Wednesday, January 29, 2020

இனிய இலங்கை- இன்ப சுற்றுலா


         இனிய இலங்கை- இன்ப சுற்றுலா
பொங்கல் விடுமுறைக்கு இலங்கை சென்றது மிக இனிமையான பயணமாக இருந்தது. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் 1977 வகுப்பு நண்பர்கள் சிலர் மட்டுமே இணைந்த பயணம்; எங்களுடன் 1975 வகுப்பை சேர்ந்த மரு.எழில் (எனது கணவர்) & மரு.சோமு (மாரியின் கணவர்) இணைந்தது மிகவும் சிறப்பு. இஷ்டப்பட்ட இனிய இணைப்பாக எங்கள் மகன் மரு.டேனியல். மொத்தமாக பத்து பேரும் டாக்டர்ஸ். எங்களில் பானு, சாலிட்டீஸ்வரன் & ஜெயந்தி மூவருக்கும் முதல் அயல் நாட்டுப் பயணம். கேட்கவேண்டுமா எங்கள் கடலை + கலாய்ப்புகளை !!. நீண்ட இடைவெளிக்குப்பின் வித்தியாசமான டூர்.
ஏகப்பட்ட டூர் packages analyse பண்ணி, relaxed ஆகப் போகலாம் என்று கொழும்பு + கண்டி மட்டும் தெர்ந்தெடுத்தோம். இடையில் BENTOTA Beach நன்றாக இருக்கும் என்று  Travel Agent suggest  பண்ணியதால் அதையும் சேர்த்துக் கொண்டோம். நுவரேலியா மிக நன்றாக இருக்கும் என்று நிறையபேர் சொன்னார்கள். ஆனாலும் நீண்ட பயணங்களை விரும்பாத சின்ன குழுவினர் ஏகோபித்து அதை நீக்கிவிட்டோம். (அடுத்த முறை பார்த்தால் போச்சு).
முதல் நாள்:
பொங்கலன்று காலை திருச்சியிலிருந்து விமானப் பயணம். ஏறி உட்கார்ந்து சாண்ட்விச் சாப்பிட்டு தண்ணீர் குடிப்பதற்குள் கொழும்பு வந்துவிட்டது. விமான நிலைய வழிமுறைகள்   மூன்று மணிநேரம்; பயணமோ முக்கால் மணிநேரம்- என்ன கொடுமை சார் இதுன்னு கேட்கத் தோன்றியது!! GT Holidays representative அழகான் வயலெட் மலர்மாலைகளை அணிவித்து சிறப்பாக வரவேற்றார். அதையும் மீறி வெயிலின் சுட்டெரிப்பு நம்ம ஊரையே நினைவு படுத்தியது. ஆனால் அதை மறக்கடிக்க என்ன ஒரு அழகான வாகனம்! டொயட்டோ கம்பெனியின் அழகான பஸ்:  14 சீட்டுகளுடன் , சிறந்த A/C , fridge with sufficient water bottles, comfortable leg-space ன்னு அசத்தலாக இருந்தது. ஐந்து நாட்களுக்கும் அதே பஸ், ஓட்டுநர், நடத்துனர் &. கைடு .
கொழும்பிலிருந்து கண்டி செல்லும் பாதையில் செவ்விளநீரைப் பார்த்ததும் குதித்து இறங்கினோம். தனி சுவைதான், உப்புக் கரித்தலின்றி இனிப்பு சுவை பிரமாதமாக இருந்தது.அந்த ஊர் மழை மற்றும் மண்ணின் மகிமை போலும்.மதிய உணவு  Buffet  தான் என்று கைடு சொன்னபோது ஒரு அதிருப்தியுடந்தான் சென்றோம். ஆனால் என்னே ருசி! எங்கள் குழுவினர் அனைவரும் நான் - வெஜ் என்பதால் புகுந்து விளையாடிட்டோம். அடுத்ததாக பின்னவிளை யானைகள் சரணாலயம்.  நடுப்பகலில் சென்றதால் குறைவான யானைகளின் குளியல் மற்றும் சேட்டைகளைப் பார்க்க முடிந்தது. அதிகாலையில் சென்றால் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகளைப் பார்க்கலாமாம். இருபதுக்கும் மேற்பட்ட யானைகளைப் பார்த்ததே பிரமிப்பாகத்தான் இருந்தது. அடுத்து தேயிலைத் தொழிற்சாலை. ஊட்டி அளவு இல்லையென்றாலும் தேநீரின் சுவை நன்றாகவே இருந்தது. கண்டியில் ஓட்டல் அறையில் செக் இன் செய்ததும் பெண்கள் அனைவரும் நீச்சல் குளத்தில் இறங்கிவிட்டோம். அந்தி சாய்ந்த வேளை, அருமையான குளியல்; பானுவுக்கு மாரி அளித்த நீச்சல் பயிற்சி சுவாரஸ்யமானது. காலையிலிருந்து தொடர் பயணத்தால் களைத்திருந்த போதும் 320 சீட்டு விளையாட்டு முத்தாய்ப்பானது. விளையாடத் தெரியாதவர்களுக்கு கணக்கர் வேலை காத்திருந்தது.
இரண்டாம் நாள்:
அருமையான காலை உணவு. மீன், சிக்கன், மாசி கருவாடு என பலவிதங்கள். டூர் முடிவதற்குள் எல்லோருக்கும் ஐந்து கிலோ எடை கூடப்போவது உறுதி.  Local Sight seeing of Kandy. முதலாவதாக புத்தரின் பல் பாதுகாக்கப் பட்டிருக்கும் கோவில்.  ( Temple of Tooth). அதற்கு செல்லும் வழியில் நமது முன்னாள் முதல்வர்  MGR அவர்கள் பிறந்த வீடு காண முடிந்தது. சிதிலமடைந்த நிலையில் இருந்தாலும் கதவு எண் 66 மட்டும் தெளிவாக குறிக்கப்பட்டிருந்தது.
Royal Botanical Garden  என்று கூட்டிச் சென்றார்கள். மரங்கள் மட்டும் பாரம்பரியத்துடன் இருந்தது. உலகத் தலைவர்களின் வருகையின் போது நட்டு வைத்த மரங்கள் எல்லாம் திறம்பட பராமரிக்கப்பட்டு வருகின்றன. பூக்கள்தான் மிகக் குறைவு.  சுர்றிப்பார்க்க  shuttle buses இருப்பதால் நடை பயணம் மிச்சம். அடுத்து சென்ற ஜெம் காலரி, ஆர்ட் காலரி, Paththik கடை எல்லாமே  routine தான்  (நாங்க நிறைய ஜெம் வாங்கினது தனிக்கதை).
மூன்றாம் நாள்:
கண்டி  to Bentota , நீண்ட பயணம். ஆனாலும் நல்ல ரோட், சூப்பர் பஸ் , ஓட்டுநரின் திறமை, பானுவின் பாட்டு, தி-லி கல்லூரி கடலை என சுவாரஸ்யமான பயணமாகிப்போனது. சுராங்கனி, சின்ன மாமியே பாடல்கள் க்ரூப் பாடல் ஆனது. BENTOTA வில் ஆமைகளின் சரணாலயம் பார்க்க வேண்டிய ஒன்று. பீச் ரிசார்ட் மிக அருமை. இரவில் கடற்கரை நன்றாக இருந்தாலும் அதிக நேரம் செலவளிக்க முடியவில்லை. இரவு உணவில் வைக்கப்பட்ட நண்டு குழம்பை ரசித்து ருசித்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் சாப்பிட்டோம்.
நான்காம் நாள்:
காலையில் கடற்கரையில் நடைப் பயணம், குளியல் என மிக ரம்யமான பொழுதுகள். கடலில் குளிக்க பயந்தவர்களையெல்லம் எழில் பொறுப்பெடுத்து உள்ளே இழுத்து வந்தாங்க. பிறகு எல்லோரையும் வெளியே இழுக்க பெரும் பாடாயிடுச்சு, ஒருத்தருக்கும் கிளம்ப மனசில்லை. நேரே வந்து நீச்சல் குளத்தில் ஒரு குளியல். பாவம் பானுவுக்கு மட்டும் நீச்சல் உடை இல்லை என்பதால் குளிக்க முடியவில்லை. பெட்டியைக் கட்டிட்டு மறுபடியும் பயணம் கொழும்பை நோக்கி. கடலோரம் அமைந்திருந்த அத்தனை கட்டிடங்களையும் பஸ்ஸில் இருந்தே பார்த்தோம். கடந்த வருடம் குண்டு வெடித்த சர்ச், அதனருகில் இருந்த சிவாலயம், வித்தியாசமான அமைப்பில் இருந்த மசூதி எல்லாம் பார்த்த பிறகு  INEPENDENCEDAY SQUARE visit பண்ணினோம். மதியம் ஷாப்பிங் ஸ்பெஷல். பராசக்தி & ரூபஸ் உறவினர்கள் துணையுடன்  cheap & best purchases done satisfactorily. அன்பான அந்த நண்பர்கள் எங்களை  Pay  பண்ணவிடாமல் அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டார்கள். நன்றி பாராட்ட வார்த்தைகள் இல்லை. கொழும்பு அதற்குரிய commercialisations உடன் இருந்தது. ஹோட்டல் & உணவு வகைகள் சுமார் ரகமாகவே இருந்தது.
ஐந்தாம் நாள்:
அனைத்து பெட்டிகளையும் அடுக்கி, பிரயாணத்திற்கு ரெடியாகி , க்ரூப் போட்டோ எடுத்து விமான நிலையம் சென்றடைந்தோம். சீக்கிரமே வந்துவிட்டதால் அங்கேயும் ஒரு ஷாப்பிங் மேளா ஆரம்பித்து, கையிலிருந்த இலங்கை பணமெல்லாம் தீர்த்தோம் (வீட்டுக்காரர்களின் முணு முணுப்பையெல்லம் அசட்டை செய்துவிட்டு). Boarding Gate திறக்கப்பட்ட பிறகு சாலிட்டீசஸ்வரனை tension  கொள்ள வைத்த எனது சேட்டையைப் பற்றி சொல்வதென்றால் அது பெரிய கதை.
திருச்சியில் தரையிறங்கி அவரவர் வீடுகளுக்கு சுகமாகவும் பத்திரமாகவும் சென்றடைந்தோம்.
(எங்களைக்)களவாடிய பொழுதுகள்:
கிளம்பியதிலிருந்து பானு,தாணு, பரா, மாரி, ஜெயந்தி ஆகிய ஐவர் குழு செம அரட்டை. பஸ்ஸில் பயணிக்கும் போதும், சுற்றிப் பார்க்கும்போதும், இரவு ஒரே அறையில் கூடிக்கிடந்து கதைக்கும் போதும் கல்லூரிக் காலங்களை மறுபடி வாழ்ந்தோம். ஐவரில் ஒருவர் வராமல் போனால் அந்த பிரண்டை வைத்தே பிரண்டை துவையல் செய்ய முடிவெடுக்கப்பட்டதால் ஐவரும் எப்போதும் இணைந்திருந்தோம் , இன்புற்றோம். ஜெயந்தி எங்கள் ஜூனியராக இருந்தபோதும் எங்கள் குழுவில் இயல்பாக இணைந்துவிட்டாள்.
ஒவ்வொரு கணமும் கணக்கிலா கதைகளை உள்ளடக்கிய இந்த் டூர் எங்களின் சிறப்பான டூர் என்றே சொல்லலாம். கலந்து மகிழ்ந்த அனைவருக்கும் நன்றி நண்பர்களே!

0 Comments:

Post a Comment

<< Home