Friday, August 27, 2021

அலை-45

 அலை-45

மனிதர்களின் பெயர்கள் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கங்கள் விசேஷமானவை. ஒவ்வொரு பெயரும் ஏதோ ஒரு De javu நினைவுகளை நமக்குள் ஏற்படுத்தியிருக்கும். என்  வகுப்புத் தோழர்களை அகர வரிசையில் நினைவு படுத்திக் கொள்வது எனக்குள்ள இனிமையான திறமை. எங்கள் வகுப்பில் முதல் பெயரான அபுல்காசிம் தொடங்கி 75வது வெட்டும்பெருமாள் வரை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் வரிசைப்படி சொல்லுவேன். அடுத்தடுத்து classmates getogether  நடத்தியதால் வந்த ஞாபக சக்தியா என்று தெரியாது. 


பெயர்களுக்குள்ள தன்மையால்தான் நிறைய நட்புகள் இறுக்கமானதும், உறவுகளாய் மலர்ந்ததும் நடந்தது. எங்கள் வகுப்பின் ஆரம்பமே மும்மூர்த்திகளான அபுல்காசிம், ஆண்ட்ரூ ஜெபக்குமார், பாலகிருஷ்ணன் என்ற Triple Pillars தான். மூவருமே இணைபிரியாமல் ரிடையர்மெண்ட் வரை திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி அடுத்தடுத்த தெருக்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பாக்கியம் வாய்த்தது எங்கள் வகுப்புக்குக் கிடைத்த பெருமை. 


”M” வரிசையில் வரும் மரகதமணி, மேரி சிசிலி, மேரி நிர்மலா, மீனா, மேகலா எல்லோரும் சொல்லி வைச்ச மாதிரி என்.ஜி.ஓ. காலனியில் இருந்து ஒண்ணாக day- scholars  ஆக வருவாங்க. ஒரே பஸ், ஒரே batch என்று அப்போதே இணைந்த கைகள் ஆகிவிட்டார்கள். பாஸ்கர பாண்டியன், சந்திரலீலா, கணேசன், கோமதி மீனா நால்வரும் பட்டப்படிப்பு முடிந்து வந்த கோஷ்டிகள், அலட்டிக்காமல் “A” batch இல் இணைந்து கொண்டார்கள். எனக்கு ரெண்டுபுறமும் தங்கராஜ் & தில்லை வள்ளல். முதல் வருடம் முதல் ஹவுஸ் சர்ஜன் வரை பிரியாமல் இருந்த triple pillars இல் நாங்களும் உண்டு. தங்கராஜ் இப்பவும் என்னை அன்போடு அழைப்பது ”ஹலோ பார்ட்னர்” ன்னுதான்.


A & C batch இல் கொஞ்சம் நிதானமான மாணவர்கள் இருப்போம்.  B batch தான் ரொம்ப குறும்புக்கார ஆட்களோடது. அதனாலே அந்த க்ரூப் மட்டும் எப்பவும் கலகலப்பாகவே இருக்கும். மத்த ரெண்டு பேட்ச்சிலும் படிப்ஸ் கோஷ்டிகள் அதிகம். வகுப்பறைகளில் சத்தம் வந்தால்  அது நிச்சயமா  B batch வாலுங்கதான். ஆனால் அதெல்லாமே  நாங்க ரசிக்கும் படியாகவே இருக்கும். 


நாங்க கடைசி பென்ஞ்சில் இருப்பதால் நிறைய பாடங்கள் காதிலேயே விழாது. அந்த நேரங்களில் கவிதை எழுதுவதும், ஒவ்வொருவருக்கும் பட்டப் பெயர் வைப்பதுமாக பொழுதுகள் சுவையாகவே நகரும். 

எங்கள் வகுப்பிலுள்ளவர்கள் பெயர்கள் நிரம்ப வித்தியாசமாக இருக்கும். அதனாலேயே சீனியர்களின் கேலிகளுக்கு அடிக்கடி ஆளாக்கப்படுவோம்.


 உதாரணமாக என் பெயர் “தாணு” என்பது ஆண்பிள்ளைகளுக்கு வைக்கப்படுவது. சுசீந்தரம் தாணுமாலையன் சாமியின் பெயர். அதனால் நாகர்கோவில் மக்கள் என்னை அடிக்கடி ஆண்பிள்ளைகளுடன் ஒப்பிட்டு கேலி செய்வார்கள். வெட்டும்பெருமாள் எங்கள் வகுப்பின் கடைசி மாணவர். கேலிகளால் பாதிக்கப்பட்டே தன் பெயரை சந்தோஷ்குமார் என்று நாளடைவில் மாற்றிக் கொண்டார். இதுபோல் நிறைய பெயர்கள் எங்கள் வகுப்பில் உண்டு. சிதம்பரத்தம்மாள் , உமா ஆனதும் இதுபோல்தான்.


ஆனால் நாங்கள் எந்தப் பெயராக இருந்தாலும் அதை ரத்தினச் சுருக்கமாக்கிக் கூப்பிட்டுக் கொள்வதுதான் வழக்கம். அதனாலேயே நிறையபேரோட

பெயர்கள் ரெண்டு எழுத்துகளுக்குள் அடங்கிவிட்டது. பானு,தாணு, ஷுபா,உஷா,மரா,பரா, விசா,சிவா, லோகா,மாரி, சூரி,மீனா,ஹேமா என்று லிஸ்ட் போயிட்டே இருக்கும்.ரொம்ப சுருக்க முடியாட்டி மூணு எழுத்துக்குள்ளே கொண்டு வந்திடுவோம். மேக்ஸ், நிம்ஸ்,ராம்ஸ்,பாப்ஸ்,சுப்ஸ் எல்லாம் உண்டு. இப்படி பெயரைச் சுருக்குவது சில நேரங்களில் வேடிக்கைகளையும் உண்டாக்கும். 


ஒருநாள் கெமிஸ்ட்ரி டெமொன்ஸ்ட்ரேட்டர் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. சத்யமூர்த்தி சார் நாகர்கோவில்காரர் என்பதால் அவரது ஆங்கிலம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் PARA , ORTHO, META என்று எதோ விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது பெண்கள் பகுதியில் மூன்றாவது வரிசையிலிருந்து யாரோ எழுந்திருந்து (ஷுபாவோ மேகலாவோ) 

" sir ! Para is not feeling well” அப்படீன்னு சொன்னாங்க. சாருக்கு ஒண்ணும் புரியலை. அவரோ para (பேரா) பற்றி பேசிகிட்டு இருக்கார். யாரோ எந்திரிச்சு பரா சரியில்லைன்னு சொல்றாங்க. அவர் எழுதியதில்தான் ஏதோ தவறு இருக்குதோன்னு மறுபடியும் கரும்பலைகையைப் பார்க்கிறார். சரியாகத்தான் இருந்தது. அதனால் “what is wrong with para (பேரா)” என்று கேட்கிறார். மறுபடியும் இங்கிருந்து  Para (பரா) is not feeling well என்று பதில் வருது. சாருக்கு மண்டையைப் பிச்சிக்கலாம் போல இருந்திருக்கும். அதுக்குள்ளே நியாயவாதி ஒருத்தர் யாரோ எந்திரிச்சு பராசக்திக்கு உடம்பு சரியில்லை சார் என்று சொல்லிட்டாங்க. இல்லாட்டி அன்னைக்கு வடிவேலு பாணியில் வகுப்பறை அல்லோல கல்லோலப் பட்டிருக்கும். உண்மையாகவே பராவுக்கு உடம்பு சரியிலாமல் போச்சுதான்னு என்னைக் கேட்கக்கூடாது. அது சங்கத்தின் ரகசியம்.


புதுசா வர்ற சார் எல்லாம் தாணுவை ஆண்கள் பகுதியில் தேடுவதும் அடிக்கடி நடக்கும். நிம்ராட் பெயரை தவறுதலாக உச்சரிப்பதும் வாடிக்கை. ப்ரேம் தேவ குமாரை யாருமே முழு பெயர் சொல்லி அழைத்ததில்லை. அன்றிலிருந்து இன்றுவரை PDK தான். அதே மாதிரி தில்லை திருவடி வள்ளல், மிக அருமையான தமிழ் பெயர். ஆனாலும் ராகிங்-இல் தில்லை திருடிய வள்ளலாகிவிடும். எங்க வகுப்பு ஆண்பிள்ளைகள் பெயர்களைக் குறித்து தேவதைகள் இல்லத்தில் எங்களுக்கு ராகிங் உண்டு. நளினி என்ற பெயர் ரொம்ப  common  என்பதால் எங்க வகுப்புக்காரிக்கு நெட்டை நளினி பட்டப் பெயராகி விட்டது. 


ஒரே பெயரில் ரெண்டுபேர் இருந்தால் அவர்களை வேறு படுத்திக் கொள்ள சில அடை மொழிகளை வைச்சுக்குவோம். அப்படித்தான் மூணார் விஜியும், கிளி விஜியும் அடையாளம் காணப்படுவார்கள். ரெண்டு தம்பிராஜில் ஒருத்தர் ஃபாரின் தம்பிராஜ் ஆனது என்ன கதைன்னு தெரியாது, ஆனால் அதுதான் அவரின் அடையாளம்.சைமன் பீட்டர்தான் எங்க வகுப்பிலேயே மிக உயர்ந்த மனிதர். ராமசாமிக்கு எதற்காக புளிமூட்டை ராமசாமின்னு பேர் வைச்சாங்கன்னு தெரியலை. 


இத்தனை பேரையும் அடக்கி வைக்க வகுப்புத் தலைவராக இருந்த மூர்த்தி முதல் வருடத்துடன் எங்களை விட்டு பிரிந்துவிட்டார். அடுத்து வந்த காலங்களில் ஒவ்வொருவராகப் பிரிந்து போய் , இன்று எட்டு நண்பர்களை இழந்து நிற்கிறோம். நம் பிறப்பு எப்படி நம்மால் நிர்ணயிக்கப் படவில்லையோ, அதே மாதிரிதான் நம் வகுப்புத் தோழர்களும், இவர்கள்தான் வருவார்கள் என நம்மால் அறிய முடியவில்லை. ஆனால் இணைந்த பிறகு, நம் வாழ்நாள் முழுவதும் நாங்கள் அனைவரும் 77 ஆம் வருட வகுப்பின் ஒன்றுபட்ட தோழர்கள். அதை மாற்றவோ மறுக்கவோ முடியாது. எங்கு சென்றாலும் எங்கள் அடையாளம் 77 Batch of TvMC. 

Long live Comrades.

0 Comments:

Post a Comment

<< Home