அலை அலை-11
அலை அலை-11
“தூங்கா இரவு,தொலைந்துபோன உறவு”
கடந்த வெள்ளிக்கிழமை இரவு (25.04.2025) பன்னிரெண்டரை மணியளவில் பிரபா போன் பண்ணி அங்கிள் வாந்தி எடுக்கிறார் கழுத்துவலி மாத்திரை சாப்பிட்டிருந்தார் என்று கூறிய பொழுதுகூட ஏதோ அஜீர்ண பிரச்னையாக இருக்கலாம் க்ளினிக் கூட்டிவந்து IV Fluids ஏற்றினால் சரியாகிவிடுவார் என்ற நினைப்பில்தான் நானும் எழிலும் போனோம். நான் காரைத் திருப்பி நிறுத்தும்போது வீட்டினுள் சென்று அவரை அழைத்து வந்த எழில் உடனடியாக ECG எடுக்க வேண்டுமென்று சொன்ன நிமிடத்தில் நிலைமை தலை கீழாகிவிட்டது. அளவற்ற வேர்வை, கைகால்கள் ஜில்லென்று குளிர்ந்த நிலைமை. இருதய நோய்தான் என எழில் உணர்ந்துவிட்டதால் பரபரப்பாகிவிட்டது.அந்த நேரத்திலும் “ஒண்ணுமில்லை பாஸ், ஊசி போட்டா சரியாகிவிடும், ECG எல்லாம் வேண்டியதில்லை” என்று மறுப்பு சொல்லிக் கொண்டுதான் பின் சீட்டில் உட்கார்ந்தார். ஒருவித பதட்டத்துடன்தான் வேகமாகக் காரை ஓட்டினேன். அசுர வேகத்தில் எமெர்ஜென்சி கூட்டிச் சென்று ECG எடுத்த நிமிடத்தில் மாரடைப்பு என அறியப்பட்டு நிமிடங்களை வீணாக்காமல் வைத்தியம் செய்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்த கணங்கள் திக் திக் எனவே இருந்தது. அடைப்பு நீங்க ஊசி போட வேண்டுமென்று கையெழுத்து கேட்டபோது Streptokinase தானே என வெள்ளந்தியாக பிரபா கேட்டபோதுகூட நிலைமையை அவங்களுக்கு விளக்குவது ஈஸியாக இருந்தது. நாடித்துடிப்பும் BP யும் பதிவு செய்ய முடியாதபடி collapse ஆகி இருந்த நிலையில் அதற்குரிய வைத்தியமும் உடனடியாக செய்யப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் அடைந்த நிலையில்தான் நாங்களும் கொஞ்சம் தெம்பாக உணர்ந்தோம். அதன்பிறகுதான் பெங்களூருவில் இருந்த மகள் பிரியாவுக்கு விஷயத்தை விளக்கி, Angiogram பண்ணுவதற்குள் வந்து சேர்ந்துவிடும்படி சொன்னேன். மகன் சூர்யா சார்ஜா அருகில் கப்பல் பயணத்தில் இருந்ததால் தொடர்புகொள்ள முடியாத நிலை. ANGIO முடித்துவிட்டு சொல்லிக் கொள்ளலாம் என நினைத்தோம்.
கார்டியாலஜிஸ்ட் காலையிலேயே Primary Angio பண்ணிவிடலாம் என சொல்லியிருந்தார். அவர் வரக் காத்திருந்த நேரத்தில் டாக்டர்ஸ் ப்ரின்ஸ் & சித்ராவும் துணைக்கு வந்துவிட்டார்கள். இரவெல்லாம் முதுகுவலிதான் அதிகம் இருப்பதாக சொன்னதால் வலிநீக்கும் மருந்து கொடுத்து அப்போதுதான் தூங்க ஆரம்பித்திருந்தார். ஆனாலும் ப்ரின்ஸ் மெதுவாக கையைத் தடவியதும் கண்களைத் திறந்து டிரேட் மார்க் சிரிப்புடன் பாஸ் என்று அழைத்துவிட்டு மறுபடியும் தூங்க முயன்றார். எனவே அவரைத் தொந்தரவு செய்யாமல் அடுத்திருந்த ICU Duty roomல் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். கார்டியாலஜிஸ்ட் வருவதற்குள் வீட்டிற்கு சென்று வருவதாக எழில் கீழிறங்கிப் போனார்கள். சில நிமிடங்கள் கழிவதற்குள் ICU Staff பதட்டத்துடன் கூப்பிட்டான். நாலே எட்டில் படுக்கையை அடைந்தபோது கண்ட காட்சி காலத்துக்கும் மனதை விட்டு மறையாது. இருதயம் சட்டெனத் துடிப்பை நிறுத்தியிருந்தது. கைகளை முறுக்கிக் கொண்டு வில்போல் வளைந்த நிலையில் கட்டையாகிப் போனவரைப் பார்த்து அதிர்ச்சி. நொடிகூட வீணாக்காமல் CPR கொடுத்து சுவாசக்குழாய் உட்புகுத்தி ஆக்ஸிஜன் செலுத்த ஆரம்பிக்கும்போது கீழே சென்ற எழிலுக்கும் செய்தி சொல்லப்பட்டு உடனே வந்துவிட்டார்கள். தேவையான ஊசிகளெல்லாம் செலுத்த load பண்ணிய நிமிடத்தில் இருதயம் மறுபடியும் சீராக இயங்க ஆரம்பித்துவிட்டது.
ANGIO பண்ணுவதற்காக கார்டியாலஜிஸ்ட்டும் அதே சமயத்தில் வந்துவிட ECG,ECHO எல்லாவற்றையும் மறுபடி பார்த்து தீர்க்கமாக ஆராய்ந்தும் Cardiac Arrest போனதற்கான காரணத்தை அறுதியிட்டு கூறமுடியவில்லை. இதயத்தின் ரத்த ஓட்டம் சீராக இருந்தது, EF என சொல்லப்படும் இதயத்தின் இரத்த வெளியேற்றும் திறன் 50% இருந்தது. இரவில் முதுகுவலி அதிகமாக இருந்ததால் பெருந்தமனி (AORTA) போன்ற ரத்தக்குழாய்களில் ஏதேனும் தொந்தரவு இருந்தால் பெரிய மருத்துவமனையில் வைத்து ANGIO பன்ணுவது உகந்ததாக இருக்கும் என அவர் சொன்னதால் கோவைக்கு செல்ல ஏற்பாடு செய்தோம். Ventilator இல் இணைக்கப்பட்டு Duty Doctor, ரெண்டு ICU Technician, நான், பிரபா எல்லோருமாக ஆம்புலன்ஸில் கோவை ராயல்கேர் மருத்துவமனை கிளம்பினோம். தக்க சமயத்தில் பிரியாவும் வந்துவிட்டதால் காரில் எங்களைப் பின் தொடர்ந்தார்கள். Uncle இன் ஒன்றுவிட்ட சகோதரர் டாக்டர்.சந்திரசேகர் ராயல் கேர் கன்சல்டண்ட் என்பதால் நிமிஷ நேரம்கூட விரையமாக்காமல் நேரடியாக ICUவில் admit செய்துவிட்டார்கள். பெரிய மருத்துவ மனைகளில் டாக்டராக இருந்தாலும் நோயாளியின் உறவினராகவே கருதப்படுவதால் எங்களை வெயிட்டிங் ஹாலில் உட்கார வைத்துவிட்டார்கள். எங்களுடன் வந்த Duty Doctor hand-over பன்ணும்போதே மறுபடியும் இதயம் செயலிழந்து போனதாகக் கேள்வி. அங்கேயும் மிகுந்த பிரயாசைக்குப் பின் மறுபடியும் இருதயம் துடிக்க ஆரம்பித்திருக்கிறது.
எங்கே பிரச்னை என்பதை சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்து இரத்தக்கசிவு ஏதும் இல்லாவிட்டால் ANGIO பண்ணிவிடலாம் என்று சொன்னவுடன், அத்தனை பரிசோதனைகளுக்கும் எல்லோரும் ஒருமனதாக சம்மதிச்சுட்டாங்க. சிடி ஸ்கேன் பண்ணியதில் இரத்தக் கசிவு எதுவும் இல்லை ஆனால் மூளையின் பெரும்பகுதி ஆக்ஸிஜன் கிடைக்காததால் வெளுத்து கிடந்தது மானிட்டரில் காட்டப்பட்டது. உடனே ANGIOவுக்கும் அனுப்பி விட்டார்கள். இதயத்துடன் மூளையின் ரத்தக் குழாய்களையும் பரிசோதிக்கப் போவதாகக் கூறினார்கள். அதற்குள் எழிலும் வந்துவிட்டதால் உள்ளே சென்று Angio பற்றி விளக்கம் பெற்று வந்தார்கள். எஙளுக்கும் பின்பு விளக்கப்பட்டது. இப்போது ஏற்பட்ட அடைப்பு நன்றாக கரைந்து ரத்த ஓட்டம் சீராக இருந்தாலும் , ஐந்துக்கும் மேற்பட்ட பழைய பெரிய அடைப்புகள் மூன்று பெரிய ரத்தக்குழாய்களில் இருந்தது. எனக்கு அதன் தன்மை புரிந்தாலும் உறவினர்களுக்கு மருத்துவர் விளக்கிச் சொன்னார். பல வருடங்களாகவே இருந்திருக்கும், மூன்று குழாய் அடைப்பு என்பதால் stent போட முடியாது, இருதய அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டும், மூளையில் Hypoxic changes (ஆக்ஸிஜன் சப்ளை குறையும் போது வரும் செயலிளப்பு) இருப்பதால் 48 மணி நேரம் கழித்துதான் சொல்ல முடியும் என சினிமாவில் சொல்வது போல் சொல்லிவிட்டார்.
எல்லோரையும் ஊருக்குப் போகச் சொல்லிவிட்டு பிரியாவையும் சீனுவையும் மருத்துவமனையில் விட்டுவிட்டு ஈரோடு திரும்பினோம். ஆனால் காரில் வரும்போதே எழில் என்னிடம் நிலைமையைத் தெளிவாகச் சொல்லிட்டாங்க. மூளைக்கு எடுத்த ANGIOவை எங்களுக்குக் காட்டவில்லை. கழுத்துக்கு மேல் ரத்த ஓட்டமே செல்லவில்லை, இருபுறமும் Carotid Artery block மூளைச்சாவு அடைந்துவிட்டார், பிழைப்பது கடினம் என்பதை அழுகையுடன் சொன்னாங்க. மருத்துவர்கள் என்றாலும் நோயின் தன்மை புரிந்திருந்தாலும் மனம் நம்ப மறுத்தது. ஏதாவது அதிசயம் நடந்து எல்லாமே சரியாகிவிடாதா என்ற நப்பாசை.நாளை காலை கோவை செல்லும்போது படுக்கையில் உட்கார்ந்து நம்மை வரவேற்பார், நான் கனவில் இருக்கிறேன் தூங்கி முழிக்கும்போது அங்கிள் முன்னாடி நிற்பார் என்றெல்லாம் குழப்பமான மனநிலை. இரவெல்லாம் புலம்பலும் அழுகையுமாக கழித்தபோது, அதிகாலையிலேயே பிரியாவின் அழுகையோடு அந்த இடி எங்கள் எல்லோர் தலையிலும் இறங்கியது. “அங்கிள் அங்கிள்” என நாலு திக்கிலிருந்தும் அவரை அழைக்கும் அவலக் குரல்கள் காதில் விழமுடியாத தூரத்திற்குச் சென்றுவிட்டார். “உறங்குவது போலும் சாக்காடு”- திருக்குறளுக்கு உதாரணமாக தூங்குவது போலவே காட்சி தந்துவிட்டு “உறங்கி விழிப்பதுபோன்றே பிறப்பு” என்ற சொற்களைப் பொய்யாக்கிவிட்டுக் கண்களைத் திறக்காமலே போய்விட்டார்.
ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் மீள்வதில்லை. ஆனாலும் சில இழப்புகளை ஜீரணிக்க முடிவதில்லை. உடன் பிறந்தவர்கள்,பெற்றெடுத்த பிள்ளைகள், உற்றார் உறவினர் என ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அங்கிள் என்ற ஆத்மார்த்த நண்பரைப் பிரிந்த நொடியில் அநாதைகளாகிப் போனோம். எங்கள் குடும்பத்தின் மழலை மாறா குழந்தைமுதல் எண்பதுகளைத் தாண்டிய அக்கா மாமியார் பெரியவர்கள் எல்லோருக்குமே அங்கிள் என்றால் சோம்ஸ் எனப்படும் டாக்டர்.சோமசுந்தரம்தான். தனது அப்பா அம்மா இறந்த சமயங்களில் கூட அமைதியுடன் அழுத எழில் அங்கிள் பிரிவில் ஆற்றாமையுடன் புலம்பி புலம்பி அழுத காட்சியைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. பத்து நாட்கள் கடந்தபின்னரும் கண்ணீருக்கு அணை போட முடியவில்லை. புலம்பித் தவிக்கும் மனதுக்கு ஆறுதலும் இல்லை. வழியனுப்பி வைத்துவிட்டு மறுபடியும் வந்துவிட மாட்டாரா என்று வாசல் பார்த்து ஏங்கிக் கிடக்கிறோம்.
0 Comments:
Post a Comment
<< Home