Tuesday, December 15, 2020

அலை-26

 அலை-26

நினைவலைகளில் நிம்மதியாக நீந்த முடியாமல் செய்துவிட்டது எங்கள் வீட்டு எலி ராஜ்ஜியம்.உண்மையி லேயே அராஜகம்தான் நடத்திக் கொண்டிருக்கிறது. உண்மை தெரியாமல் தும்பை விட்டு வாலைப்பிடிக்க ஓடும் வேலைதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.


எங்கவீடு தெருவின் கடைசி என்பதாலும், தெருமுனையின் காலிமனை புல்புதர்கள் மண்டி கிடப்பதாலும் வீடு முழுக்க எல்லா ஜன்னலிலும் கொசுவலை அடிச்சு வைச்சிருக்கோம்.கொசுத்தொந்தரவு குறைவுதான். ஆனாலும் சமையல் கட்டு பக்கமும் முன் கதவும் அடிக்கடி திறந்து வைக்க வேண்டிய தேவைகள் இருப்பதால் எப்படியும்  ஒண்ணு ரெண்டு கொசு உள்ளே அத்துமீறிப் புகுந்துவிடும். மறுபடி வெளியே போக முடியாமல் உள்ளேயே சுத்திசுத்தி எல்லாரையும் நல்லா கடிச்சு வைச்சிடும். அதே வழியாக அசந்த நேரங்களில் எலியும் உள்ளே புகுந்துவிடும். 


இந்தத் தொந்தரவுகளெல்லாம் வேண்டவே வேண்டாம் என்று பின்கதவு, முன்கதவு எல்லாத்துக்கும் வலைக்கதவு பொருத்தினோம். மெயின் கதவைத் திறந்துவைத்துக்கொண்டு வலைக்கதவை மட்டும் திறந்து வைத்துக்கொண்டால் என்ன ஒரு சுகம். நல்ல காற்றோட்டம், வெளிச்சம் எல்லாம் வந்து வீடே பளீரென்று தெரிந்தது. சரியான நேரத்தில் கொரோனா ஊரடங்கும் வந்ததால் முழுநேரமும் ஹாலிலேயே அமரும் பழக்கமும் வந்துவிட்டது.ஹால்கதவு முழுநேரமும் திறந்து வைச்சுக்க வசதியாகவும் இருந்தது. தொலைக்காட்ட்சி பார்த்துக் கொண்டே சீட்டு விளையாடுவது கதை பேசுவது என்று நாட்கள் தொய்வின்றி ஓடியதற்கு வலைக்கதவுகளும் காரணம்.


 வீட்டுக்கு வருபவர்களிடம் வலைக்கதவு போடத்தோன்றிய அறிவைப் பற்றிப் பேசி பெருமை அடித்துக் கொள்வதும் வாடிக்கையானது.

எல்லாத்துக்கும் சேர்த்து ஆப்பு வைச்சது ஆனமுகனின் சாரதி , அதாங்க பிள்ளையாரோட வாகனம் “எலி’’. நான் கூட மிக சமீபமாக நேரம் போகாத சமயத்தில் S.J.சூர்யாவோட மான்ஸ்டர் படம் வேறே பார்த்திருந்தேன். கதாநாயகனின் நிலைமையைப் பார்த்து ரொம்ப பரிதாபப்பட்டுக் கொண்டேன்,நாமும் அதேமாதிரி அல்லல் படப்போறோம்னு தெரியாமல்.


எனது மகன் டேனியல் படித்துக் கொண்டிருக்கும்போது, நடுராத்திரிகளில் சிற்றுண்டிகளைத் தேடி சமையலறைப் பக்கம் போனபோது எலிமாதிரி ஏதோ ஓடின மதிரி இருந்ததாகச் சொன்னான். அவனோட மனப்பிராந்தி என்று கேலிபண்ணி நம்ம வீட்டுக்குள்ளே எலி வரவே முடியாதுன்னு மறுபடியும் பெருமை பீற்றிக் கொண்டேன்.  

எங்க வீட்டு ஹாலில் பெரிய பியானோ இருக்கும். சில நாட்கள் கழித்து அதனுள்ளிருந்து இரவு வேளைகளில் கரகரப்பான சத்தம் வருவதாகவும் சொன்னான். அதையும் பொருட்படுத்தவே இல்லை. நம்ம பசங்களை நாம் எப்பவுமே குழந்தையாகத்தான் நினைக்கிறது. அவங்க சொல்றதைக் காது கொடுத்து கேட்பதே இல்லை. அப்படி இப்படி பேசியே ரெண்டுமாசம்போல ஓடிடுச்சு.


செப்டம்பர்மாதம் ஸ்ரீவை அக்கா பொண்ணுங்க ஒரு வைத்தியத்துக்காக ஈரோடு வந்திருந்தாங்க. ரெண்டுபேரும் ஹாலில் சினிமா பார்த்துட்டு அப்படியே படுத்திருக்கும் போது பியானோவிலிருந்து எதையோ கடிக்கும் சத்தம் வர்றதாகச் சொன்னாங்க. அதுக்குப்பிறகும் தள்ளிப்போட முடியாமல் பியானோவைத் திறந்து பார்த்தோம். டேனி, நான், ட்ரைவர், சீத்தா,சிவகாமி என  நாங்க அஞ்சுபேர். மூடியைத் திறந்தவுடனேயே குட்டி எலி ஒண்ணு லாங் ஜம்ப் பண்ணி பியானோ கீ-களுக்குள் ஓடிடுச்சு. அப்படி இப்படி தட்டிதட்டி சத்தம் எழுப்பியதில் குதிச்சு வெளியே வந்துடுச்சு. ஆனால் டமால்னு பியானோ அடியில் புகுந்துடுச்சு. எல்லாரும் சேர்ந்து பியானோவைப் புரட்டியதும் தாவிக்குதிச்சு சோஃபா பின்னாடி ஓடிருச்சு. என்னே ஒரு வில்லத்தனம்!


சோஃபாவை தட்டினாலும் வெளியே வரலை. அதனாலே சோஃபாவை முன்னாடி இழுத்தப்போதான் தெரிந்தது எங்களின் அறியாமையும், எலி அண்ணாச்சியின் புத்திசாலித்தனமும். சோஃபாவின் பின்னாடியிருந்த ஜன்னலின் வலையில் பெரிய ஓட்டை போட்டிருந்தது. காற்று வரட்டும் என்று ஜன்னலைத் திறந்து வைத்திருந்ததன் பலன். வசதியாக ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து நெட்லானில் வசதியாக ஒட்டை போட்டு வைத்துக்கொண்டு தினசரி விருந்தாளியாக வந்து போய்க் கொண்டிருந்திருக்கிறது. சரிதான் எலி ஜன்னல் வழியாக வெளியே ஓடிடுச்சு,காற்றும் வேண்டாம், களவாணிப்பசங்களோட சங்காத்தமும் வேண்டாமென்று ஜன்னல் கதவுகளையெல்லாம் இறுக்க மூடிட்டோம். அதற்குள் பியானோவில் நிறைய கீ-களை கடித்து பழுது பண்ணியிருந்தது.


ரெண்டுமூணுநாள் கழிச்சு ஹாலில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தபோது ஒருவிதமான நாற்றம் வந்தது. எழில் வீட்டுக்குள்ளே வரும்போதே ஏதோ செத்துக்கிடக்கிற வாசனை வருதுன்னு சொல்லிகிட்டே வந்தாங்க. எல்லா இடமும் தேடினோம், எதுவும் இல்லை. ஆயா பிளீச்சிங் பவுடரெல்லாம் கரைச்சு வீடு துடைச்சாங்க ஆனாலும் நாற்றம் போகலை. மறுபடியும் பியானோவைத் திறந்து பார்த்தால் உள்ளே ஒரு எலி செத்துக் கிடந்தது. ஒருவழியா அதை எடுத்துப்போட்டு வீடெல்லாம் மறுபடி சுத்தம் செய்து, ஏக வேலையாயிடுச்சு.


கதவெல்லாம் மூடிட்ட பிறகும் எலி வருதுன்னா, ஒருவேளை இதன் தோழர்கள் எவரேனும் ஸ்டோர் ரூமில் ஒளிந்திருக்கலாம் என்று எலி பிஸ்கட் (ஒருவிதமான பாய்சன்) அங்கங்கே வைச்சி கதவையெல்லாம் நல்லா மூடி வைச்சிட்டோம். வித்தியாசமா  எதுவுமே நடக்கலை, ஆனால் எலி ஹாலில் மறுபடியும் நடக்குதுன்னு டேனி சொன்னான். இனிமேல் வேலைக்கு ஆகாதுன்னு எழில் Rat-glue ன்னு நாலைஞ்சு அட்டை வாங்கிட்டு வந்தாங்க. எலி அதைத்தாண்டிப்போகும்போது பச்சக்குன்னு அந்த அட்டையில் ஒட்டிக்கும், நகர முடியாது. 


சமையலறையிலும் ஹாலிலும் அங்கங்கே “எலி விளையாடும் இடங்கள்’’ பார்த்து அந்த அட்டைகளை வச்சிட்டோம். காலையில் எழுத்ததும் காபிகூட போடாமல் அட்டைகளைத்தான் ஓடிப்போய்ப் பார்த்தேன். சமையலறையில் எதுவும் இல்லை. ஹாலில் பார்த்தால் ஒரே அட்டையில் ரெண்டு சுண்டெலிங்க ஒட்டிக்கிடந்தன, கீச் மூச்-ன்னு கத்திகிட்டு. ட்ரைவருக்குக் கார் ஓட்ற வேலையைவிட அட்டையில் ஒட்டியிருக்கிற எலியை அப்புறப்படுத்துறதுதான் அன்னைக்கு பெரிய வேலை.


வடிவேலு பாணியில் ஒரு ஓரமா உக்காந்து சிந்திச்சுப் பார்த்தப்போ ஒரு விஷயம் தெளிவாச்சு. எல்லா கதவு ஜன்னலும் மூடியிருக்கு, சமையலறையிலும் எலியைக் காணோம். பிறகு எங்கேதான் இருக்கு அந்த அமுத சுரபி, அடுத்தடுத்து எலி சப்ளை பண்ணிகிட்டுன்னு யோசிச்சேன். ஹாலில்தான் எங்கேயோ இருக்குதுன்னு முடிவு பண்ணிட்டோம். சோஃபாவுக்கு அடியில்தான் ஒவ்வொருதரம் துறத்துறப்போவும் ஓடுச்சு. அதனால் எல்லா சோஃபாவையும் குப்புறக் கவிழ்த்துப் போட்டோம். அடிப்பாகத்தில் ரெண்டு பெரிய ஓட்டைகள் இருந்தது. அதுக்குள்ளே எங்கே போய் எப்படி ஒளிஞ்சிருக்கும்னு தெரியலை. அதனால் எப்படியும் வெளியே வந்துதானே ஆகணும்னு சோஃபா காலைச் சுத்தி நாலு அட்டையை வச்சிட்டோம்.


கிடத்தட்ட நாலைஞ்சு நாள் எந்த சலனமும் இல்லை. 

இனிமேல் எலித்தொல்லை இருக்காது. ஏற்கனவே மாட்டினதுதான் கடைசி போலிருக்கு, நிம்மதியா இருக்கலாம்னு யோசிச்சுகிட்டு இருந்தப்போ அட்டைகளோட இடம் மாறிக் கிடந்தது. ஆயாதான் பெறுக்கும்போது தள்ளிவிட்டுருச்சுன்னு அதைக் கடிந்து கொண்டேன்.ஆனால் தினமும் அட்டைகள்  இடம் மாறிகிட்டே இருந்துச்சு.அப்படீன்னா ஆசாமிங்க எங்கேயோ பதுங்கி இருக்காங்கன்னு புரிஞ்சிடுச்சு. ஆனால்  மாட்ட மாட்டேங்குது. பெரிய எஞ்சினீயர் லெவலுக்கு யோசனை பண்ணி வெவ்வேறு கோணங்களில் நாலு அட்டைகளை வைத்தேன். 


சக்சஸ், மறுநாள் காலையில் ரெண்டு சுண்டெலி ஒரே அட்டையில் ஒட்டிக்கிடந்தது.

எதுக்கும் கொஞ்ச நாளைக்கு தொடர்ச்சியாக அட்டைகளை வைச்சிடுவோம், சோஃபாவில் மிச்சம் ஏதும் இருந்தால் மாட்டிக்கும் என்று யோசித்தோம். ஆனால் பழைய அட்டைகளெல்லாம் அழுக்காக இருந்ததால் அதையெல்லாம் குப்பையில் போட்டுவிட்டு புதுசு வாங்கிக்கலாம் என்று கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருந்தோம். 


மறுபடியும் ஹாலில் உட்கார்ந்து க்ரிக்கெட் பார்க்கும்போது, எழில் திரும்பவும் எலி செத்த வாசம் வருதுன்னு சொல்லிகிட்டே இருந்தாங்க. உங்களுக்கு நிச்சயமா கொரொனா இல்லை, வாசனை நரம்புகள் சூப்பர்னு கேலி பண்ணிட்டு அசால்ட்டாக இருந்துட்டேன். 

மறுநாள் காலையில் நாற்றம் அதிகமானதும், மறுபடி சோஃபா தலைகீழ் சர்க்கஸ் பண்ணுச்சு. அங்கேயும் எதுவும் இல்லை. எதேச்சையாகப் பார்த்தால் சின்ன சோஃபாவின் அடியில் அட்டையில் ஒட்டிய நிலையில் செத்த எலி., பெரிய சைஸ். இதுவும் ரெண்டுநாளைக்கு முன்பே ஒட்டியிருந்திருக்கணும். அட்டையை ஒரு மூலையிலிருந்து அடுத்த மூலை வரை தள்ளிக்கொண்டு வந்து சின்ன சோஃபா அடியில் மாட்டியிருக்கிறது. மறுபடியும் சுத்தம் செய்யும் படலம்.  இப்பவும் விட்டில் பல இடங்களில் அங்கங்கே அட்டைகள் பரப்பி வைக்கப்பட்டே இருக்கிறது.


கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸுக்கு உலகமே நடுங்கிகொண்டு இருக்கும் போது, நாங்க மட்டும் வித விதமான சைஸில் எலி பிடிக்கும் எக்சர்சைஸ் பண்ணிக்கொண்டிருக்கிறோம். வீட்டில் சானிடைசர் இருக்குதோ இல்லையோ, எலி பிடிக்க அட்டைகள் உண்டு.

0 Comments:

Post a Comment

<< Home