Thursday, December 09, 2021

அலை-53

 அலை-53


பெண்களில் ”அழகு”- ”அழகில்லை” என்ற பிரிவினையே கிடையாது; ”அழகு, மிக அழகு” ன்னுதான் உண்டு என்று நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார். எங்களுக்கும் அதுவே உகந்ததாகத் தோணுகிறது. ஆனால் இதெல்லாம் புரியாத “அறியாத வயதில்” அலங்காரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக நினைத்துக் கொண்டு நிறைய கோமாளித்தனம் பண்ணியிருக்கிறோம். 

கல்லூரியில் ஏதாவது விழா அறிவிக்கப்பட்டால் போதும் விடுதி அறைகளில் தூள் பறக்கும். 


என்ன கலர் புடவை கட்டுவது என்பதில்தான் முதல் அலசல் ஆரம்பிக்கும். பட்டுப் புடவை கட்டிக் கொள்வதுதான் அந்தக் காலங்களில் சிறப்பு. நம்ம கிட்டே உள்ள ப்ளவுஸ்களுக்கு யாரிடம் புடவை இருக்கிறது என்று அலசுவதுதான் முதல் ஸ்டெப். கல்லூரி நாட்களில் புடவைகளை இரவல் வாங்கிக் கட்டிக் கொள்வது ரொம்ப சாதரணமாக நடக்கக் கூடிய நிகழ்ச்சி. சுத்தம் சுகாதாரம், மாற்றிக் கட்டக் கூடாது என்று எந்தவிதமான கட்டுக்குள்ளும் அடங்காத வயசு. யார் புடவை யாரை அலங்கரிக்கிறது என்பது கடைசி வரை புரியாத புதிர்தான். 


நாங்களெல்லாம் குலுக்கிப்போட்டுப் புடவைகளை மாற்றிக் கொள்ளும்போது, சில touch me not கோஷ்டிகள் மட்டும் கொடுக்கவும் மாட்டாங்க, வாங்கிக்கவும் மாட்டாங்க. இன்னொரு கோஷ்டி, இதிலெல்லாம் என்ன இருக்குது, எப்பவும் போல் சிம்பிள் ஆக இருக்கலாம் என்று தத்துவம் பேசிகிட்டு இருப்பாங்க. அவங்களைப் பத்தியெல்லாம் விமர்சனம் பண்ணி நேரத்தை வீணடிக்க எங்களுக்கும் பொழுதிருக்காது. 


பிரத்தியோகமாக அலங்காரம் பண்ணிக் கொள்வதென்றால் ஏதோ பெரிய விஷயம் பண்ணப் போறோம்னு நினைச்சுக்கக் கூடாது. எண்ணெய்ப்பசை போகத் தலைக்குக் குளித்து, தலை கொள்ளாமல் பூ வைத்துக் கொள்வதுதான்  அலங்காரத்தின் உச்சம்.

நாங்கள் கல்லூரியில் படித்தபோது பாக்கெட் ஷாம்பூகூட இருந்ததாக நினைவில்லை. சீயக்காய் அல்லது வாசனை சோப்புதான் தலைக்குப் போடணும். அப்படி தலையைப் பஞ்சாகப் பறக்கவிட்டு நடக்கும் போது ஏதோ பாரதிராஜா படத்துக் கதாநாயகி மாதிரி பின்னணி இசையெல்லாம் கேட்கும். 


இப்போது மாதிரி பியூட்டி பார்லரும் வித விதமான க்ரீம்களும் அப்போது கிடையாது. முகத்துக்கு ஏதாவது பூசி அழகு படுத்தலாம்னு நினைச்சா எங்களுக்கு நினைவுக்கு வருவது மஞ்சள் தான். மஞ்சள் பூசிக் குளிச்ச முகத்தில் பவுடர் பூசும் போது முகத்துக்கே தனிக் களை வந்த மாதிரி இருக்கும். எங்கள் வகுப்புத் தோழி சிசிலிக்கு அமெரிக்கா மாப்பிள்ளை நிச்சயிக்கப்பட்டு அவள் உபயோகிக்க ஆரம்பித்தபோதுதான் Fair& Lovely  என்ற க்ரீம் உண்டு என்பதே எங்களுக்குத் தெரியும். 


“கண்ணுக்கு மை அழகு” தான் எங்கள் ஸ்பெஷல் மேக்கப். ஐடெக்ஸ் கண்மை தான் நிறைய பேர் பெட்டியில் இருக்கும். கண்மை பூசிக்கொள்ள சின்ன ப்ளாஸ்டிக் குச்சியும் அதனுள் இருக்கும்.  நானெல்லாம் ஒருநாள்கூட கண்ணுக்கு மை போடாமல் வெளியே சென்றதில்லை. மை போடாவிட்டால் அழுத மாதிரி தெரியும் என்பது எங்கள் எண்ணம். ஆள்காட்டி விரலில் கண்மையை நோண்டி எடுத்து கீழ் இமையில் லாவகமாகப் பூசுவதற்கு நிறைய திறமை வேண்டும். இல்லாவிட்டால் கண்ணைக் குத்தி கண்ணீருடன் அலைய வேண்டும். தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரத்திலும் மை தீட்டிய விழிகளுடன் இருந்தது நினைவிருக்கிறது. விழாக்கள் சமயத்தில் மட்டும் மேல் இமையில் அந்த ப்ளாஸ்டிக் குச்சி வைத்து கோடு வரைந்து ஐ லைனர் போட்டுக் கொள்வோம். 


”பொட்டு வைத்த முகமோ”ன்னு  கேலி பண்ணப்பட்டாலும் நாங்க ஒவ்வொருத்தரும் வெவ்வேறு விதமா பொட்டு வைச்சுக்குவோம்.  நிறைய நேரங்களில் கண்மையே நெற்றிப் பொட்டாக மாறிவிடும். சில சமயங்களில் குங்குமப் பொட்டு வைத்துக் கொள்வோம். பொட்டு ரொம்ப நேரம் நெற்றியில் தங்கியிருக்கணும்னா ஆம்பர்ன்னு பசை மாதிரி ஒன்றை தடவி அதன் மேல் பொட்டு வைப்போம். சில சமயங்களில் வெறும் ஆம்பரே பொட்டாக மாறிவிடும்.

சாந்து பொட்டு என்பது கொஞ்சம் உயர்ந்த வகுப்பு. ரொம்ப முக்கியமான நேரங்களில் மட்டும்தான் உபயோகிப்போம். வட்ட வடிவம், கோபி மாதிரி, பிறை மாதிரி என்ன வடிவத்தில் வேணுமின்னாலும் வைச்சுக்கலாம். வெவ்வேறு கலர்களிலும் கிடைக்கும். ஆனால் மெரூன் தான் எனக்குப் பிடிச்ச கலர். இமைகளுக்கு நடுவில் சின்னதா பொட்டு வைச்சிட்டா கண் , மூக்கு நெற்றி எல்லாம் ஓரிடத்தில் குவிந்து முகத்திற்கு வடிவம் கொடுப்பதுபோல் ஒரு மாயை உருவாகும். சாந்து பொட்டிலிருந்து ஸ்டிக்கர் பொட்டு வரக்கூட மாமாங்கம் தாண்டியிருக்கும். 


கல்லூரி முடிக்கும் வரையிலும் காதுகளுக்கு பெரிய வளையங்கள் போட்டுக் கொள்வதுதான் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. மிகப் பெரிய வளையம் போடும் நாட்களில், “பார்த்தும்மா!வளையத்துக்குள் கிளி வந்து உட்கார்ந்திடப் போகுது”ன்னு சீனியர்கள் கேலி பண்ணும் அளவுக்கு பெரிய வளையம் போடுவேன். காதுக்கு பின்னால் சில முடிக்கற்றைகளைக் குட்டையாக வெட்டிவிட்டுக் கொள்வது அப்போதைய பேஷன். அதுக்கு டெண்ட்டகிள்ஸ் என்று பெயர் வேறே வைச்சிருப்போம். உதட்டுச் சாயம் என்பதைப் பார்த்ததே இல்லை. அதெல்லாம் சினிமா நடிகைகளின் தனிச் சொத்து என்று நினைத்திருந்தோம். நெயில்பாலிஷ் போடுறது மட்டும் கரெக்டாக நடக்கும். 


இத்துனூண்டு அலங்காரத்துக்கே விடுதியின் வெராண்டா முழுவதும் களேபரமாக இருக்கும். சீப்பை ஒரு ரூமில் வைத்துவிட்டு மற்ற எல்லா ரூமில் தேடுபவர்கள்; குளிக்க பாத்ரூம் கிடைக்காமல் அவதிப்படுபவர்கள்; தலைவாரிவிடச் சொல்லி தோழியரை நச்சரிப்பவர்கள்; பூவை தழையத்தழைய சூட்டி விடச் சொல்லித் துரத்துபவர்கள் என்று ஏகப்பட்ட காட்சிகள் நடக்கும். அத்தனையும் முடித்து வானம்பாடிகள் மாதிரி எல்லோரும் விடுதி வாசலிலிருந்து கிளம்பும் போது காணக் கண் கோடி வேண்டும். முதல் வரியில் சொல்லப்பட்ட உவமை மிகப் பொருத்தமாக இருக்கும்.


சுடிதார் , பேண்ட் சர்ட், ஸ்கர்ட் போன்ற நவ நாகரீக உடையலங்காரம் எதுவுமே எங்கள் காம்பவுண்டுக்குள் நுழைந்திராத காலம் அது. எங்கும் எப்போதும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் புடவைதான். சாயங்காலம் விடுதியில் மாற்று உடுப்பாக போடுவதும் அநேகமாக பாவாடை தாவணியாகத்தான் இருக்கும், ஒரு சில நேரங்களில் நைட்டீ போடுவதுண்டு. என்னை மாதிரி அண்ணன் தம்பிகளைக் கொண்டவர்கள் அவர்களின் சட்டைகளைப் போட்டுக் கொள்வோம். 


எங்க நிலைமையே இப்படியென்றால் வகுப்புத் தோழர்களின் ஆடை அலங்காரம் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். “சுப்பிரமணியபுரம்” ஸ்டைல்தான். பெல்பாட்டம் பேண்ட் மிகப் பிரபலமாக இருந்த சமயம் அதுதான். சில சமயங்களில் பேண்ட்டின் அடிப்பாகம் மிகப் பெரிதாகி பாவாடை மாதிரி ஆகிவிடுவதும் உண்டு.அந்த மாதிரி நிறையபேர் சுத்திகிட்டு இருப்பாங்க. எங்கள் வகுப்பில்   நண்பர் ஒருவரின்  பெயரை “பாவாடை” என்றே மாற்றியிருந்தோம். மேல்வயிற்றுக்கு ஏற்றப்பட்ட பேண்ட்டில் பெல்ட் போட்டு பெல்பாட்டத்துடன் பவனி வருவார்கள் எங்கள் கல்லூரித் தோழர்கள். 


அந்தக்காலத்தில் போட்டோ எடுப்பது என்பதே பெரிய லக்ஸரி. எங்கள் யாரிடமும் கேமரா இருக்காது. விழாக்களின் போது பொதுவான போட்டோகிராபர் எடுப்பார். ஆனாலும் அதை ப்ரிண்ட் போடும் செலவு காரணமாக நிறைய போட்டோக்களை வாங்கியே இருக்க மாட்டோம். ஒவ்வொரு வருடம் முடியும் போதும் க்ரூப் போட்டோ எடுப்பாங்க. அது மட்டும் எப்படியாவது வாங்கிக் கொள்ளுவோம். நிறைய போட்டோக்கள் இருந்திருந்தால் அலை இன்னும் அமர்க்களமாக இருக்கும்.


நிறைய நினைவுகள் இப்படியே நிழல் படமாக நினைவுகளில் மட்டுமே உலா வருகிறது.

0 Comments:

Post a Comment

<< Home