும் கட்டிக்கோங்க. :)

//நான் பார்த்த அருவிகள்’ன்னு ஒரு தொடரே போடலாம் போல் நிறைய சரக்கு கைவசம் இருப்பது//
தொடரா.. தொடரவும். ஆனா, ஒரே பதிவையே மூணுதடவ போட்டா தொடரா???? :(

நீங்க இல்லாதபோது நிறைய நடந்துடுச்சு நம்ம பக்கம். எட்டிப்பாருங்க. வெட்டறதுக்கு நடுவுல் டைம் கிடச்சா! (விளம்பரமில்லாம எப்டி? :))

 
At 7:34 PM, Blogger ஜோ/Joe said...

தாணு,
நம்ம ஊருக்கு வந்துருக்கீங்க .நானும் அடிக்கடி சென்றிருக்கிறேன்.அப்படியே கன்னியாகுமரி வரவில்லையா?

 
At 10:58 PM, Blogger பிரதீப் said...

அடடா...
எனக்கும் கொசுவத்திச் சுருள் வருதேய்யா...
அருமையான அருவிக் கரை, சுற்றிலும் நண்பர்கள், சூடான வேர்க்கடலை... ஹூம் அது ஒரு கனாக்காலம்.

 
At 12:08 AM, Blogger தாணு said...

ராகவன்
அங்கிருந்த போர்டில் திற்பரப்புன்னுதான் போட்டிருந்தது. நான் அது மலையாள மொழிபெயர்ப்பு போலிருக்குதுன்னு நினைச்சுகிட்டேன்

 
At 12:11 AM, Blogger தாணு said...

ராமநாதன்
நான் ஊர் சுற்றிக் கொண்டிருந்தாலும் மாமா பொறுப்பாக நர்ஸிங் ஹோமை பார்த்துக் கொள்வாரல்லவா? அதனால் ஜாலிதான் எனக்கு!!
உங்க பதிவெல்லாம் இப்போதான் வாசிக்க ஆரம்பித்துள்ளேன்.

 
At 12:14 AM, Blogger தாணு said...

ஜோ
நீங்க நம்புறீங்களோஇல்லையோ, என் பொண்ணுகிட்டே உங்களைப் பத்தி சொல்லிக்கொண்டு இருந்தேன், ஏதோ கடற்கரை ஊர் என்று மட்டும் நினைவு. கன்னியாகுமரி போன வருடம் சென்றோம். மாமனார் வீட்டுக்கு கிறிஸ்த்மஸ் அ புது வருடம் செல்லும்போது நம்ம ஊரைச் சுற்றி சின்ன பிக்னிக் உண்டு. அதுக்குஜ் முந்தி மணப்பாடு கடற்கரை. ரொம்ப பிடிச்ச கடலாகி விட்டது!

 
At 12:15 AM, Blogger தாணு said...

ப்ரதீப், வருகைக்கு நன்றி. நீங்களும் தென் தமிழகமா?

 
At 12:16 AM, Blogger தாணு said...

தருமி, ஜெயக்குமார்! உங்கள் பின்னூட்டம் மெயில் பாக்ஸில் உள்ளது, பதிவின் கீழ் இல்லையே, ஏன்?

 
At 2:44 AM, Blogger சிங். செயகுமார். said...

ஒரே தலைப்பில் இரு பதிவுகள்.(அனுபவம் /நிகழிவிலும்,சிறுகதை) முதல் பதிவில் வெறும் தலைப்பு மட்டும்தான் உள்ளது. அதில் தான் தருமியும்,சிங்.செயகுமாரும் பின்னுட்டமிட்டு உள்ளனர்.

 
At 9:12 PM, Blogger Unknown said...

தாணு வாருங்கள்., நல்ல வாரம் தாருங்கள்.

 
At 1:42 AM, Blogger தருமி said...

ஹலோ, என்னங்க 'பார்த்தே' ரொம்ப நாளாச்சி..
வாழ்த்துக்கள்.

 
At 2:14 AM, Blogger பிரதீப் said...

"ப்ரதீப், வருகைக்கு நன்றி. நீங்களும் தென் தமிழகமா?"

நம்ம தென் தமிழகத்தின் வடபகுதி...
மதுர மதுர மதுரேய்

 
At 7:16 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

அப்டியே முட்டம் கடற்கரைக்கும் பொய் கொஞம் போட்டோ எடுத்துப் போடுங்க.. ப்ளீஸ்.

:)

 

Post a Comment

<< Home