Tuesday, October 03, 2023

அலை-99

 அலை-99

“எட்டு எட்டா மனுச வாழ்வைப் பிரிக்கணும்”
சாஸ்திரம் சம்பிரதாயங்களில் அவ்வளவா ஈடுபாடு இல்லைன்னாலும் பிடித்த விஷயங்களைத் தனக்கு உகந்ததாகச் சொல்லிக் கொள்ளும் வேளைகளில் சொலவடைகளும் (பழமொழிகளும் உவமானங்களும்) நம் வசப்படும். அப்படித்தான் எட்டாம் எணூள்ள ஆகஸ்ட்டு மாதமும் என் Favourite List இல் எப்போதும் இருக்கிறது.நிறைய பேருக்கு எட்டு என்ற எண் பிடிக்காது. எனக்கு ரொம்ப பிடித்த எண் அதுதான். பிறந்தநாள் டிசம்பர் எட்டு, திருமண நாள் ஏப்ரல் எட்டு, மகள் பிறந்த நாள் பதினெட்டு, மகன் பிறந்தது ஆகஸ்ட்டு ,அன்புத் தம்பி நாராயணன் எட்டாவது மேதை என்று எல்லா விஷயங்களிலும் எட்டு என்னுடன் ஒட்டிக் கொள்ளும். DGO முடித்துவிட்டு ஈரோட்டில் குடிபுகுந்ததும் 1992 இன் எட்டாவது மாசம்தான். சொல்லி வைத்ததுபோல் இந்த “அலை’’ எழுத ஆரம்பித்ததும் 2020 ஆகஸ்ட்டில்தான். இந்த வருடம் 2023 ஆகஸ்ட்டுடன் 98 பதிவுகள் எழுதி முடித்திருக்கிறேன். முன்னுரை, முடிவுரை சேர்த்து அதை 100ஆகப் பண்ணி புத்தகமாக வெளியிடலாம் என சகோதரர்கள் அறிவுரை சொன்னார்கள். அதனால்தான் இந்த முடிவுரை அலை. (முதல் பாகத்தின் முடிவுரை மட்டுமே.) நூறு என்ற கணக்கு சரியாக வேண்டுமென்று முன்னுரையும் எழுதி வைத்திருக்கிறேன்.
மூன்று வருடங்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்திருக்கேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. எனது எழுத்தை வாசித்த, நேசித்த நண்பர்களும் உறவினர்களும் கொடுத்த உற்சாகம்தான் என்னைத் தடைபடாமல் எழுத வைத்திருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் உதிரிப் பூக்கள் போன்ற “அலை”கள் புத்தக வடிவில் மாலை ஆகவேண்டுமென்றால் கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். ஒருசில மாதங்கள்கூட ஆகலாம். அதுவரைக்கும் ஏதாவது எழுதிக் கொண்டிருப்பேனே, அதையெல்லாம் இடைச் சொறுகலாக இணைக்கலாமா அல்லது அடுத்த பாகத்துக்கு ஒதுக்கி வைக்கலாமா என்ற விவாதம் வந்தது. எழுதுவது என் இயல்பு . இணைப்பதும் கோர்ப்பதும் சகோதரர்கள்பாடு. ஒரு சிறுகதைப் போட்டிக்கான அறிவிப்பு பார்த்தேன். அதுவரைக்கும் , கதை எழுத முடியுமா என முயற்சித்துப் பார்க்கிறேன் என சொல்லியிருக்கிறேன். ஏற்கனவே விழா மலர்கள், சங்கம் சம்பந்தப்பட்ட நியூஸ் பத்திரிக்கைகள் எல்லாம் வடிவமைத்த அநுபவம் கொஞ்சம் இருப்பதால் புத்தகம் போட்டுவிடலாம் என்ற நம்பிக்கையும் வந்திருக்கிறது.
முதன் முதலில் “அலை” எழுத ஆரம்பித்தபோது எந்த திட்டமும் கிடையாது. குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்ததுபோல் தோன்றியவற்றையெல்லாம் எழுதினேன். எந்தவித நெறிமுறையோ ஒழுங்கோ கிடையாது. இயல்பாகத் தோன்றியதை எளிமையாக எழுதத் தொடங்கினேன். “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்”தான் என்பது போகப்போகத் தெரிந்தது. அடுத்து வந்த அலைகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அத்தியாய அந்தஸ்து கொடுத்து தலைப்புகள் இணைத்தேன். ஒவ்வொரு தலைப்பு வைக்கும்போதும் குறுஞ்சிரிப்பு ஒன்றும் கூடவே வரும். அவ்வளவு ரசித்துக்கொண்டே தலைப்பு வைப்பேன்.பதிவுடன் சம்பந்தப்பட்டதாக நச் என்று இருக்க வேண்டும் என யோசிப்பேன். ஏதாவது உவமைகள் சொல்ல சினிமா பாடல்களோ, கவிதை வரிகளோ, திருக்குறளோ சேர்க்க முடிந்தால் அந்தப் பதிவு மிகவும் இஷ்டமானதாகிப் போகும்.
இளமைக்கால நினைவுகளைத்தான் வெகு தொலைவில் பின்னோக்கி பார்க்கவேண்டியிருந்தது. ஆனால் எழுதிக் கொண்டிருக்கும்போதே பழைய காட்சிகள் மனத்திரையில் படம்போல் ஓடும்.அவற்றைத் திரும்பிப் பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷம். மறுபடியும் அந்த நாட்களுக்கே போய்விடமுடியாதா என ஏங்க வைத்த நாட்கள். Alzheimer மாதிரி மறதி நோய் வருவதற்குள் நினைவில் வருவதை எழுதுவோம் என கொஞ்சம் கொஞ்சமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.பறவைகள் போல் பாடித்திரிந்த காலம், படிப்பு தவிர வேறு எந்தப் பொறுப்பும் இல்லாத நாட்கள். நம்மை அடிக்கவும், அரவணைக்கவும், வழிநடத்தவும் எத்தனையோ உறவுகள். பசித்தவன் பழங்கணக்கு பார்ப்பதுபோல் இன்னும் அதன் மிச்சங்கள் நினைவுகளில் இருந்து கொண்டேதான் இருக்கிறது.சுய சரிதைபோல் தோண்றக்கூடாது என்பதால் நிறைய விஷயங்களை சென்சார் செய்திருக்கிறேன். அவையெல்லாம் எங்கள் “குடும்பம்” வாட்ஸ் அப்பில் பின்னூட்டங்களாக விரிவு படுத்தப்படுகிறது.கூட்டுக் குடும்ப வாழ்வில் வளர்ந்தவர்களுக்கு வாழ்க்கை எப்போதுமே தொடர்கதைதான்.
முதலில் பதிவில் இருந்து படிக்காமல் இடையில் படிக்க நேர்ந்தவர்களுக்கு அடிக்கடி இடறும் கதாபாத்திரங்களில் “யார் அந்த எழில்?” என்ற கேள்வி வரும். காதல் கணவரைப் பெயர் சொல்லி அழைப்பது எங்கள் காலங்களில் நாகரீகமற்றது என்றாலும் நான் முதலில் இருந்தே அப்படி கூப்பிட்டுப் பழகிவிட்டேன். நயினார் அண்ணனும் தம்பி நானாவும் சமகாலத்திய சகோதரர்கள் என்பதால் எனது அநுபவங்களில் அடிக்கடி இடறுபவர்கள். கல்லூரிக் காலமே இன்னும் எழுதி முடிக்கப்படாமல் இருப்பதால் கல்யாணம், குழந்தைப்பேறு, அரசுப்பணி என்று ஏகப்பட்டது (மனக்)கிடப்பில் உள்ளது. வடிவேலு பாணியில் “ச்சோ இப்பவே கண்ணைக் கட்டுதே”ந்னு தோணுது.
ஒரு விஷயத்தை ஆரம்பிப்பதுதான் கஷ்டம் . காலையில் நடைப்பயிற்சி செல்வது சுலபம், ஆனால் குறித்த நேரத்துக்குத் துயில் எழுவது சிரமம். அது போல்தான், எழுத முனைவதும். என்ன எழுத வேண்டுமென்று தீர்மானித்துவிட்டால் தடையின்றி தொடரும் எழுத்துப் பணியும். இப்போது என்ன எழுதுவது எப்படித் தொடங்குவது போன்ற விஷயங்கள் வரையறுக்கப்பட்டுவிட்டன. சமகால அரசியல் தொடங்கி, நம்மைச் சுற்றி நகரும் மனிதர்கள், நம்மைப் பாதிக்கும் விஷயங்கள் என ஏகப்பட்ட முகாந்திரங்கள் மென்மேலும் எழுதத் தூண்டுகிறது.
மருத்துவக் கல்லூரி விஷயங்கள் எல்லோரையும் ஈர்க்குமா என்று தெரியாது. அதனால்தான் அங்கு நடந்த பொதுவான நிகழ்வுகளை மட்டும் அவ்வப்போது எழுதினேன். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கதை சொல்லும் “கனாக் காலம்” அது. வயதும் வயோதிகமும் நேரமும் இடம் கொடுத்தால் அடுத்த பதிப்பாக மருத்துவக்கல்லூரி நாட்களில் நடை பயில்கிறேன். பயணக் கட்டுரைகள் எழுதுவது சுலபமாகவும் நிறைய விஷயங்கள் பொதிந்ததாகவும் இருக்கிறது. சில சமயங்களில் ஒரு பதிவில் முடிக்க இயலாமல் போய்விடுகிறது. ஆறுமுகநேரி முதல் அமெரிக்கா வரை, திருநெல்வேலி முதல் டோக்கியோ வரை சென்று கண்டு கழித்த விஷயங்களைப் பயணக் கட்டுரைகளாக எழுதுவது எனது அடுத்த முயற்சியாக இருக்கும்.
நிறைய(ஆக்கபூர்வமான) விமர்சனங்களும் அறிவுரைகளும் நண்பர்களிடமிருந்து அவ்வப்போது வரும். அதில் ஒன்று அவ்வப்போது நிகழ்வுகளுக்கு ஏற்ப போட்டோ போடும்படி சிலர் கூறினார்கள். புத்தக வடிவமாக வரும்போது நிழற்படங்கள் , கேலிச்சித்திரங்கள் எல்லாம் இணைக்க உத்தேசித்திருக்கிறோம். உங்கள் சொந்த குடும்ப அநுபவங்களாக இல்லாமல் பொதுவான தளத்தில் எழுதுமாறும் கூறினார்கள். அதற்கு இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டுமென்று நினைக்கிறேன். சிறுகதைகள் எழுதலாம் என்று சொன்னதையும் பரிசீலித்துக் கொண்டிருக்கிறேன். எனது குறுகிய வாசகர் வட்டம் என்னை சிறு எழுத்தாளர் அளவுக்கு அங்கீகரித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனது பதிவுகளை நிறைய நண்பர்கள் அவர்களின் நண்பர், உறவினர் குழுமங்களுக்கு அனுப்பி என் வாசகர் வட்டத்தை விரிவு படுத்தியுள்ளார்கள்.
நிறையபேர் இளமைக்காலம் என் அநுபவங்களின் சாயலுடன் ஒத்துப் போவது போல் தோன்றும் போதெல்லாம் கைபேசியில் என்னை அழைத்து பேசுவதும் அவ்வப்போது நடக்கும். அறுபத்து மூன்று வருடங்கள்,கிட்டத்தட்ட 23000 நாட்கள் வாழ்ந்த வாழ்க்கையின் சிறுதுளி அளவுதான் எழுதியிருக்கிறேன். மஹாசமுத்திரம் போன்ற பரந்து கிடக்கும் வாழ்வில் சின்னஞ் சிறு அலைகள் மட்டுமே வெளியே தெரிகின்றன.
குழந்தை, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற எட்டு பருவங்களில் கடைசிக் கட்டத்தை எட்டுவதற்குள் இயன்றவரை எழுத வேண்டும், இயல்பாக எழுத வேண்டும். உங்கள் அனைவரின் வாசிப்பும் நேசிப்பும் எனக்கு ஊக்கம் அளிக்கட்டும்.
முதல் பாகத்தின் முடிவு செய்யும் இந்த அலை அடுத்த பாகத்தின் முதல் அலையாகட்டும்.
என்றென்றும் அன்புடன்
தாணு.

0 Comments:

Post a Comment

<< Home