Thursday, January 23, 2025

அலை அலை-9

 அலை அலை-9

ஒடிஸாவுக்கு ஓடிவா-2ஆம் பகுதி


புவனேஷ்வரில் டிசம்பர் மாத குளிர் கடுமையாக இருக்கும் என்று நினைத்து ஸ்வெட்டர் scarf எல்லாம் பெட்டியில் அடைத்து வைத்திருந்தோம். ஆனால் வெயில் நம்ம ஊர் மாதிரியே இருந்தது. அதுவும் நல்லதுக்குத்தான். வித விதமாக உடைகள் அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கலாம் என சந்தோஷப் பட்டுக் கொண்டோம். ரயில் பயணத்தின் போதே க்ரூப்பில் எல்லோரும் ஒருவருகொருவர் பரிச்சியம் ஆகிவிட்டதால் யாரையும் தனிப்பட கவனிக்க வேண்டிய அவசியமின்றி இணைந்த கரங்களுடன் இனிதே பயணம் தொடங்கியது.


புவனேஷ்வரில் முதலில் பார்த்தது லிங்கராஜா கோவில். மிகவும் புரதானமான கோவில். கட்டிடக் கலைக்கு சான்றாகவும் ஆன்மீகத்தின் அங்கமாகவும் அட்டகாசமாக இருந்தது. கலிங்க கோபுரங்கள் கூம்பு வடிவில் உயரமாக இருந்தன.ஆனால் சாமி தரிசனம்தான்  காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை ஒரே மாதிரி இருக்கிறது. ஒழுங்கற்ற வரிசைகள், பக்தியை வியாபாரமாக்கும் புரோக்கர்கள், எதற்கு முண்டியடிக்கிறோம் என்ற உணர்வே இல்லாத பக்தர்கள், சாமியை மறைத்துக் கொண்டு அர்ச்சனைத் தட்டில் விழும் காணிக்கைகளையே குறி வைத்திருக்கும் அர்ச்சகர்கள் என சலிப்புற வைக்கும் காட்சிகள். ஆனாலும் அத்தனை அசெளகரியங்களிலும் உண்மையான பக்தியுடன் வணங்கி வழிபட்ட பக்தர்களின் பொறுமை பாராட்டப்பட வேண்டியது. எங்களுடன் வந்த guide ஒழுங்காக ஸ்தல புராணம் சொன்னாரோ இல்லையோ ஜெயந்தி தீர்க்கமாக எல்லாவற்றையும் விளக்கிக் கொண்டிருந்தாள். பிற மதத்தவர்கள் கோவிலுக்குள் வர தடை என்று சொல்லியிருந்ததால் எனக்கு ஸ்டிக்கர் பொட்டு வைக்கப்பட்டு நான்சி என்ற பெயரை உச்சரிக்காமல் தாணு என எல்லோரும் கூப்பிடும்படி அறிவுறுத்தப்பட்டது. எனக்கு இவற்றிலெல்லாம் உடன்பாடும் இல்லை ஆட்சேபனையும் இல்லை. ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்தேன். SLR Camera சகிதமாக எங்களை அழகாக போட்டோ எடுக்க ஜெயாவின் கணவர் பாபா தயாராக இருந்ததால் ஓடி ஓடி போஸ் கொடுத்துக் கொண்டோம்.


புவனேஷ்வரிலிருந்து பூரி செல்லும் வழியில் அமைந்துள்ள இடங்களைப் பார்த்துவிட்டு இரவு தங்குவதற்குப் பூரி செல்ல வேண்டும். அடுத்ததாக சென்ற இடம் வரலாற்று சிறப்பு வாய்ந்த தெளலி மலை. கலிங்கத்து போரில் வெற்றி வாகை சூடிய சக்க்ரவர்த்தி  அசோகர் மனம் திரும்பி பெளத்த மதத்தைத் தழுவிய இடம். அதைப் பறை சாற்றும் விதமாக அசோகரின் கல்வெட்டு அந்த மலையில் அமைந்திருக்கிறது. பாறையைப் பிளந்துகொண்டு யானை முகம் வெளிவருவதுபோன்ற சிற்பத்தின் அடியில் பிராகிருத மொழியில் செதுக்கப்பட்ட கல்வெட்டு சரித்திர சான்றாக நிற்கிறது. யானை முகத்தை சுற்றி நின்று க்ரூப் போட்டோ எடுத்துக் கொண்டோம். நல்ல வேளையாகக் கலிங்கத்துப் போரின் கூக்குரல்கள் காதில் ஒலிப்பது போல் தோன்றவில்லை. அதை ஒட்டிய பகுதிகளில் சமாதானத்தைப் பறைசாற்றும் விதமாக சாந்தி ஸ்தூபி, அசோக ஸ்தம்பம்,புத்த விஹாரங்கள் என அமைதியான சூழல் உலவுகிறது. மறு புறம் கலிங்கத்துப் போரில் இரத்த ஆறாக ஓடிய தயா நதி இதுதானா என ஆச்சரியப்படும் விதமாக அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. மலை உச்சியில் அமைந்துள்ள இந்த இடங்களைப் பார்வையிட பார்க்கிங் இடதிலிருந்து குறைந்த  வாடகைக்கு ஆட்டோ  கிடைக்கிறது. 


பக்தியும் சரித்திரமும் படுத்திய பாட்டில் நேராக மதிய உணவில் பாய்ந்துவிட்டோம். உண்ட மயக்கம் தீரும் முன்பே பிபிலி என்ற கிராமத்திற்கு சென்றோம். அப்ளிக் கைவினைப் பொருட்கள் செய்வதில் பிரசித்தி பெற்ற இடம். பெரிய துணியில் பல வண்ணங்களில் சிறு சிறு துணிகளும் கண்ணாடிகளும் பதித்து பைகள்,சேலை,சுடிதார், விளக்கு என பலதரப்பட்ட பொருள்கள் செய்கிறார்கள். பொருட்காட்சிகளில் அப்பொருட்களுக்கு ஒட்டப்படும் விலையுடன் அங்கு சொல்லப்பட்ட விலையை ஒப்பிட்டுப் பார்த்தால், உழைக்கும் மக்கள் சுரண்டப்பட்டு இடைத் தரகர்கள் செழிப்பது நன்கு புரிந்தது. சுற்றுலா செல்லும்போது ஷாப்பிங் போகக்கூடாது என முடிவெடுத்து இருந்ததையும் மீறி நிறைய பொருட்கள் வாங்கினேன். 


ஒடிஸாவின் பாரம்பரிய நடனத்தை கிராம அளவில் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க பூரிக்குக் கொஞ்சம் முன்னதாக ஒரு வீடு போன்ற இடத்தில் கைடு ஏற்பாடு செய்திருந்தார். வேன் போகமுடியாத இடைஞ்சல் நிறைந்த சந்துக்குள் போய் இருட்டடித்த குறுகலான படிகளில் ஏறி வெராண்டா போன்ற இடத்தில் அமர வைத்த போது எல்லோரும் சேர்ந்து என்னை உதைக்கப் போறாங்கன்னு கொஞ்சம் கிலியாகத்தான் இருந்தது. ஆனால் ஆட்டம் ஆரம்பித்ததும் எல்லோருமே மெய் மறந்து போனோம்.முன் காலத்தில் பெண்களை நாட்டியம் ஆட விடமாட்டார்களாம்.அதனால் ஆண்கள்தான் பெண் வேடமிட்டு ஆடுவார்களாம். அதை இன்னும் கிராமங்களில் கடைப் பிடிக்கிறார்கள். 4 முதல் 12 வயதுவரையுள்ள ஆண் குழம்தைகள் ஆடுகிறார்கள். எங்கள் முன் ஆடிய க்ரூப்பில் ஒருவரைக் கூட எங்களால் ஆண்பிள்ளையாகப் பார்க்க முடியவில்லை, அத்தனை நளினமும் பாவனைகளும். உடல் வளைவும் நெளிவும் அபாரம். 14 வயதுக்குப் பிறகு நடன ஆசிரியர்கள் ஆகி விடுகிறார்கள் .பொருளாதார முன்னேற்றமில்லாத அவர்களின் வாழ்க்கைச் சூழல் எங்களைக் கலங்க வைத்ததும் உண்மை. பூரியில் Navy யின் கண்காட்சி நடந்து கொண்டிருந்ததால் வண்டி நிறுத்துவதில் குழப்பம் ஏற்பட்டு ஹோட்டலுக்காக கொஞ்ச தூரம் நடக்க வேண்டியிருந்தது. மறுநாள் காலை பூரி ஜெகனாதர் ஆலயத்திற்குப் போக வேண்டியிருந்ததால் எல்லோரும் சீக்கிரம் தூங்கிவிட்டோம்.


பிரசித்தி பெற்ற பூரி ஜெகனாதர் ஆலய தரிசனத்துக்கு அதிகாலையிலேயே போய் க்யூவில் நின்று கூட்டத்தில் இடி பட்டு மூச்சு வாங்கி ஒரு வழியாக தரிசனம் முடிந்தது. சரசக்கா கூட்டத்தில் மாட்டி கீழே விழுவதுபோல் ஆனபோது செக்கண்ணனும் முத்துராமனும் ஓடிப்போய் பாதுகாத்து விட்டார்கள். நாங்கள் திரும்பி வரும்போது பார்த்தால் கூட்டமும் இல்லை நெரிசலும் இல்லை. அதிகாலை பூஜை பார்க்கணும் என்று யரோ சொன்னதைக் கேட்டதால் சிக்கிரமே வந்தது எங்க தப்பு.ஆனாலும் எங்க ப்ரோகிராம் tightஆக இருந்ததால் காலையில் போனதே நல்லதுன்னு நெனைச்சுகிட்டோம். அடுத்தடுத்து அநுமார் கோவில், காளி கோவில் எல்லாம் பார்த்துட்டு கோனார்க் போயிட்டோம்.மணல் சிற்ப கண்காட்சி ஆரம்பமாகவில்லை. அதனால் கோனார்க் சூரிய பகவான் கோவிலை சுற்றிப் பார்த்தோம். கல்லில் கட்டப்பட்ட தேர் வடிவ கோவில். மிக நுட்பமாக் செதுக்கப்பட்ட கடவுள்கள், நடன மங்கையர், விலங்குகள்,பாலியல் விளையாட்டுகளைக் காட்டும் சிற்பங்கள் அனைத்தும் உண்டு.சூரிய பகவானை சிருஷ்டி தேவனாக பாவித்து பாலியல் சிற்பங்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. 12 ஜோடி பிரம்மாண்டமான சக்கரங்களும் எட்டு குதிரைகளும் தேரை இழுப்பதுபோல் அமைக்கப் பட்டுள்ளது. சக்கரங்கள் 12 மாதங்களைக் குறிக்கின்றன. சக்கரத்தின் உள் பக்கம் எட்டு spokesகளுடன் நாள் கணக்கு சொல்கிறது. “கல்லின் மொழி மனிதனின் மொழியைத் தாண்டிச் செல்கிறது”என இரவீந்திரநாத் தாகூரால் பாராட்டப் பெற்ற கோவில்.இந்த சக்கரம் புதிய பத்து ரூபாய் தாளில் அச்சிடப்பட்டுள்ளது.கோவிலின் பல பகுதிகள் இடிந்துவிட்டாலும்  கோவில் இன்றும் மிடுக்குடன் நிமிர்ந்து நிற்கிறது.


வருடம் தோறும் டிசம்பர் 1-5 தேதிக்ச்ளில் நடைபெறும் மணல் சிற்பங்களின் கண்காட்சி மாலை 4 மணிக்கு ஆரம்பித்தார்கள். முதல் ஆட்களாக உள்ளே நுழைந்து இருள் கவியும் வரை திகட்டத் திகட்ட பார்த்து ரசித்தோம். கண்முன்னே மணல் குவியலாக இருந்தது கண் மூக்கு வாய் என உருவானதும் மலை குகை என்று செதுக்கப்பட்டதும் பாம்பாகவும் சிங்கமாகவும் சீறிப் பாய்ந்ததும் வார்த்தையில் விளக்க முடியாத மாயாஜாலம். டூர் ஏற்பாடு செய்ததன் முழுப் பயனையும் அடைந்தோம். இரவு கவிழ்ந்ததும் கோனார்க் கோவிலின் பின்னணியில் நடந்த நடனவிழா முத்தாய்ப்பாகக் கண்களுக்கு விருந்தாகியது. 


மறுநாள் சிலிக்கா ஏரி போகும்போது பஸ்ஸில் நடத்திய (Dumb-Sharads) “ஊமை வேடங்கள்” எல்லாரையும் ஆடவும் பாடவும் அபிநயம் பிடிக்கவும் வைத்தன. “ஒவ்வொரு பூக்களுமே” பாடலை சரசக்கா சுருதி பிசகாமல் அற்புதமாகப் பாடி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றாள். 74 வயதில் அப்படிப் பாடுவது பெரிய விஷயம்.ஏரியில் பறவைகளூக்கு கார்ன் ப்ளேக்ஸ் போட்டு டால்பின் குதிப்பதைப் பார்த்து டைட்டானிக் ரேஞ்சுக்கு புகைப்படங்கள் எடுத்து ரசித்தாலும் அங்கே நடந்த பாட்டுக் கச்சேரிதான் ரொம்ப சூப்பர். எல்லோரையும் பாட வைத்த பாபா சார்தான் எங்கள் க்ரூப்பின் விழா மாஸ்டர். நந்தன்கனன் மிருகக் காட்சி சாலையையும் விட்டு வைக்கலை,எட்டிப் பார்த்துட்டோம். Safari van இருக்குன்னு சொன்னதால்தான் போகவே செஞ்சோம். வெள்ளை புலி, உள்ளங்கை அளவில் வித விதமான குரங்குகள் எல்லாம் நல்லாவே இருந்துச்சு. செயற்கையாக உருவாக்கப்பட்ட Zoo என்றாலும் பார்க்க நன்றாகவே இருந்தது.


பார்த்தவை ஏராளம் என்றாலும் பகிர்ந்தவை மிக சொற்பம். ஒரிஸாவை தீர்த்த யாத்திரை ஆக்காமல் சிறந்த சுற்றுலாவாக மாற்றிய க்ரூப் மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

0 Comments:

Post a Comment

<< Home