Saturday, October 29, 2005

`டெல்லி' அரக்கர்கள்

மனித நேயமற்று
மனதில் ஈரமற்று
மனித காவு வாங்கும்
மிருகங்கள் மனிதர்களா?

இயற்கை அழிவுகள்
இந்தியா முழுதும் உலுக்கி வருகிறது
இடையில் ஏனோ
இந்த இதயமற்ற காட்டுமிராண்டித்தனம்?

தூங்க இடமின்றித் தவிப்பவர்கள்
தூங்கும்போதே அடித்துச் செல்லப்பட்டவர்கள்
தாகத்திற்குக் கூட தண்ணீரின்றித் தவிப்பவர்கள்
கண்ணீர் வரவழைக்கும் துயர்கள் நாடெங்கும்.

மண்ணில் புதைந்தவர்களுக்கு
மலரஞ்சலி செலுத்த முடியாவிட்டாலும்
அண்டையில் வாழ்பவருடன்
அனுசரிக்கக் கூட மனமில்லையா?

அழித்தவரின் கல்லறைக் கணக்குதான்
அடுத்த நாளின் உணவோ அவர்க்கு?
அனைவரையும் அழித்துவிட்டால்
அடுத்த நாளென்பதே தேவையோ அவர்க்கு?

இலக்குகளற்று இயக்கப்பட்டு
நோக்கமின்றி படுகொலை புரிந்து
திரும்பிப் பார்க்கையில் அங்கே
துடித்து இறப்பது உன் தாயோ தந்தையோ.

வெடிக்கும் குண்டுகளுக்குக் கூட
வெடிக்க வேண்டிய எல்லை உண்டு
அழிக்க நினைக்கும் அயோக்கியர்களுக்கோ
அனைத்து பழிஉணர்வும் எல்லையற்றது.

9 Comments:

At 10:48 AM, Blogger rv said...

அத்தை,
பூகம்பத்தில் நிலைகுலைந்த பாகிஸ்தானுக்கு உதவ பேச்சுவார்த்தை துவங்கும்போது, இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்திருப்பது தான் வேதனை.

இந்த மாதிரி குண்டு வெடிச்சு இப்ப என்ன சாதிச்சிட்டதா நினைக்கறாங்கன்னு புரியலே. இஸ்ரெலையும் சேர்த்துத்தான் சொல்றேன். குண்டு வெடிச்சோன்ன என்ன இந்தியா பயந்து நடுங்கி எல்லைப் பிரச்சனையிலிருந்து கழண்டுக்க போகுதா? இல்ல, இன்னும் தீவிரமாத்தான் இறங்கும். இது ஜனநாயக நாடுகளில் தன்மை. பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பதாய் நினைத்துக்கொண்டு தங்கள் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொள்கிறார்கள் இந்த தீவிரவாதிகள். அவர்கள் தலையில் மட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட மக்களின் தலையிலும் போடுவதுதான் வேதனை. இது ஒரு vicious cycle. :(

சம்பந்தமுள்ள இரு பதிவுகள்.
இரான் அதிபர் சொன்னது... அவர் சொல்லி முடித்த சிலமணி நேரங்களுக்குள் இஸ்ரேலில் இன்னொரு குண்டு வெடித்தது.

தீவிரவாதம் குறித்த பழைய பதிவு

 
At 11:14 AM, Blogger enRenRum-anbudan.BALA said...

//இது ஒரு vicious cycle. :(
//
This is the fact and no one seems to know the solution :-(

Innocent people continue to suffer !

 
At 11:52 AM, Blogger Unknown said...

மனித உயிர்களைக் குடிக்கும் அந்த நாய்களை (நன்றியுள்ள நாய்களைக் கேவலப்படுத்துகிறேன்) தண்டிக்க வழியே இல்லயா?., மரண தண்டனையை புதைக்கப் பார்க்கும் அரசியல்வாதிகள், தொடர்ந்து நடக்கும் இந்த அவலத்திற்கு முற்றுப்புள்ளி எப்போதுதான் வைப்பார்களோ?., எல்லைப் புறத்தில் என்றும் செத்துக் கொண்டிருப்பவர்களை கணக்கில் எடுப்பதில்லை நாம், அதனால்தான் உள்ளுக்குள் வந்து ஆட்டம் காட்டுகின்றனர். ஒவ்வொரு முறையும் அரசியல்வாதிகளின் அதிர்ச்சி தெரிவிக்கும் அறிக்கையுடன் முடிந்து விடுகிறது நம் அப்பாவி சகோதரனின் அருமை உயிர். வரிப் பணத்தைக் கொட்டி பலபடுத்துகிறோம் இராணுவத்தை எதற்கு?., உயிர் போனவர்களை அப்புறப் படுத்தவா?., வருடம் தவறாது நடக்கும் இந்தக் கொடுமையை நிறுத்த முடியாத நாம் பிரந்திய வல்லரசு என எந்த வித வெட்கமுமின்றி மார்தட்டிக் கொள்கிறோம். பயங்கரவாதம் என்ற பெயரில் எம் மக்களை சிட்டுக் குருவியாய் சுட்டு செல்லும் அரக்கர்களை தண்டிக முடியாத வரை ஒவ்வொரு இந்தியனும் தலை குனிந்தே நடப்போம்.

 
At 12:33 PM, Blogger erode soms said...

பிறர் அழிவில் கிடைக்கும் ஆனந்தம்
அறிய்யாமைப்பேய்களின் மூடத்தனம்
கடிவாளம் பூண்ட வெறியர்களே
மத நோயின் அடிமைகளே!
உன் தெய்வம் உனக்கே
உண்மையெனில் உன்
பிறப்பே இன்றி
மகிழ்ந்திருப்பான்

 
At 8:48 PM, Blogger மதுமிதா said...

வேதனையில் நீந்தும் மன உணர்வுகளின் வெளிப்பாடு

 
At 12:53 AM, Blogger தாணு said...

ராமநாதன்,
உங்கள் முந்தைய பதிவு ஏற்கனவே வாசித்திருந்தேன்.//பாதிக்கப் பட்ட மக்களின் தலையிலும் மண்ணை வாரிப் போடுவது// அப்படிப்பட்ட மனிதாபிமானம் இருந்திருந்தால், இத்தைகைய அசம்பாவிதமே நடக்காதே.
நிஜமாகவே இவர்களெல்லாம் மனோதத்துவ ரீதியாக செயலிழக்கப்பட்டு, ஒரே குறிக்கோளுக்காக பயிற்றுவிக்கப்பட்ட உயிரற்ற பொம்மைகள் போன்றோர்தான். அதனால்தான் உணர்வற்றுப் போகிறார்கள்

 
At 12:56 AM, Blogger தாணு said...

//இராணுவத்தைப் பலப்படுத்துவது உயிரற்றவர்களை அப்புறப் படுத்தவா// சமீபகாலமாக இராணுவம் அத்தகைய வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறது. போரில் மரணம் கண்டு கலங்காத வீரர்கள்கூட இத்தைகைய சாவுகள் கண்டு கலங்கிப் போகின்றனர்.

 
At 12:58 AM, Blogger தாணு said...

பாலா, மதுமிதா, சித்தன்

நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் நம் சோகத்தைக் கொட்டிக் கொள்கிறோம், என்ன செய்வது என்ற வழி தெரியாமல்.

 
At 1:19 AM, Blogger ramachandranusha(உஷா) said...

//நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் நம் சோகத்தைக் கொட்டிக் கொள்கிறோம், என்ன செய்வது என்ற வழி தெரியாமல்.//

:-(

 

Post a Comment

<< Home