Friday, August 27, 2021

அலை-49

 அலை-49

“சினிமாவுக்குப் போன சித்தாளு” என்று ஜெயகாந்தன் குறுநாவல் உண்டு. எங்களை (பானு&தாணு) அவர் பார்த்திருந்தால்  ”சினிமாவுக்குப் போன ரெட்டை வாலு”ன்னு எழுதியிருப்பார். சினிமா பார்ப்பதில் எங்களை மிஞ்ச ஆளே கிடையாது. ஆனால் சினிமா பைத்தியங்கள் அல்ல. வாரத்துக்கு ஏழு படம் பார்க்கச் சொன்னாலும் ரெடியாக இருப்போம். ஹாஸ்டலில் பார்த்த மாதிரி இருக்கும் அடுத்த கொஞ்ச நேரத்தில் சினிமா தியேட்டர் வாசலில் இருப்போம். பெரிய கூட்டம் சேர்ந்து போவதெல்லாம் வேலைக்கு ஆகாது. எங்க வழியே தனி வழிதான். 


திருநெல்வேலியில் வேறு எந்த விதமான பொழுது போக்கு அம்சங்களும் கிடையாது. சினிமா பார்ப்பதுதான் தலையாய அவுட்டிங். ஏகப்பட்ட சினிமா தியேட்டர்களும் உண்டு. இப்போ அதையெல்லாம் இடிச்சு வெவ்வேறு கட்டிடங்களாகக் கட்டி விட்டார்கள். ஜங்சனில் ஆரம்பிச்சு டவுண் வரைக்கும் வரிசையாக திரையரங்குகள் இருக்கும். பாலஸ்-டி-வேல்ஸ் என்று வேற்று மொழியுடன் புரதானமான திரை அரங்கு உண்டு. அரதப் பழசாக இருந்தாலும் ஆங்கிலம், மலையாளம் போன்ற படங்கள் அங்கேதான் அதிகமாக திரையிடப்படும். என்ன காரணத்துக்காக அந்த பெயர் வந்தது என்று பின்னூட்டங்களில் கேட்கக்கூடாது, ஏன்னா எனக்குத் தெரியாது.


பாரம்பரியமான திரை அரங்கு என்றால் சென்ட்ரல் தியேட்டர்தான். கம்பீரமாக அழகான முகப்புடன் இருக்கும். பெரிய திரை அரங்கும்கூட அதுதான். முன்னாடி ஏதோ சிலையெல்லாம் கூட வைச்சிருப்பாங்க. அதுக்கு எதிரேயே ரத்னா தியேட்டர் இருக்கும்.அதன் அருகிலேயே பார்வதி தியேட்டரும் உண்டு. அடுத்தடுத்து இருப்பதால், ஒரு இடத்தில் ஹவுஸ்-புல் ஆனாலும் அடுத்தடுத்த அரங்குகளில் ஏதேனும் ஒரு படத்துக்கு டிக்கெட் கிடைத்துவிடும். டிக்கெட் கிடைக்காமல் விடுதிக்குத் திரும்பியதாக சரித்திரமே இருக்காது. 


நெல்லையப்பர் கோவிலைச் சுற்றிப் பின்பக்கமாக வந்தால் நயினார் குளத்தை ஒட்டி ராயல் தியேட்டர் இருக்கும். அங்கு செல்வதற்கு பஸ் ஸ்டாப் தூரமாகவும், கொஞ்சம் ஜனசந்தடி குறைவாகவும் இருக்கும் என்பதால் ராயலுக்கு போவது ரொம்ப அரிதுதான். பாப்புலர் தியேட்டரும் டவுணில் கொஞ்சம் அசெளகரியமான இடத்தில் இருக்கும். அதனால் இரண்டுபேர் மட்டும் போவதாக இருந்தால் இந்த ரெண்டு தியேட்டரையும் தவிர்த்து விடுவோம். 


டவுணுக்கு செல்லும் மேம்பாலம் இறங்கும் இடத்தில் சிவசக்தி தியேட்டர் புதிதாக வந்திருந்தது. ஆனால் வயக்காட்டுக்கு நடுவில் இருந்ததால், கொஞ்ச தூரம் நடந்து செல்ல வேண்டும். கூட்டமாகப் போகத்தான் வசதிப்படும். ஜங்சனில் புதிதாகக் கட்டப்பட்ட பூர்ணகலா தியேட்டர் தான் எங்களுக்கு ரொம்ப வசதி. படம் முடிந்ததும் டவுண் பஸ் பிடிக்கவும், பெரிய படமாக இருந்தால் கடைசி பஸ் பிடிக்கவும் வசதியாக இருக்கும். சாலைக்குமரன் கோவிலை ஒட்டி இருக்கும் கடைத்தெரு எப்போதும் கலகலப்பாக இருப்பதால் ரெண்டுபேராகச் செல்ல தயக்கமே இருக்காது. இதெல்லாம் போக பாளை பஸ் ஸ்டாண்டில் அஷோக் தியேட்டரும் உண்டு. ஆனால் அதிலே நான் படமே பார்த்ததில்லை. 


எங்க ஊர் தியேட்டர்களில் புக்கிங் , சீட் நம்பர் போன்ற சங்கடங்கள் எதுவும் கிடையாது. டிக்கெட் கவுண்டரில் (ஈரோட்டுக் கவுண்டர் இல்லைங்க)  சீட்டு வாங்கினோமா, காலியிடத்தைப் பார்த்து உக்கார்ந்தோமான்னு ஜாலியாக படம் பார்க்கலாம். ஆனால் படம் ரிலீஸ் ஆகும் நாட்களில் “மன்னன்” பட ரஜினி ஸ்டைலில்தான் டிக்கெட் வாங்கணும். அந்த மாதிரி நாட்களில் உஷாவை அனுப்பினால் டிக்கெட் நிச்சயமாகக் கிடைத்துவிடும்.உஷா கவுண்டமணி ஸ்டைலில்தான் அராத்து பண்ணுவாள்.


 ஒவ்வொரு சினிமா தியேட்டருடனும் பலதரப்பட்ட அநுபவங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் கிடைத்திருக்கிறது. 

எங்களோட பதினாறு வயது முடிந்த நிலையில் வந்த படம்தான் “16 வயதினிலே”. பாரதிராஜா என்ற அரிய டைரக்டரின் அறிமுகம் எங்கள் அறிமுக வகுப்புடன் ஆரம்பித்தது. காதலைச் சொல்வதில் ஸ்ரீதருக்குப் பின் பாரதிராஜாதான். பாலச்சந்தரும் ஸ்ரீதரும் பாரதிராஜாவும்தான் அப்போதைக்கு எங்கள் கவனத்தின் உச்சத்தில் இருந்தவர்கள். கமலும் ரஜினியும்தான் எங்கள் கனவுலக நாயகர்கள். சினிமா தவிர வேறு எந்த பொழுதுபோக்கும் எங்களை அந்த அளவு வசப்படுத்தவில்லை அந்தப் பதினாறு வயதில். 


மூணு ரூபாய் கையிலிருந்தால் போதும், சினிமாவுக்குப் போயிடலாம். டவுண் பஸ்ஸூக்கு போக,வர எழுபது காசு , தியேட்டரில் டிக்கெட்டுக்கு 50 காசு. ரெண்டுபேர் தாராளமா போகலாம். வேறே எந்த செலவும் செய்வதில்லை.  சினிமாவுக்கென்றே பணத்தை மிச்சம் படுத்தி வைப்போம். நாங்க பார்க்காமல் தியேட்டரைவிட்டு போன படங்கள் மிகக் குறைவுதான். இடையிடையே கூட்டம் சேர்த்துக்குவோம். கும்பலாக போகும் போது செம ரகளையாக இருக்கும். எல்லோர் கவனத்தையும் கவரும் விதமாகக் கத்தி கமெண்ட் அடித்து படம் பார்ப்பது அந்த மாதிரி நேரங்களில்தான். “ஆறு புஷ்பங்கள்” படம் பார்க்க ஆறுபேர் போனோம். அதில் வரும் “ஏண்டி முத்தம்மா” என்ற பாடல் சந்திரபோஸ் குரலில் இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. 


அவ்வப்போது காமெடியான நிகழ்ச்சிகளும் நடக்கும், கடுப்பேத்துற மாதிரியும் நடக்கும். ஒருமுறை பூர்ணகலா தியேட்டரில் படம் பார்க்கப் போயிருந்தபோது, ரொம்ப கூட்டம். எப்பவும் போல் டிக்கெட் எடுக்க உஷாவை அனுப்பிவிட்டோம். அவள் விரல் இடுக்குகளில் பத்து ரூபாய் தாளை இறுகப் பற்றிக் கொண்டு முண்டியடித்து டிக்கெட் கவுண்டர் வரை போய்விட்டாள். அந்தோ பரிதாபம், விரல் இடுக்கில் வைத்திருந்த பணம் காணாமல் போய்விட்டது. யாரோ உருவிவிட்டார்கள்.  உஷாவுக்கு நல்லா திட்டு கிடைத்தது. கடுப்பாகி நின்று கொண்டிருந்தோம். பஸ்ஸுக்கும் பணமில்லை.


வேறு யார் கையிலும்  பணம் இல்லை. நாலைந்து பேர் சேர்ந்து அன்றுதான் ஜாலியாக சென்றிருந்தோம் . படம் பார்க்காமல் விடுதிக்கு செல்லவும் மனமில்லை. கூடி பேசி முடிவெடுத்தோம். மீனாக்காவின் சொந்தக்காரர் தியேட்டரை ஒட்டிய தெருவில் ப்ரிண்டிங்க் ப்ரெஸ் வைத்திருந்தார். முன்பே அறிமுகம் ஆனவர்தான். அவரிடம் சென்று கடன் கேட்கலாம் என்று முடிவானது. மீனாக்காவிடம் இது குறித்து யாரும் சொல்லக்கூடாதென்று பேசி வைத்துக் கொண்டோம். இல்லாட்டி எனக்குதான் நிறைய திட்டு கிடைச்சிருக்கும். ஒருவழியாக அவரிடம் விஷயத்தை சொல்லி அசடு வழிந்து கடன் வாங்கி படம் பார்த்துவிட்டுதான் திரும்பினோம்.


 எப்பவுமே பகல் காட்சி அல்லது சாயங்கால காட்சிகள்தான் பார்க்கப் போவோம். அப்போதான் விடுதிக்குள் நேரத்துக்குள் செல்ல முடியும். திடீரென ஒருநாள் இரவு இரண்டாம் ஆட்டம் பார்க்க வேண்டுமென்று எல்லோருக்கும் ஆசை வந்துவிட்டது. ஆசைப் பட்டுட்டா அதை நிறைவேற்றியே ஆக வேண்டும் எங்களுக்கு. சிவசக்தி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு இரவு தூங்குவதற்கு சிந்துபூந்துறையில் இருந்த அக்கா வீட்டிற்கு செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டோம். ஆனால் படம் விட்ட பிறகு டவுண் பஸ் கிடையாது. ஆட்டோ வசதியும் அப்போதெல்லாம் கிடையாது.எப்படி அக்கா வீடுவரை செல்வதுன்னு யோசித்தோம். பிறகென்ன, நடைராஜா சர்வீஸ்தான் . அன்று பார்த்த திரைப்படத்தை அக்கு வேறு ஆணிவேராகப் பிரித்து விமர்சனம் செய்து கொண்டே நடந்ததில் வீடே வந்துவிட்டது. ஒரே அறை மட்டும் இருந்த அக்காவீட்டில் அனைவரும் தலைமாடு கால்மாடாகப் படுத்து சந்தோஷப் பட்டுக் கொண்டோம்.


எங்கள் வகுப்புத் தோழிகள் அனைவரும் கிடத்தட்ட ஒரே மாதிரியான மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தோம். தோழியரின் குடும்பத்தினருடன் அக்கா அண்ணன் என்ற உறவுகளுடன் நெருங்கிப் பழகிக் கொள்வோம். அதனால் திடீரென இரவு நேரத்தில் இன்னொருவர் வீட்டில் தங்குவது தவறாகவோ விமர்சனத்துக்குரியதாகவோ இருந்ததில்லை. அன்று மட்டுமில்லை, ஜங்ஷனுக்கு செல்லும் நேரங்களில் எல்லாம் மரகதக்கா வீட்டில், அவள் இல்லாத சமயங்களில்கூட, அடுக்களையில் புகுந்து சாப்பாடைக் காலி பண்ணிவிட்டு வரும் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்கும்.


”இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.”

0 Comments:

Post a Comment

<< Home