Thursday, January 23, 2025

அலை அலை-7

 அலை அலை-7

“மஸாய் மாரா” -கென்யா
பகுதி -1
ஆடுன காலும் பாடின வாயும் நிக்காதுன்னு சொல்லுவாங்க. அதுமாதிரிதான் ஊர் சுத்துற காலும் ஓரிடத்தில் நிக்காது. இடையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் சில காலம் ஓய்வில் இருந்ததால் ஊர் சுற்றுவது கொஞ்சம் குறைந்திருந்தது. ஆனாலும் ஆடி பிறந்ததுமே ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது. ப்ராக்டீஸ் கொஞ்சம் மந்தமாக இருக்கும் ஆடியில்தான் பெரிய டூர் கிளம்புவோம். இந்த முறை அட்டகாசமான ஆப்பிரிக்கா பயணம்.நெடுநாள் கனவாக இருந்த கென்யா சஃபாரி என்ற மறக்க முடியாத பயணம். தான்சானியா நாட்டிலிருந்து தண்ணீர் தேவைக்காக கென்யாவின் மஸாய் மாரா காட்டிற்கு மில்லியன் கணக்கில் விலங்குகள் இடம் பெயரும் கண்கொள்ளா காட்சிகள். ஆப்பிரிக்கா கண்டத்தின் சிறப்பு வாய்ந்த நிகழ்வு இது . காட்டின் நுழைவு பீஸ், தங்குமிடம், பயணச் செலவு எல்லாமே கொஞ்சம் அதிகமாக இருந்ததால் பெரிய க்ரூப் சேர்க்கவில்லை. நான், எழில்,மகள்,மருமகன் , சம்பந்திகள் என சிக் என்று சிக்ஸ் பேக்ஸ் கிளம்பிட்டோம்.
பெங்களூருவிலிருந்து கிளம்பி கென்யா தலைநகரான நைரோபியில் இறங்கி காட்டுக்கு நடுவில் இருந்த மாரா புஷ் கேம்ப் நோக்கி பயணித்தோம். போகும் வழியில் கொஞ்ச நேரம் கண்ணை மூடிவிட்டு திறந்தால் ஒரே குழப்பம். மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் பயணித்துக் கொண்டு இருப்பது போலவே இருந்தது. மரங்கள், புதர்கள், செடிகள், தட்ப வெப்பம் எல்லாமே நம்ம ஊர் மாதிரியே இருந்துச்சு. எப்பவும் போல் GT Holidays மூலம்தான் பதிவு செய்திருந்தோம். ஆனாலும் முக்கிய தங்கும் விடுதிகள், ப்ளான் எல்லாம் மகள் அலீஸ்தான் முடிவு செய்தாள். காட்டிற்குள் நடுநாயகமான காட்டு விடுதியில் தங்குறமாதிரி புக் பண்ணினாள். கொஞ்சம் காசு அதிகம்தான் என்றாலும் வித்தியாசமான தங்கும் இடம். விடுதியில் வந்து இறங்கியதும் ஆட்டம் பாட்டத்துடன் பழங்குடியினரின் வரவேற்பு அற்புதமாக இருந்தது. இசை வல்லுனரான எழிலுக்கு FOUR-PARTS இல் அவர்கள் பாடியதைக் கேட்டதும் புளகாங்கிதமாகி அவர்களுடன் நடனமாடத் துவங்கிவிட்டார்கள்.
ஒரு பொதுவான உணவருந்தும் இடத்தைச் சுற்றி தற்காலிகமான கூடாரங்கள் டைப்பில் தங்கும் இடங்கள் இருந்தன. ஆரவாரமான சத்தங்களோ காதைக் கிழிக்கும் பாட்டு சத்தமோ இல்லாமல் இயற்கையான சத்தங்களுடன் அமைதியாகவும் கொஞ்சம் அமாநுஷ்யமாகவும் இருந்தது. ஆனால் மனதுக்குப் பிடித்த விதமாக இருந்தது. கூடாரங்கள் எல்லாம் யானை ஓங்கி மிதிச்சா சட்னியாகிவிடும் போல் தார்பாலின் துணிகளால் ஆனது. ஆனால் மூன்று நட்சத்திர ஹோட்டல் போல் எல்லா வசதிகளும் உள்ளேயே செய்திருந்தார்கள். விடுதியின் வரவேற்பறையில் இருந்து கூடாரத்திற்குக்கூட பாதுகாவலர்கள் துணையுடன் தான் செல்ல வேண்டும். அங்குள்ள பழங்குடியினர்கள்தான் பாதுகாவலர்கள். ஈட்டி, கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்கள் எப்போதும் கையில் வைத்திருப்பார்கள். உள்ளே போய்விட்டால் அவர்களது துணையின்றி அடுத்த கூடரத்துக்குக் கூட செல்ல முடியாது. ஏனென்றால் சுற்றுச் சுவரோ வேலியோ கிடையாது. கதவைத் திறந்தால் நேரடியாகக் காடுதான். பகலெல்லாம் சோலார் மின்சக்தி, இரவில் 10 மணிவரை ஜெனரேட்டர் மூலம் மின்வசதி. ஏற்கனவே லே லடாக்கில் இதே மாதிரி அநுபவம் இருந்ததால் பயமாக இல்லை. மின்விளக்கு, மின் விசிறி, ஏர்-கண்டிஷன் இல்லாமலும் வாழ முடியும் என்பதை நினைவு படுத்திக் கொள்ளவாவது இது போன்ற பயணங்கள் அவசியம்.
பிரத்தியேகமான விறகு அடுப்பில் சுடுதண்ணீர் கொதித்துக் கொண்டே இருக்கிறது. குழாய்கள் மூலம் எல்லா கூடாரங்களுக்கும் விநியோகம் ஆகிறது. அதிகாலை நாலு மணிக்குக் கிளம்பினாலும் சுடச்சுட காஃபி , டீ எல்லாம் தயாராகவே இருக்கும். சாப்பாடும் நம்ம நாக்குக்கு உகந்த மாதிரி இருந்துச்சு. மசாலா சுவைகூட கொஞ்சம் நம்ம பக்கத்து பக்குவம் போலவே இருந்துச்சு. பாசுமதி அரிசி சாதம்தான் அடிப்படை உணவு. அசைவம் சாப்பிடுபவர்களுக்கு மீன், மட்டன்,மாடு, பன்றி ,முட்டை என சகல ரகங்களும் உண்டு. மருமகனும் சம்மந்தியும் சுத்த சைவம் என்பதால் அங்குள்ள சமையல்காரர்கள் கேட்டு கேட்டு அவங்களுக்கு ஏற்ற மாதிரியும் செய்து கொடுத்தார்கள். அங்கு சாப்பிட்ட சிக்கன் சமோசா மாதிரி வேறெங்கும் சாப்பிட்டதில்லை. கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டாலும் சுடச் சுட பரிமாறுவதில் கவனமாக இருந்தார்கள். பெரிய ஹோட்டல் மாதிரி பலதரப்பட்ட உணவுகள் கிடையாது. ஆனால் சிம்ப்பிளாகவும் சுவையாகவும் இருந்தது.
கென்யாவில் மட்டுமே நிறைய தேசிய விலங்கு பூங்காக்கள் இருக்கின்றன. சுற்றுலா அழைத்து செல்பவர்கள் ரெண்டு மூணு பூங்காக்களுக்கு அழைத்து செல்வார்கள். இடைப்பட்ட தூரம் கடக்கக் குறைந்தது ஆறுமணி நேரப் பயணம் செல்ல வேண்டும். ஆனால் எல்லா இடத்திலும் அதே விலங்குகள்தான். அதனால் நாங்கள் ஒரே பூங்காவில் தங்கி சஃபாரி செல்லும் பயண எண்ணிக்கைகளை அதிகரித்துக் கொண்டோம். அதனால் எல்லா திசைகளையும் சல்லடை போட முடிந்தது. Packing, un-packing போன்ற பிரச்னைகள் இல்லாமல் ஜாலியாகவும் சுற்ற முடிந்தது. அதிகாலையில் ஆரம்பித்தால் மதியம் வரை ஒரு ட்ரிப். சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து அடுத்த பிரயாணம் ஆரம்பித்தால் இருள் சூழும் வரை போய்க்கொண்டே இருப்போம். அதிகாலையும் பொழுது சாயும் வேளையும் மிக அரிதான விலங்குகள் பார்க்க முடியும்.
முதல்நாள் மதிய சாப்பாட்டிற்குதான் போய்ச் சேர்ந்தோம். கொஞ்ச நேரம் இளைப்பாறியதும் முதல் ரவுண்டு போகலாம் என்று சொன்னார்கள். ஆலீஸ் முன்யோசனையுடன் பெங்களூரிலிருந்தே நான்கு பைனாகுலர்கள் குறைந்த வாடகைக்கு எடுத்து வந்திருந்தாள்.நாங்களும் நண்பர்களிடமிருந்து இரண்டு பைனாகுலர் வாங்கி வந்திருந்தோம். கொழுந்தன் வேறே அமெரிக்காவிலிருந்து ஸ்பெஷல் பரிசாக SLR Camera கொடுத்து அனுப்பியிருந்தான். மகள் அறிவுரைப்படி குளிர் கண்ணாடி, தொப்பி எல்லாம் போட்டுக்கொண்டு முதல் சவாரிக்காக விடுதி வாசலுக்கு வந்தோம். நம்ம ஊர் டிரெக்கர் ஜீப் மாதிரி ஒரு வண்டி நின்னுச்சு. அதில்தான் போகணும்னு சொன்னப்போ எதிர் பார்ப்பெல்லாம் அடங்கி புஸ் வாணமாயிடுச்சு. நாலு சக்கரமும் ஏழெட்டு சீட்டும் ஒரு கூரையும்தான் இருந்துச்சு. பாதுகாப்புக்கான ஜன்னலோ கம்பிகளோ எதுவுமே இல்லை. சிங்கம் வந்தால் ஜம்மென்று மடியில் சிங்காசனம் போட்டுக் கொள்ளும் அளவுக்கு தாழ்வாகவும் இருந்தது. ஆனால் அந்த மாதிரி வண்டியில் போனால்தான் விலங்குகளை அருகில் பார்க்கலாம் என ஓட்டுநர் கம் கைடு சொன்னார். மகளும் அப்படியே சொன்னாள். நேர்ந்துவிடப்பட்ட ஆடுகள் மாதிரி எல்லோரும் ஏறி அமர்ந்தோம் ….. திக் திக் என்ற உணர்வோடு………….பயணம் தொடங்கியது.

0 Comments:

Post a Comment

<< Home