அலை அலை-8
அலை அலை-8
ஒடிஸாவுக்கு ஓடிவா!
முருகர் உலகமெல்லாம் மயில் ஏறி சுற்றி வந்தாலும் அப்பா அம்மாவைச் சுற்றிய விநாயகருக்குத்தான் பழம் கிடைத்தது. அது போலத்தான் உலகமெல்லாம் வெவ்வேறு இடங்களுக்குப் பயணம் செய்திருந்தாலும் குடும்பத்துடன் ஒடிஸா சென்று வந்தது வித்தியாசமான அநுபவம், மனம்நிறை நினைவுகள். 20 வருடங்களுக்கு முன் 60 பேர் கொண்ட கும்பலாக குடும்ப சுற்றுலா ஊட்டிக்கு சென்று வந்தது பின்பக்கத்தின் பளீரொளி(FLASK-BACK)யாக நினைவு வந்தது. இந்த முறை வித்தியாசமாக நீண்ட புகைவண்டிப் பயணம் செல்லலாம் என யோசித்தபோது நயினார் அண்ணன் கூட்டிச் சென்ற சிக்கிம் , டார்ஜிலிங் பயண நினைவுகள் அதை ஊக்கப்படுத்தியது.
முன்பு இதேபோல் யோசித்து ஹைதராபாத் போகலாம் என்று முயற்சி செய்தபோது கொரோனா சதி செய்து முட்டுக்கட்டை போட்டு விட்டது.டெல்லி,ஆக்ரா நிறையபேர் பார்த்திருப்பாங்க. அதனால் ஒடிஸா போகலாம்னு முடிவு பண்ணினேன். ஆனால் எங்கெங்கு காணினும் கோவில்களே தெரிந்தது. தீர்த்த யாத்திரை மாதிரி ஆகிவிடுமோன்னு கொஞ்சம் தயக்கமாக இருந்தது.
டிசம்பர் 1-5 ஆம் தேதிகளில் மணல் சிற்பங்களின் கண்காட்சி (International Sand-Art Festival) மற்றும் கோனார்க் டான்ஸ் Festival நடைபெறுவது வழக்கம் என தெரிந்தது. அத்துடன் பூரி ஜெகனாதர் கோவில், கோனார்க் சூரிய பகவான் கோவில் எல்லாம் மிகச் சிறப்பு வாய்ந்த இடங்களாகவும் தெரிந்தது. எப்பவும் போலவே GT Holidays இல் பேசி எடுத்து மிகக் குறைந்த package இல் (Chennai to chennai all inclusive 21000/-) FIX பண்ணி குடும்பம் க்ரூப்பில் இதைப் பற்றி பேச ஆரம்பித்ததுமே சரசு அக்கா, சிவகாமிநாதன் அண்ணன், நயினார் அண்ணன், தம்பி நானா என நாங்கள் ஐவரும் சேர்ந்துவிட்டோம். பெரியண்ணனின் மகன் முத்துராமன், மருமகன் முருகன், சோம்ஸ் அங்கிள் ,நானாவின் சம்பந்தி பாலு,விஜி என 15 பேர் ரெடியாகிவிட்டோம். தற்செயலாக வகுப்புத் தோழர் ஆண்ட்ரூ வீட்டு கல்யாணத்தில் இதைப் பற்றிப் பேசும்போது இன்னும் கொஞ்சம் பேர் இணைந்து 25 பேர் கொண்ட க்ரூப்பாக மாறிவிட்டது. புகைவண்டியின் முன் பதிவு மூன்று மாதங்களுக்கு முன்பே செய்ய வேண்டியிருந்ததால் அனைவருக்கும் ஆகஸ்ட்டு மாதத்திலேயே பதிவு பண்ணியாச்சு. வர முடியாதவர்களுக்கு பின்னாடி கேன்சல் பண்ணிக் கொள்ளலாம் என்று ஏற்பாடு.
பிரயாணம் கிளம்பும் வரைக்குமே ஒரே நெகடிவ் கருத்துகள்தான். ஒடிஸாவில் அந்த சமயத்தில்தான் புயல் சூறாவளி எல்லாம் வரும், ”அன்பே சிவம்” படம் மாதிரி ரயில்வே ஸ்டேஷன் மிதக்கப் போகுது, பேருந்து கூரைமேல்தான் ஏறி வரணும் எண்று ஏக விமரிசனங்கள். சரசக்கா (74 வயது) வேறே ஏற்கனவே ஆஸ்த்துமா நோயாளி , சரிப்பட்டு வராது வேறு மாசத்தில் போகலாம்னு சிலர்; 20 மணிநேரத்துக்கும் அதிகமான ரயில் பயணம் உடம்பு தாங்காது விமானத்தில் போகலாம்னு இன்னும் சிலர்; ஒரே கோயிலா பார்க்கணும்னா கும்பகோணம் போனால் போதுமே எதுக்கு இவ்ளோ தூரம் போகணும்னு சிலர்; இப்படி ஏகப்பட்ட கருத்துக்கள். ஆனாலும் நான் பிடிவாதமாக இருந்துவிட்டேன். டிசம்பரில்தான் மணல் சிற்பங்கள் கண்காட்சி ஆண்டுதோறும் நடக்கிறது,புயல் வரும் என்றால் தொடர்ந்து நடத்துவாங்களா?அக்காவுக்கு தொந்தரவு வராதவாறு மருத்துவ உதவிகள் செய்து கொள்ளலாம், க்ரூப்பில் ஆறுக்கும் மேற் பட்ட மருத்துவர்கள் உண்டு;ரயில் பயணத்தின் சந்தோஷத்தை அநுபவிக்கத்தான் இந்தப் பயணமே என்று தகுந்த விளக்கங்கள் சொல்லி எல்லோரையும் சமாதானப் படுத்திவிட்டேன்.
ஒருவழியாகக் கிளம்பவேண்டிய நாளும் வந்தது. நவம்பர் 29ஆம் தேதி காலை பத்து மணிக்கு சென்னையிலிருந்து ரயில் ஏற வேண்டும். எல்லோரும் பயங்காட்டிய மாதிரியே பெங்கல் புயல் வீசட்டுமா வேண்டாமா என்று கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது. வெளியே வீறாப்பு பேசினாலும் உள்ளே கொஞ்சம் உதறல்தான்.Dr.Jeya& Dr. Kandhabhabha கோவையிலிருந்தும் நான், Dr.சோம்ஸ்,பிரபா ஈரோட்டிலிருந்தும் ஒரே ரயிலில் சென்னை வந்துவிட்டோம். மார்த்தாண்டத்தில் இருந்து Dr.Saliteeswaran& Dr.jeyanthi , பழனியிலிருந்து Dr.Hemaltha & வக்கீல் நீதிசெல்வன் சார் எல்லோரும் முந்தினநாளே சென்னையில் மகன்,மகள் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். பெரிய கும்பல் தூத்துக்குடியில் இருந்து வரணும், காலை 7.30க்குத்தான் கனெக்க்ஷன் ட்ரெயின் வந்து சேரும். மழையினால் தாமதமாகிவிட்டால் எல்லாம் சொதப்பல் ஆகிவிடும். ஏழு மணி சுமாருக்கு தாம்பரம் தாண்டிவிட்டோம் என முத்துராமன் சொன்னதும் தான் நிம்மதியாச்சு. ஏற்கனவே
பிரயாணத்திற்கான முன்னேற்பாடுகளெல்லாம் ஒழுங்கு படுத்தப்பட்டு ஒவ்வொருவருக்கும் பொறுப்புகள் கொடுத்திருந்தோம். பயண இடைவேளை சில மணி நேரங்களே என்பதால் வெளியில் ஹோட்டல் எதுவும் ஏற்பாடு செய்யவில்லை. செண்ட்ரல் ஸ்டேஷன் இல் இருந்த IRCTC யின் A/C retiring Hall ரொம்ப வசதியாக இருந்தது. ஒரு மணி நேரத்துக்கு 35 ரூபாய்கள் மட்டுமே கட்டணம். கழிவறை, குளியல் அறைகள், வசதியான இருக்கைகள் என எதிர் பார்த்ததைவிட செளகரியமாகவே இருந்தது.அங்கேயே வீட்டு உணவு சாப்பிடவும் அனுமதித்தார்கள். GT Holidays Van ஒழுங்கு பண்ணியிருந்ததால் எக்மோரில் இருந்து தூத்துக்குடி க்ரூப்பும் நேரத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். பெங்கல் புயல் கூட எங்கள் கூட்டத்தைப் பார்த்து வலுவிழந்துவிட்டதாகச் சொன்னார்கள்.காலை உணவு தம்பி நாராயணன் ஏற்பாடு செய்து கொண்டு வந்திருந்தான். இட்லி ,சட்னி ,சாம்பார் என நளபாகம்தான். அவன் மனைவி கடைசி நேரத்தில் வர முடியாவிட்டாலும் எனக்கு மட்டும் என்று ஆறுமுகநேரி லைன் சட்னி கூட செய்து அனுப்பியிருந்தாள். சரசக்கா மருமகள் பருப்புவடை செய்து வழியனுப்ப வந்திருந்தாள். நண்பர் சால்ட்(சாலிட்டீஸ்வரன்) மருமகளுக்கு பிறந்தநாள் என அருமையான கேக் பொட்டணங்கள் வேறு வந்திருந்தது. ஆரம்பமே அட்டகாசம்தான். நயினார் அண்ணன் வர முடியாதது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. பானு, லோகா, விஜி, இந்திரா எல்லாம் தவிர்க்க முடியாத காரணங்களால் வரவில்லை. முடிவாக 20 பேர் கொண்ட சிறப்புக் குழு புவனேஸ்வர் நோக்கி செல்ல ரயில் ஏறினோம்.
ரயில் பயணங்கள் எப்போதுமே அலாதியானவை.மொத்த கூட்டமுமே இரண்டுமூணு பகுதிகளுக்குள் அடங்கிவிட்டது. முன்னேற்பாடாக ஆண்கள் அனைவரும் ஒரு பகுதி,பெண்கள் அடுத்த பகுதி,தம்பதியர்கள் கொஞ்சம் ஒதுங்கியமாதிரி என வறையறுத்துக் கொண்டோம். வண்டி கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே பெண்கள் குழாமின் அரட்டை கச்சேரி ஆரம்பமாகிவிட்டது. நாங்களும் உங்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என ஆண்கள் சீட்டுக் கச்சேரி ஆரம்பித்து விட்டார்கள்.சூட்கேஸ்கள் மேஜை மாதிரி அடுக்கப்பட்டு club-house rangeக்கு த்டபுடலாக ஆரமிச்சுட்டாங்க. ஏற்கனவே எட்டுபேர் இருந்ததால் நான் நைசாக கழண்டுபோய் வகுப்புத்தோழர்களுடன் “பிரண்டை” துவையல் செய்ய போய்விட்டேன். இன்னுமோரு சீட்டு கட்டு இருந்ததால் நாங்களும் ஒரு சீட்டு கச்சேரி ஆரம்பிச்சுட்டோம் . விஜி, அவங்க அத்தான்,ஜெயா,சால்ட், நான் என சூப்பர் க்ரூப் .ஊரிலிருந்து சரசக்கா கொண்டு வந்திருந்த பலகாரங்கள் கேக் என சிற்றுண்டி நொறுக்கல்களுடன் மதிய உணவு வரை நேரம் போனதே தெரியவில்லை. மதியத்திற்கும் புளிசாதம் தயிர்சாதம் என பொட்டலங்கள் துவையல் ஜோடி சேர்ந்து நளபாகம்தான். மதியம் எல்லோரும் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என முடிவுசெய்து செம தூக்கம். எழுந்த பிறகும் Non-stop கொண்டாட்டமாக அதே அரட்டை,சீட்டுக் கச்சேரி,கடலை போடுவது என நேரம் பறந்ததே தெரியாமல் இரவு உணவு வேளை வந்துவிட்டது. நானாவின் கச்சிதமான ஏற்பாட்டால் இரவுக்கும் பொடி இட்லி, சப்பாத்தி ,தக்காளி தொக்கு என விருந்துண்ணல்தான். உண்ட மயக்கத்தில் தொந்தரவே இல்லாத நிம்மதியான உறக்கம். விடிந்து பார்த்தால் 23மணிநேரப் பயணம் சட்டென்று முடிந்ததுபோல் புவனேஸ்வர் வந்துவிட்டது.
0 Comments:
Post a Comment
<< Home