Thursday, December 09, 2021

அலை-55

 அலை-55

“நான்கு முதல் எண்பத்து நான்கு வரை”


ஏதோ சினிமா படத் தலைப்பு மாதிரி இருக்குதா?. எங்கள் குடும்ப கூடுகையின் கருத்தாக்கம்தான் இது. சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை எல்லாம் முடிந்த பிறகு நடந்த “முத்துக்கள்” குடும்பத்தின் ஆரவார பூஜை. நினைவலைகளில் மட்டுமே நீந்திக் கொண்டிருந்த என்னை நிகழ்வலைகளில் மூழ்க வைத்த ஆர்ப்பாட்டமான பூஜை. 


குடும்பத்தின் Zoom meeting களில் பேசிக் கொள்வது சந்தோஷமாக இருந்தாலும் நேரில் கூடிகொண்டாட வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்கும் ஏற்பட்டதால் நிகழ்ந்த இனிய கூடுகை.

லாக்-டவுண் ஓரளவு தளர்த்தப் பட்டதும் ஊர் சுற்ற எங்கு செல்லலாம் என்பதுதான் முதல் யோசனையாக வந்தது. அதையே ”மாத்தி யோசி”ன்னு உல்டா பண்ணிப் பார்த்தபோது பிள்ளையார் மாதிரி குடும்பத்தைச் சுற்றினால் உலகத்தையே சுற்றுவதற்குச் சமம் என்ற ஞானோதயம் வந்தது. அதன் பிறகு அதைச் செயலாக்க நினைத்தபோது தம்பி நானாவும் மகள் ஆலீஸும் அதைச் செதுக்கிக் காவியமாக்கிவிட்டார்கள்.

பூஜையை ஒட்டிய விடுமுறை நாட்கள் எல்லோருக்கும் வசதியாக இருக்கும் என்பதால் அக்டோபர் 16 & 17 ஆம் தேதிகள் தேர்வு செய்யப்பட்டன. 


500 Pearls Family ( ஐநூற்று முத்துவின் வாரிசுகள்) ஒரு நூறையாவது எட்டிவிடும் முனைப்பில் இருப்பதால் எப்படியும் தேவையான கூட்டம் சேர்ந்துவிடும் என்பது நிச்சயம். அதனால் தனிப்பட்ட முறையில் யாருக்கும் அழைப்பு கிடையாது. “குடும்பம்” க்ரூப்பில் ஒரு மெசேஜ், Zoom Meeting இல் எல்லோரும் கலந்துகொள்ளும் படி ஒரு அறிவிப்பு, அவ்வளவுதான். அந்த முயற்சிக்கே 52 பேர் வருகை தந்து அமர்க்களப் படுத்திவிட்டார்கள். பஸ், புகைவண்டி, கார் என கிடைத்த வாகனத்தில் ஏறிவந்து அட்டகாசப் படுத்திவிட்டார்கள். 


சனி , ஞாயிறுதான் மெயின் கூடுகை என்றாலும்  வாய்ப்பு உள்ளவர்களை முன்னதாகவே வரச் சொல்லியிருந்ததால் செக்கண்ணன் திங்கள் அன்றே வந்துவிட்டான். அண்ணனும் தம்பியும் பேத்திகளுடன் சென்னையிலிருந்து வந்த நேரத்திலேயே அக்காவும் மதினியும் மருமகனும் பேரனும் ஆறுமுகநேரியிலிருந்து வந்து இறங்கிவிட்டதால் வியாழன் மாலை முதலே வீடு களை கட்டத் தொடங்கிவிட்டது. எந்த விழாவுமே ஒரு ஸ்பெஷல் பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும் என்பதால் எங்க வழக்கப்படி சீட்டுக் கச்சேரியுடன் ஆரம்பித்தது. அருமை நண்பர் சோமுவும் சேர்ந்து கொண்டதால்  திசைக்கு இருவராக அமர்ந்து எட்டுபேர்  நாக் -அவுட் போட்டதுதான் முதல் விளையாட்டு. நள்ளிரவில் ஆலீஸ் வந்தபிறகு விளையாட்டுகள் NON-STOP  கொண்டாட்டமாகத் தொடர்ந்தது தனிக்கதை.


வெள்ளிக் கிழமை அன்று அடுத்தடுத்து batches மதியம், இரவு என்று வந்திறங்கியதால் வீடு ஹவுஸ்-புல். எங்க வீட்டுக்குள்ளேயே double-decker, triple-decker  போட்டு உருண்டுக்கணும், யாரும் ஹோட்டலில் தங்கக் கூடாது என்று ஏற்கனவே சொல்லியிருந்ததால் வீடு நிறைந்த உறவுகளும் மனம் நிறைந்த சந்தோஷமும் தளும்பிக் கிடந்தது. கீழே படுக்க முடியாத அக்கா, மதினி எல்லோருக்கும் tape- கட்டில்(camp-cots); தரையில் படுக்க மெத்தைகள் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. நர்ஸிங் ஹோமிலும் உள் நோயாளிகள் இல்லாததால் சிலபல பேர்களை அங்கும் தங்க வைச்சிட்டோம். ரெண்டு குடும்பம் மட்டுமே ஹோட்டலுக்கு போனாங்க. அதிலும் குட்டி வாண்டுகள் எங்க கூடவே தங்கிடுச்சுங்க.


ஒவ்வொரு வேளைக்கும் நாம சொல்ற மெனுவை ருசியாக செய்து அனுப்பும் நல்ல மெஸ் கிடைத்தது. வீட்டில் நிறைய பேர் சைவம் என்பதால் மொத்தமும் சைவமே சொல்லிவிட்டோம். ஆப்பரேஷன்களுக்கு இடையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழில் ஏதாவது அசைவம் செய்து வைத்து  அசத்திட்டாங்க. எழில் தாத்தாவின் கைவண்ணத்தைக் குறி வைத்து வந்த பேரப் பிள்ளைகளுக்கு ஏக சந்தோஷம். 


எனக்கு முழு நேரமும் organize பண்ணும் வேலைகள் இருந்து

கொண்டே இருந்ததால் விளையாட்டுகள் அனைத்தும் நானாவும் ஆலீஸுமே பார்த்துக் கொண்டார்கள். அதற்குரிய பொருட்கள், rules, print-outs, stationaries  எல்லாம் அவர்கள் இரண்டு பேருமே சேகரித்துக் கொண்டு வந்துவிட்டார்கள். ஆலீஸும் ரோஹித்தும் ஒரு UNIT ஆக இணைந்து நடத்திய விளையாட்டுகளும் நிகழ்ச்சிகளும் பார்க்கப் பார்க்க மனநிறைவாக இருந்தது. நானாவுக்கு முத்துபாரதி துணைக்கு வர முடியாததால் laptop-உம் கையுமாகவே அலைந்து கொண்டிருந்தான். எல்லாவற்றையும் பக்காவாக பிரதி எடுத்து பிசிறின்றி நடத்தினான். 


பொடிசுகளெல்லாம் ஆலீஸையே சுற்றி வந்ததுபோல், YOUTH எல்லாம் டேனி கூட செட் ஆயிட்டாங்க. எண்பதுகளில் மூணுபேர், 60 வயது தாண்டியவர்கள் 6 பேர் இருந்தாலும் எல்லோரும் குழந்தைகளாக மாறிவிட்டார்கள். வயது வித்தியாசம் 4 முதல் 84 வயது வரை இருந்தாலும் எல்லோரும் ஒரே குடும்பமாக இணைந்து கொண்டாடி மகிழ்ந்தது மிகச் சிறப்பு. தனிப்பட அழைக்காவிட்டாலும் க்ரூப்பில் வந்த அழைப்பை ஏற்று இணைந்த குடும்ப நண்பர்கள் ஜெயபாலன்,ப்ரேமா; ப்ரின்ஸ், சித்ரா; ஷீலா,ஜோ&ஜீவன் எல்லோருக்கும் எங்கள் குடும்பத்தின் அன்பு மழையில் நனைந்ததால் சளி பிடித்துக் கொண்டதாகக் கேள்வி.


வெள்ளிக்கிழமை முழுவதும் பன்னீர் செல்வம் பார்க்கில் சந்து சந்தாகச் சுற்றிப் பரிசுப் பொருட்களும் விளையாட்டுப் பொருட்களும் வாங்கியதே சின்ன பிக்னிக் மாதிரிதான் இருந்தது. சுமார் ரெண்டு வருடங்கள் கழித்து பழைய ஷாப்பிங் ஸ்டைலில் சுற்றித் திரிந்தோம். மழை வேறே அடிக்கடி பயம்காட்டி நனைத்துக் கொண்டிருந்தது. செக்கண்ணன் இருந்ததால் எல்லாம் சுலபமாக முடிந்தது. சனிக்கிழமை காலை ஆறுமணிக்கே தோட்டத்துக்கு கிளம்ப வேண்டும் என்று எல்லோருக்கும் சொல்லிவிட்டோம். அப்போதான் மழை வர்றதுக்குள்ளே எல்லா கேம்ஸும் நடத்த முடியும்னு விளக்கிச் சொன்னோம். 


சனிக்கிழமை காலை 7 மணி முதலே வாகனங்களின் அணிவகுப்பு டீச்சர்ஸ் காலனியில் எங்கள் வீட்டிலிருந்து கிளம்பிவிட்டது. குட்டீஸ் எல்லாரும்கூட கரெக்ட்டாகக் கிளம்பிட்டாங்க. முந்தின நாட்களில் தோட்டம் சுத்தம் செய்து ,வாடகைச் சேர்கள் வாங்கிப் போட்டு, கார் நிறுத்தும் இடங்கள் ஏற்பாடு செய்து எல்லாம் பக்காவாக இருந்ததால் காலை சிற்றுண்டி முடிந்ததும் விளையாட்டுகள் ஆரம்பிப்பது சுலபமானது. 


லக்கி கார்னர் விளையாட்டில் குழந்தைகள் பிரிவும், பெரியவர்கள் பிரிவும் முடிந்த பின்பு சீனியர் சிட்டிசன்களுக்கும் ஒரு பிரிவு வைக்கலாமா, எல்லாம் முட்டி கழந்த கேஸுகள் ஆச்சுதே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அத்தனை பாட்டீஸ் தாத்தாக்களும் வட்டத்தைச் சுற்றி ஆஜர் ஆயிட்டாங்க. அதிலும் ஒரு மாசத்துக்கு முன்புதான் Hip Replacement Surgery  பண்ணியிருந்த அக்காவும், நடக்கவே தடுமாறும் 80 வயசு மதினியும் முதல் ஆளாக வந்து நிக்கிறாங்க. பிறகென்ன இளவட்டங்களின் விசில் விண்ணைப் பிளக்க சூப்பராக ஆட்டம் நடந்தது. முதலாவதாக அவுட் ஆனது நான் தான். 


விதவிதமான விளையாட்டுகள் ( Arcade of Games) ஆங்காங்கே அரேன்ஜ் பண்ணப்பட்டிருந்தது. யார் வேணா எந்த கேம் வேண்டுமானாலும் விளையாடலாம். எல்லோரும் குறுக்கும் நெடுக்குமாக அங்குமிங்கும் நடந்துகிட்டு இருந்தாங்க.எங்க தோட்டம் மாதிரியே இல்லை, ஏதோ ரிசார்ட்டில் பிக்னிக் போயிருந்த மாதிரி இருந்தது. எல்லார் கழுத்திலும்  TAG மாட்டி அவ்வப்போது கிடைக்கும் பாயிண்ட்களைப் பதிவு பண்ண வாலண்டியர்ஸ் சுற்றிக் கொண்டே இருந்தாங்க. 


சிறார்களுக்கு ஆக்டிவ் ஆக விளையாட்டு நடக்கும் போது பெரியவர்களுக்கும் ஏதாவது ஒன்று side by side ஆக நடந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு விளையாட்டு பற்றியுமே நிறைய எழுதலாம், அவ்வளவு ருசிகரமாக இருந்தது. எனக்குதான் எதிலுமே பரிசு கிடைக்கலை. 


சூரிய பகவானும், வர்ண பகவானும் சரியான பொறாமை பிடிச்சவங்க. பிள்ளைகள் ஜாலியாக விளையாடுவது பிடிக்காதவங்க. பயங்கரமா வெயில் வந்துடுச்சு. அதனால் விளையாட்டுகளை ஓரம் கட்டிட்டு எல்லோரையும் தண்ணீர்த் தொட்டியில் குளிக்க அனுப்பிட்டோம். ”தண்ணித் தொட்டி தேடி வந்தது கண்ணுக்குட்டிங்க” மட்டுமல்ல காளைகளும் பசுக்களும் கூட .அநேகமா எல்லாருமே அந்த சந்தோஷக் குளியலில் பங்கெடுத்துக் கொண்டார்கள். 


எங்க தண்ணீர்த் தொட்டியின் மேல் புறத்தில் ஷவர் , ஒரு மூலையில் குற்றால அருவி டைப்பில் குழாய் , தண்ணீர் வடியும் இடத்தில் அருவி மாதிரி பிளவு என்று வித விதமான set-up இல் தண்ணீர் கொட்டிக் கொண்டு இருக்கும். கூச்சலும் கும்மாளமுமாக குளியல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்த முறைதான் தொட்டியில் அதிக அளவு ஆட்கள் இருந்தார்கள், 30 பேருக்கும் மேல் இருந்தார்கள். 


எங்க வீட்டு இரத்தத்தின் இரத்தங்களுக்கு மன தைரியம் ஜாஸ்திதான். போலியோ கால் காரணமாக நடக்கவே தடுமறும் அக்கா மகள்தான் முதலில் தொட்டிக்குள் இறங்கியவள். அருவி போன்ற பிளவில் நாற்காலி போட்டு பெரியக்கா சம்பிரதாயமாக சோப்பு ஷாம்பூ எல்லாம் போட்டுக் குளித்துக் கொண்டிருந்தாள். வீட்டில் எப்போதும் வென்னீரிலேயே குளிக்கும் ஆஸ்துமாக்காரி சரசக்கா அப்படியே தண்ணீரில் பாய்ந்துவிட்டாள். சாதாரணமாகவே பொது இடங்களில் வெட்கப்பட்டு ஒதுங்கி நிற்கும் வாலிபப் பெண்களெல்லாம் ஆளுக்கு முன்னாடி இறங்கி ஷவரில் இடம் பிடித்துக் கொண்டார்கள். 

குட்டீஸ் பத்தி சொல்லவே வேண்டியதில்லை. முன்னேற்பாடாக FLOATERS, ப்ளாஸ்டிக் பந்து எல்லாம் வாங்கிட்டு வந்திருந்தாங்க.


யாருமே சாப்பிடக் கூட வெளியே வர்றதாகத் தெரியலை. நாங்களே ஏதாவது பிசைந்து ஊட்டிக் கொண்டிருந்தோம். அடுத்து கேம்ஸ் விளையாடும் மனநிலையும் யாருக்கும் இல்லை. தண்ணீரிலிருந்து எழுந்திரிக்கும் மனநிலையும் இல்லை. நல்ல வேளையாக கொஞ்சம் மழை பெய்ய ஆரம்பித்தது. வீட்லே போய் Indoor games நடத்தலாம் என்று சொல்லி மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு வீடு நோக்கிய பயணம் ஆரம்பித்தது. 

வீட்டுக்கு வந்த பிறகும் ,குட்டீஸ் யாருக்கும் ரெஸ்ட் எடுக்கும் உத்தேசம் இல்லை. நானாவின் indoor quiz அப்படியே ஆரம்பிச்சுட்டாங்க. 


 எங்க வீட்டு ஹாலின் உட்புறம் மாடிக்கு செல்லும் படிக்கட்டு இருக்கும் .அதிலேயே பெண்கள் அனைவரும் காலரியில் உட்கார்ந்த மாதிரி இடம் பிடித்துக் கொண்டார்கள். குட்டீஸ் பெரியவர்கள் எல்லாரும் நானாவின் laptop முன்னாடி உட்கார்ந்துகிட்டாங்க. இடையிடையே நானா ஒரு கேள்வித்தாள் வேறே கொடுத்திட்டான். அதையெல்லாம் காப்பி அடிச்சு எழுதி முடிக்கிறதுக்குள்ளே எங்க வீட்டு நடன நாயகிகள் ஒப்பனையுடன் வந்திட்டாங்க. அப்புறம் ஒரே ஆட்டமும் பாட்டும் தான். கொஞ்சம் சுதாரிக்காட்டி விடிய விடிய ஆடுவாங்க போலிருக்கு. கட்டாயப்படுத்திதான் நடன நிகழ்ச்சியை முடிவுக்குக் கொண்டு வர முடிஞ்சுது. 

நடனம் என்று பொதுவாகச் சொன்னாலும் குழந்தைகளின் திறமை, dedication எல்லாம் பெரியவர்களை மெய் மறக்க வைத்துவிட்டது. யார் அடுத்த பிரபுதேவான்னு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒவ்வொருத்தரும் திறமையாக ஆடினார்கள். ஆடை, ஒப்பனை எதிலும் குறை வைக்கவில்லை.


 ஒருவழியாக எல்லாரையும் settle பண்ணிட்டு நான், நானா, அலீஸ் மூணுபேரும் 

பரிசுகள் கொடுப்பது பற்றி பேச ஆரம்பித்தோம். முதலில் பாயிண்ட் ஸ்கோரிங் என்று சொன்ன என் தம்பியாண்டான் திடீர்னு முதல் பரிசு, ரெண்டாவது, சால்வை அது இதுன்னு list சொல்லிட்டான். நான் பொதுவாக குடும்பத்துக்கு ஒன்று என memento வாங்கி வைத்திருந்தேன். தனியா பரிசுகள் எதுவும் வாங்கி வைக்கவில்லை. ஆனாலும் பெரிய பிரச்னை இல்லை. ஆலீஸ் கல்யாணத்துக்கு வந்த பரிசுப் பொருட்கள் நிறைய லாஃப்ட்டில் தூங்கிக் கொண்டிருந்தது. அதையெல்லாம் எடுத்து இரவோடு இரவாக கிஃப்ட் கவர் சுற்றிவிட்டோம். நாங்களெல்லாம் யாரு? வெறும் கையிலேயே முழம் போடற ஆட்கள். விட்டுவிடுவோமா? தூள் கிளப்பிட்டோம்.


மறுநாளும் அதே மாதிரி தோட்டத்தில் கொஞ்சம் கேம்ஸ் ரொம்ப நேரம் குளியல் என்று ENJOY பண்ணிகிட்டாங்க. ”தோட்டத்து சமையல்” பாணியில் எழில் சிக்கன் பிரியாணி பண்ணினார்கள். அதற்கென ஸ்பெஷல் அடுப்பு, பாத்திரம் எல்லாம் சேகரித்துக் கொண்டார்கள். தேவையான பொருட்களையெல்லாம் யாருடைய தயவும் இல்லாமல் தானே கொண்டு வந்துட்டாங்க. என்னால் அவங்களுக்கு உதவி பண்ண நேரமே இல்லை. 3 கிலோ பிரியாணியை அரை மணி நேரத்தில் உதிர உதிர மணமாக எழில் செய்ததைப் பார்த்து எங்கள் வீட்டுப் பெண்கள் எல்லாம் மூக்கில் விரலை வைத்தார்கள்; ஆண்களெல்லாம் ரெசிபியை வாங்கி பாக்கெட்டில்  வைத்தார்கள். 


காரில் வந்தவர்கள் எல்லாம்  சாப்பாட்டுக்கு பின்னர் கிளம்புவதாக இருந்ததால் தொட்டியை விட்டு வெளியே வரும்படி சொன்னால் ஒரு நண்டும் கேட்கவே இல்லை. சாப்பாட்டுக்குப் பின்னர் பரிசுகள் வழங்கப்படும் என அறிவித்ததும். எல்லா குட்டிஸும் தொட்டிக்குள்ளே இருந்து ஓடி வந்திட்டாங்க.


 ஆலீஸ் எல்லாரையும் உட்கார வைத்து பேப்பர் பேனா கொடுத்து ஒரு கடிதம் எழுதச் சொன்னாள். எதிர்காலத்தைப் பற்றி என நினைக்கிறாங்க என்று அவங்களுக்கு அவங்களே கடிதம் எழுதணும்.அதுக்கு ஒரு மாடலும் கொடுத்தாள். பரிசுகள் காத்திருந்ததால் எல்லாரும் எழுதிக் கொடுத்திட்டாங்க. அதையெல்லாம் ஒரு இறுக்கமான காற்றுப் புகாத டப்பாவில் சேகரித்துக் கொண்டோம். ஏற்கனவே தோண்டப் பட்டிருக்கும் ஆழ்குழியில் அதைப் புதைத்து காலப் பெட்டகம் (TIME-CAPSULE) பண்ணுவதற்காகத்தான் அந்தக் கடிதம். 


பரிசு வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. வந்திருந்த அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்று முன்தினமே ஒழுங்கு பண்ணியிருந்ததால் எல்லாம் சுமுகமாக நடந்தது. அங்கிருந்து நேராக காலப் பெட்டகம் புதைக்கப் பட வேண்டிய இடத்துக்கு அனைவரும் படையெடுத்தோம். அங்கு அனைவரும் அடங்கிய க்ரூப் போட்டோ எடுக்கப்பட்டது. ரோஹித்தின் போலோராயிட் கேமராவில் க்ரூப் போட்டோ எடுத்து அதையும் அந்த டப்பாவினுள் போட்டாச்சு. 3 வருடங்கள் கழித்து அதைத் தோண்டியெடுக்கும் போது இந்த போட்டோவில் இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்று பார்க்க ஏதுவாக அதையும் சேர்த்துக்கொண்டோம். அதைப் புதைக்கும் இடத்தை அனைவரும் பார்த்து வைத்துக் கொண்டோம். 


ஒவ்வொருவராகக் கிளம்ப ஆரம்பித்தார்கள். கார்கள் முதலாவதாக சென்றன. சென்னைக்கும் ஆறுமுகநேரிக்கும் இரவு பஸ் மற்றும் புகைவண்டி பயணத்துக்கு இறக்கிவிட ரெண்டு மூணு கார்களில் சென்றோம். அதிகாலையில் ஆலீஸ் ரோஹித் டேனி எல்லாரும் பெங்களூரு புறப்பட்டார்கள். எல்லோரும் சென்றபின் வீடு காலியாகி ஒரு வெறுமை தென்பட்டாலும் பெரியக்கா, தெய்வு அக்கா இருவரும் சில நாள் என்னுடன் தங்கிச் செல்ல இருப்பதால் ரொம்ப வெறுமையாகத் தெரியவில்லை.


”உறவுகள் தொடர்கதை”தான். மறுபடியும் கூடுகைகள் வரும். குதூகலமும் தொடரும்.

0 Comments:

Post a Comment

<< Home