Saturday, August 29, 2020

அலை-4

அலை-4

சினிமா தியேட்டருக்குப் போய் படம் பார்ப்பது என்பது இப்போ அசெளகரியமாகத் தெரிகிறது. வீட்டு வரவேற்பறையில் கால் நீட்டி அமர்ந்து வேண்டாத  காட்சிகளை ஓட விட்டுப் பார்க்கும் சுகத்துக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சின்ன வயசுலே கிராமங்களில் ஒரே பொழுது போக்கு சினிமாதான். 


எங்க வீட்டு ஜனத்தொகை அதிகம் என்பதாலும் வேலைப்பளு இருக்கும் என்பதாலும், எல்லாரும் ஒரே நாளில் படத்துக்குப் போக முடியாது. ரெண்டு மூணுநாள் சின்னச் சின்ன க்ரூப்பாகப் போவாங்க. சின்னப் பசங்களுக்கு டிக்கெட் கிடையாதுங்கிறதாலே எங்களுக்கு தினசரி சினிமாதான். 

நான் மருத்துவக் கல்லூரிலே சேர்ற வரைக்கும் எங்க வீட்லே மின்சார வசதி கிடையாது. மண்ணெண்ணெய் விளக்குதான். அதனாலே வீட்டுப் பாடம் எழுதறது, படிக்கிறது எல்லாம் சாயங்காலம் இல்லாட்டி காலையில்தான். எங்களை வீட்லே வைச்சு மேய்க்கிறதைவிட சினிமாவுக்குத் தள்ளிவிடுறதுதான் வீட்லே உள்ளவங்களுக்கும் நிம்மதி. 


சின்ன வயசுலே பார்த்த படங்களின் கதை வசனம் பாடல்கள் எல்லாம் இப்போ கூட மனப்பாடமா இருக்குது. ( அதுக்குப் பிறகு படிச்ச பள்ளிப்பாடங்கள் கொஞ்சம் கொஞ்சம் மறந்திருக்கும்) மூணு நாலுதடவை பார்த்த படம் மனப்பாடம் ஆகிறது இயற்கைதானே. அதுவும் சாதாரணமாகவா பார்ப்போம். அக்கா, மதினி, அம்மான்னு ஒவ்வொருவர் கூடப் பார்க்கும்போதும்  வித்தியாசமான ரசனையோட பார்ப்போம். 


எங்கம்மாவோட ரசனைதான் எனக்குள்ளும் ரொம்பத் தங்கி இருக்குன்னு நினைக்கிறேன். ஏதாவது வில்லத்தனமான சீன் வரும்போது “நாசமாப் போறவன்”னு திட்டுவது; உணர்ச்சிகரமான சீன்களில் அழுவது; காமெடி சீன்களில் உரக்கச் சிரிப்பது- இதெல்லாமே நான் அடிக்கடி செய்றதுதான். அதனாலேயே பக்கத்துலே உட்கார்ந்து படம் பார்ப்பவர்களிடம் அடிக்கடி திட்டு வாங்குவேன். என் பொண்ணும் பையனும் அநியாயத்துக்கு என்னைத் திட்றது இதுக்குத்தான். சினிமா பார்க்கும்போது மட்டும் சபைநாகரிகம் எல்லாம் காத்தாப் பறந்திடும்.


எங்க காலத்திலேயே டூரிங் தியேட்டர் மாறி நிரந்தர தியேட்டர் வந்துடுச்சு. ஆனாலும் டூரிங் தியேட்டரில் படம் பார்ப்பது அலாதி சுகம். மணல் தரைதான் எல்லாருக்கும், பெரும் புள்ளிகளுக்கு மட்டும் கடைசி வரிசைகளில் நாற்காலி போடப்பட்டிருக்கும். எங்களுக்கு முன்னாடி உக்கார்ந்திருக்கிறவங்க தலை மறைக்கும் போது மணலைக் கூட்டி மலை மாதிரி செஞ்சு அதுமேலே உக்காந்துக்குவோம், பெருமையா இருக்கும். 


எங்க அம்மா, ஆச்சி காலத்துலே இன்னும் மோசமாம். அப்போதுதான் அசையும் படங்கள் (movie ) வந்திருக்கு. ஒருநாள் எங்க ஆச்சி மற்றும் சொந்தக்காரங்க மகாபாரதம் மாதிரி ஏதோ போர் சம்பந்தப்பட்ட படம் பார்க்கப் போயிருக்காங்க. திடீர்னு யானைப்படை வந்ததைப் பார்த்துட்டு அவங்களைத்தான் மிதிக்க வருதுன்னு நினைச்சு தலை தெறிக்க எந்திரிச்சு ஓடினாங்களாம். எங்க அம்மா தலைமுறை அதை நக்கலாகப் பேசி சிரிப்பாங்க. அதைக் கேட்டவுடன் எங்க ஆச்சி(தாணுஆச்சி)க்கு ஒரு கோபம் வரும் பாருங்க. அதை ரசித்து சிரித்த தலைமுறை எங்களோடது. 


டூரிங் தியேட்டர்னா என்னன்னு கூடத் தெரியாதது நம்ம பிள்ளைகளோட தலைமுறை. 

நிரந்தரமான தியேட்டர் வசதி இல்லாத ஊர்களுக்கு ஆறு மாசம் ஒரு வருஷம்னு தற்காலிக திரை அரங்குகளை எழுப்பி சினிமா காட்டுவதுதான் டூரிங் ( TOURING Theaters) தியேட்டர்கள் .


நிரந்தர தியேட்டரும் பெரிய சொகுசெல்லாம் கிடையாது. ”தரை டிக்கெட், பெஞ்ச், சோபா” ன்னு ரெண்டு மூணு விதம் இருக்கும். நமக்கெல்லாம் தரை டிக்கெட்தான். (நான் MBBS சேர்ந்த பிறகு எனக்கு பதவி உயர்வு தந்து பெஞ்ச் டிக்கெட் எடுத்துக் கொடுத்தாங்க!) தரை டிக்கெட்டிலும் முன்னாடி தீயணைப்பன்கள் வைக்கும் இடம் கம்பி போட்டு தனிப்படுத்தப் பட்டிருக்கும். அதுக்குள்ளே போயிட்டா படுத்துகிட்டே பார்க்கலாம், பெரியவங்க அதுக்குள்ளே வர மாட்டாங்க. “ஆயிரத்தில் ஒருவன்” எம்.ஜி.ஆர். பாவாடை மாதிரி உடையணிந்து ஜெயலலிதாவுடன் ஓடும் காட்சிகளை எத்தனை தரம் படுத்துக் கொண்டே பார்த்திருப்போம்னு கணக்கே இருக்காது. 

தரை டிக்கெட்டில் கதவு ஓரம் உட்கார்ந்து பார்த்தால் கொஞ்சம் காற்று வரும். அதனால் கதவு சீட் பிடிக்க அடிபிடியாக இருக்கும்.எங்க சரசக்கா கூட போனால் அவள் ஒரு சுவர் ஓரமா உட்காரக் கூட்டிட்டுப் போயிடுவா, அவளோட வாடிக்கை இடமாம் அது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் மரக்கட்டையால் ஆன தடுப்பு மட்டுமே இருக்கும். சில படங்களுக்கு பெண்கள் பகுதி குறுகிப் போய்விடும். 


கொஞ்சம் பெரிய பிள்ளைகள் ஆனபிறகு டிக்கெட் கேட்க ஆரம்பித்த பிறகு திரும்பத் திரும்ப பார்க்கும் சந்தோஷம் தொலைந்து போனது. இடைவேளையில் கடலை, முறுக்கு எல்லாம் நாம் அமர்ந்திருக்கும் இடத்துக்கே விற்பனைக்கு வரும். எவ்ளோ வசதி பாருங்க. மல்ட்டிப்ளக்ஸ் மாதிரி  காஞ்சு போன பப்ஸும், தொண்டை எரியும் பெப்சியும் வாங்க வரிசையில் நிற்க வேண்டியதில்லை. 


எங்க அம்மாவும் மூத்த மதினியும் வேலையெல்லாம் முடிச்சுட்டு இரண்டாம் ஆட்டம் தான் போக முடியும். மதினி தீவிர சிவாஜி ரசிகை. சிவாஜியோட அம்மா இறந்த அன்னைக்கு சாப்பிடாமல் அழுதுகிட்டு இருந்தாங்க. தன்னோட பையனுக்கு ( முத்துராமன்) மாமனார் பெயர் வைச்சதால் , பட்டப் பெயர் வைக்க “ வசந்த மாளிகை” சிவாஜி பெயர் வைச்சு “ஆன்ந்த்”ன்னு அன்போட கூப்பிடற அளவுக்கு தீவிர ரசிகை.


”தங்கம் தியேட்டர்” தான் எங்களுக்கு மாயாஜால், ஸ்கைவாக், எல்லாம். எங்க வீட்லேயிருந்து யாராவது ஒருத்தர் வந்தால்தான் “தங்கம்” தியேட்டரில் படம் போடுவான் என்று என் நண்பன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. தியேட்டரில் எங்களுக்கு சீசன் டிக்கெட் என்று கிண்டலடிப்பவர்களும் உண்டு. அடாது மழை பெய்தாலும் விடாது கறுப்பு மாதிரி சினிமாவுக்கு செல்வது எங்களுக்கு சாப்பாடு மாதிரி இல்லை, மூச்சு மாதிரி ( சினிமா பத்தி பேசும்போது சினிமா டயலாக் தானே போட முடியும்)


எங்க குடும்பத்தோட சினிமா ரசனைகள், படம் பார்த்த அநுபவங்களெல்லாம் எனக்குத் தெரிஞ்சு கொஞ்சம் தான். அகா அண்ணகள் கிட்டே கேட்டால் பலவித சுவாரஸ்ய கதைகள் கிடைக்கும். எட்டு பேரோடதையும் வகைப் படுத்தினால் அதுவே பெரிய புத்தகமாகிடும். 


இப்போதைய லாக்டவுணில் Prime Time, Netflix, SUNNXTன்னு மாறி மாறி விதவிதமா நூறு படங்கள் பார்த்தாலும், அன்று பார்த்த மாடர்ன் தியேட்டரும், பாலச்சந்தரும், கறுப்பு வெள்ளைப் படங்களும் ஈடில்லாதவை.

நினைவலைகளில் சினிமா அலை மறுபடி மறுபடி வந்துகொண்டே இருக்கும்.

0 Comments:

Post a Comment

<< Home