Friday, August 27, 2021

அலை-47

 அலை-47

ஊரெல்லாம் ஒரே Clubhouse பேச்சாகவே இருக்கும் போது எங்க காலத்து club-ங்க பற்றி எல்லாம் ஞாபகம் வந்துடுச்சு. பள்ளிப் பருவத்தில் தெரிந்த club-கள் எல்லாம் சின்னச் சின்ன க்ரூப்தான். எங்க ஊர் பக்கத்திலெல்லாம் Recreation Club ன்னு வைச்சிருப்பாங்க. பேட்மிட்டன் (Ball Badminton) விளையாட்டுதான் அதில் பிரதானமாக இருக்கும். இறகுப் பந்துகூட அறிமுகமாகி இருக்கவில்லை. நயினார் அண்ணன் ராம்கி எல்லாம் அதில் பிரதான ஆட்டக்காரர்களாக இருப்பார்கள். பெண்பிள்ளைகள் அந்த ஆடுகளத்தைக் கூட எட்டிப் பார்த்திருக்க மாட்டோம். கல்லூரி வந்த பிறகுதான் நாங்களும் ஆட்டக்காரர்களாக சேர்க்கப்பட்டோம். பள்ளி முடியும் வரை கபடியும் கோகோவும்தான் எங்கள் சர்வதேச விளையாட்டு.


கல்லூரியில் கால் வைத்ததுமே நிறைய மாற்றங்கள் ஏற்படுவது இயல்பாகவே நடந்து விடுகிறது. அசட்டுத் துணிச்சலும் , என்னால் கற்றுக் கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையும் இருகோடுகளாக அநேகமாக அனைவரையும் தொற்றிக் கொள்கிறது. நானும் அதில் அடக்கம்தானே. அதிலும் அசட்டுத் துணிச்சல் எனக்குக் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.கல்லூரித் தேர்தல் முடிந்து ஆண்டுவிழாவும் வந்தது. அதில் கிடைத்ததுதான் எத்தனை விதமான அநுபவங்கள்.


கல்லூரியில் எந்த விழா நடந்தாலும் அலங்காரங்களின் பொறுப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்குத் தான். என்ன பொருட்கள் வேண்டுமென்றாலும் வாங்கிதர ஆண்கள் பட்டாளம் ரெடியாக இருக்கும். காகிதப்பூ மாலைகளால் அலங்கரிப்பதுதான் அந்தக்கால ஸ்டைல். மாலைகளைக் கட்டிக் கொடுத்தால் ஆண்கள் எல்லோரும் விழா அரங்கத்தில் அதை அலங்காரத் தோரணங்களாகக் கட்டிவிடுவார்கள். பெண்கள் அனைவரும், விடிய விடிய உட்கார்ந்து காகிதப் பூமாலைகள் கட்டுவோம். ரொம்பசோர்வைத் தரும் வேலைதான் . ஆனாலும் அதையும் ரசிக்கும்படி மாற்றிக் கொள்வது எங்கள் திறமை.


 மூன்றாம் மாடியில் படிக்கட்டு முடியும் இடம் விஸ்தாரமாக காற்றோட்டத்துடன் பெரிய ஹால் மாதிரி இருக்கும். வகுப்புத் தோழிகள் அனைவரும் சுற்றி உட்கார்ந்துகொண்டு காகித மாலைகள் கட்ட ஆரம்பிப்போம். ஏற்கனவே பூ கட்டத் தெரிந்தவர்கள் கடைசியில் அமர்ந்து கட்டுவோம். அதற்கு முன்னர் பல நிலைகளில் வேலைகள் நடக்கும். பெரிய காகிதங்களை சிறு சிறு நாடாக்களாக ஒரு கோஷ்டி வெட்டிக் கொண்டிருப்பார்கள். அதை சிறு துண்டுகளாக்கி அதில் இதழ்கள்போல்  நுணுக்கமாக இன்னும் கொஞ்சம் பேர் வெட்டிக் கொண்டிருப்பார்கள். அவற்றைக் கலர் கலராகப் பிரித்து போட்டு பூக்களாக சுருட்டும் வேலை கொஞ்சம் சோம்பேறிதனமான ஆட்களுக்கு ஒதுக்கிவிடுவோம். மலை மலையாகக் கிடக்கும் காகிதப் பூக்களைப் பார்த்தால் எப்போதடா இந்த வேலை முடியுமென்று தோணும். ஆனால் அரட்டைகள் புரணி பேசுவது எல்லாம் கூடவே நடப்பதால் நேரம் பறந்துவிடும். 


கட்டின மாலைகளெல்லாம் சிக்கல் விழாமல் சின்னச் சின்ன உருண்டைப் பந்துகளாக சுற்றி வைப்பதுதான் பெரிய வேலை. அதைச் செய்ய வென்றே சில பொறுமைசாலிகள் எங்கள் வகுப்பில் உண்டு. நான் எப்பவுமே பூமாலை கட்டும் பிரிவில்தான் இருப்பேன். அப்போதெல்லாம் தரையில் அமர்ந்து சம்மணக்கால் போட்டு மணிக்கணக்கில் வேலை செய்திருக்கிறோம் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கையில், அது போன ஜென்மத்துக் கணக்கு போல் தெரிகிறது. இப்போது  முக்காலியோ நாற்காலியோ இல்லாமல் உட்கார முடிவதில்லையே. அந்த நாட்கள் அற்புதமானவைதான்.


இரவெல்லாம் உட்கார்ந்து மாலை கட்டினாலும் மறுநாள் கல்லூரிக்கு லீவெல்லாம் தர மட்டார்கள். வகுப்பறையில் போய் தூங்கிக் கொள்ள வேண்டியதுதான். விழா அரங்கத்தில் உள்அலங்கார வேலைகள் செய்ய கொஞ்ச பேருக்கு மட்டும் அநுமதி கிடைக்கும். அவங்களெல்லாம் ஜாலியாக வகுப்புகளுக்கு பைபை சொல்லிவிட்டு பறந்து விடுவார்கள். ஏற்கனவே கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் பயிற்சி செய்வதற்காக அநுமதி வாங்கி சென்றிருப்பார்கள். மற்றவர்கள் வகுப்பறையில் தூங்கி வழிந்து கொண்டிருப்பார்கள். வகுப்பு எடுக்கிறேன் பேர்வழின்னு வரும் ஆசிரியர்கள் பாடு ரொம்ப திண்டாட்டம்தான். Dayscholars மட்டும் மிகக் கரிசனமாக வகுப்பைக் கவனிப்பார்கள்,துரோகிகள். 


கல்லூரி ஆண்டுவிழா வார இறுதி நாளில்தான் நடக்கும். அதனால் அந்த வாரம் தொடங்கியதிலிருந்தே எல்லா வகுப்புகளும் இதே நிலையில்தான் இருக்கும். பொதுவாக முதல் ஆண்டு மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளில் அதிகமாக ஈடுபட மாட்டார்கள். வேலை செய்வதோடு சரி. ஆனால் எங்கள் வகுப்பு கொஞ்சம் திமிரெடுத்த கூட்டம். நிறைய பேர் அந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றோம். அதிலும் பெண்களின் பங்களிப்புதான் அதிகமாக இருந்தது. பாடல், குழு நடனங்கள், நாடகம் என எல்லா நிகழ்ச்சிகளிலும் பெயர் கொடுத்திருந்தோம். இன்று அமெரிக்காவில் குடி பெயர்ந்துவிட்ட வசந்தி முதல், நடக்க சிரமப்படும் ராமேஸ்வரிவரை அந்த கால நடனங்களில் சோபித்தார்கள் என்பதை கறுப்பு வெள்ளை புகைப்படங்களை அடிக்கடி புரட்டிப்பார்க்கும்போது தெரிகிறது. ஆண்வேடமேற்று நடனமாடியவர்களுக்கு வகுப்புத் தோழர்களின் உடைகள் உதவியதும் தனிக்கதை.


அதையெல்லாம் விட பெரிய கதை எங்களுடையது. நாங்கள் படித்த காலங்களில் ரொம்ப ரொம்ப சீனியர்கள் நெறையபேர் இருந்தாங்க. சில பல காரணங்களால் கல்லூரிப் படிப்பை முடிக்க முடியாத super seniors  . ஆனால் அவங்கதான் ராகிங் மாதிரி விஷயங்களில் ஈடுபடாமலும் புது மாணவர்களுக்கு உதவி புரியும் தன்மையுடனும் இருப்பார்கள். அந்த மாதிரி சீனியர்கள் கொஞ்சம் பேர் சேர்ந்து ஒரு நாடகம் நடத்தினார்கள். பொதுவாக பெண் வேடத்துக்கும் அவர்களே மாறுவேஷம் போட்டு நடித்துவிடுவார்கள். எதேச்சையாக பெண் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதமா என்று என்னிடமும், என் தோழி M.விஜயலட்சுமியிடமும் கேட்டார்கள். நாங்கள் இருவருமே தயக்கமில்லாமல் சரி என்று சொல்லிவிட்டோம்.


நான் பள்ளிப் பருவத்திலிருந்தே co-education பள்ளியில் படித்திருந்ததாலும், எங்கள் வீட்டில் பாலின பாகுபாடு எதுவும் இல்லாமலிருந்ததாலும் எனக்கு அதில் தயக்கமே வரவில்லை. விஜியும் நல்ல தைரியசாலி. அதனால் அவளும் சம்மதித்துவிட்டாள். அவளுக்கு அதில் கிளியோபாட்ரா என்ற கதாபாத்திரம், நான் அவளுக்கு அம்மாவாக நடித்தேன். அதனால் என்னை “அத்தை” என்று அழைக்கும் வசனங்கள் அதிகமாக வரும். என்ன நாடகம், என்ன கருத்து எதுவும் நினைவில்லை. ஒரே மேடையில் ஆண்களுடன் பெண்கள் சேர்ந்து நடித்தது மருத்துவக் கல்லூரி வரலாற்றில் அதுவே முதல் முறையாம். அதெல்லாம் அப்போ எங்களுக்குத் தெரியாது. சொல்லிக் கொடுத்த மாதிரி நடிச்சுக் கொடுத்துட்டு வந்துட்டோம். ரொம்ப பெருமையாக எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று , ஆடி பாடி களைத்து ஓய்வெடுத்தோம்.


கல்லூரி விழாக்களுக்கு அடுத்த நாள் விடுமுறை விட்டுவிடுவார்கள். Post-function holiday ன்னு அதுக்கு பெயர். மறுநாள் ரொம்ப நேரம்  தூங்கி எழுந்து மெஸ்ஸுக்கு சாப்பிடப் போனால் , எங்களைப் பார்த்து சில சீனியர்கள் அடிக்குரலில் பேசிக் கொண்டார்கள். எதற்கென்று சத்தியமாகப் புரியவில்லை. அன்று முழுவதும் அரசல் புரசலாக அதே மாதிரி முறைத்துக் கொண்டிருந்த நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தது. எங்களுக்குத்தான் மேல்தோல் ரொம்ப கனமானதே, இந்த மாதிரி சல சலப்பையெல்லாம் சட்டை பண்ண மாட்டோம். எதற்காக என்று கூட கேட்டுக் கொள்ளாமல் நாங்க பாட்டுக்கு எப்பவும் போல் சந்தோஷமாக சுற்றிக் கொண்டிருந்தோம்.


மறுநாள் வகுப்பறைக்குப் போனால் அங்கேயும் இதே பாணியில் சில சலசலப்புகள். எங்கள் வகுப்பில் செந்தில்வேல் முருகன் என்ற நண்பர் உண்டு. அவரை நண்பர்கள் எல்லோரும் “மாமா” என்றுதான் அழைப்பார்கள். பெண்களும் கூட அப்படியேதான் அழைப்போம். ஆனால் அன்று புதுவிதமாக மாமா என்ற சொற்களுடன் அத்தை என்ற பதமும் அடிக்கடி முணுமுணுக்கப்பட்டது. அப்போதுதான், இது எல்லாமே அந்த நாடகத்தில் நடித்ததற்கு கிடைத்த விமர்சனத்தின் விளைவாக ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொண்டேன். எனக்கு அதன்பொருட்டு சின்ன சஞ்சலமோ,குழப்பமோ  இல்லாததால் அதை ஈஸியாக எடுத்துக் கொண்டு விட்டேன்.பெரிசாக react பண்ணவில்லை. அதனால் சக மாணவர்களுக்கும் அதை பெரிது படுத்தி கலாய்க்க எந்த முகாந்திரமும் கிடைக்கவில்லை. 


ஆண்டுவிழா நாடகத்திற்குப் பிறகு விஜயலட்சுமியை கிளி(யோபாட்ரா) கிளி விஜி எனவும், என்னை அத்தை எனவும் அழைத்து சந்தோஷப் பட்டுக் கொண்டார்கள் நாங்களும் அதை பெருசு பண்ணிக் கொள்ளவில்லை. அதை மீறி யாரும் எங்களை அதிகமாக வம்புக்கு இழுக்கவில்லை, ஏனென்றால் நாடகத்தை நடத்திய சீனியர்களின் ஆளுமை பற்றி அனைவர்க்கும் தெரியும். அவர்கள் மேலிருந்த மரியாதை கலந்த பயத்தால் அத்துடன் நிறுத்திக் கொண்டார்கள். இன்றளவும் செந்திலை எங்கு பார்த்தாலும் ”மாமா எப்படி இருக்கீங்க”ன்னு நானும், “அத்தை சவுக்கியமா”ன்னு அவரும் விசாரித்துக் கொள்வோம். அவ்வளவு புரிதலுடன் கூடிய நட்பு எங்களுடையது, எங்கள் வகுப்புத் தோழர்களுடையது. 


"நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி

ஒல்லும்வாய் ஊன்றும் நிலை".

(நட்பின் அரியணை எது என்றால், எப்போதும் மாறாமல் முடிந்தபோது எல்லாம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதேயாம்.)

0 Comments:

Post a Comment

<< Home