Wednesday, June 05, 2024

அலை அலை-5

 அலை அலை-5

“போவோமா ஊர்கோலம்”
படிச்சவங்களோ பாமரர்களோ, ஏழையோ பணக்காரனோ, முதலாளியோ தொழிலாளியோ-பயணம் போவது எல்லோருக்குமே பிடித்த ஒன்றுதான். தூரமும் இடமும் ரசனையும் வேறுபடலாம். ஆனால் ஆசை எல்லோருக்கும் பொதுவானதுதான். எனக்கு உலகத்தையே சுற்றி வர ஆசை. என் வீட்டுக்காரருக்கோ ஈரோட்டிலிருந்து வெளியே கிளம்பினால் மூச்சு வாங்கிவிடும். ஈரோட்டின் காவல் தெய்வம் என்று நாங்களெல்லாம் கலாய்ப்பது கூட உண்டு. சித்தோட்டில் இருக்கும் எங்க தோட்டத்திற்குப் போவதுதான் அவங்களுக்கு ரொம்ப பிடிச்ச பிரயாணம். அதைத் தாண்டி வெளியூர் நகர்த்தணும்னா ரொம்ப சிரமம்தான். அதனாலேதான் நான் வெவ்வேறு குழுக்களுடன் இணைந்து அவ்வப்போது ஊர் சுற்றக் கிளம்பிவிடுவேன்.
77 Batchmates உடன் ஒரு டூர், ஈரோடு மகப்பேறு மருத்துவர்கள் குழுவுடன் ஒரு டூர் என வருஷத்துக்கு ரெண்டு பயணம் கண்டிப்பாக உண்டு. அது வட நாடாகவும் இருக்கலாம் அயல்நாடாகவும் இருக்கலாம். அதுபோக குடும்பத்துடன் அவ்வப்போது எட்டிப் பார்க்கும் தூரத்தில் இருக்கும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என வார இறுதிகளில் செல்வது பாயாசத்தில் பனங்கற்கண்டு சேர்ப்பது மாதிரி. அம்மாவீடு,மாமியார் வீடு,மகள்வீடு என குழுமங்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போவதால் அப்பாயிட்மெண்ட் ஒழுங்கு பண்ணுவது tight ஆகத்தான் உள்ளது. காலில் சக்கரம் கட்டிகிட்டு சுத்திகிட்டே இருக்கியே, எப்போதான் வீட்லே இருப்பாய் என கலாய்ப்பவர்களும் உண்டு.
இந்த மாதிரி பிரயாணங்கள் போவது எப்போதிலிருந்து தொடர்கதை ஆச்சுன்னு தெரியலை. ஆனால் பள்ளிப் பருவத்தில் அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலுக்கு பிக்னிக் போனதிலிருந்தே ஆரம்பித்துவிட்டது. மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பிறகு கொஞ்சம் முன்னேறி, ஆ ஊன்னா குற்றாலம் பாபநாசம் போவோம். ரொம்ப அரிதாக திருவனந்தபுரம் ஒருதரமும் பெங்களூரு ஒருதரமும் போனோம்.அவைதான் என்னுடைய நீண்ட பயணங்கள். திருவனந்தபுரம் விமான நிலையத்தின் வெளியே நின்று ஓடுபாதையில் பறந்த விமானத்தை அண்ணாந்து பார்த்தோம். அப்போது வரைக்கும் பேருந்தும் புகைவண்டியும்தான் பழக்கப்பட்ட வாகனங்கள்.
படிப்பு, திருமணம், குடும்பம், குழந்தைகள் என வாழ்க்கைச் சக்கரம் ஓடிக் கொண்டே இருந்தபோது கால்களில் கட்டியிருந்த சக்கரம் உள்ளுக்குள்ளேயே உறங்கிக் கொண்டிருந்தது.
இனிமேல் இதுதான் நம்ம ஊர் என ஈரோட்டில் செட்டில் ஆன பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக ஊர் சுற்றல் ஆரம்பித்தது. காரில் டூர் போக ஆரம்பித்ததே கல்யாணத்துக்கு அப்புறம்தான் , அதுவும் அந்தக்கால அம்பாசிடரில். வருஷத்தில் இரண்டுதரம் கண்டிப்பாக வெளியில் செல்வது என முடிவு செய்து பயணம் செய்ய ஆரம்பித்தோம். ஆடி மாசமும் தைப்பொங்கல் சீசனும் நோயாளிகள் வரவு குறைவாக இருக்கும் என்பதால் அதையே ரெகுலராக கடைப்பிடித்தோம். எழில் Sterling Holidays membership வாங்கியிருந்தது ரொம்ப வசதியாகப் போயிடுச்சு. குழந்தைகள் கொஞ்சம் பெருசாகிறவரை அக்கம் பக்கத்தில் இருந்த மலைகளையும் கோடை வாசஸ்தலங்களையும் பார்த்து முடிக்கவே சரியாகப் போச்சுது. எல்லா ஸ்டெர்லிங் ரிசார்ட்டும் எங்க பேர் சொல்லும் அளவுக்கு தங்கியிருப்போம்.
எழில் தங்கை புனிதா ஹைதராபாத் விமான நிலையத்தில் வேலை பார்த்ததால் அங்கு போனதுதான் முதல் நீண்ட புகைவண்டி பயணம். எழிலின் வேலைப்பளு காரணமாக எங்களுடன் வரமுடியவில்லை. குழந்தைகள் மற்றும் மாமனார் மாமியாருடன் ஒரு ஜாலி ட்ரிப். லும்பினி பார்க்கில் லேசர் விளக்கில் பார்த்த காட்சிகள் மலைப்பாக இருந்தது. அடுத்தடுத்து நயினார் அண்ணன் ஏற்பாடு செய்திருந்த சிக்கிம் , டார்ஜிலிங் பயணம்; புனிதா மாறுதலாகி டெல்லி விமான நிலையம் சென்றதால் முதல் முதல் விமான பயணமாக டெல்லி சென்றது என பயணங்களின் எல்லைகள் விரிவடைந்துகொண்டே போனது. ஆனாலும் இதுவரை ஒருதரம் கூட வெளிநாட்டுப் பயணம் செல்லவில்லையே என்ற குறை இருந்து கொண்டே இருந்தது.
அரசுப் பணியில் இருந்ததால் அது சாத்தியமாவதில் சிக்கல் இருந்தது. அந்த நேரத்தில் அடிக்கடி பணியிடை மாற்றம் செய்து கொண்டே இருந்ததால் கடுப்பாகிஅரசுப் பணியில் இருந்து நீண்ட விடுப்பில் சென்றேன், கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள். அந்த இடைவெளியில்தான் பாஸ்போர்ட் எடுத்து முதல் முதலாக சிங்கப்பூர் சென்றோம். மறக்கமுடியாத முதல் அயல்நாட்டுப் பயணம். மறுபடியும் அரசுப் பணியில் இணைந்ததால் வெளிநாடு பயணங்கள் தடைபட்டது. புனிதா டெல்லியிலேயே இருந்ததால் கிழக்கிலிருந்து மேற்காக இமய மலையின் ஒவ்வொரு மலை வாசஸ்தலத்தையும் பார்த்து மனதைத் தேற்றிக் கொண்டேன். சிம்லா, காஷ்மீர் எல்லாம் மனதைத் தொட்ட பயணங்கள். 2018 இல் பணிநிறைவு பெற்றவுடன் கால்களில் சக்கரம் துடிப்புடன் எழுந்து நிரந்தரமாக ஒட்டிக் கொண்டது.
வானமே எல்லை தூரங்கள் தடைகள் இல்லை என்று பறந்து பறந்து பார்க்கிறேன். பலவித அநுபவங்கள், எண்ணற்ற நிகழ்வுகள்; சந்தோஷங்கள்; பிரச்னைகள் என பயணங்கள் என்னை முழுதாக ஆக்ரமித்துக் கொண்டுவிட்டன. ஒரு இடத்திற்குப் போயிட்டு வரும் முன்பே அடுத்த இடம் எங்கு செல்கிறோம், யாருடன் செல்லப் போகிறோம் என்பதெல்லாம் ப்ளான் பண்ணி அதற்குரிய ஏற்பாடுகளில் இறங்கிவிடுவேன். மூணுமாசம் அமைதியாக உட்கார்ந்து நர்ஸிங் ஹோமைப் பார்த்துக் கொண்டு அடுத்த பயணத்திற்கு தேவைப்படும் தொகையை சேமித்துக் கொள்வேன். வீட்டு செலவுகள், பிள்ளைகள் படிப்பு, திருமணம் எல்லாம் எழில் பார்த்துக் கொள்வதால் என் வருமானத்திலிருந்து பயணங்களுக்கு செலவு செய்வதில் பிரச்னையே இல்லை.
பயணங்கள் செல்வது பொழுது போக்குக்காக மட்டும் அல்ல. பலவித மனிதர்கள், கலாச்சாரம், உணவுப் பழக்கங்கள், இயற்கை சூழல்கள், நவீன தொழில் நுட்பங்கள் என எத்தனையோ விஷயங்கள் நம் பார்வைகளை விசாலப் படுத்துகிறது. மெத்தப் படித்த மருத்துவர் என்று பீலாவாக சுற்றித் திரிந்தாலும் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் படபடக்கும் இதயத்தை மறைக்கத் தெரியாது. ஒவ்வொரு முறை விமானத்தில் பயணிக்கும் போதும் பிரசவத்திற்குக் காத்திருக்கும் கர்ப்பிணிபோல் இறுக்கமாக நுழைந்து வெளியில் வரும்போது அப்பாடா என பெருமூச்சு விடுபவர்கள் ஏராளம். வீட்டில் துரும்பைக் கூட எடுத்துபோடாதவர்கள் தங்கள் உடமைகளைத் தாங்களே தூக்கி கன்வேயரில் போடும்போது முகம் சுழிக்கும் சுவாரஸ்யமான காட்சிகளும் உண்டு. வரிசையில் நிற்பதும், வழி கொடுத்து ஒதுங்கி நிற்பதும், நன்றி சொல்லப் பழகுவதும், குப்பைகளைக் கூடையில் போடுவதும் சாதாரண விஷயங்கள்தான். ஆனால் அன்றாட வாழ்வில் நாம் அடிக்கடி மறந்து போகும் விஷயங்களும்கூட. அதையெல்லாம் சிறு குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பதுபோல் பயணங்கள் நமக்கு போதித்துக் கொண்டே இருக்கும். ஆரோக்கியமாகவும் FIT ஆகவும் நம்மை நாமே செதுக்கிக் கொள்ள பயணங்கள் நல்ல கிரியா ஊக்கி. நாள்பட்ட சர்க்கரை நோய் கூட நடைப் பயணத்தில் கட்டுக்குள் வந்துவிடும். ருசித்து ருசித்து சாப்பிட்டவர்கள் எல்லாம் பசிக்கு சாப்பிடப் பழகிவிடுவார்கள். மிக முக்கியமாக நேர மேலாண்மை (TIME MANAGEMENT) கண்டிப்பாகப் பழகிவிடும். என்னைவிடவும் மிக அதிகமான பயணங்களை மேற்கொண்டவர்கள் கணக்கில் அடங்காமல் இருப்பார்கள்.
ரஷ்யாவின் தலைநகரம் மாஸ்கோ என்று பூகோளத்தில் படித்ததை அந்த ஊரின் சாலையில் நின்று உணரும்போது வரும் புல்லரிப்பு ஆச்சரியப்படுத்தும். இதுபோல் இன்னும் எத்தனையோ உணர்வுகளும் உண்மைகளும் பிரயாணம் செய்ய வேண்டிய அவசியத்தை உணர வைக்கும். இன்னும் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பே இங்கே வந்திருக்க வேண்டும் என்று எண்ண வைத்த இடங்கள் நிறைய உண்டு. நேரமின்மை, பணத்தேவை, அவசியம் என்று தோணாமலிருந்தது போன்ற காரணங்களால் நிறைய பயணங்களைத் தள்ளிப் போட்டிருப்போம். நேரம் பொன் போன்றவர்களுக்கு அதிதுரித விமானங்களும், சாமானியர்களுக்கு பட்ஜெட் புகைவண்டி பேருந்து போன்றவைகளும் ஈசியாக ப்ளான் பண்ண முடியும். நட்சத்திர விடுதிகள் முதல் மாணவர் விடுதிகள் வரை இணையம் மூலமே இலகுவாக முன்பதிவு செய்யும் அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. பயணங்களில் அடுத்து வரும் முக்கியமான சந்தோஷம் நண்பர்களுடன் கதை பேசுவதும் பொரணி பேசுவதும்தான். ஸ்பெஷல் ஐட்டம் பிரண்டைத் துவையல். பழங்கதைகள் பேசுவது எல்லோருக்குமே பிடிக்கிறது என்பதே பயணங்களின்போதுதான் புலப்பட்டது. கல்லூரி நாட்களில் சண்டை போட்டதைக் கூட காமெடியாக எடுத்துக் கொண்டு கலாய்ப்பதும் இலகுவாக இருக்கும்.ஈகோ குறைந்து விட்டுக் கொடுக்கும் பாங்கு அதிகரிப்பது நிதர்சனமாகப் புரியும். மனது விசாலமாகி மறுபடியும் குழந்தைத் தனம் கூடிவிடுகிறது. குறும்புச் சேட்டைகளுக்கும் பஞ்சமிருப்பதில்லை.இப்படி எத்தனையோ நினைக்க நினைக்கத் திகட்டாத அநுபவங்கள். பயணங்கள் மூலம் நான் பெற்ற இன்பத்தை எல்லோருடனும் பகிரும் வண்ணம் கட்டுரைகளாக எழுதலாமா என்று யோசிக்கிறேன். மேலோட்டமாக எழுதினாலே ஒரு நூறு பதிவுகள் தாண்டிவிடும் போலிருக்குது.
என்னோடு சேர்ந்து ஊர் சுற்றலாம் (இல்லை இல்லை)
உலகம் சுற்றலாம், வாங்க!!
Like
Comment
Share

அலை அலை-4

 அலை அலை- 4

“அறுவை மன்னர்கள்’
பொதுவாக இப்படிச் சொன்னால் பேசியே போரடித்து உயிரை வாங்கும் நபர்கள்தான் நம் கண் முன் வருவார்கள். ஆனால் எங்களுக்கெல்லாம் அறுவை மன்னர்கள் என்றால் அறுவை சிகிச்சை செய்வதில் கிங் என்று அர்த்தம். அதிலும் இளங்கலை மருத்துவம் படிக்கும்போது ஒவ்வொருவருக்கும் அமையும் யூனிட் பொறுத்து அவங்கவங்க துறைத் தலைவர்கள்மேல் தேவதா விசுவாசம் இருக்கும். எங்க கல்லூரியில் மொத்தமே நாலு யூனிட் தான் உண்டு MSS, DKP, RH,SR என்று அவர்களின் பெயர்ச் சுருக்கமே யூனிட் பெயராக இருக்கும்.. எனக்கு எல்லா வருஷமும் மூணாவது யூனிட் RH (Dr.R.Hariharan) சார் unit தான். மாணவப் பருவத்தில் மூணுவருஷம், House surgeon பண்ணும்போது ஒருவருஷம் என நான்கு வருஷமும் அங்கேதான் போஸ்ட்டிங்.
MBBS மூன்றாம் வருஷம்தான் க்ளினிகல் சைடில் முதல் வருஷம். என்ன செய்யணும் என்ன படிக்கணும்னு தெரியாமலே கோட் மாட்டிகிட்டு பெரிய டாக்டர் மாதிரி அங்கும் இங்கும் சுத்திகிட்டு இருப்போம். நோயாளிகள் வாயால் டாக்டரம்மா என அன்போடு அழைக்கப்படும் முதல் அநுபவம் அப்போதுதான் கிடைக்கும். ஊசி போட சிரிஞ்ச் எடுத்தால் கை நடுங்குவதும், புண்ணுக்குக் கட்டுப் போடப் போனால் பேண்டேஜ் ரோல் கைநழுவி நழுவி சுற்றிக் கொள்வதும் எங்களுக்கு மட்டுமே தெரியும் தர்ம சங்கடங்கள். ஆனால் நோயாளிகள் முன்னால் மெத்தப் படித்த மேதாவிகள் மாதிரி எக்ஸ்ரேயைத் தூக்கி ஸ்டைலாகப் பார்ப்பது, ஸ்டெத் வைச்சு பரிசோதனை செய்வது எல்லாம் பந்தாவாகச் செய்வோம்.
அப்படிப்பட்ட எங்களுக்கு அறுவை சிகிச்சைப் பிரிவில் போஸ்ட்டிங் போடும்போது எப்படி இருக்கும் என்பது தனித்தனி அநுபவங்கள். புறநோயாளிகள் பிரிவிலேயே பிரச்னை ஆரம்பித்துவிடும். ஆண் பெண் இருபாலரும் உள்ள அறையில் இடுப்புக்குக் கீழ் துணி நீக்கப்பட்ட ஆண் மகனின் வியாதி குறித்து பேராசிரியர் சீரியசாக வகுப்பெடுத்துக் கொண்டிருப்பார். சீனியர்கள் அக்கறையுடன் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பார்கள். மூன்றாம் வருட மாணவர்களை யாரும் கண்டுக்க மாட்டார்கள். அவங்களில் வியப்பாக சிலரும், வெட்கத்துடன் சிலரும், குறும்புப் பார்வையுடன் சிலரும் நெளிந்து கொண்டிருப்பார்கள். நோயாளிகளில் பேதம் பார்க்காமல் நோயை ஆராய்ந்து வைத்தியம் செய்ய வேண்டிய அடிப்படைக் கல்வி அங்கிருந்துதான் ஆரம்பிக்கும். கண்ணால் பார்ப்பது (inspection), கையால் தொட்டு உணர்ந்து பரிசோதிப்பது ( palpation) என விலாவாரியாக பரிசோதிக்கும் போது சில குறும்புக்கார சீனியர்கள் திடீரென்று ஜூனியர்களை பரிசோதனை செய்யச் சொல்லி சிக்கலில் மாட்டிவிட்டு கலாய்ப்பதும் உண்டு.
புறநோயாளிகள் பகுதி முடித்துவிட்டு வார்டுக்குப் போகும்போது கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருக்கும். பேண்டேஜ் சுற்றப்பட்டவர்களும், மூக்கு கைகளில் பிளாஸ்டிக் குழாய் பொருத்தப்பட்டவர்களும், சிறுநீர் வடிகுழாய் பொருத்தப் பட்டவர்களும் படுத்திருப்பதைப் பார்க்கும்போது அந்நிய தேசத்துக்குள் பிரவேசித்தது போல் இருக்கும். பலவிதமான வாசனைகள் மூக்கைப் பதம் பார்த்து நிறைய பேரை வாந்தி எடுக்கவும் வைத்துவிடும். அதனாலெல்லாம் வார்டை விட்டு ஓடிவிட முடியாது. அங்கும் வகுப்புகள் நடக்கும். ஒரே நோயாளியை அக்குவேறு ஆணிவேறாக பரிசோதித்து கலந்துரையாடி நோய் கண்டறிவது அங்குதான். Case presentation பண்ணும் மூத்த மாணவர் நேர்ந்துவிட்ட ஆடு பாணியில் பரிதாபமாகக் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பார். திடீரென வார்டு மிக அமைதியாகிவிட்டால் தலைமை மருத்துவர் வார்டு ரவுண்ட்ஸ் வருகிறார் என்று அர்த்தம்.
எங்கள் சீஃப் டாக்டர். மரு. ஹரிஹரன் அவர்கள் இராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால் முறையான நெறிமுறைகள் யூனிட்டில் கனகச்சிதமாகப் பின்பற்றப்படும். உதவி பேராசிரியர்கள், சீனியர்கள் எல்லாம் கர்ம சிரத்தையுடன் அவர் பின்னே செல்லும் போது ஊர்வலம் மாதிரி இருக்கும். மூன்றாம் ஆண்டு அரை டிக்கெட்டுகள் நாங்களும் பின்னாடியே போவோம். ஒண்ணும் புரியாது, அவர் பேசுறது எதுவும் காதில் கேட்காது. ஆனாலும் அப்படி கிராண்ட் ரவுண்ட்ஸ் போவது மிகப் பெருமையாக இருக்கும் .ஒவ்வொரு நோயாளியின் முன்னேற்றம், பிரச்னைகள் எல்லாம் கேட்டு அதற்குரிய தீர்வுகளை மின்னல் வேகத்தில் சொல்லிக் கொண்டே செல்வார். பயிற்சி மருத்துவர் பின்னாடியே குறிப்பெடுத்துக் கொண்டு ஓடுவார்.
ஆண்கள் வார்டு, பெண்கள் வார்டு, ஆப்பரேஷன் வார்டு, தீக்காயங்கள் மற்றும் தொற்று வார்டு என எல்லா வார்டுக்கும் இந்தப் படை அப்படியே ஊர்வலம் போகும். கோமதிநாயகம் சார், சுப்பாராவ் சார், மாரிமுத்து சார், வைகுண்டராமன் சார் நால்வரும் ஒவ்வொரு வார்டுக்குப் பொறுப்பாக இருப்பார்கள். அதுபோக பெரிய மீசை வைத்த சீனியர் ரெஸிடண்ட் ஒருவரும் உண்டு, செல்லதுரைன்னு நினைக்கிறேன், பெயர் மறந்துவிட்டது. வாட்ட சாட்டமாக ஆறடி உயரத்தில் அய்யனார் மாதிரி இருப்பார். ஆசிரியர்களைவிட அவரிடம்தான் எங்களுக்கு அதிக பயம்.
வார்டு முடித்துவிட்டுதான் ஆப்பரேஷன் தியேட்டருக்குப் போகணும். முதல் முதலாக தியேட்டருக்கு போன அநுபவம் வித்தியாசமாக இருந்தது. என்னமோ நாமளே ஆப்பரேஷன் பண்ணப்போறமாதிரி பந்தாவாக உள்ளே போக நினைச்சால் ஒண்ணும் நடக்காது, குட்டுப்பட வேண்டியதுதான். தியேட்டர் நர்ஸ் மனசு வைச்சால்தான் உள்ளேயே போக முடியும். தியேட்டர் உடை பத்தாது என்று சொல்லி பாதி நாள் துரத்தி விட்டுடுவாங்க. மீறி உள்ளே போனாலும் அறுவை அரங்கில் ஒரு ஓரமா பூனைக்குட்டி மாதிரி நிக்கணும். ஏதாவது தெரியுதான்னு ஸ்டெஃபி கிராஃப் மாதிரி எம்பி எம்பி குதிச்சு பார்க்கணும். ஒண்ணும் தெரியாததால் போரடிச்சுப்போய் மெதுவா ஆப்பரேஷன் நாள் அன்று கட் அடிச்சுட்டு வேறு எங்கேயாவது சுத்தப் போயிடுவோம். கடைசி வருஷம் வரும்போது படிச்சுக்கலாம் என்ற தெனாவெட்டுதான்.
வைகுண்டராமன் சார் உருவத்தில் அதுக்கும் ஆப்பு வந்திடும். சார் குழந்தை நல அறுவை சிகிச்சை முடித்திருந்தாலும் அவர் துறையில் வேகன்ஸி இல்லாத்தால் RH Unit இல் கொஞ்ச நாள் இருந்தார். சும்மா சுத்திகிட்டு இருக்கிற எங்களை மாதிரி ஆட்களைக் காதைப்பிடிச்சு இழுக்காத குறையாக தொற்று நோய் வார்டுக்கு அழைச்சுட்டுப் போயிடுவார். எங்க க்ரூப்பில் இருந்தவங்க எல்லோரும் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவாங்களான்னு தெரியாது. ஆனால் தீக்காயமும், சீழ் பிடித்த புண்களும் எல்லோரும் கண்டிப்பாக குணப்படுத்த வேண்டிய கட்டாயம் வரும் என்று சொல்லி அதற்குரிய விளக்கங்களை அருமையாக சொல்லித் தருவார். சர்க்கரை நோயால் சீழ் பிடித்த பாதங்கள் குறித்து அவர் சொல்லிக் கொடுத்ததெல்லாம் பின் வந்த நாட்களில் எவ்வளவோ நோயாளிகளைக் குணப்படுத்த உதவியிருக்கிறது.
மாரிமுத்து சார் கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் அவ்வப்போது கோபப்படுவதும், எரிந்து விழுவதுமாக இருப்பார். வேறு எந்த யூனிட்டிலும் அவரை விரும்பி சேர்த்துக் கொள்ளாதபோதும் RH unit அவரைத் தாயுள்ளத்தோடு அரவணைத்து வைத்திருந்தது. சுப்பாராவ் சார் ஆங்கில நாவல்களை மாணாக்கர்களுடன் விமர்சனம் செய்து நல்ல சூழ்நிலையை உருவாக்கிவைத்திருப்பார். கோமதி நாயகம் சார் பற்றி நினைத்தாலே சிவப்பு நிற ஏப்ரன் கட்டிக் கொண்டு அறுவை அரங்கில் சுற்றிக் கொண்டிருப்பதுதான் நினைவுக்கு வருகிறது.
உதவி பேராசிரியர்களில் அவ்வப்போது மாறுதல் வந்தாலும் சீஃப் டாக்டர் ஹரிஹரன் சார்தான்.
அவர் சத்தமாகப் பேசி கேட்டதே இல்லை. மிக மென்மையாக பேசுவார். ஆனாலும் அவரது சொல்லுக்கு மூணாவது யூனிட்டே ஆடும். சக பேராசிரியர்களிடம் கண்ணியமாகவும் மரியாதையுடனும் பந்தா இல்லாமல் நடந்து கொள்வார். அவர்களின் சிகிச்சை முறையில் அத்து மீறி தலையிடுவதே இல்லை. சீனிராஜ் சாரும் தன்னைப் போலவே சென்னையிலிருந்து மாறுதலில் வந்திருந்த married bachelor என்பதால் அவரையும் மூணாவது யூனிட் டாக்டர் போலவே சேர்த்துக் கொள்ளும் அளவு எல்லாரிடமும் அன்புடன் பழகக் கூடியவர்.சமீபத்தில் அவரது 92 வது வயதில் மரணமடைந்தார் எனக் கேள்விப்பட்டு முன்னாள் மாணவர்கள் நிறையபேர் அவரது சிறப்புகள் குறித்து வாட்ஸ் அப்பில் எழுதியிருந்தார்கள். எனக்கும் எழுத நிறைய விஷயங்கள் இருந்தது. ஆனால் நேரமின்மையால் அதையே இந்த அலைக்குள் கொண்டுவந்துவிட்டேன்.
என் தம்பிக்கு திடீரென ஒட்டுக்குடல் வீக்கம் ஏற்பட்டு ஹைகிரவுண்டில் அட்மிட் செய்து அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு பண்ணிக் கொண்டிருந்தார்கள், மாலை 4 மணிக்குமேல் அறுவை சிகிச்சை என்று சொல்லியிருந்தார்கள். யாருமே எதிர்பாராத விதமாக ஹரிஹரன் சாரே வந்து அறுவை சிகிச்சை செய்தார், அனைவருக்கும் மிகுந்த ஆச்சரியம். எமர்ஜென்சி அறுவை சிகிச்சைக்கு சீஃப் டாக்டர்கள் வர மாட்டார்கள். நமது யூனிட் மாணவியின் தம்பி என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். என்னை யாரென்றுகூட அவருக்கு சரியாகத் தெரிந்திருக்காது. மூன்றாம் ஆண்டு மாணவர்கள் முக்கியமற்றவர்கள் என்ற தொனியில்தான் மொத்த மருத்துவமனையும் இருக்கும். ஆனாலும் தார்மீக பொறுப்புடன் வந்து தம்பிக்கு அறுவை சிகிச்சை செய்த பெருமைக்குரிய மனிதர். எங்கள் குடும்பத்தில் RH என்ற பெயருக்கு மிகுந்த மரியாதை உண்டு.
உயர்ந்த பதவியில் இருப்பவர்களைப் பற்றி பலவிதமான கருத்துக்களும் கிசுகிசுக்களும் உலவுவதுபோல் சார் பற்றியும் பலவிதமாக பேச்சுக்கள் உலவும். ஆனால் RH unit doctors க்கு மட்டும் அவர்மேல் உள்ள பற்றுதலும் மரியாதையும் என்றுமே குறைந்ததில்லை. மாணவியாக இருந்ததைக் காட்டிலும் house-surgeon ஆக அவர் யூனிட்டில் இருந்தபோது இன்னும் அதிக மரியாதை ஏற்பட்டுவிட்டது. யூனிட் பார்ட்டிக்காக முண்டந்துறை செல்ல ஏற்பாடானபோது நான் மட்டுமே பெண் என்பதால் தயங்கி நின்றபோது பத்திரமாக அழைத்து சென்று வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து ராணி மாதிரி பார்த்துக் கொண்டார்கள். எனது நெருங்கிய நண்பர்கள் தில்லை, தங்கராஜ் பாதுகாப்பு கவசங்களாக இருந்தார்கள்.
Physicians are always Conservative;
Surgeons are always aggressive.

அலை அலை-3

 அலை அலை-3

“மதம்” பிடிக்காத பருவம்.
மலர் பிடிக்காத வயதே இல்லை; காதல் வயப்படாத காளைப் பருவமே அரிது. ஆனால் “மதம்” பிடிக்காத மானிடர்கள் அரிதாகிக் கொண்டே போவது நிகழ்காலம். மதம்னா என்ன என்று கேட்டு, அவற்றைப் புறம் தள்ளிவிட்டுத் துள்ளித் திரிந்த காலங்கள் பழங்கணக்கு பார்ப்பது போல்தான் தெரிகிறது. நாங்கள் இந்துக்கள், அவர்கள் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் என்று பிரித்துப் பேசத் தெரிந்திராத பிள்ளைப் பருவம் கொண்ட அதிர்ஷ்டசாலிகள் நாங்கள்தான். பள்ளிப் பருவம் முடிக்கும் வரைகூட கிட்டத்தட்ட இந்த நிலைதான்.
பொட்டு வைப்பதும் , கோவிலுக்குப் போவதும் ஒரு சாரார்( இந்துக்கள்). பொட்டு வைக்காதவங்க வேதக்காரங்க (கிறிஸ்தவர்கள்) அல்லது பாய் வீட்டுக்காரங்க (முஸ்லீம்கள்), அவ்வளவுதான் எங்களுக்குத் தெரிந்த மத வேறுபாடு. பண்டிகைகளின்போது பலகாரங்கள் மாற்றி மாற்றி பறிமாறிக்கொள்ளப்படும். தீபாவளிப் பலகாரங்களின் சுவைக்கு ஆவலோடு காத்திருப்பதும், கிறிஸ்துமஸ் கேக்கிற்கு எதிர்பார்ப்போடு இருப்பதும், பாய்வீட்டு பிரியாணிக்கு பந்திபோட்டு காத்திருப்பதும் உள்ளூர் மக்களின் யதார்த்தமான பரிவர்த்தனைகள். அண்ணாச்சி என்று அழைத்து தோள்மேல் கைபோட்டுப் பேசும் இயல்பான உறவு முறைகள் அப்போது எல்லோருக்குள்ளும் இருந்தது.
இந்து மதத்தினரே பெரும்பான்மையாக இருந்த ஊர் ஆறுமுகநேரி. ஒவ்வொரு தெரு முனையிலும் ஒரு அம்மன் கோவிலோ பிள்ளையார் கோவிலோ சிவன் கோவிலோ இருக்கும். ஆனாலும் அதன் ஊடாகவே சிலுவை தாங்கிய சர்ச்சும் தனித்துவத்துடன் இருக்கும். ஊரின் முக்கிய சந்திப்பான பள்ளிவாசல் மசூதியின் அடையாளமாக ஊரின் நடுநாயகமாக இருக்கும். மார்கழி பஜனையும் நோன்பும், லெந்து கால பூஜைகளும், ரம்ஜான் நோன்பும் அதனதன் போக்கில் ஆரவாரமின்றி ஆன்மீகத்துடன் நடக்கும். இன்றைய காலகட்டத்தில்கூட விநாயகர் சிலைகள் காயல்பட்டிணம் ஊர்வழியே ஊர்வலமாகச் சென்று அங்குள்ள கடலில்தான் கரைக்கப்படுகின்றன.
“கண்ணாத்தா எங்க மாரியாத்தா” போன்ற பாடல்கள் லவுட் ஸ்பீக்கரில் பாடும்போது கேட்டு எப்படி மனப்பாடம் ஆகியிருக்குமோ அது போலவே “தந்தானைத் துதிப்போமே ” பாடலும் மனப்பாடம் ஆகியிருக்கும். மசூதியிலிருந்து ஒலிக்கும் அல்லாஹு அக்பரும் மனதை வருடிச் செல்லும். நாங்க உருண்டு புரண்ட மண்ணுக்கே தரம் பிரிக்கத்தெரியாது. திருச்செந்தூர் முருகனும், வீரபாண்டிய பட்டிணம் மேரி மாதாவும், காயல்பட்டிணம் மசூதிகளும் இரண்டு மூன்று கி.மீ.கள் இடைவெளியில் அடுத்தடுத்து இருக்கும். மூன்று ஊர்களுமே கடற்கரைக் கிராமங்கள். திருச்செந்தூர் கோபுரம்,மாதா கோவிலின் கோபுரம், மசூதியின் கோபுரம் எல்லாமே கடற்கரையின் பின்னணியில் கம்பீரமாக எழுந்து நின்று கண்ணைக் கவருமே தவிர ஒருநாளும் கலவரத்திற்கு வித்திட்டதில்லை. மூன்று ஊரின் குழந்தைகளும் கலந்து பயின்ற பள்ளிகளிலும் எந்த பிரிவினைகளும் போதிக்கப்படவில்லை.
மத நல்லிணக்கத்துக்கு சாட்சியாக உருவாக்கப்பட்டதுதான் நாங்கள் படித்த பள்ளி- “காயல்பட்டிணம் ஆறுமுகநேரி உயர்நிலைப் பள்ளி”. இரண்டு ஊர் குழந்தைகளும் சமமாகப் படித்து முன்னேறவேண்டும் என்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின் தங்கிய எண்ணற்ற மாணவர்கள் இன்று சமுதாயத்தில் மிகப்பெரிய பதவிகளை வகித்து ஊருக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்திருக்கிறோம். அப்போதெல்லாம் மதச்சார்பின்மை என்பது எல்லோருக்குள்ளும் இயல்பாகவே இருந்தது. அவையெல்லாம் தொலைந்துபோய் மதம் என்ற மதம் எல்லோரையும் எப்போது பிடித்தது என்பதே புரியவில்லை.
இப்ராஹிம் சார் , குழைக்காதன் சார், அந்தோணிமுத்து சார் என்ற பெயர்களே எங்கள் பள்ளியின் பெருமையைச் சொல்லும். எல்லாம் ஆண் வாத்தியார் பெயர்களே இருக்குதேன்னு தோணலாம். அலெக்ஸ் டீச்சர், ஏஞ்சலா டீச்சர், ஜெய ஜானகி டீச்சர் என்று ஏகப்பட்ட லிஸ்ட் இருக்குது. இப்ராஹிம் சார் கிட்டே கணக்கு கற்றுக் கொள்வது லட்டு சாப்பிடுவது மாதிரி. கணக்கை கல்கண்டு சாப்பிடுவதுபோல் இனிப்பாக்கியவர். நாங்களெல்லாம் அவர்மீது மாறா அன்பு கொண்டவர்கள், அவரோட அபிமான மாணவர்கள். கணக்கில் வீக் ஆக இருக்கும் மாணவர்களுக்கு எங்களை வைத்தே சாயங்காலம் சிறப்பு பயிற்சி அளிப்பார். ஆனால் தப்பு போட்டால் முட்டுக்குக் கீழே உரிச்சு எடுத்திடுவார். அந்த கால கட்டத்தில் ஆசிரியரிடம் அடி வாங்குவதும் சாதாரண விஷயம். இப்போ மாதிரி பெற்றோர்கள் போர்க்கொடி தூக்குவது எல்லாம் கிடையாது. ஒரு மாணவனைத் தண்டிக்க நேர்ந்தால் பெற்றோர்கள் அடித்த ஆசிரியரின் மதத்தை முன்னிறுத்தி சண்டை போடவும் வருவதில்லை.
குழைக்காதன் சாரின் மாணவியாக இருந்ததால்தான் இன்றுவரை பிழையில்லாமல் தமிழில் எழுதுகிறேன். தமிழை சுவாசிக்க வைத்தவர். ”எங்கே அவள்’ என்ற சினிமா பாடலை “எங்கே அவல்” என்று சாப்பாட்டு பட்ஷணமாக்கிய தமிழ்ப் ‘புலவர்’களுக்கும் சலிப்பின்றி தமிழை போதிப்பதில் சாருக்கு இணையே கிடையாது. தப்பு போடும்போது குனிய வைத்து அடிக்க கை ஓங்குவதைப் பார்த்தால் முதுகில் டின் கட்டிவிடுவது போல் தோன்றும். ஆனால் கை கீழே இறங்கும்போது தடவிக் கொடுப்பதுபோல் போய்விடுவார். எங்களுக்கெல்லாம் பிரியமான “பெரியப்பா”.
ஆங்கிலத்துக்கு அந்தோணிமுத்து சார்தான். அவரது உச்சரிப்பும் வகுப்பெடுக்கும் நேர்த்தியும் கிராமப்புற மாணவர்களைக் கூட ஆங்கிலம் இலகுவாக படிக்கும்படி செய்துவிடும். இதே வகையில் தான் அனைத்து ஆசிரியர்களும் எங்களை வழி நடத்தினார்கள், எங்களுக்கு சம தர்மத்தை மறைமுகமாகப் போதித்தார்கள், நாங்களும் சமுதாய உணர்வுமிக்க மாணவர்களாக வெளி வந்தோம். இன்றைய தலைமுறையின் உணர்வுகளும் வாழ்வியலும் மதங்களை முன்னிறுத்தியே செதுக்கப்படுவதுபோன்ற தோற்றம் கவலை அளிப்பதாக உள்ளது. ஆன்மீகமும் அரசியலும் கைகோர்த்துக்கொண்டு அவர்களின் தலைகளைக் கொட்டிக் கொண்டே இருக்கிறது.
நெற்றி நிறைய பூசப்படும் விபூதியும், கழுத்தில் அணியப்படும் சிலுவையும், தலையை மறைத்த முக்காடுகளும் அன்றும் இன்றும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. அவரவர் வழிபாட்டின் அடையாளங்களாக இருந்தவை இன்று பிரிவினையை வலுப்படுத்தும் ஆயுதங்களாக மாற்றப்பட்டுக் கொண்டு இருப்பது காலத்தின் கோலம்.
நாற்பது வருடங்களுக்கு முன்பு “அலைகள் ஓய்வதில்லை” படம் பார்த்துவிட்டு வந்தபோது என்ன உணர்வு இருந்ததோ அதே நிலைமைதான் இன்னும் இருக்கிறது என்பது அயர்ச்சியாக இருக்கிறது. அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகளுக்குள் மதம் என்ற வார்த்தையே இருக்காது கலப்புத் திருமணங்கள் பரவலாக நடந்து பெரிய சமுதாயப் புரட்சியே நடக்கும் என்று நினைத்தோம். ஆனால் முன்பிருந்ததைவிட மதத்தின் பேரால் வன்முறைகள்தான் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
மக்களுக்கான மதம் மக்களை மதம் கொள்ள வைக்காமல் இருக்கட்டும்.
All reactions:
Sivasubbu Kannan Meenakshisundaram, Baskara Pandian and 48 others
21 comments
4 shares
Like
Comment
Share