Friday, February 26, 2021

அலை-38

 அலை-38

“கனவுத் தொழிற்சாலை”- சுஜாதாவின் நாவல்.எங்களுக்கெல்லாம் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி அதன் சாயல். மருத்துவராகும் கனவுகளுடன் முதல் அடி எடுத்து வைத்த கல்விக்கூடம். நினைவலைகளில் நெடுந்தூரம் அழைத்துச் செல்லப்போகும் இனிய சொந்தம். ஆனால் கனவல்ல நிஜம்.


மருத்துவப்படிப்பிற்குத் தேர்வாகி, திருநெல்வேலியிலேயே இடம் கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.  இரண்டே பல்கலைக் கழகங்கள்தான் அப்போது உண்டு. மெட்ராஸ் யுனிவர்சிடி மற்றும் மதுரை காமராஜர் யுனிவர்சிடி. மதுரையும் திருநெல்வேலியும் மட்டுமே மதுரை காமராஜரில் உண்டு. மற்ற கல்லூரிகளெல்லாம் மெட்ராஸ் யுனிவர்சிடியில் இருந்தது. எத்தனை கல்லூரிகள் அதில் உண்டு, எந்தெந்த ஊரில் இருந்தது என்பதெல்லாம் கூட எனக்கு அப்போது சரிவரத் தெரியாது

அட்மிஷன் பெற கல்லூரியில் நுழைந்த முதல் நாள். ரொம்ப பில்ட் அப் எல்லாம் கொடுத்து சொல்ற அளவுக்கு பெருசா எதுவும் நடக்கலை. ஆனால் பலதரப்பட்ட உணர்வுக் கலவைகளைத் தந்த நாள்னு வேணா சொல்லலாம். அப்பாவும் சிவகாமி அண்ணனும் உடன் வந்ததாக நினைவிருக்கிறது. திருநெல்வேலியிலிருந்து டவுண் பஸ் பிடித்து ஹைகிரவுண்டு செல்ல வேண்டும் என்று சொன்னார்கள். பயணச்சீட்டு முப்பது காசுதான். அடிக்கடி வீட்டில் அய்க்கிரவுண்டு ஆஸ்பத்திரி பற்றி சொல்லக் கேட்டிருந்தாலும் அந்த ஹைகிரவுண்டு (High Ground)க்குத்தான் போகப்போகிறோம் என்று தெரிந்திருக்கவில்லை. 


பேருந்திலிருந்து இறங்கி நின்றதும் கொஞ்சம் சுருதி குறைந்துவிட்டது. ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஸ் ஸ்டாப் கூட இதைவிட கலகலப்பாக இருக்கும் என்று சொல்லுமளவுக்கு அமைதியாக இருந்தது. இறங்கின இடத்திலோ முள்ளு மரம். அடுத்ததாக கடைகள் வரிசைகட்டி நின்றது. அதில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தவர்கள் நம்மை முறைப்பது போல் இருந்தது. அண்ணன் அவர்களை நோக்கி விலாசம் கேட்கச் சென்றான். எதிரே மருத்துவமனை வளாகமும் அமைதியாகவே தெரிந்தது. (அது மருத்துவமனையின் பின்பக்கம் என்பது பின்நாட்களில் தெரிந்தது).


 இடம் மாறி வந்துவிட்டோமோ என்ற குழப்பமும் வந்தது. ஆனால் எதிர் பஸ் ஸ்டாண்டில் ஒரு மருத்துவக்கல்லூரி மாணவி நின்று கொண்டிருந்தார். இடது கையில் வெள்ளை கோட் தொங்கவிட்டுக் கொண்டு காதுகளில் வளையம் ஆடிக்கொண்டிருக்க பஸ் வரும் திசையை நோக்கிக் கொண்டிருந்தார். நான் அவங்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.நானும் அதேமாதிரி கையில் கோட் தொங்விடப் போகும் நாளை பாக்யராஜ் பாணியில் கனவு கண்டேன். அதற்குள் விலாசம் விசாரித்துவிட்டு வந்த அண்ணன், மருத்துவமனைக்கு எதிரில் தெரிந்த சாலையில் செல்ல வேண்டுமென்று சொன்னான். கல்லூரி எதிர் பக்கத்தில்தான் இருக்கிறதாம். காட்டுப்பாதை மாதிரி இருந்துச்சு. என்னவோ டாக்டருக்குப் படிக்கப் போறோம்ன்னு பந்தாவா வந்தால்,ஆள் அரவமில்லாத அத்துவானக் காட்டுக்குள்ளே போறோமேன்னு மனசுக்குள்ளே சின்ன கவலை வந்தது. 


கொஞ்ச தூரம் போனதுமே எதிரில் பிரம்மாண்டமான மருத்துவக் கல்லூரி தெரிந்தது. அதுக்குப் பிறகுதான் நிம்மதிப் பெருமூச்சே வந்துச்சு.

கல்லூரிக்குப் பக்கத்துலே வந்த பிறகும் பெரிய வாயில்களோ முகப்புகளோ இல்லாமல் ஜல்லடை வைத்த, கம்பி வேலியிட்ட தாழ்வாரங்கள் மட்டுமே தெரிந்தது. நாங்க நின்ற இடத்தில் சைக்கிள்கள் நிப்பாட்டும் இடம் மட்டுமே இருந்தது. எப்படியும் அங்கிருந்து உள் செல்லும் வழி இருக்கத்தானே செய்யும் என்று தேடி சின்ன நுழைவாயில்  ஒன்றைக் கண்டுபிடித்தோம். உள்ளே போனதும் குறுக்கும் நெடுக்குமாக தாழ்வாரங்கள் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அலுவலக அறை எங்கிருக்கிறது என்பதைக்காட்ட எந்த குறியீடுகளும் இல்லை. விசாரிக்கலாம் என்று பார்த்தால் சுடுகுஞ்சு கூட அங்கே இல்லை. ஒருவழியா சுத்தி சுத்தி நடந்து அலுவலகத்தை கண்டு பிடித்தோம்.


நம்மளைப் போலவே  பீஸ் கட்ட வந்த கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கும் என்று பார்த்தால் அப்படி ஒன்றும் தள்ளு முள்ளு இல்லை. மொத்தமே 75 பேர்கள்தான் எங்கள் வகுப்பில் என்பதால் தனித்தனியே வந்து கட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். அங்கங்கே திரிந்து கொண்டிருந்த்வர்களும், வகுப்புத் தோழர்களா சீனியர்களா என்றும் தெரியவில்லை. அதனால் யாரிடமும் அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் ஓரமாக நின்று கொண்டேன். அண்ணனும் அப்பாவும் சேர்ந்து பணம் கட்டி ரசீதுகளெல்லாம் வாங்க சென்றுவிட்டார்கள். எனக்கு SSLC தேர்வில் அதிக மார்க்குகள் எடுத்த quota வில், ஏற்கனவே மெரிட் ஸ்காலர்ஷிப் sanction ஆகியிருந்தது. அது சம்பந்தமான விவரங்களை சரிபார்த்து பீஸ் கட்ட அதிக நேரம் எடுத்துக் கொண்டது. அண்ணனும் அப்பாவுமே எல்லாவற்றையும் சரி பார்த்து ஒழுங்கு பண்ணிக்கொண்டதால் நான் தேமேன்னு வெராண்டாவில் நின்று கொண்டேன்.


அலுவலக அறை முன்னே திடீரென கையில் கோட் சகிதம் ஒரு நபர் வந்தார். நேராக என்னிடமே வந்து முதலாம் ஆண்டா என விசாரித்துவிட்டு பெயர் கேட்டார். எனது பெயர் ’தாணு’ என்பதால் அது ஆண்பிள்ளை பெயராச்சே என்று எதோ கேள்விகளெல்லாம் கேட்டார். அப்போது ‘ராகிங்’ என்ற சொல் ரொம்ப பிரபலமெல்லாம் கிடையாது. அதுவும், என் போன்ற கிராமத்து மாணவிகளுக்கு பெரிய விஷயமாகவும் தெரிந்திருக்கவில்லை. எனவே அவர் கேட்ட கேள்விகளுக்கு சாதாரணமாகவே பதில் சொல்லிவிட்டேன். கடைசியாக என் பெயர் என்ன தெரியுமான்னு கேட்டுவிட்டு அவரே பதிலையும் சொன்னார் ’‘பச்சை முத்துராமலிங்கம்” என்று. நம்ம பேர் மாதிரியே விநோதமாக இருக்குதேன்னு நெனைச்சுகிட்டேன். மருத்துவக் கல்லூரியின் முதல் சந்திப்பு..


பணம் கட்டி அனுமதிச் சீட்டெல்லாம் வாங்கிய பிறகு கல்லூரியின் தாழ்வாரங்களை நட.ந்து நடந்து செருப்புதேய அளவெடுத்தோம். எங்கேயுமே அரவமற்று அமைதியாக இருந்தது, குடிபோன வீடு மாதிரி. அப்புறமாகத் தெரிந்து கொண்டேன், மதிய வகுப்புகள்தான் இங்கு நடக்கும் காலையில் மருத்துவமனையில் நடக்கும் என்று. எது எப்படியானால் என்ன, நமக்கு வனவாசம்தான் என்று மனதுக்குள் சின்ன சோகம் . ஒரு வழியாக கல்லூரியின் பிரம்மாண்டமான முகப்பு வாசல்களைக் கண்டு கொண்டோம். கிழக்கில் ஒன்று மேற்கில் ஒன்று இரண்டு வாயில்கள் இருந்தாலும் யாரும் அதை அதிகமாக உபயோகிப்பதில்லை.


அடுத்ததாக பெண்கள் விடுதியைப் பார்க்க சென்றோம். கல்லூரிக்குப் பின்புறமே இருந்தது.கல்லூரியில் சேர வரும் நாளன்று அறை ஒதுக்கித் தருவதாகச் சொன்னார்கள். APC கல்லூரி விடுதியையே பார்த்துட்டு வந்தவளுக்கு இந்த விடுதி சூப்பராகவே தெரிந்தது. சும்மா சொல்லக்கூடாது விடுதியின் பெயர் "House of ANGELS".

அவ்வளவு நேரம் மனதுக்குள் நெருடிக்கொண்டிருந்த கவலைகள் குழப்பங்களெல்லாம் விலகிப் போய் தேவதையைப் போல் வீடுதிரும்பினேன். கல்லூரியைப் பார்த்து கலங்கியிருந்த மனது விடுதியைப் பார்த்ததும் ஏனோ துள்ளலாகிவிட்டது.

அதே சந்தோஷத்துடன் அன்று மாலை திருநெல்வேலியில் சினிமா பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பியாச்சு. சுதந்திர தினத்திற்குப் பிறகு கல்லூரி தொடங்கும்.

தாணுவின் 1977 வருடத்தைய Episode ஆரம்பமாகும்.

அலை-37

 அலை-37

“போனோமே படிக்கத்தான்

பயின்றோமே கண்ணு முழிச்சுத்தான்” 

(MIXOPATHY)கலப்பட மருத்துவத்தை எதிர்த்து தோழி பானுவின் பாடலைக் கேட்ட பிறகு மருத்துவக்கல்லூரியில் பயின்ற நாட்களின் அலை மனதுக்குள் துள்ளி எழுந்து வருகிறது. எதை எழுதுவது எங்கிருந்து ஆரம்பிப்பது என்றே முடிவு செய்ய முடியாமல் அலைகள் புரண்டு வந்து ஆர்ப்பரிக்கின்றன. 


மருத்துவக்கல்லூரியில் படிப்பது இன்றைய தலைமுறைக்கு மர்ம முடிச்சு. இடம் கிடைக்குமா இல்லையா, எங்கு கிடைக்கும் எவ்வளவு செலவாகும் என்பது போன்ற ஆயிரத்தெட்டு அல்லற்பாடுகளுடன் மருத்துவம் எட்டாக் கனியாக இருக்கிறது. எழுபதுகளில் எங்களைப்போன்ற நடுத்தர வர்க்கமும் முயன்றால் படிக்கக்கூடிய எட்டும் கனியாகவே இருந்தது. 


எனக்கு நினைவு தெரிந்த காலகட்டத்தில் இருந்தே டாக்டர் ஆக வேண்டுமென்பது ஒரு கனவாகவே இருந்தது. அதற்காகவென்று தனிப்பட்ட பயிற்சிகளோ வகுப்புகளோ எதுவும் கிடையாது. நல்லா படிச்சா டாக்டர் ஆகலாம், அவ்வளவுதான். கால் மார்க் அரை மார்க் வித்தியாசத்தில் வாய்ப்பு நழுவிப் போவதெல்லாம் கிடையாது. அப்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளே இல்லாத காலம். அதனால் பணம் கட்டுவது முடியுமா முடியாதா என்ற குழப்பமும் கிடையாது.


முதல் முதலாக எம்.பி.பி.எஸ். கோர்ஸ் படிக்கத்தான் விண்ணப்பப் படிவமே பூர்த்தி செய்தேன். பி.யூ.சி.கூட அப்பாவின் நண்பர் மூலம் கிடைத்ததால் அப்போதும் விண்ணப்பப் படிவம் (application form) நிரப்பவில்லை. ரொம்ப எளிமையான படிவம்தான். அதை நிரப்புவதற்கு அப்பா அருகில் அமர்ந்து சொல்லிக் கொடுத்தது பசுமையாக நினைவிருக்கிறது. முதலில் வேறு தாளில் நம்பர் போட்டு நகல் படிவத்தில் எழுத வைத்தார்கள் . அதன்பிறகுதான் ஒரிஜினல் படிவத்தில் எழுதினேன். 


மருத்துவ சான்றிதழ் வைப்பதற்கு திருச்செந்தூரில் டாக்டர். சேர்மராஜ் என்பவரிடம் கூட்டிப் போனார்கள். அவரது முகமே நினைவில்லை. ஆனால் அவர் ரொம்ப அன்பாகவும் கரிசனையாகவும் பேசியது நினைவிருக்கிறது. அவரைப் பார்க்க வரவேற்பறை முழுதும் கூட்டம் நிரம்பி வழிந்தபோதும் மருத்துவக்கல்லூரிக்கு அப்ளை பண்ணப்போகும் சின்னப் பெண்ணிடம் அவ்வளவு அன்போடு பேசியது மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிட்டது. சேர்மராஜ் டாக்டர் மாதிரிஆகணும்னு மனசுக்குள் வைராக்கியமும் வந்தது. அதன்பிறகு விண்ணப்பம் எப்படி தபாலில் போனது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது, அப்பா பார்த்துக் கொண்டார்கள்.


கண்டிப்பாக மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வேறு எந்தக் கல்லூரியிலும் சேராமல் காத்திருந்தேன். நயினார் அண்ணன் ரொம்ப நல்லா படிக்கக்கூடியவன். ஆனாலும் அவனுக்கு பொறியியல் கல்லூரியில் அனுமதி கிடைக்கவில்லை. அதனால் ஆதித்தனார் கல்லூரியில் BBA சேர்ந்திருந்தான். அந்த அனுபவத்தினால் மனதின் மூலையில் சின்ன பயம் இருந்தாலும், கண்டிப்பாக மருத்துவம் கிடைத்துவிடும் என்பதில் உறுதியாக இருந்தேன். 


ஒருவழியாக நேர்காணலுக்கான தபால் வந்து சேர்ந்தது. மதுரையில்தான் தேர்வு மையம்.

எனது சித்தி மகள் நர்ஸிங் பயிற்சிக்கு விண்ணப்பித்திருந்தாள். அவளுக்கும் அன்றுதான் தேர்வு. காலையில் தேர்வு என்பதால் முந்தின நாளே மதுரை சென்றுவிட்டோம். அப்பாவின் நண்பர் P.S.Raja அவர்கள் தெஷணமாற நாடார் சங்கத் தலைவராக இருந்ததால்,மதுரையில் உள்ள அவர்களின் விடுதியிலேயே தங்கிக்கொண்டோம். தேர்வு மையம் மதுரை கார்ப்பரேஷன் கட்டிடத்தில் இருந்தது. விடுதியிலிருந்து நடந்தேதான் சென்றோம். பிரம்மாண்டமான கார்ப்பரேஷன் கட்டிடத்தை சுற்றுலாப் பயணிகள் வாய் திறந்து பார்த்ததைப்போல் பார்த்துக் கொண்டேன்.


தேர்வு நடக்கும் இடத்தில் என்னைப்போல் ஏகப்பட்டபேர் கூடியிருந்தார்கள். முதலில் அனைவருக்கும் சின்ன எழுத்துத் தேர்வு வைத்தார்கள். ரொம்ப இலகுவான கேள்விகளாகவே இருந்தது. நுழைவுத் தேர்வு கண்துடைப்பாக இருக்குமோ என்று கொஞ்சம் பயம் கலந்த குழப்பம் வந்தது. மதியம் நேர்காணல் இருந்தது. எனக்குக் கேட்கப்பட்ட கேள்விகள் குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தியது. உனக்குத் தெரிந்த பத்து திருக்குறள் சொல் என்றார்கள். தமிழ் ஐயா குழைக்காதரின் வாரிசாயிற்றே, மூச்சு விடாமல் பத்து குறளும் சொன்னேன். அதன் பிறகும் மிக எளிமையான கேள்விகளே கேட்கப்பட்டன. ஏன் மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறாய், மருத்துவராகி எப்படி சேவை செய்வாய் என்றெல்லாம் கேள்விகள். படிப்பு சம்பந்தமான கேள்விகளே இல்லை. மனசு ரொம்ப ஒடிஞ்சு போயிடுச்சு. சீட் தராமல் தட்டிக் கழிக்கத்தான் இப்படி எளிமையான கேள்விகளாகக் கேட்கிறார்கள் என்று நினைத்து நொந்தேன். 


நேர்காணல் சென்றுவந்து, முடிவு வெளிவரும் நாள் வரை எதிலும் ஈடுபாடில்லாமல் பதுமையைப் போல் நடமாடிக் கொண்டிருந்தேன். கண்டிப்பாக மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என்று வேறு எந்தக் கல்லூரியிலும் விண்ணப்பிக்கவில்லை. ரொம்பக் கொடுமையான நாட்கள் அவை. அப்பாவுக்கு எனது மனநிலை புரிந்திருந்த போதும் என்னைத் தேற்றவும் இல்லை அதைரியப்படுத்தவும் இல்லை. அம்மாவுக்கு இதெல்லாம் பெரிய விஷயமாகவே தெரியலை. கல்லூரிக்குப் போகாட்டி வீட்டில் வேலைக்கு இன்னொரு ஆள் கிடைக்கும் என்பதற்குமேல் அவங்களோட எண்ணம் போகவில்லை.


ஒருவழியாக முடிவு வந்தது, மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைச்சிடுச்சு. எப்படிப்பட்ட சந்தோஷம்!! அப்போதுதான் என்னோட கனவுகளும் எதிர்பார்ப்பும் ஒரு புள்ளியில் வந்து ஐக்கியமானது. அப்போ கிடைத்த சந்தோஷத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. 


எங்களுக்கு முந்தின வருஷம் ”மிசா” சட்டம் அமுலில் இருந்ததால் நேர்மையான தேர்ச்சி நடந்திருந்தது. எங்கள் நேர்காணலின் போது தெய்வத்திரு. எம். ஜி. இராமச்சந்திரன் அவர்கள் முதல் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றிருந்தார். மிக நேர்மையான தேர்ச்சிமுறை அமலில் இருந்தது. அதனால்தான் எங்களைப்போன்ற சாமான்யர்களும் மருத்துவர்கள் ஆக முடிந்திருக்கிறது. எங்கள் வகுப்புத் தோழர்கள் இன்றளவும் மிக அந்நியோன்யமாக இருப்பதற்கு முக்கிய காரணம் அந்த தேர்வு முறையால் கிடைத்ததுதான். பெரும்பான்மையானவர்கள் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருந்தோம்.


எங்க குடும்பத்திலேயே நான்தான் முதல் மருத்துவர், அதுவும் பெண் மருத்துவர். குடும்பமே கொண்டாடியது போல்தான் இருந்தது. எல்லாரும் அப்பவே டாக்டரம்மா என்று கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியிலேயே கிடைச்சது ரொம்ப பெரிய விஷயம். மதுரை, மெட்ராஸ் மாதிரி இடங்களில் கிடைச்சிருந்தால் விட்டுறுப்பாங்களான்னு சந்தேகம்தான்.  தூரம் பெரிய விஷயமில்லை. ஆனால் திருநெல்வேலி என்றால் பெரியக்கா வீடு இருந்தது. விடுதி தேவைப்படாமல் போகும், செலவும் குறைவாக ஆகும். தூர ஊர்களில் விடுதியில் தங்கினால் அதற்குரிய செலவினங்களுக்கு என்ன செய்வது என்ற பிரச்னை வரும். இது எதுவுமே நடக்காமல் திருநெல்வேலி கிடைத்தது மிகப் பெரிய அதிர்ஷ்டம்தான். இன்னும் போகப்போக நிறைய அதிர்ஷ்டங்களைத் தந்தது திருநெல்வேலி மருத்துவக்கல்லூரிதான்.


அன்றிலிருந்து எனது அடையாளம் ஆறுமுகநேரியிலிருந்து

திருநெல்வேலிக்காரி ஆகிவிட்டது.

அலை-36

 அலை-36

 “விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும், 

விரல்கள் என்னவோ 

ஜன்னல் கம்பிகளோடுதான்” 

எப்போதோ படித்த மு.மேத்தாவின் கவிதை இப்போது நினைவுக்கு வருகிறது. அறிவியல் முன்னேற்றங்கள் நம்மை செவ்வாய் கிரகத்துக்கே அழைத்துப்போக ரெடியாக இருக்கிறது. மாஸ்க்கோவும் மெல்போர்னும் பக்கத்து வீடுகள் போல் ஆகிவிட்டன. நினைத்தால் பறக்கலாம், நெடும் தூரம் பயணிக்கலாம். ஆனால் இந்தப்பொல்லாத மனசு மட்டும் ஆறுமுகநேரிக்கும் திருநெல்வேலிக்கும்தான் முதல் சாய்ஸ் வைக்குது. என்னே எங்கள் மண்ணின் பெருமை, என்னே எங்கள் வளர்ப்பின் அருமை.


இன்று முகநூலில் கருப்பு வெள்ளை டெலிவிஷன் பற்றி நண்பர் ஒருவர் சிலாக்கியமாக எழுதியிருந்தார். அதைப் பார்த்தவுடன் அந்தக்கால வானொலிப் பெட்டி(Radio) நினைவுக்கு வந்துவிட்டது. இன்றைய சமுதாயம் வானொலிப் பெட்டியைப் பார்த்திருப்பார்களா என்பதுகூட சந்தேகம்தான். எழுபதுகளில் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு அலைவரிசையில் வானொலி பேசிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தது. எந்த நாள் எந்த நேரம் என்ன ஒலிபரப்பு வரும் என்பதெல்லாம் எங்களுக்கு மனப்பாடம். 


அநேகமாக சமையலறையை ஒட்டியே எல்லா வீட்டிலும் வானொலிப்பெட்டி கம்பீரமாக உட்கார்ந்திருக்கும். அப்படின்னாதான் சமையல் பண்றவங்களும் கேட்டு ரசிக்கமுடியும். மின்சார வசதி இல்லாத வீடுகளிலும் பேட்டரி செல் மூலம் பயன்படுத்த முடியும் என்பதால் குடிசை முதல் கோபுரம் வரை தெருவிலிருந்து காடுவரை எல்லா இடங்களிலும் நீக்கமற காணப்படும்.


 செல்லமாக ரேடியோபெட்டி என்றுதான் எல்லாரும் கூப்பிடுவோம். கொஞ்சம் ஸ்டைல் கோஷ்டிகள் ட்ரான்சிஸ்டர்ன்னு சொல்லிக்குவாங்க. அந்த ஆங்கில வார்த்தைகளின் அர்த்தமும் தெரியாது, அதிலுள்ள அறிவியலும் தெரியாது. ஆனால் எல்லார் வாயிலும் புகுந்து விளையாடுவது ரேடியோ மட்டுமே.

பொருளாதார வசதிகளைப் பொறுத்து சின்ன சைஸிலிருந்து பெரிய பெட்டிகள் வரை வித விதமாக இருக்கும். ஆனால் எல்லாத்துக்கும் பொதுவானது அலைவரிசைகளை மாற்றும் குமிழ் (knob) அதை வெளிப்படுத்தும் முள்(pointer) ரெண்டும்தான். படிக்காத அம்மாவுக்குக் கூட இலங்கை வானொலி எதில் வரும், தமிழ் வானொலி எந்த இடத்தில் கிடைக்கும் என்பதெல்லாம் அத்துப்படி. பாக்கெட் ட்ரான்சிஸ்டர்ன்னு மிக சின்ன அளவுடையதும் உண்டு. அந்தக்கால ஆம்பிள்ளைப் பசங்க க்ரிக்கெட் ஸ்கோர் கேட்க ரொம்ப உபயோகமா இருந்தது அதுதான். இப்போ மொபைல் போனைக் காதோடு ஒட்டிகிட்டு அலையிற மாதிரி அந்தக் காலத்தில் பாக்கெட் ரேடியோ காதுக்கடியிலேயே ஒட்டிகிட்டு இருந்தது.


காலையில் எங்களையெல்லாம் எழுப்பிவிடும் அலார்ம் ரேடியோதான். ஒவ்வொரு நிகழ்ச்சி நேரத்தைப் பொறுத்து ஆறு மணியா, ஏழா எட்டான்னு கணக்கு வைச்சுகிட்டு பள்ளிக்குக் கிளம்புவோம், சுவர்க்கடிகாரமும் ரேடியோதான். ''நேயர் விருப்பம் முடிஞ்சிட்டு  உலையிலே அரிசி போடு ; செய்தி முடிஞ்சிடுச்சு சாப்பாட்டுக் கடையை மூடு"ன்னு வானொலி நிகழ்ச்சி சார்ந்தே வீட்டின் அன்றாட அலுவல்கள் நடைபெற்ற காலம். 

கோயிலுக்கே போகாமல் கிருபனந்த வாரியார் சொற்பொழிவு மூலமே பக்தியை வீட்டுக்குள் பகிர்ந்து கொண்ட பெண்கள் அநேகம். பொருள் புரியுமோ இல்லையோ கந்த சஷ்டி கவசம் காலையில் எழுப்பிவிடும். மார்கழி மாதம் திருப்பவை திருவெம்பாவை உரத்த குரலில் வீட்டைச் சுற்றி உலா வரும். ஞாயிற்றுக் கிழமைகளில் கிறிஸ்துவ கீதங்கள் பவனி வரும். அப்பா வீட்டில் இருக்கும் நேரங்களில் செய்திகள் விரிவாக வந்து கொண்டிருக்கும்.


தமிழ் அலைவரிசைகளை விட இலங்கை வானொலி தான் அந்தக் காலங்களில் மிகப் பிரபலமாக இருந்தது. அதன் வர்ணனையாளர்களுக்கு பெரிய ரசிகர் மன்றமே உண்டு. முகம் தெரியாத குரல்களால் வசீகரிக்கப்பட்டு ரேடியோவே கதியென்று கிடந்த நாட்கள் அதிகம். தமிழ் உச்சரிப்பும் தெளிவான வாக்கிய அமைப்புகளும் நம்மைக் கட்டிப்போட்டுவிடும். அப்துல் ஹமீத், ஜாஃபர் போன்றவர்களின் வர்ணனைகள் இன்னும் காதுகளில் ஒலிப்பது போலவே உள்ளது.

தமிழ் வானொலியின் வர்ணனையாளர்களில் மிகவும் பிடித்தது “ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம். செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் சாமி” என்ற கம்பீரக் குரல்தான்.


 கிரிக்கெட் என்ற விளையாட்டை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதே       வானொலிதான். அந்த வர்ணனைகளுக்கு அடிமையானவர்களுக்கு இன்றைய RJ Balaji  வர்ணனைகள் ”கடி’’யாகத் தோன்றுவதில் வியப்பேதும் இல்லை. சென்னை என்பது எந்த திசையில் இருக்கிறது என்று தெரியாத காலத்தில் “வாலாஜா முனையிலிருந்து வீசப்பட்ட பந்து, அதை எதிர்திசையில் அடித்து வீசினார்” என்ற வர்ணனையைக் கேட்கும்போது அந்த இடத்திற்கே போய்விட்டது போல் புளகாங்கிதமாக இருக்கும்.


பெரும் தலைவர்கள் இறந்த செய்திகள், தேர்தல் முடிவுகள், சினிமா செய்திகள் அனைத்தையும் சுடச் சுட தந்தது இத்தினியூண்டு இருந்த ரேடியோ பெட்டிதான். உலகமே அதற்குள் இருப்பது போன்ற மாயத்தைத் தந்ததும் உண்மைதான். இடையிடையே வரும் விளம்பரங்கள் மனப்பாடமே ஆகியிருக்கும். இப்போ கேட்டாக்கூட முழு விளம்பரத்தையும் சொல்லிடுவோம். அதிலும் லைப்பாய் விளம்பரம் ரொம்பப் பிரபலம். எல்லார் வீட்லேயும் அப்போ லைப்பாய் சோப்புதான் இருக்கும்னா பார்த்துக்கோங்க.


அண்ணாதுரை, கருணாநிதி  போன்றவர்களின் பேச்சுக்கள் மணிக்கணக்கில் ஓடிக்கொண்டிருக்கும். அது குறித்து பெருசுகள் மத்தியில் கார சார விவாதங்களும் நடந்துகிட்டிருக்கும். எங்களுக்கு அதிலெல்லாம் ரசனை இருக்காது என்பதால் விளையாடப் போயிடுவோம். எங்களுக்கு பிடிச்ச நிகழ்ச்சிகள் வரும்போது கும்பலா ரேடியோ முன்னாடி உக்காந்துக்குவோம். வினாடி வினா நிகழ்ச்சிகளில் எங்கள் பதில்களும் பக்கவாட்டில் வந்து கொண்டிருக்கும். 


வானொலியை ஒரு பொழுது போக்கு அங்கமாகத்தான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். சத்தமில்லாமல் ஒரு பொது அறிவுப் பெட்டகமாக  இருந்திருக்கிறது. இஷ்டப்பட்டாலும் இல்லாட்டியும் செய்திகள் காதில் விழுந்து கொண்டே இருக்கும். எங்களுக்குப் பள்ளிக்கூடத்தில் ரேடியோ வகுப்புன்னே ஒன்று நடக்கும். ரேடியோ நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து பாடம் நடக்கும். அதில் என்ன படிச்சோம்னு நினைவில்லை. ஆனால் தலைமை ஆசிரியர் அறை முன்பு வராண்டாவில் அமர்ந்து வானொலி கேட்டது மங்கலாக நினைவிருக்கிறது.


சினிமா சம்பந்தப்பட்ட ஒலிபரப்புகளுக்குப் பஞ்சமே இருக்காது. பாட்டு, வசனம், திரை ஒலின்னு ஏகப்பட்டது வரும். வீர பாண்டிய கட்டபொம்மனை சிவாஜியின் குரலில் கேட்டு கேட்டு சிவாஜிதான் கட்ட பொம்மன் என்று சொல்லும் அளவுக்கு திரை வசனங்கள் ஒலிபரப்பாகும். ”வசந்த மாளிகை “ திரைப்படம் வந்த புதிதில் “பார் லதா பார், உனக்காக கட்டப்பட்டிருக்கும் தாஜ் மஹாலைப் பார்” என்று சிவாஜி பேசும் முழு வசனமும் மனப்பாடம். பழைய சினிமா எல்லாம் வசனமாக வந்து கொண்டே இருக்கும். ”கந்தன் கருணை” KB சுந்தராம்பாள் “ஞானப்பழத்தைப் பிழிந்து” ன்னு பாட ஆரம்பிச்சா இங்கேயிருந்து கோரஸாக வாண்டுகளெல்லாம் பாட ஆரம்பிச்சுடுவாங்க.


ரேடியோவில் தொடர்கதைகள் கூடஒலிபரப்பாகும்.ஞாயிற்றுக்கிழமை காலையில் வரும் தொடர்கதையைக் கேட்க மொத்த குடும்பமே ரேடியோ முன்னாடி கூடிடுவாங்க. தொய்வு ஏற்படாத மாதிரி நேக்காக தொடரை நடத்திச் செல்வதும் நிகழ்ச்சி தயாரிப்பளரின் திறமைதான். 


ரேடியோ பெட்டி பழசாயிடுச்சுன்னா சில நேரம் ரெண்டு ஸ்டேஷன்கள் ஒரே அலைவரிசையில் வந்துடும். நிகழ்ச்சிகள் குழப்பி வரும்போது கேட்டால் காமெடியாக இருக்கும். அதை சரி பண்ண நம்ம வீட்டு எஞ்சினீயர்கள் பெட்டியை தலையில் தட்டி பக்க வாட்டில் தட்டி ஒருவழியா சரி பண்ணிடுவாங்க.


இன்னும் நிகழ்ழ்ச்சிகளைப் பற்றி சொல்லணும்னா நிறையவே இருக்கு. ஆனாலும் தூங்கப்போகும் போது வரும் “இரவின் மடியில்” எல்லாருக்கும் பிடித்தமான ஒன்று. அமைதியான ரசனையான பாடல்களைக் கேட்டுக் கொண்டே உறங்கும் போது சொர்க்க்கமே அதுதான். ரேடியோவிலிருந்து கறுப்பு வெள்ளை TV வந்தது. பிறகு உருமாறி பெயர்மாறி இப்போ என்னவெல்லாமோ வந்துடுச்சு. ஆனால் இரவின் மடியில் கிடைத்த அந்த சுகம் மட்டும் திரும்பக் கிடைக்கவேயில்லை.

அலை-35

 அலை-35

"கல்யாணம் வைபோகம்" 

 "அன்றும்  இன்றும்" என்ற தலைப்பில் பெரிய பட்டிமன்றமே நடத்தலாம்.  புற்றீசல்கள் போல் அளவிடமுடியாத திருமண மண்டபங்கள்,அவசியம் இல்லாத ஆடம்பரங்கள் என்று எத்தனையோ மாற்றங்கள்.


 இப்போதெல்லாம் கல்யாணம் முடிவானதும் நாள் குறிப்பதெல்லாம் கிடையாது.  கல்யாணமண்டபம் புக் பண்ணி, ஈவெண்ட் மானேஜர்கிட்டே பேசிட்டுதான் முகூர்த்த தேதியே குறிக்கிறோம்.  ரசனையோட பண்றோமே தவிர மறுபடி நினைச்சுப் பார்க்கும்படி பண்றோமான்னு தெரியலை. அமர்க்களமா ஊரே மெச்சுகிற மாதிரி என் பொண்ணு கல்யாணத்தை நடத்தினோம். ஆனால் அமைதியாக உட்கார்ந்து யோசிக்கும்போது நிறைய நிகழ்ச்சிகளில் நானே பங்கு பெறலைன்னு தோணுது. மத்தியதரக் குடும்பங்கள் கூட திருமணத்தில் அதிக செலவுகள் செய்வது தற்போதைய வாடிக்கையாகிவிட்டது. சூழ்நிலைக் கைதிகள்.


 ஆனால் எழுபதுகளில் கல்யாணம் எவ்ளோ கலகலப்பாக இருந்துச்சு.அதிலும் ஆறுமுகநேரியில் கல்யாணம் என்றால் கொண்டாட்டத்துக்குப் பஞ்சமே கிடையாது.

 அந்த காலகட்டத்தில் எங்க ஊர்லே கல்யாண மண்டபமே கிடையாது. ஒண்ணு கோயிலில் வைச்சு கல்யாணம் பண்ணணும் இல்லாட்டி வீட்டில் வைத்து பண்ணணும். துரை அண்ணன் கல்யாணம்தான் நினைவுகளில் தெரிந்த முதல் கல்யாணம். சந்தைக்கடை வீட்டில் வைத்து நடந்த பெரிய விசேஷமும் அதுதான். 


நான் ரொம்ப சின்னப் பொண்ணு என்பதால் காட்சிகள் மங்கலாகத்தான் நினைவுக்கு வருகிறது. பெண்  அழைப்பு முடிந்து மதினியை மச்சு வீட்டு பேங்க் அண்ணாச்சி வீட்டில் உட்கார வைத்திருந்தார்கள். நாங்களெல்லாம் கதவோரம் ஒளிந்து நின்று புதுப்பெண்ணை  எட்டி எட்டி பார்த்தது மட்டுதான் ஞாபகம் இருக்கு. எங்க அண்ணண் ஆறடி உயரம் இருப்பான். புது மதினி நாலடியார் மாதிரி இருந்ததைப் பார்த்துக் கள்ளச் சிரிப்போடு மறுபடி மறுபடி எட்டிப் பார்த்துக் கொண்டோம்.


 அதற்குப் பிறகு சரசக்கா, செக்கண்ணன் கல்யாணம் எல்லாம் வீட்லேயேதான் நடந்துச்சு. வீட்டுக்கு முன்னாடி சந்தையின் காலி இடங்கள் பரந்து விரிந்து கிடந்ததால் அங்கேயே பந்தல் போட்டு கல்யாணம் பண்ணினார்கள். கீழ்பக்கம் பசுவந்தனையக்கா வீட்டிலிருந்து மந்திரம் அண்ணன் வீடு வரைக்கும் சேர்த்து அடைத்து பெரிய பந்தலாகப் போட்டிருப்பாங்க. 

ரெட்டைத் தட்டி தென்னங் கீத்துகளை நிற்கவைத்து சுற்றிலும் அடைத்து கல்யாண அரங்கம் மாதிரியே  பந்தல் போடுவாங்க. கூரைக்கும் அதே கீத்துகள்தான். கூரைக்கு மட்டும் வெள்ளைத் துணிகளைக் கட்டி அழகு படுத்தியிருப்பாங்க. 


வெயில் காலத்தில் அந்தப் பந்தல் ஓக்கேதான். ஆனால் மழை காலத்தில் கல்யாணம் பண்ணினால் எல்லா இடமும் ஒழுகும். அநேகமா எல்லா கல்யாணமும் ஐப்பசி கார்த்திகை அடை மழையில்தான் நடக்கும். மழையில் ஒழுகும்போதும் ஒதுங்குவதும் மழைவிட்டதும் கூடுவதும்  எழுதப்படாத வாடிக்கையாகிவிடும். குற்றால சாரலில் நனைஞ்ச மாதிரி நினைச்சுகிட்டு அதையும் சந்தோஷமா எடுத்துக்குவோம். 


பந்தலில் நடுவில்தான் மணவறை போடுவாங்க. ரொம்ப சம்பிரதாயப்படியும் இருக்கும் ஸ்ட்ராங்காகவும் இருக்கும். கிழக்கு பார்த்து இருக்கணும், மணமக்கள் சுற்றி வர இடம் இருக்கணும், அம்மி, முளைப்பாரியெல்லாம் வைக்க இடம் இருக்கணும், முன்னாடி உக்கார்ந்து பார்ப்பவர்களுக்கு இட வசதி இருக்கணும் -இப்படி ஏகப்பட்ட interior decoration உடன் பந்தல்போடும் வைபவம் நடக்கும்.  ஆண்கள் உட்கார வாடகைச் சேர்களும் பெண்கள்,குழந்தைகள் உட்கார பெரிய தார்ப்பாய்களும் இருக்கும். ஆனால் அந்தக்கால குழந்தைகள் குரங்குகளுக்கு சமம் (நானும் அதில் உண்டு). யாருமே விரிப்பில் உட்காருவதில்லை. மணவறையின் தூண்களில் தொங்குவதும் சாய்வதுமாகத்தான் சேஷ்டைகளுடன் அலைவோம்.


 கல்யாணத்துக்கு ரெண்டுமூணு நாட்களுக்கு முன்பே பந்தல் ரெடியாகிவிடும்.கல்யாணத்துக்கு வர்றவங்களுக்கு தூங்கும் இடமும் பந்தல்தான். தனித்தனியாக ரூம் போட வேண்டிய அவசியமும் இருக்காது.  கல்யாணத்துக்கு வந்த வாண்டுகளுக்கு விளையாடும் இடமும் அதுதான். மணவறையில் போடப்பட்டிருக்கும் பெஞ்சில் படுக்க ரிசர்வேஷன் எல்லாம் நடக்கும். கல்யாணத்துக்கு முந்தின நாள் இரவில்தான் மின்விளக்குகள் சீரியல் பல்புகள் எல்லாம் பொருத்தப்படும். எங்க வீட்டில் மின்விளக்கு ஒளிவீசும் நாட்களும் அப்போதுதான்.


சமையல் செய்வதற்கென்று பின்கட்டில் ஒரு இடத்தைத் தேர்வு செய்து அங்கும் பந்தல் போடுவாங்க.. அதற்குப் பெயர் ஆக்குப்பறை ( சாப்பாடு ஆக்கும் அறை என்பது அப்படி திரிந்து பெயரிடப் பட்டிருக்கலாம்). பெரிய பெரிய அண்டாக்கள் பாத்திரங்கள் எல்லாம் வாடகைக்கு வந்து இறங்கும். ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுடலை முத்து அண்ணனும் சமையல் செய்ய வந்து இறங்கிவிடுவார்கள். அநேகமாக முதல் சமையல் உப்புமாவாகத்தான்  இருக்கும் அல்லது சாதம்,ரசம்,கடலைத் துவையலாக இருக்கும். அதன்பிறகுதான் மெனுவுக்கேற்ப சிறப்பு பதார்த்தங்கள் ரெடி பண்ண ஆரம்பிப்பாங்க. பாத்திரம் கழுவ சமையல் பண்ண தேவைப்படும் தண்ணீர் கொண்டுவருவது இளவட்டங்கள் வேலை. ஆளுக்கொரு குடத்தை இடுப்பிலே வைச்சுகிட்டு "தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழா"ன்னு பாடற மாதவன்களை மண்டைகாய வைச்சுகிட்டு அங்கும் இங்குமாக அலைவாங்க.


ரொம்ப கொடுமையான விஷயம் என்னதுன்னா இட்லி, தோசைக்கு மாவு ஆட்டுவதுதான். கிரைண்டர் என்பது கண்ணில் தட்டுப்பட்டிராத காலம்.வீட்லே உள்ள ஆட்டுஉரலில்தான் ஆட்டணும். ஊறவைத்த அரிசியும் உளுந்தும் எல்லா சொந்தக்காரங்க வீட்டுக்கும் பகிர்ந்து அனுப்பப்படு்ம். எல்லாரும் அவங்கவங்க வீட்லே அரைச்சுக் கொடுத்த பிறகு கலந்து இட்லிக்கு ரெடி செய்வது சமையல் ஆட்கள் பொறுப்பு. ரெண்டு நாளைக்குரிய மாவையும் அரைத்து வைத்துவிடுவார்கள். புளிக்காமல் இருப்பதற்கு என்னவோ டெக்னிக் எல்லாம் பேசிக்குவாங்க. இந்த மாதிரி விஷயங்களால்தான் அந்தக்காலத்தில் ‘’கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக் கட்டிப்பார்’’ன்னு சொல்லியிருப்பாங்க போலிருக்கு. ( சாந்து குழைப்பதும் தோசைக்கு ஆட்டுவதும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் தோணுது) பூ கட்டும் வேலையும் வீட்டிலேயேதான் நடக்கும்.


ஒருபக்கம் பெரிய பாய்களில் அமர்ந்து கிழடுங்க எல்லாம் காலைநீட்டி உட்கார்ந்து காய்கறி வெட்டிக் கொண்டிருப்பார்கள். இன்னோரு பாயில் திடகாத்திரமானவர்கள் உட்கார்ந்து தேங்காய் துருவிக்கொண்டிருப்பார்கள்.அழுத கண்ணீரோடு கொஞ்சம் பேர் வெங்காயம் உரிச்சுகிட்டிருப்பாங்க.முந்தின நாள் ராத்திரியிலிருந்தே இத்தனை வேலைகளும் ஆரம்பித்துவிடும்.

 யாருமே முகம் சுழித்தோ சலித்துக்கொண்டோ வேலை செய்ய மாட்டார்கள். ஊர்ப் புரணி முழுசும் அப்போது பேசப்படும் அரட்டை அரங்கத்தில் சுற்றி சுற்றி வரும். 


பெண்களோட சிரிப்பையும் அரட்டையையும் கேலி பண்ண  தலையை நீட்டி  மூக்கு உடைபடும் ஆண்களும் உண்டு. மதினி கொழுந்தன் கேலி பேச்சுகள் சர்வ சாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருக்கும். புரியுதோ இல்லையோ அந்த கேலிகளை வாய்பிளந்து கேட்டுக் கொண்டு குழந்தைகள் பட்டாளமும் அங்கேதான் இருக்கும். அடிக்கடி சுக்குக் காப்பி கடுங் காப்பி எல்லாம் ஆக்குப்பறையிலிருந்து பரிமாறப்பட்டுக் கொண்டே இருக்கும்.


பெண்கள் வேலைகளில் முனைந்திருக்கும் போது ஆண்கள் கூட்டம் சீட்டு விளையாடுவதில் மும்முரமாகிவிடுவார்கள். சீட்டுக்கச்சேரி இல்லாத கல்யாணமே அப்போது கிடையாது.   விடிய விடிய சீட்டு விளையாடுவாங்க. பொழுது விடியும்போது எல்லோரும் சொல்லி வைச்ச மாதிரி குளிச்சு ரெடியாகி கல்யாண வேலை பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க. யார் முகத்திலேயும் சோர்வே தெரியாது. வீட்டுப் பெண்களெல்லாம் சமையலிலும் சம்பிரதாயங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது , ஆண்கள் பந்தி பரிமாறுவதில் மும்முரமாகி விடுவார்கள். இட்லி வைக்கும்போதே "பத்மாக்கா பொண்ணு வரலையா''ன்னு கேட்பதும், சாம்பார் ஊற்றும்போது  "சாயங்காலம் வரவேற்புக்கு வாங்க" என்று அழைப்பதுமாக விருந்தோம்பலை ஒரு கவிதையாக அரங்கேற்றிக் கொண்டிருப்பார்கள்.


 கல்யாணப்பந்தலேதான் பந்தி பரிமாறும் இடமாகவும் இருக்கும். முகூர்த்த நேரத்தை அநுசரித்து ரெண்டுமூணு பந்திகள் பந்தலில் நடக்கும் அதன்பிறகு பின்கட்டுக்கு மாற்றிக் கொள்வார்கள். பந்திக்கு போட்டிருக்கும் டைனிங் மேஜை, பெஞ்ச் எல்லாவற்றையும் பின்னாடி எடுத்துவிட்டு வாடகைச் சேர்கள் அரங்கத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும்.  திருமணம் முடிந்ததும் மறுபடி பந்திக்கு ஏற்றவாறு பர்னிச்சர்கள்  இடம் மாறும். சாயங்காலம் அதே இடம் நலுங்கு வைக்கவும் வரவேற்பு நடத்தவும் உருமாறிக் கொண்டே இருக்கும்.


இப்பொழுது நினைத்துப்பார்த்தால் மலைப்பாகத் தெரிகிறது. ஒரே இடத்தை திருமணம், சாப்பாட்டு பந்தி, நலுங்கு , வரவேற்பு என்று நேரத்திற்கு ஒரு விதமாக மாற்றி அமைத்து கலகலப்பாக திருமணத்தை நடத்தி வைத்த எங்கள் வீட்டுப் பெருசுகளை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. அதில் உடல் உழைப்பை சிந்திய இளவல்களுக்கு ஈடே இல்லை.யாருக்கும் எதுவும் உத்தரவிடப் பட்டதாகவே தெரியாது. அந்தந்த நேரப்படி எல்லாம் ஒருவித ஒழுங்கோடு நடக்கும். ஒவ்வொரு நிகழ்விலும் ஒருவரை ஒருவர் கேலி பண்ணிக் கொண்டும், உதவி செய்துகொண்டும், வருபவர்களை வாய் நிறைய வரவேற்று எளிமையாகவும் சிக்கனமாகவும் நடத்தப்பட்ட திருமணங்கள் இனி வருமா?வருமென்றுதான் தோன்றுகிறது.


ஆடம்பரத்தின் எல்லைகளைத் தொட்டுக் கொண்டிருக்கும் இன்றைய திருமணங்கள் பொருள் விரையத்துடனும் அதீதமான செயற்கைத் தனத்துடன் அரங்கேறிக் கொண்டிருப்பதை இன்றைய தலைமுறையினர் கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்திருக்கின்றார்கள். அதனால்தான் குறிப்பிட விருந்தினர்களை அழைத்து அத்துவானக் காடுகளிலும் ஆழ்கடலிலும்  “Destination Wedding”  என்று ஆரம்பித்திருக்கிறார்கள். மாநாடு போல் நடத்தாமல் மனதுக்கு நெருக்கமான உறவுகளுடன் கொண்டாட வேண்டும் என்ற தாகம் தோன்றியுள்ளது.  


கூடிய சீக்கிரத்தில் கல்யாண மண்டபங்களைப் புறம் தள்ளிவிட்டு  ஆறுமுகநேரி சந்தைக்கடை வீடுகளைப் போன்ற destinationகளில் திருமணம் நடக்கும் நாட்கள் அதிக தூரத்தில் இல்லை. அந்த நாட்கள் வரும்போது பாயில் அமர்ந்து காலை நீட்டி காய்கறி வெட்டிக் கொடுக்க எங்கள் தலைமுறை ரெடி.