அலை அலை-10
அலை அலை-10
“ஆள் பாதி ஆடை பாதி”.
”சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு” பாட்டு கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனால் இப்போதெல்லாம் புடவையில் பெண்களைப் பார்ப்பதுதான் அரிதாகிக் கொண்டிருக்கிறது. சுடிதார் ஜீன்ஸ் மிடி போன்ற ஆடைகளின் நடுவே புடவை நொந்து நூலாகிக் கந்தலாகிக் கொண்டிருக்கிறது. தற்போதைய அவசரம் மற்றும் நேரமின்மையால் இலகுவாக அணியும் ஆடைகளே தேர்வாகும்போது புடவை பின்னுக்குத் தள்ளப்படுகிறது. சேலை கட்டுவதுதான் தமிழர் பண்பாடு, கட்டாமலிருப்பது கலாச்சார சீரழிவு என்று பேசும் கும்பலுடன் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் சேலைமீதான காதலும் அது தொடர்பான பழைய நினைவுகளும் என்னுள் மிக நெருக்கம்.பதின்ம வயதுகளில் பாவாடை தாவணி (அரை சீலை) கட்ட ஆரம்பித்ததிலிருந்து அரை நூற்றாண்டுக்கும் மேல் தாண்டிய உறவு அது.
அக்காவின் பாதியாகக் கிழித்த புடவைதான் முதல் முதலாகப் போட்ட தாவணி. அப்போது தாவணி போடுவது அவ்ளோ இம்சையாகத் தெரியும். வகுப்புத் தோழி லக்ஷ்மி மட்டும் தாவணி அணியாமல் பாவாடை சட்டை போட்டு ஸ்டைலாக வருவதைப் பார்க்கும்போது நாம மட்டும் எதுக்கு பாட்டி மாதிரி தாவணியைச் சுத்திக்கணும்னு கடுப்பாக இருக்கும். ஆனால் வளர்சிதை மாற்றம் நடக்கிற மாதிரி அப்போதிருந்தே சேலை உடம்பின் ஒரு அங்கம் போல் ஆகிவிட்டது. முதலில் எல்லாம் மரப்பாச்சிக்கு துணி சுத்தி விட்டமாதிரி காமா சோமா என்று தாவணி போடுவேன். அந்த பருவமும் டக்குன்னு போயிடுச்சு. மருத்துவக் கல்லூரி வந்ததும் சேலைதான் கட்டணும்னு dress Code இருந்துச்சு.தாவணிக் கனவுகளுக்கு டாட்டா சொல்லிட்டு பதினாறும் நிறையாத பருவ மங்கைகள் எல்லாம் பரிதாபமாக சேலையில் சுற்றினோம்.
சென்னை சில்க்ஸ் விளம்பரம் மாதிரி அடுக்கடுக்காக புடவைகள் எங்க யாரிடமும் இருக்காது, மொத்தமே நாலைந்துதான் இருக்கும். அதுவும்கூட கல்லூரிக்கு செல்வதற்கென்று அப்போதுதான் வாங்கித் தந்திருப்பாங்க. பள்ளிப் பருவத்திலிருந்தே விடுதிகளில் தங்கிப் படித்திருந்த நளினி, விஜி மாதிரி ஆட்கள் neat ஆக பெட்டிகளில் அடுக்கியும் ஒழுங்குபட கப்போர்டுகளில் எடுத்து வைத்தும் அம்சமாக settle ஆயிட்டாங்க. அவங்களுக்குப் புடவை கட்டுவதும் கைவந்த கலையாக இருக்கும். எப்படியோ நாங்களும் கொஞ்சம் கொஞ்சமா பழகி சேலை கட்டும் மாந்தர் குழுவில் சேர்ந்து கொண்டோம். கல்லூரியிலிருந்து வந்ததும் சேலையை உருவி மூலையில் எறிந்துவிட்டு வீட்டுக்குக் கட்டும் உடைக்கு மாறுவதுதான் அநேகமா எல்லோருக்கும் routineஆகப் பிடித்த விஷயம். நைட்டி, சுடிதார் போன்ற ‘நாகரீக’ உடைகளெல்லாம் அப்போது கிடையாது. பாவாடை தாவணிதான் ஹாஸ்டல் டிரெஸ். மலையாளக் கரையிலிருந்து வந்தவர்கள் கைலி சட்டையுடன் சுற்றுவார்கள். அண்ணன்களின் பழைய சட்டைகளும் பாவாடையும்தான் எனக்குப் பிடிச்ச உடை. கொஞ்சம் பையன் மாதிரியே அலைவேன். சில ஆசாமிகள் ஹாஸ்டலிலும் சேலைதான் கட்டுவாங்க. சில வருஷங்களுக்குப் பிறகுதான் நைட்டியே பிரபலமானது. சரசக்காவும் நயினார் அண்ணனும்தான் எனக்கு நிறைய புடவைகள் எடுத்து தந்திருப்பாங்க. கல்லூரியின் முதல் நாள் அன்று அண்ணன் எடுத்துக் கொடுத்த பச்சைக்கலர் சுங்கிடி சேலையும் கையில் ஆங்கில நாவலுடனும் அமர்ந்திருந்த என்னைப் பார்த்து சீனியர் என்று நினைத்ததாக வகுப்புத் தோழியர் அப்புறமா சொன்னாங்க.
பெண்களுக்குப் புடவை என்பது default dress ஆகிப் போனதுபோல் ஆண்களுக்கு பேண்ட்தான் ஒரே அலங்காரம். ஜீன்ஸ் பேண்ட் எல்லாம் புழக்கத்தில் இருந்ததா என்றே தெரியவில்லை. “ஒருதலை ராகம்” மாதிரி படங்கள் வந்ததிலிருந்து Bell-bottom, ELEPHANT-bottom என்று பேண்ட் அடிப்பாகம் பாவாடை ரேஞ்சுக்கு விரிந்துகொண்டே போனது. ரொம்ப அகலமா போட்டுட்டு வந்த நண்பர் ஒருவருக்குப் “பாவாடை” என்றே பட்டப்பெயர் சூட்டியிருந்தோம். பழைய டைட்ஸ் பேண்ட்களை யானைக்கால் ஆக்குவதற்காக முக்கோண வடிவத்தில் இணைப்புகள் வைத்து தைத்து ஸ்டைலாக அலைபவர்களும் இருந்தார்கள். சினிமாவில் ஃபேஷன் மாறும்போது மறுபடியும் ஸ்டைல் மாறிவிடும். நல்ல வேளையாக ஆசிரியர்கள் யாரும் அந்த மாதிரி ஸ்டைல்களை பரிசோதனை செய்து பார்க்கவில்லை. எழிலை முதல் முதலில் பார்த்ததுகூட பெல் பாட்டம் பேண்ட்டில்தான். சட்டையில்தான் கொஞ்சம் மாடல் காட்டுவாங்க. முழுக்கை அரைக்கை, டக் பண்ணுவது, வித விதமா பெல்ட் போடுவது என்று எப்படியெல்லாமோ ஸ்டைல் காட்டுவாங்க. எத்தனை ஸ்டைல் மாற்றினாலும் ஆண்களின் உடைகள் ரெண்டு மூணு கலர்களில் முடிந்துவிடும். ஆனால் புடவைகளில் எத்தனை வகைகள், நிறங்கள், ஸ்டைல்கள். பெண்கள் பட்டாம்பூச்சியாய்ப் பறப்பது போல் தோன்றுவது நிச்சயமாய்ப் புடவையின் கருணையால்தான்.
புடைவை கட்டுவதிலேயே கூட பலவித ஸ்டைல் காட்டுவார்கள். மேல் முந்தானையைப் போர்த்திக்கொண்டு சிலர் போவார்கள்,புயலில் சிக்கியது போல் பறக்கவிட்டுக் கொஞ்சம் பேர் செல்வார்கள். அழகாக மடிப்பெடுத்து பின் பண்ணிச் செல்லும் கோஷ்டியும் உண்டு. முந்தானையைப் போர்த்தி பிளவுஸில் சொறுகிக் கொள்வது மீனாக்காவின் ஸ்டைல். என் ரூம்மேட் விஜி அழகாகப் புடவை கட்டிக் கொள்வாள். எனக்கு எப்பவுமே கசமுசான்னுதான் கட்டத் தெரியும், ஒரு ஒழுங்குக்குள் கட்டத் தெரியாது. நெட்டை நெட்டையா இருக்கிற நளினி, ஹேமா, விசா எல்லாம் நீட்டாகக் கட்டுவாங்க. பானுவுக்குப் புடவை ரொம்ப அம்சமா இருக்கும். யாராக இருந்தாலும் கல்லூரிக்குள் நுழையும்போது முந்தானையை இடுப்பில் சொறுகிக் கொண்டுதான் வர வேண்டும். கோட் போடும்போது எல்லா ஸ்டைலும் மூடப்பட்டுவிடும். “குஷி” ஸ்டைலில் நோயாளிகள் யாரும் சேட்டை பண்ணமுடியாது.
கல்லூரி விழாக்கள் வந்து விட்டால் யார் புடவை யார்மேல் போர்த்தியிருக்கிறது என்றே தெரியாது. நிறைய பேருக்குப் பட்டுப் புடவையே இருக்காது. நிறைய வைச்சிருக்கிறவங்க மத்தவங்களுக்குக் கடன் கொடுத்திடுவாங்க. கடுமையா ராகிங் பண்ணும் அக்காமார்கள் தங்கச்சிகளுக்கு தாராளமா கொடுப்பாங்க. எனக்கு நயினார் அண்ணன் இரண்டு பட்டுப் புடவைகள் எடுத்துத் தந்திருந்தான். மெரூன் கலரில் ஒன்றும் கருநீலக் கலரில் ஒன்றும். என்னோட எல்லா விசேஷத் தருணங்களிலும் அதைத்தான் உடுத்தியிருப்பேன். நிறைய புகைப்படங்களில் அவைதான் இருக்கும். முதல் முதலாக பரப்பாடியில் நண்பர் பாலுவின் திருமணத்திற்குத்தான் அந்த கருநீலப் புடவையைக் கட்டினேன். இன்னும் அதை பத்திரமாக வைத்திருக்கிறேன். இப்போது பீரோ நிறைய பட்டுப்புடவைகள் இருந்தாலும் அந்த நீலப் புடவை ரொம்ப ஸ்பெஷல். அலீஸ் கூட அந்தப் புடவையை அடிக்கடி ஆசைப்பட்டுக் கட்டியிருக்கிறாள்.
வருடங்கள் ஓடிப்போய் வயது கூடிய தருணங்களில்தான் சுடிதார் அணிய ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் ரெடிமேடு ரொம்பக் குறைவு. தையற்காரர் கருணையைப் பொறுத்து ஸ்டைல் சுடொதார் கிடைக்கும். முதலில் நெடுந்தூரப் பிரயாணங்களுக்கு மட்டும் என்றும் பிறகு சுற்றுலாக்களுக்கு செல்லும்போது மட்டும் என்றும் அணிய ஆரம்பித்தேன். மெதுவாக இரவு நேரங்களில் பிரசவத்துக்குப் போகும்போது அப்புறம் GH duty நாட்களில் என்றெல்லாம் அணியத்தொடங்கி இப்போது முழுநேர உடையே சுடிதார் என்பது போல் ஆகிவிட்டது. இலகுவாக வேகமாக கிளம்ப தோதாக இருப்பதால் புடவையை ஓரம் தள்ளிவிட்டு மெயின் ரேக்குகளில் சுடிதார்தான் இடம் பிடித்திருக்கிறது.ஆரம்பத்தில் சுடிதார் போடும் போதெல்லாம் “ பூவே பூச்சூடவா” பத்மினி மாதிரி (பாட்டி மாதிரியாம்) இருப்பதாக எழில் கேலி பண்ணிக்கொண்டே இருப்பாங்க. அப்புறம் அவங்களே ரெக்கமண்ட் பண்ணும் நிலை வந்துவிட்டது. சிசேரியனுக்கு சேர்ந்து செல்லும்போது புடவை கட்ட ஆரம்பிச்சால் அவங்க பொன்னான நேரம்தானே விரயம் ஆகும். ஜீன்ஸ் எல்லாம் நாப்பது வயசுக்கு மேலேதான் பரிச்சயமே ஆனது. நாத்தனார் மூத்தனார் எல்லாம் டெல்லி அமெரிக்கா என இருப்பதாலும் அடிக்கடி அங்கெல்லாம் ஊர் சுற்ற செல்வதாலும் மாடர்ன் டிரெஸ்கள் அன்றாட வாழ்க்கைக்குள் அத்தியாவசியமாகிவிட்டது. எங்க மகப்பேறு மருத்துவர் குழுமத்தின் டூர் கொள்கைகூட “ NO SAREE THEME” என்பதால் எண்பது வயது முதுநிலை மேடத்துக்குக் கூட ஸ்பெஷலா சுடிதார் தைத்து போட வைத்து டூர் போனோம்.
எல்லாத்துக்கும் மேலாக மகளும் நானும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருப்பதால் புதுப் புது டிஸைன்களில் உடைகள் அவளிடமிருந்து சப்ளை ஆகிக் கொண்டே இருக்கும். நானும் அல்ட்ரா மாடர்ன் ஆச்சி ஆக வலம் வருகிறேன்.எங்க வீட்டிலும் ஏகப்பட்ட பெண்பிள்ளைகள் இருப்பதால் உடைகள் கைமாறிக் கொண்டே இருக்கும். நல்ல வேளையாக அடுத்தவங்க உபயோகித்த உடையை அணிய மாட்டோம்னு சொல்ற சூப்பர் சுத்தம் ஆசாமி யாரும் எங்க குடும்பத்தில் இல்லை. அவ்வப்போது எடுத்துக் கொடுத்தாலும்கூட அட்சய பாத்திரம் மாதிரி புடவை கப்போர்டில் இருந்து வந்துகொண்டே இருக்கும்.
புடவைதான் கலாச்சாரமா சுடிதார்தான் சுகமா ஜீன்ஸ்தான் சிம்பிளா என்று அடுக்கடுக்கான விவாதத்துக்கான தலைப்பில் எங்கள் ஆடைகளின் சங்கமம் இருப்பது பெருமைதான். ஆனால் கருத்துக் கணிப்பில் புடவைதான் முதலில் இருக்கும் என்பது உறுதி. பெண்களுக்கு GIFT கொடுக்கணும்னா சேலை வாங்கிக் கொடுப்பது ஈஸி. அளவு வயசு கலர் எதுவுமே பார்க்க வேண்டியதில்லை. பர்ஸில் இருக்கும் பணத்தை மட்டும் பார்த்தால் போதும்.
0 Comments:
Post a Comment
<< Home