அலை-85
அலை-85
நட்பின்றி யாருமில்லை நண்பர்களின்றி நானில்லை
அலை-85
அலை-84
அலை-83
அலை-82
அலை- 81
அலை-79
அலை-78
“அப்பாவின் நினைவுகள்”
பெற்றோர்களை நினைக்க சிறப்பு தினம் தேவையில்லை. தினம் தினம் நம்மைக் கடந்து செல்லும் அவர்களின் நினைவு. ஆனாலும் அப்பாவின் நினைவு நாளான இன்று அப்பாவின் உருவம் மனதில் நிழலாடிக் கொண்டே இருக்கிறது. எப்பவுமே வெள்ளை நிற ஆடைதான். நான்கு முழ வேட்டியும் ஜிப்பா ஸ்டைலில் அரைக் கை சட்டையும்தான் நிரந்தர ஆடை. கைலி கட்டியோ கலர் சட்டை போட்டோ பார்த்ததில்லை.
உயரமான மெலிந்த தேகமும் சீரான நடையும் வெள்ளை உடையும் எந்தக் கூட்டத்திலும் அப்பாவைத் தனியாகக் காட்டும். புறங்கை கட்டிக்கொண்டு நடப்பதும் தனித் தன்மைதான். நெற்றியில் மகுடம் வைத்தது போன்று எலும்பு புடைத்து இருப்பது அந்தக் கால கம்யூனிஸ்ட்டுக்குத் திலகம் வைத்தது போல் இருக்கும். அதிர்ந்து பேசியதில்லை, எங்களை அடித்தும் வளர்க்கவில்லை. ஆனாலும் அப்பா என்றால் மரியாதை கலந்த பயம் இருந்தது. அப்பாவின் அமைதியான தீர்க்கமான நடவடிக்கைகள் நம்மைப் புடம் போடுவதாக இருக்குமே தவிர நம்மைத் தர்ம சங்கடப் படுத்துவதாக இருக்காது.
ஒரு நாள் நானும் எழிலும் சீத்தாலக்ஷ்மி ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருக்கும் போது எதேச்சையாக நோயாளி ஒருவரைப் பார்க்க வந்த அப்பாவும் அதே இடத்துக்குக் காஃபி குடிக்க வந்தார்கள். எங்கள் இருவரையும் பார்த்தும் எந்தவித சலனமும் இல்லாமல் காஃபி அருந்திவிட்டு சென்றுவிட்டார்கள். அதன்பிறகு விடுமுறைக்கு வீட்டுக்கு சென்றபோதுகூட அது குறித்து எதுவுமே கேட்கவில்லை. நானாகச் சோல்ல வேண்டிய தருணம் வந்தபோது அப்பா மறைந்துவிட்டார்கள்.
நான்காவது வருட பரீட்சைக்கு சரியாக ஒருவாரம் இருக்கும் போது திடீரென வீட்டிலிருந்து ஃபோன் வந்தது. அப்பாவிற்கு உடம்பு சீரியஸாக இருப்பதால் உடனடியாகக் கிளம்பி வருமாறு சொன்னார்கள். அந்த சமயத்தில் எழில் நண்பர் எபிநேசர் விடுதிக்கு ஏதோ வேலையாக வந்திருந்தார்கள். ஊருக்குச் செல்ல கையில் பணம்கூட இல்லை. எபிதான் நண்பர் ஒருவரிடமிருந்து பணம் ஏற்பாடு செய்து தந்தார். என்னை பஸ் ஏற்றிவிட ஹைகிரவுண்டு பேருந்து நிறுத்தம் வரை துணையாக வந்தார்.
அப்பாவிற்கு ஒன்றும் சீரியஸாக இருக்காது, தேவைப்பட்டால் இங்கேயே கூட்டி வந்துவிடு என ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். நான் ஒரே வரியில் விளக்கம் சொன்னேன். எங்கள் வீட்டில் யாருக்கு சீரியஸ் என்றாலும் தகவல் சொல்ல மாட்டார்கள். அப்பாவிற்கு ஏதோ ஆகிவிட்டதால்தான் எனக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்கள் என சொல்லும்போதே பெரிதாக அழ ஆரம்பித்துவிட்டேன்.
எனக்கு அவ்வளவு சீக்கிரம் கண்ணீரே வராது. சினிமாவில் வரும் சில நெகிழ்ச்சியான காட்சிகளில் கண்ணீர் வரும்போதுகூட மற்றவர்களுக்குத் தெரியாமல் ரகசியமாகத் துடைத்துக் கொள்வேன். பிறர் முன்னாடி அழுவது பிடிக்கவே பிடிக்காது. நான் அழுவதைப் பார்த்ததும் நிலைமையைப் புரிந்துகொண்ட எபி தானும் என்கூட வருவதாகச் சொல்லி பணம் எடுக்க C-17 அறைக்குச் சென்றார்கள். ஆனால் அதுவரை தாமதிக்க முடியாததால் அடுத்து வந்த பேருந்தில் ஏறி தனியாகவே கிளம்பிவிட்டேன்.
வாழ்க்கையில் மறக்க முடியாத சில தருணங்களில் ஒன்றான அப்பாவின் மரணம். பேருந்தில் ஏறிய பிறகும் என்னைக் கதறி அழவைத்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் அப்பாவைப் படுக்க வைத்திருந்த கோலம் ஆண்டுகள் உருண்டோடிய பிறகும் அழியாக் காட்சி. நயினார் அண்ணன் வருவதற்காகக் காத்திருந்தார்கள். அண்ணன் கொஞ்சம் தொலைவான ஊரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அங்கிருந்து பயணம் செய்து வர அதிக நேரமாகிவிட்டது.
ஒவ்வொருவராக அழுது அழுது மயக்கமாவதும், அவர்களைத் தெளிய வைப்பதுமாக அலங்கோலப் பட்டுக் கிடந்தது வீடு. நயினார் அண்ணன் வந்ததும் வாசல் நிலைக்காலைப் பிடித்துக் கொண்டு அப்பாவின் முகத்தைப் பார்த்து தாரை தாரையாகக் கண்ணீர் விட்டான்.
அப்பாவின் மரணம் எதிர் பாராத ஒன்று. எப்போதும் போல் காலைகடன்களுக்காக பனங்காடு போய்விட்டு வீட்டில் வந்து கால் கை அலம்பிவிட்டு வீட்டுக்குள் வரும்போது சட்டென்று கீழே விழுந்து அடுத்த நிமிடம் உயிர் பிரிந்துவிட்டதாம். மருத்துவம் படித்த பிறகு திடீர் மரணத்துக்கு ஆயிரம் விளக்கங்கள் தெரிந்து கொண்டாலும் அன்று அப்பாவின் மரணம் தாங்கிக் கொள்ள முடியாத இழப்பாகிவிட்டது.
இறந்தவீட்டுக்கு வந்தவர்கள் எல்லோருக்கும் நான் காட்சிப் பொருளாகிப் போனேன். இந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வைக்காமல் போய்விட்டாரே என்று அங்கலாய்த்துக் கொண்ட கூட்டமும் இருந்தது. பேரப்பிள்ளைகள் நெய்ப்பந்தம் பிடிக்க விமரிசையாக இறுதி ஊர்வலம் சென்ற பிறகுதான் சுற்றி இருந்தவர்களைப் பார்க்க முடிந்தது. வகுப்புத் தோழர்களும் எழில் மற்றும் நண்பர்களும் ஆங்காங்கே நின்றிருந்தார்கள். அப்பாவின் நண்பர்களும் நலம் விரும்பிகளும் உறவினர்களும் கூடியிருந்ததில் சந்தைகடை வளாகமே நிரம்பி வழிந்தது.
அப்பாவின் திடீர் மரணத்தால் விட்ட குறை தொட்ட குறையாக செய்ய முடியாத விஷயங்கள் அநேகம் உண்டு. வீட்டிலேயே ஒரு டிஸ்பென்சரி மாதிரி வைக்க வேண்டும் என்று அம்மாவிடம் சொல்லியிருந்தார்களாம். அதை நிறைவேற்ற முடியவில்லை. எழில் பற்றி சொல்லி அப்பாவின் ஒப்புதல் பெற முடியாமல் போய்விட்டது. அப்பாவுக்கு சரியான மருத்துவம் பார்க்க முடியாததும் மனக்குறையாகவே இருக்கிறது.
அப்பாவுக்கு முழங்காலில் படை போன்ற தோல்வியாதி இருந்தது. அப்பப்போ அதிகமாகி நீர்போல் வடியும். காய்ந்த பிறகு அந்த இடம் வெண் தேமல் மாதிரி மாறிவிடும். நான் மூன்றாம் வருடம் சென்ற பிறகு தோல் மருத்துவ பிரிவில் ஆலோசனை பெற்று வெண்தேமல் மறையும் களிம்புகள் வாங்கிக் கொடுத்தேன் . ஆனால் முறைப்படி வைத்தியம் செய்யும் முன் காலம் கடந்துவிட்டது.
அப்பாவின் முத்திரைகள் எங்கள் வாழ்க்கையில் எத்தனையோ தருணங்களில் இன்றளவும் உதவிக் கொண்டிருக்கிறது. தலைமைப் பண்பு, போராட்ட குணம், உதவி செய்யும் பாங்கு எல்லாமே அப்பாவிடமிருந்து வந்தவைகள்தான். அவையத்து முந்தியிருக்கச் செய்த அப்பாவின் ஆளுமையை அடுத்த தலைமுறைக்கு ஏந்திச் செல்லும் கருவிகள் நாங்கள்.
ஐநூற்று முத்துப் பிள்ளையை அறியாத ஆறுமுகநேரிக்காரர்கள் அன்று இல்லை. அந்த ஆலமரத்தின் விழுதுகள் உலகம் முழுவதும் இன்று.
முத்துக்கள் குடும்பத்தின் முதல்முத்து
அனைத்து வாரிசுகளுக்கும் அடித்தளமாய் ஞானமாய் விளங்கும்
அப்பாவின் நினைவுகள் நம்மை வழிநடத்தும்
அலை-77
“மருத்துவம் பேசுவோம்”
நம் அன்றாட வாழ்வில் அடிக்கடி பேசப்படும் பொருள் உடல் நலமாகத்தான் இருக்கும். இயல்புக்கு மாறாக சின்னத் தலைவலியோ காய்ச்சலோ வந்தாலும்கூட அதுகுறித்தே அன்று முழுவதும் மனது சுற்றித் திரியும். “If health is lost everything is lost” என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். உடல்நலம் பேணாத மனிதர்களே இல்லை எனலாம்.
ஆனால் அதற்குத் தேவையான முயற்சிகளை எல்லோராலும் கடைப்பிடிக்க முடிகிறதா என்பதும் கேள்விக்குறிதான். பொருளாதார சிக்கல்கள், பருவநிலை மாற்றங்கள், அறியாமை, கிருமிகள், கட்டிகள், வயதுமூப்பு என எண்ணற்ற காரணிகள் நம் நலத்தைச் சீண்டிப் பார்ப்பவையாகவே உள்ளன. இயற்கையாக வரும் தொந்தரவுகளைவிட நாமே வரவழைத்துக் கொள்ளும் வியாதிகளும் அதிகம் உண்டு.
அறுபது வயதைக் கடந்துவிட்டேன், ஆனால் இதுவரைக்கும் ஆஸ்பத்திரிக்கே போனதில்லை, மருந்து மாத்திரைகள் சாப்பிட்டதே இல்லை எனப் பெருமைப்பட்டுக் கொள்ளும் மனிதர்கள்கூட சிறு சிறு உடல்நலக் கோளாறுகளை எதிர் கொண்டிருப்பார்கள். ஆனால் அதைத் தாங்கும் வலிமை அவர்களுக்கு அதிகம் இருந்திருக்கும். சளி பிடித்தால் வைத்தியம் பார்த்தால் ஏழு நாட்களில் சரியாகிவிடும், எந்த வைத்தியமும் பார்க்காமல் விட்டால் ஒருவாரத்தில் சரியாகிவிடும் என்று கேலியாகப் பேசுவது கூட உண்டு.
இத்தைகைய சூழலில் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு எப்போதும் ஏக கிராக்கிதான். அதிலும் எழுபதுகளில் டாக்டர் என்றால் கடவுளுக்கு நிகராக மதிக்கப்பட்டது உண்மைதான். எங்க குடும்பத்தில் நான் தான் முதல் டாக்டர். அறிவிலும் மேதாவித்தனத்திலும் என்னை விட சிறந்து விளங்கிய அண்ணனோ தம்பியோ மருத்துவம் படிப்பதில் அதிக ஈடுபாடு காட்டவில்லை.
ஏற்கனவே வீட்டுக்குக் கடைக்குட்டி என்பதால் கிடைத்த சலுகைகளுடன் படிப்பும் சேர்ந்து கொண்டதால் ரொம்ப செல்லமாகிப் போனேன்.
முதல்வருடம் கல்லூரியில் சேர்ந்ததிலிருந்தே பெரிய டாக்டராக நினைத்துக்கொண்டு மருத்துவ ஆலோசனைகள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆஸ்பத்திரி வாசலுக்குப் போகவே இன்னும் ரெண்டு வருடம் ஆகும் என்பதைச் சொல்லி மனசங்கடத்துக்கு ஆளாக்க வேண்டாம் என்று அவ்வப்போது தெரிந்த ஆலோசனைகளைச் சொல்லி சமாளித்துக் கொள்ளுவேன்.
ஊரிலிருந்து அவ்வப்போது வைத்தியத்துக்கு வரும் உறவினர்களைப் பொறுப்பாக அழைத்துச் சென்று உரிய மருத்துவர்களிடம் காண்பித்து செய்யும் உதவிகளே குடும்பத்தில் பெருமையாகப் பேசப்பட்டது.
வீட்டுக்கு வருபவர்களிடம் என்னை அறிமுகப்படுத்துவதே ‘ஹைகிரவுண்ட்டில் டாக்டருக்குப் படிக்கிறாள்’ என்பதுதான். தாணு என்று உரிமையாகக் கூப்பிட்ட வகுப்புத் தோழர்கள்கூட ”என்ன டாக்டர் செளக்கியமா” என்று கூப்பிடத்தொடங்கிய காலம் தொட்டு டாக்டர் என்பதே முதல் அடையாளமாகிப்போனது. முதலில் கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும் போகப்போகப் பழகிப் போனது.
மூன்றாவது வருடம் வந்த பிறகு நோய்களும் மருந்துகளும் பரிச்சியம் ஆகத் தொடங்கிவிட்டது. விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்போது சின்னச் சின நோவுகளுக்கு வைத்தியம் செய்துகொள்ள ரெண்டுபேராவது வந்துவிடுவார்கள். உள்ளுக்குள் உதறலாக இருந்தாலும் பந்தாவாக கேள்விகள் கேட்டு அதற்கு ஒரு தீர்வும் சொல்லிக் கொள்ளுவேன். கொஞ்சம் வித்தியாசமான அறிகுறிகள் இருந்தால் ஹைகிரவுண்டுக்கு வரச் சொல்லி முதுநிலை சிறப்பு மருத்துவர்களிடம் காட்டி சரி செய்ய வைப்பேன்.
எங்க வீட்டில் எல்லோருக்கும் என்மேல் ரொம்ப நம்பிக்கை. நான் என்ன சொன்னாலும் அப்படியே கடைப்பிடித்து விடுவார்கள். விதண்டா வாதமோ நொரண்டு பேச்சுகளோ இருக்காது. நான் மூன்றாம் வருடம் படித்தபோது தம்பி நாராயணன் ஷங்கர் நகரில் படித்துக் கொண்டிருந்தான். திடீரென வயிற்று வலி என்றவுடன் என்னிடம் வந்துவிட்டான்.
நான் மூன்றாவது யூனிட்டில் ஹரிகரன் சார் யூனிட்டில் படித்துக் கொண்டிருந்தேன்.
தம்பிக்கு அப்பெண்டிசைட்டிஸ் என்று கண்டறியப்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியிருந்தது. வீட்டில் அதுவரை யாருக்கும் அறுவை சிகிச்சை என்ற பேச்சே இருந்ததில்லை. கட்டியோ குட்டியோ எதற்காகவும் யார் மீதும் கத்தி வைத்ததில்லை. அக்கா மதினி எல்லோருக்கும் சுகப்பிரசவம்தான் தம்பிக்குத்தான் முதல் அறுவை சிகிச்சை. எல்லோரும் ரொம்ப பயந்து போயிருந்தார்கள்.
எங்கள் பயம் புரிந்தமாதிரி ஹரிஹரன் சாரே அறுவை சிகிச்சை செய்ய வருவதாகச் சொல்லிவிட்டார்.
மூன்றாமாண்டு மாணவியின் சகோதரனுக்கு அறுவை சிகிச்சை செய்ய துறைத்தலைவராக இருந்த ஹரிஹரன் சாரே அந்த அகால நேரத்தில் வந்தது குடும்பத்தினர் அனைவரையும் நிம்மதிப் படுத்தியது. ஆப்பரேஷன் சுமுகமாக நடந்து தம்பியை வார்டுக்குக் கூட்டி வந்த பிறகுதான் எல்லோர் முகத்திலும் சிரிப்பே வந்தது. பெரிய டாக்டரே வந்து ஆப்பரேஷன் செய்தார் என்று வருவோர் போவோரிடமெல்லாம் பெருமையாகப் பேசிக் கொண்டார்கள்.
அறுவை சிகிச்சைக்குப் பின் வைத்தியம் பார்க்கும் வார்டில் துணைக்கு ஆண்களே இருக்க வேண்டும். ஆனாலும் நான் உடனிருந்து பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்ன பின்பும் கூட அப்பா அந்த வார்டின் வெளிப்புற வெராண்டாவில் தரையில் படுத்திருந்த காட்சி நிழற்படமாக இன்றும் நினைவில் ஓடுகிறது.
நாற்பது வருடங்களுக்கு முன்பு ஒட்டுக்குடல் அறுவை சிகிச்சைக்கு பெரிய தையல் போடும் வழக்கம் இருந்ததால் ஒரு வாரத்துக்குத் தம்பி மருத்துவ மனையிலேயே இருந்தான்.
எங்க யூனிட் நோயாளி என்பதால் நானும் அவன் கூடவே இருந்து பார்த்துக் கொள்ளும் வசதி கிடைத்தது. விசாரிக்க வரும் சொந்தக்காரங்க கூட்டம் கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் டாக்டர் தம்பி என்பதால் யாரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவில்லை.
ஆப்பரேஷன் பண்ணிய டாக்டரைவிட துணைக்கு நின்ற தாணு ஹீரோயின் ஆகிவிட்டாள். இனிமேல் என்ன நோய் வந்தாலும் நேரே பஸ் பிடிச்சு ஹைகிரவுண்டு வந்துவிட வேண்டியதுதான் என நிறைய பேர் அன்னைக்கே முடிவு பண்ணிட்டாங்க. படித்து முடிக்கும் வரை அது தொடர்கதையாகத்தான் இருந்தது.
மருத்துவத்தை உன்னதமான தொழில் (Noble Profession) என்று அழைப்பதின் மகத்துவத்தை அப்போதிருந்தே உணர முடிந்தது.
அலை-76