Friday, August 27, 2021

அலை-48

 அலை-48

"தந்தையர் தினம்" ஜுன் மாதத்தின் மூன்றாம் ஞாயிறு அன்று அனுசரிக்கப் படுகிறது. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று வளர்ந்தவர்கள் மட்டுமல்ல தந்தைகளுடன் மல்லுக்கு நிற்பவர்களும்கூட ஆதாரிக்க வேண்டிய நாள் இது. பெண்மக்களுக்கு முதல் ஹீரோ அப்பாதான். அதனால்தான் அதிக வாழ்த்துகளும் விழாக்களும் மகள்களால் நடக்கிறது.


எங்கள் அப்பாவைப் பற்றி சொல்வதென்றால் ஒரு பதிவு போதாது. அப்பாவின் பெயர் ஐநூற்று முத்து என்பதால் எங்கள் குடும்பத்தின் செல்லப் பெயரே "PEARLS "family - "முத்துக்கள் குடும்பம்"தான். அம்மாவின்  பெயரும் "NAG500" 

(நாகம்மாள் ஐநூற்றுமுத்து) என்றே வழங்கப் பட்டு வருகிறது. அப்பாவின் பெயருக்கேற்ப 500 முத்துகளை உருவாக்குவது இந்த தலைமுறையில் சாத்தியமில்லை என்றாலும் ஒரு நூறு முத்துக்களாவது சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பிள்ளைகள்,பேரப்பிள்கள் ,கொள்ளுப் பேரப்பிள்ளைகள் சேர்ந்து இப்போதே எழுபதைத் தாண்டிவிட்டது. அதிலும் முத்து என்ற அடைமொழியுடன்  உள்ள குழந்தைகள் அதிகமாக உண்டு. முத்துராமனும் முத்துகிருஷ்ணனும் முத்துசெல்வியும் குடும்பங்களில் ரெப்படிஷனாக இருப்பார்கள்.

 " முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக" என்ற பாடல் எங்களுக்கு ரொம்ப பொருத்தமாக இருந்ததால் அதையே குடும்ப பாடல் ஆக்கிக் கொண்டோம். யாராவது காணாமல் போய்விட்டால்கூட "நாளை நமதே" பாணியில் அந்த பாடலைப் பாடி கண்டு பிடித்துவிடுவோம். 


அப்பா என்றவுடன்  ஆறடி உயரத்தில் மெலிந்த தேகத்துடன்  வெள்ளை வேஷ்டி சட்டையில் வேகமாக நடக்கும் உருவம்தான் நினைவுக்கு வருகிறது. எப்பவுமே நாலுமுழ வேஷ்டிதான் கட்டுவாங்க.அவங்க உயரத்துக்கு அது கணுக்காலுக்கு மேலேதான் இருக்குமென்றாலும் அதுவே தனி ஸ்டைலாகத்தான் இருக்கும். எங்கேயாவது விசேஷங்களுக்கு போகும்போதுதான் எட்டுமுழம் கட்டுவாங்க. சட்டை கூட கழுத்து வழியாகப் போடும் ஜிப்பா மாதிரி இருக்கும் அரைக்கை சட்டைதான்.. எனக்கு நினைவு தெரிந்த காலம் தொட்டு அப்பாவின் நடை உடை பாவனை எதுவுமே மாறியதில்லை.


அப்பாவின் உருவத்துக்கும் அம்மாவின் கைபக்குவத்துக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. எங்களுக்கெல்லாம் லைன் சட்னி தந்துவிட்டு அப்பாவுக்கு மட்டும் கெட்டி சட்னி எடுத்து வைப்பதுமாதிரி நிறைய உண்டு. அப்பாவின் உணவுப் பழக்கமும் விசேஷம்தான். எவ்வளவு சுவையானாலும் விருந்து என்றாலும் இரண்டே இட்லிதான். சாதமும் அளவு மாறாமல் ஒரே மாதிரிதான். அப்பா அதை சாப்பிடுவதும் ஒரு அழகுதான். நுனிவிரல்களைத் தாண்டி எச்சில் பதார்த்தம் உள்ளங்கையைத் தொட்டதே இல்லை. கைகழுவ தேவையே இல்லாத மாதிரி சுத்தமாக இருக்கும். அப்பாவின் சாயலையும் ஒருசில பழக்கங்களையும் அவ்வப்போது மகன் டேனியிடம்  பார்க்கிறேன்.


அப்பா அந்தக்கால இண்டர்மீடியேட் படிச்சவங்க. எங்க ஊரில் ஆங்கில நாளிதழ் படிக்குமளவு இருந்தவர்களில் அப்பாவும் ஒருவர்.. கம்யூனிசத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.  அப்பாவிடம் உதவி கேட்டு வருபவர்கள் அதிகம் உண்டு. விண்ணப்பங்கள் எழுதிக் கொடுப்பது படிவங்கள் பூர்த்தி பண்ணிக் கொடுப்பது என்று ஊர் வேலைகள் நிறைய செய்வாங்க. சட்ட சம்பந்தமான விளக்கங்கள் சொல்து,பெட்டிஷன்கள் எழுதிக் கொடுப்பது என எப்போதும் பிசியாகவே இப்பாங்க.அப்பா கம்யூனிச சித்தாந்தங்களிலும் அம்மா ஓயாத அடுப்படி வேலைகளிலும் இருந்ததால் எங்கள் வீட்டில் சாமி பூஜை சம்பிரதாயங்கள் எதுவும் தொடர்ச்சியாக கடைப்பிடிக்கப் பட்டதே இல்லை.


அப்பாவின் நெருங்கிய தோழர் என்றால் காணியாளர் பள்ளியின் தாளாளர் வேதமுத்து சார்தான். இவங்க ரெண்டுபேரும்தான் எப்போதும் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து ஊர் நியாயம் பேசிக் கொண்டிருப்பார்கள். சாயங்கால நேரங்களில் தெஷணமாற நாடார் சங்கத் தலைவர் PSR தாத்தாவுடன் நடை பயணம் போவாங்க. எங்கப்பா ஆச்சி தாத்தாவுக்கு ஒரே பையன் என்பதால் வேலைக்கே சென்றதில்லை.அரசியலும் ஊருக்கு உபகாரமும்தான் முழுநேர வேலை.வீட்டு பொறுப்புகளை அம்மாவே சமாளித்துக் கொள்வார்கள்.


குழந்தைகள்தப்பு செய்தாலோ  சேட்டை பண்ணினாலோ அப்பா யாரையும் திட்டியதோ அடித்ததோ கிடையாது. சத்தமாகக்கூட பேசியதில்லை. ஆனால் அப்பாவின் நன்மதிப்பிலிருந்து தவறிவிடக்கூடாது என்ற எண்ணம் எங்கள் எல்லோருக்கும் உண்டு. அப்பாவின் எதிரில் உட்காரக்கூட மாட்டாங்க நானும் கடைக்குட்டி நானாவும் மட்டுதான் அப்பாவுடன் உட்கார்ந்து ஜாலியாக சீட்டு விளையாடுவோம்.அடிவாங்கியே பழக்கமில்லாததால் நானும் என் குந்தைகளை அடித்ததே இல்லை.அப்படி வளர்ப்பதில் உடன்பாடும் இல்ல.


அப்பா வீட்டிலேயே இருந்தமாதிரி தோன்றினாலும் வெளி உலக தொடர்புகள் மிக அதிகம். பெரி பெரிய தலைவர்களெல்லாம் மிசா போன்ற காலங்களில் எங்க வீட்டில் தலைமறைவாக இருந்ததாக எல்லாம் கேள்வி. எனக்கு அதில் பரிச்சியம் இல்லை. உட்கார்ந்த இடத்திலிருந்தே எனக்கு இலவசமாக கல்லூரிப் படிப்பை வாய்க்கச் செய்யுமளவு திறமைசாலி. ஆனால் ஆர்ப்பாட்டமில்லாமல் எப்போதும் அமைதியாக இருப்பாங்க. பிள்ளைகளின் சுதந்திரத்திலும் என்றுமே தலையிட்டதுமில்லை,தடை போட்டதுமில்லை. ஹைகிரவுண்ல் ஹோட்டலுக்கு சாப்பிட வந்தபோது நானும் எழிலும் சேர்ந்து உணவருந்திக் கொண்டிருந்ததைப் பார்த்தும் கூட என்னைக் கேள்விகள் எதுவும் கேட்டு சங்கடப் படுத்தவில்லை.அவ்வளவு புரிதலும் பெருந்தன்மையும் அப்பாவிடம் உண்டு.


அவங்ளோட கையெழுத்து ஒருவித நடுக்கம் கலந்த கோடுகள் மாதிரி இருக்கும். ஆங்கிலத்தில் Ainootrumuthu என்று போடுவார்கள். அதனால் எல்லோருடைய இனிசியலும்  "A" என்றிருக்கும். எனக்கும் சரசக்காவுக்கும்  மட்டும் தமிழ் பெயர் காரணமாக. "ஐ" என்றாகிவிட்டது. எனக்கு அதுவும் "நான்சி தாணு"வாக பெயர் மாற்றப் பட்டபோது காணாமல் போய்விட்டது.


அப்பாவின் நினைவுகள் அழியாச் சின்னமாக எங்கள் மனங்களில் இருந்தாலும்,அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல இதுபோன்ற நினைவலைகளாவது சிறிது பயன் படட்டுமே என்றுதான் இந்த அவசரப் பதிவு. சொற்களில் வந்துள்ளது சொற்பம்தான்.அவ்வப்போது மடைதிந்தாற்போல் வரும்.


இதை வாசிக்கும் அனைத்து அப்பாக்களுக்கும் 

"இனிய தந்தையர் தின"  வாழ்த்துகள்.

0 Comments:

Post a Comment

<< Home