Monday, January 30, 2006

காண்டேகரின் கிரெளஞ்சவதம்

``அன்பு செலுத்துவதென்றால் மலரோடு விளையாடுவது என்று நினைத்திருந்தேன்.அது மல்லிகையாக இல்லாவிட்டாலும் ரோஜாவாக இருக்கும்;ஒரு சமயம் ரோஜாவின் முள்பட்டுக் கையில் ரத்தம் வரலாம் என்பதற்குமேல் என் கற்பனை ஓடியதில்லை. இன்று அறிந்து கொண்டேன்;அன்பு செலுத்துவதென்றால் நெருப்போடு விளையாடுவது’’-
காண்டேகரின் `கிரெளஞ்சவதம்’’ படித்தவர்களுக்கு இது மிகவும் பிடித்தமான மேற்கோளாக இருக்குமென்று நினைக்கிறேன். ரோஜாவை முள்ளுடன் பார்க்கும்போதெல்லாம் இந்த வரிகள் நினைவுக்கு வந்துவிடும்.

இன்னும் பக்கத்துக்கு பக்கம் வாழ்க்கையோடு இயைந்த தத்துவங்களைச் சலிப்புத்தட்டாமல் சொல்வதில் அவருக்கு இணை அவரே! அவரது படைப்புகளை மொழிபெயர்த்த கா.ஸ்ரீ.ஸ்ரீ. யின் திறமை அதைவிட சுகம். காண்டேகரின் நாவல் ஏதாவது இருக்கான்னு கடைகளில் விசாரிக்கும்போது, நிறைய சமயங்களில், அற்பமாக பார்த்த கடைக்காரர்கள் உண்டு. அநேக நேரங்களில் பெரிய கடைகளில் அவர்களை மட்டம் தட்டும் விதமாக காண்டேகர் பற்றி கேட்ட நாட்களும் உண்டு, கண்டிப்பாக இருக்காது என்ற தைரியத்தில்(நல்ல வேளையாக என்றும் மூக்குடை பட்டது இல்லை).ரொம்ப நாட்கள் அவரது புத்தகங்கள் சரிவரக் கிடைக்காமல் இருந்தது.சமீபத்தில் அல்லையான்ஸ் பதிப்பகம் அவரது புத்தகங்கள் அனைத்தும் மலிவுத் தொகுப்பாக போட்டிருந்தார்கள். வாங்கி ஹாலில் அலங்காரமாக அடுக்கிவிட்டேன். கிரெளஞ்சவதம் மட்டும்தான் வாசிக்க பொழுது இருந்தது.

முதல் முதலில் வாசித்தபோது, காதலித்த நாட்களில், அர்த்தம் வேறுமாதிரி இருந்தது. சண்டை போடும் நாட்களில் மட்டும் இந்த வார்த்தைகள் கீதோபதேசம் மாதிரி காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அன்பு என்பதே மனிதர்களை நெருப்பில் வேகவிடும் கொடூரமான விஷயமாகத் தெரியும். காதல் கை கூடி வாழ்க்கையில் செட்டில் ஆனபிறகும் இந்த அன்பு செலுத்துவது நம்மைப் பாடாய்ப் படுத்திதான் வைக்கிறது.
அன்பு என்ற வார்த்தை வரும்போதே , எதிர்பார்ப்பு என்ற துணையும் கூடவே வந்து விடுகிறது. ஒரு தலைப் பட்சமாக எதிர்பார்ப்புகளே அற்ற அன்பு செலுத்துவது ஞானிகளுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். நம்(என்) போன்ற சராசரிகளுக்கு சாத்தியப் படுவதில்லை. அதனால் வரும் சலிப்புகளும் சங்கடங்களும், இனிமேல் யாரிடமும் அன்பாகப் பழகவே கூடாது என்ற வீம்பை உருவாக்கும். ஆனால் அடுத்த நிமிடமே வேறு வகையில் அன்பு வயப்படுவது மனித இயல்பு.

இந்த ஆண்கள் வேண்டுமானால் விதண்டாவாதமாக எதிர்பார்ப்புகளற்ற நேசத்துடன் இருப்பதாகக் காட்டிக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் பெண்களை விட பலவீனமானவர்கள் ஆண்களே. பெண்களின் possessivnessஐ கிண்டலடிக்க வேண்டுமானால் இந்த வாதம் பயன்படலாம். உண்மையில் கூடுதல் எதிர்பார்ப்புகள் அவர்களுடையதுதான்.

அதே காண்டேகர் அன்பின் ஆழம் எதுவரை போய் நிற்கும்னு அழகா ஒரு கவிதையை மேற்கோளாகச் சொல்வார்:
``முன்இணை யாகிய அன்றிலின்
மோகங்கொள் ஆணினைக் கொன்றனை
மன்நெடு நாள்இனி வாழ்கலை;
வாழ்கலை! வாழ்கலை! வேடனே!’’
வேடனின் அம்பு பட்டு ஆண் பறவை இறந்தது கண்டு பெண் பறவை இனி வெகுநாள் வாழப்போவதில்லை என்று வால்மீகி புலம்புவதை வெவ்வேறு மனிதர்களின் பார்வையில் வெவ்வேறு விதமாக பொருள் சொல்லியிருப்பார். கதை முழுவதிலும் வரும் இந்த பாடல் வரிகள் வால்மீகியின் உத்தமராம சரிதம் படிக்காமல் போனோமே என ஏங்க வைக்கும். சுலோ(கதை நாயகி)வின் எண்ண ஓட்டங்கள் ஒவ்வொரு வயது மாற்றத்திலும் நமக்குள்ளும் பரிணாம மாற்றமாக நிகழ்வது போன்றே இருக்கும். திலீபனும், அப்பண்ணாவும் அவர்கள் பாணியில் இந்த கவிதைக்கு கருத்துகொள்வது இன்னும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கும். மூன்று கதாபாத்திரங்களின் எண்ண ஓட்டத்தில் மட்டுமே முழுக் கதையையும் நகர்த்தியிருப்பார். திடுக்கிடும் சம்பவங்களோ, கிளர்ச்சியூட்டும் வசனங்களோ இல்லாமல் யதார்த்தமான தத்துவங்களால் மட்டுமே கதை நகரும்.

`ஒருவரிடம் ஆசை வைப்பதும்,வைக்காமல் இருப்பதும் மனிதர்கள் கையில் இல்லை. அன்பு காவியத்தைப் போன்றது. அதை நாமாக நினைக்கும் போது செய்ய முடியாது’- ரொம்ப சத்தியமான வார்த்தைகள். அதனால்தான்,சலனமில்லாமல் செல்லும் வாழ்க்கைச் சக்கரம் திடீர்க் காதல்களால் நிலை தடுமாறிவிடுகிறது. கடிவாளத்தைத் திறம்பட பிடித்தவர்கள் ஊர் போய்ச் சேர்வார்கள், தவற விடுபவர்கள் திக்கற்று கஷ்டப்படுவார்கள்.

``ஒருவன் நூறு அழகிய நாவல்கள் எழுதிவிடலாம்.சுய சரிதம் ஒரே தடவைதான் எழுத வேண்டுமென்றாலும்கூட, அது அவனால் ஆகாத வேலை.அழகை வழிபடுவதுபோல் உண்மையை வழிபடுவது அவ்வளவு எளிதல்ல.எந்தப் பெண்ணும் தன் யதார்த்தமான சுய சரிதையை எழுத முடியாது என்பதுதான் உண்மை’’- சுய சரிதை என்ன சின்ன மலரும் நினைவுகள் கூட எடிட் செய்யப்பட்டே எழுதப்படும்!!!

கிரெஞ்சவதம் வாசித்து முடித்த அன்றே அது பற்றி எழுத வேண்டுமென்று கை அரித்தது. ஆனால் நிறைய பேர் வாசிக்காமலே போய்விடலாம். எப்படியும் ஒருநாள் மதி `நட்சத்திரமாக விருப்பமா’ என்று கேட்பார்கள், அப்போது எழுதிவிட வேண்டும் என்று ஒதுக்கி வைத்துவிட்டேன். நேரம் பற்றாமல் போய்விட்டது, நன்கு தயார் செய்து எழுதியிருந்தால் இன்னும் நிறைய விஷயங்கள் பற்றி சொல்லியிருக்கலாம்.

காதலும், அன்பும் மட்டுமே பற்றி சொல்லியுள்ளேன். திலீபனின் புரட்சிக் கருத்துக்கள் பற்றி ஒரு வரிகூட சொல்லவில்லையே என்று ரெண்டு மூணுபேர் முணுமுணுப்பது கேட்கிறது. `புரட்சியின் மறுபெயர் காதல்’ என்பதுதானே திலீபனின் வாதம்!
கவுண்டமணி-செந்தில் பாணியில் வாழைப்பழ ஜோக்தான் -``அதுதாண்ணே இது’’!!

கண்ணதாசனின் கவிதைகள் எப்படி எல்லா சூழலுக்கும் ஏற்ற மாதிரி இருக்குமோ, அதே போலவே இவரது தத்துவ விளக்கங்களும் காலம் கடந்து சுவை கூட்டுகிறது.

Sunday, January 29, 2006

சேரன் தந்த பாதிப்பு

தமிழ்ப்படங்கள் மனதில் தாக்கங்களை உண்டாக்குவது எப்போதோ ஒருதரம்தான். அந்த வகையில் சேரனின் `ஆட்டோகிராப்’ `தவமாய் தவமிருந்து’ இரண்டுமே மைல் கற்கள்தான்.
ஆண்களின் மலரும் நினைவுகள் போல் பெண்களும் மலர்ந்த நினைவுகளைச் சொல்ல ஆரம்பித்தால் எவ்வாறு ஏற்றக்கொள்ளப்படும் என்ற விவாத அரங்குக்குள் செல்ல விரும்பாமல் எனக்குள் முகிழ்த்த இளமை நினைவுகள் சிலவற்றை மட்டும் முதல் பதிவாக்கியுள்ளேன்.

பாவாடை அணிந்த காலங்களில் ஆண்பிள்ளைகளுடன் சரிக்குச் சமமாக கோலி விளையாடுதல், பம்பரம் விடுதல்,கட்டக்குச்சி அடித்தல்(எங்க ஊர் கிரிக்கெட்) என்று ஊர் சுற்றிவிட்டு அம்மாவிடம் செமத்தியாகத் திட்டு வாங்கிய நாட்கள், இப்போது நினைக்கும் போது சிரிப்பு வர வைக்கிறது. முன்னாடி ரெண்டு அண்ணன்களும் பின்னாடி தம்பியுமாக ஆண் பிள்ளைகளுடனேயே வளர்ந்ததால் பெண்தோழிகளே அந்த வயதில் எனக்கு இல்லாமல் போய்விட்டது. அதிலும் என் தம்பியின் இம்சை தாங்க முடியாதது. கோபம் வந்தால் என்னைத் திட்ட அவன் சொல்லும் பெயர் `தன்வந்திரி’. அந்த வயதில் அது மருத்துவமேதையின் பெயரென்று புரியாததால் ஏதோ அசிங்கமாகத் திட்டுவதாக நினைத்து அவனுடன் மல்லுக் கட்டியிருக்கிறேன். நான் டாக்டர் ஆவதற்கு அவனின் முன்மொழிதல் அதுவென்று இருவருக்கும் புரியாப் பருவம்.

வீட்டின் அருகில் இருக்கும் சிவன் கோவிலில் மணி அடிக்க ஏக போட்டியாக இருக்கும். எங்க ஓதுவார் தாத்தா அழகாகப் பாடுவார். அது திருவாசகமா, சமஸ்கிருதமான்னு கூட இன்னைக்கு வரை தெரியாது. அது முடிஞ்சதும் சுண்டல் கொடுப்பாங்களே அதுதான் ஸ்பெஷல். எங்க ஐயர்வாள் இருக்காரே, அவரை மாதிரி பொருளாதார நிபுணரை எங்கேயும் பார்க்க முடியாது. உள்ளங்கை முழுவதையும் அகலத் திறந்து பிரசாதத்தை அள்ளுற அழகைப் பார்த்தா வயிறே ரொம்பிட்ட மாதிரி இருக்கும். நம்ம கையில் பிரசாதம் விழும்போது கரெக்டாக பத்து சுண்டல்கூட இருக்காது!! அவ்வளவு நேர்த்தியா கொஞ்சூண்டு பிரசாதத்தை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்திடுவார். எங்க வீட்டு கல்யாணம் எல்லாம் அவர் நடத்தி வைத்ததாகத்தான் இருக்கும். (போனதரம் சென்ற போது வேறு ஒரு ஐயர் வந்திருந்தார். முதுமையின் தள்ளாமையில் வீட்டோடு தங்கிவிட்டதாகக் கேள்விப் பட்டேன்.) மணி அடிக்கும் தகராறில் மத்தியஸ்தம் செய்ய வந்த தாத்தா ஒருவர் எங்களைத் திட்டிவிட, அவர் வீட்டுக்குத் திரும்பும்போது இருட்டில் கும்பலாக நின்று மண்ணை வாரி வீசியதை கொஞ்சம் அவஸ்தையுடன் நினைவுபடுத்திக் கொள்கிறேன்.(சிறு வயதில் இதெல்லாம் சகஜமப்பா)
எங்க ஊர் ரேஷன் கடையில் வரிசையில் நிற்பது ரொம்பக் கொடுமையான விஷயம். நிவாரண நிதி வாங்கச் சென்று விபரீதம் விளைந்த தன்மையிலேயே எங்க ரேஷன் கடை நிகழ்ச்சிகள் இருக்கும். பெரிய தலைகளெல்லாம் எங்களை மாதிரி குட்டீஸை இடித்து தள்ளி சவட்டிவிடுவார்கள். எனக்குப் பிடிக்காத வேலை அது. ஆனாலும் வீட்டில் சீனியாரிட்டி படி என் முறை வந்தபோது தம்பியிடம் தள்ளிவிட முயன்று தோற்றேன். `வயதுக்கு வருதல்’ பற்றி வகுப்புத் தோழியருக்கெல்லாம் பயமும் குழப்பமும் இருந்த காலத்தில், எப்போதடா நான் வயசுக்கு வருவேனென்று எதிர்பார்த்த ஆள் நானாகத்தான் இருந்திருப்பேன். எங்க வீட்டில் வயசுக்கு வந்திட்டா கடைக்கெல்லாம் போக வேண்டியதில்லை. ரேஷன்கடைக்குத் தம்பிதானே போவான்!! பெண்ணாயிருப்பதில் இது போன்ற சின்னச் சின்ன சலுகைகளும் கிடைக்கும்.
அண்ணன்கள் அக்காக்களெல்லாம் அப்பாவிடமிருந்து நாலடியாவது தள்ளி நின்றுதான் பேசுவார்கள், அவ்வளவு பயமும் மரியாதையும். அப்பாகூடவே உக்கார்ந்து கதை பேசும் உரிமையும் செல்லமும் எனக்கும் தம்பிக்கும்தான் உண்டு. பண்டிகைக் காலங்களிலும் விசேஷங்களிலும் ஆண்கள் பந்தியில் அப்பாவுடன் அமர்ந்து சாப்பிடும் ஒரே பெண் நான்தான். பெண்கள் எல்லோரும் அடுப்படி சமையலிலும், அதன்பின் கூட்டமாக அமர்ந்து கதை பேசுவதிலும் பிஸியாக இருக்கும்போது நான்மட்டும் அப்பா அண்ணன்களுடன் சீட்டு விளையாடுவேன். அப்பாவின் மறைவுக்கு பின்னும்கூட என் சகோதரர்களுக்கு இன்றுவரை நான்தான் செல்லம், இன்னும் அதே ஆண்கள் பந்தி, சீட்டு விளையாட்டுதான். பெரிய குடும்பத்தின் கடைக்குட்டி என்பது ஒரு சுகம்தான்.
வைகாசி விசாகம் என்பது திருச்செந்தூரின் முக்கிய திருவிழா. அதற்கு மதுரை வரையிலிருந்து கூட வண்டி கட்டிக் கொண்டு வருவார்கள்.அழகான கூண்டு வண்டிகள்.(நேற்றுதான் கரகாட்டக்காரன் படத்தில் வந்த அதே மாதிரி வண்டியை மகளுக்கு அறிமுகப் படுத்தினேன்) சாயங்கால நேரத்தில் வாசலில் தண்ணீர் தெளித்து அதில் சாய்வு நாற்காலிபோட்டு அப்பா உட்கார, நாங்கள் காலடியில் தென்னங்கீத்தில் அமர்ந்து வண்டிகளை எண்ணுவோம். விடியவிடிய வண்டி போய்க்கொண்டே இருக்கும்.வருஷம் தவறாமல் இப்படி எண்ணுவது எங்களுக்கு விசாகத்தின் அங்கமும் அடையாளமும். பேருந்துகளின் பெருக்கம் இத்தைகைய பாரம்பரிய சந்தோஷங்களைத் தொலைத்துவிட்டது. திருச்செந்தூரில் மாறிமாறி சித்திரைத் திருவிழா, வைகாசி விசாகம், ஆவணித்திருவிழா என்று மாதம் ஒரு சிறப்பு இருக்கும். ஆனால் எங்க ஊரிலிருந்து செந்தூர் செல்ல பஸ்ஸில் இடம் கிடைக்காது. கும்பலாக ரயில்வே லைனில் நடப்பது ரொம்ப ஜாலி விஷயம். ரெண்டு தண்டவாளத்திலும் ஒருவர் நடந்துகொண்டு கையை கோர்த்துக் கொண்டால் நடக்கும் அலுப்பே தெரியாது. யார் காலைக் கீழே ஊன்றாமல் வர்றாங்கன்னு போட்டி வேறே இருக்கும்.
பொங்கல், தீபாவளின்னா வாசல் அடைத்து கோலம் போடுவது பெரிய கொண்டாட்டம். அதிலும் நான்தான் கோலத்தில் ஸ்பெஷலிஸ்ட். எனக்கும் அக்காவுக்கும் பத்து வயதுக்கு மேல் வித்தியாசம் என்பதால் எஞ்சோட்டுப் பொண்ணுங்களே போட்டிக்குக்கூட யாருமில்லை. அதனால் எங்க வீட்டுக்குப் போக பக்கத்துல சொந்தக்காரங்க வீட்டுக்கும் நான் தான் போடுவேன். எல்லோரும் தூங்கப் போயிட்டாலும் கடைசி வரை எங்க அப்பா பெஞ்ச் போட்டு துணைக்குப் படுத்திருப்பாங்க. எங்க வீடே போலீஸ் ஸ்டேஷன் முன்னாடிதான், பயமே கிடையாது, ஆனாலும் துணைக்கு இருப்பாங்க. உண்மையாக எங்க வீட்டுக்கு கதவே கிடையாது. இது பற்றி சமீபத்தில் என் நண்பர் ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது அவர் அடித்த கிண்டல் `குடும்பத்தை உருவாக்குறதுக்குப் பதிலா ஒரு கிராமத்தையே உருவாக்கி வைச்சிருக்காரு, அங்கே திருட வர்றவன் எதைத் தூக்கிட்டுப் போக முடியும்’ன்னு. அடிக்கடி நான் கல்யாணம்,காது குத்து, இழவுன்னு ஊருக்கு கிளம்பினாலும் இதே கிண்டல் தொடரும்` கிராமம்னு இருந்தா நாலு நல்லது கெட்டது நடந்துகிட்டே தானே இருக்கும். இதிலே என்ன ஸ்பெஷல் இருக்கு. இதுக்கு அலையிறதிலேயே வாழ்க்கை ஓடிடப் போகுது’ என்பார்.
எங்க ஊர் சினிமா தியேட்டர் பற்றி சொல்லாட்டி பதிவே முற்றுப் பெறாது. எங்க வீட்டிலெல்லாம் நான் மருத்துவக் கல்லூரி போகும் வரை மண்ணெண்ணெய் விளக்குதான். அதில் வீட்டுப் பாடம் படிப்பது சிரமம் என்பதால் காலையில்தான் படிப்பு. அதனால் சாயங்காலத்துக்கு மேல் எல்லோரும் சுதந்திரப் பறவைகள். சுழற்சி முறையில் வீட்டிலிருந்து யாராவது சினிமாவுக்கு போவாங்க, படிக்கத் தேவையில்லாத வாண்டுகள் தினமும் அவங்க கூட தொத்திக்குவோம். வாரத்தில் எப்படியாவது ஏழுநாள் படம் பார்த்திடுவோம். தியேட்டரில் சீசன் டிக்கெட் முறை செயல்படுத்தினால் நன்றாக இருக்குமென்று கூட யோசித்துக் கொள்வோம், யாரும் நடைமுறைப் படுத்தவில்லை.

ஏதோ ரெண்டு பழைய நினைவுகளை அசைபோடலாம்னு ஆரம்பிச்சா, நிப்பாட்ட முடிய மாட்டேங்குது!!! ஒரு துளியே இவ்வளவு எழுதத் தூண்டுதுன்னா எங்க கதைக்கு ஒரு பிலிம் ரோல் பத்தாது போலிருக்கே. சீரியல் சினிமாதான் எடுக்கணும்.

Sunday, January 22, 2006

திருப்பரப்பு அருவி



புது வருடம் பிறந்ததிலிருந்தே ஒரே ஊர் சுற்றல்தான். பிரயாண அனுபவங்கள் பற்றியே ஆறேழு பதிவுகள் போடலாம் போல. ஆனாலும் போனவருடத்தின் கடைசி நாள் சென்றதிருப்பரப்பு அருவி ரொம்ப பிடிச்சிருந்தது.தமிழகத்தின் தென் கோடியில் உள்ள சிறிய, அழகான அருவி. நாகர்கோவிலில் இருந்து வந்தால் சுமார் 40 கி.மீ. தூரம் இருக்குமென்றார்கள். நாங்கள் திருநெல்வேலி தடத்தில் வந்ததால் ஆரல்வாய்மொழி கணவாய் வழியாக சென்றோம். ரோடு ரொம்ப மோசமாக இருந்தாலும்கூட சுற்றிலும் தெரிந்த இயற்கை வனப்புகள் சோர்வு தெரியாமல் செய்துவிட்டது. மரகதப் பச்சை விரித்த வயல்களும், தண்ணென்ற நிழல் பரப்பிய ரப்பர் தோட்டங்களும், கூடவே ஓடி வந்த வாய்க்கால்களும்-கொள்ளையோ கொள்ளை அழகு. மிக சமீபத்துக்கு போகும்வரை கூட அருவி இருக்கும் சுவடே தெரியவில்லை. மிகச் சின்ன அருவி,ஆனாலும் அதிலிருந்து விழும் நீரின் வேகம் அதிகம்தான். நீர் விழும் இடத்தில் அழகாக சிமெண்ட் தரை கட்டி விடப்பட்டுள்ளது. வழுக்கி விழும் அபாயமில்லை;காலில் முள்ளோ கண்ணாடித் துண்டுகளோ குத்தும் பயமில்லை; மேலிருந்து கற்களோ பாறையோ விழும் அபாயமுமில்லை. அருகிலேயே சின்ன நீச்சல் குளம் கட்டி விட்டிருக்கிறார்கள். அருவியின் சீற்றத்துக்கு பயந்த சின்ன வாண்டுகள் அதில் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அருவியின் நடை தளர்ந்து அமைதியான ஆறாக இறங்கி ஓடும் இடத்தில் ஏகப்பட்ட சினிமா படப்பிடிப்புகள் நடந்திருப்பது பார்த்த கணத்தில் புலனானது. `கடலோரக் கவிதைகள்’ முதல் `ஆண் பாவம்’ உள்ளிட்ட பல படங்களை நினைவு கூர்ந்தோம். அவரவர் சினிமா அறிவைப் பொறுத்து ஏகப்பட்ட சினி க்விஸ்கள் அரங்கேறியது.சிறு குழந்தைகள், பெற்றோர், பெரியோர் என்ற பலதரப்பட்ட கூட்டத்துடன் செல்வதற்கு ஏற்ற பாதுகாப்பான அருவியாகத் தெரிகிறது. அருகிலேயே படகுத் துறை, பெரிய இந்து வழிபாட்டுத்தலம் , சின்ன அணைக்கட்டு போன்ற அமைப்பு என சிறந்த பொழுது போக்கு இடமாக உள்ளது.கொல்லிமலை அருவி, ஏற்காடு கிள்ளியூர் அருவி,பாபநாசம் பாணதீர்த்தம் அருவி போன்றவை கிளர்ச்சியூட்டும், அட்வென்ச்சர் தனமான அருவிகள். ஆனால் திருப்பரப்பு `குடும்ப அருவி’ன்னு சொல்லலாம். இந்த பதிவு எழுத எழுதவே `நான் பார்த்த அருவிகள்’ன்னு ஒரு தொடரே போடலாம் போல் நிறைய சரக்கு கைவசம் இருப்பது நினைவுக்கு வருகிறது.எல்லோருக்கும் காலம் கடந்து சமர்ப்பிக்கும் என் `புத்தாண்டு வாழ்த்துக்கள்’

Thursday, January 19, 2006

திருப்பரப்பு அருவி



புது வருடம் பிறந்ததிலிருந்தே ஒரே ஊர் சுற்றல்தான். பிரயாண அனுபவங்கள் பற்றியே ஆறேழு பதிவுகள் போடலாம் போல. ஆனாலும் போனவருடத்தின் கடைசி நாள் சென்ற
திருப்பரப்பு அருவி ரொம்ப பிடிச்சிருந்தது.
தமிழகத்தின் தென் கோடியில் உள்ள சிறிய, அழகான அருவி. நாகர்கோவிலில் இருந்து வந்தால் சுமார் 40 கி.மீ. தூரம் இருக்குமென்றார்கள். நாங்கள் திருநெல்வேலி தடத்தில் வந்ததால் ஆரல்வாய்மொழி கணவாய் வழியாக சென்றோம். ரோடு ரொம்ப மோசமாக இருந்தாலும்கூட சுற்றிலும் தெரிந்த இயற்கை வனப்புகள் சோர்வு தெரியாமல் செய்துவிட்டது. மரகதப் பச்சை விரித்த வயல்களும், தண்ணென்ற நிழல் பரப்பிய ரப்பர் தோட்டங்களும், கூடவே ஓடி வந்த வாய்க்கால்களும்-கொள்ளையோ கொள்ளை அழகு. மிக சமீபத்துக்கு போகும்வரை கூட அருவி இருக்கும் சுவடே தெரியவில்லை. மிகச் சின்ன அருவி,ஆனாலும் அதிலிருந்து விழும் நீரின் வேகம் அதிகம்தான். நீர் விழும் இடத்தில் அழகாக சிமெண்ட் தரை கட்டி விடப்பட்டுள்ளது. வழுக்கி விழும் அபாயமில்லை;காலில் முள்ளோ கண்ணாடித் துண்டுகளோ குத்தும் பயமில்லை; மேலிருந்து கற்களோ பாறையோ விழும் அபாயமுமில்லை. அருகிலேயே சின்ன நீச்சல் குளம் கட்டி விட்டிருக்கிறார்கள். அருவியின் சீற்றத்துக்கு பயந்த சின்ன வாண்டுகள் அதில் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அருவியின் நடை தளர்ந்து அமைதியான ஆறாக இறங்கி ஓடும் இடத்தில் ஏகப்பட்ட சினிமா படப்பிடிப்புகள் நடந்திருப்பது பார்த்த கணத்தில் புலனானது. `கடலோரக் கவிதைகள்’ முதல் `ஆண் பாவம்’ உள்ளிட்ட பல படங்களை நினைவு கூர்ந்தோம். அவரவர் சினிமா அறிவைப் பொறுத்து ஏகப்பட்ட சினி க்விஸ்கள் அரங்கேறியது.
சிறு குழந்தைகள், பெற்றோர், பெரியோர் என்ற பலதரப்பட்ட கூட்டத்துடன் செல்வதற்கு ஏற்ற பாதுகாப்பான அருவியாகத் தெரிகிறது. அருகிலேயே படகுத் துறை, பெரிய இந்து வழிபாட்டுத்தலம் , சின்ன அணைக்கட்டு போன்ற அமைப்பு என சிறந்த பொழுது போக்கு இடமாக உள்ளது.
கொல்லிமலை அருவி, ஏற்காடு கிள்ளியூர் அருவி,பாபநாசம் பாணதீர்த்தம் அருவி போன்றவை கிளர்ச்சியூட்டும், அட்வென்ச்சர் தனமான அருவிகள். ஆனால் திருப்பரப்பு `குடும்ப அருவி’ன்னு சொல்லலாம். இந்த பதிவு எழுத எழுதவே `நான் பார்த்த அருவிகள்’ன்னு ஒரு தொடரே போடலாம் போல் நிறைய சரக்கு கைவசம் இருப்பது நினைவுக்கு வருகிறது.
எல்லோருக்கும் காலம் கடந்து சமர்ப்பிக்கும் என் `புத்தாண்டு வாழ்த்துக்கள்’