Tuesday, February 11, 2020

மன மாற்றமா பிறழ்வா?

தொழில்  நுட்ப  வளர்ச்சி  இன்பமா  துன்பமா?

அநேக துறைகளில் வளர்ச்சி தவிர்க்க முடியாததாகவும், நன்மை தருவதாகவும் உள்ளது. ஆனால் கவிதைகள் , கட்டுரைகள், ஏனைய எழுத்து வடிவங்களெல்லாம் இந்த அசுர வளர்ச்சிகளால் கொஞ்சம் சிதைந்தது போல் தோன்றுகிறது. முகநூல், வாட்ஸ் ஆப் போன்றவை புகுந்த பிறகு எண்ணங்களின் வடிவம் குறுஞ் செய்தியாகவும் நாலடியார் போலவும் திருக்குறள் போலவும் கருமித் தனமாகப் போய்விட்டது. எண்ண ஓட்டத்தைத் தட்டி விட்டு குதிரையில் ஏறி சவாரி செய்தது போய் , அரைகுறை எண்ண வடிவங்கள்  முயல் வேகத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன..
நமது எண்ணங்களின் வடிகால்களாக எழுத்துக்கள் இருந்தது போய், அதை வாசிக்கும் குழுமத்தினரின் ரசனைக்கேற்ப எண்ணங்களை மாற்றிக் கொள்வது போல் ஒரு பிரமை. அதனாலேயே இந்த பதிவு.

வலைப்பூக்களில் எழுதும் போது, மொழியின் பால் ஆர்வம் கொண்டவர்கள் அதிக அளவில் நமது பதிவுகளை வாசிப்பார்கள். அடிக்கடி காரசாரமான விவாதங்கள் நடந்தாலும் அதில் ஒரு சுவை இருந்தது. முகநூலில் எழுதும்போது அத்தகைய மகிழ்ச்சி கிடைக்கிறதா என்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை.
அதனால்தான் முகநூலில் அவ்வப்போது மேக்கப் போட்டாலும், வலைப்பூக்களை அடிக்கடி சூடிக்கொள்ளலாம் என யோசித்திருக்கிறேன்.
பார்க்கலாம்!
இந்த தொழில்நுட்பம் நம்மளை நினைத்தபடி இயங்க வைக்கிறதா, இடையிலேயே இழுத்துக் கொள்கிறதா என்று!!