Tuesday, January 05, 2021

அலை-34

 அலை-34

”ஆண்டொன்று போனால் 

  வயதொன்று போகும்”.


ஆனால்  கடந்த ஆண்டோ எல்லோருக்கும் எல்லாமே தொலைந்து போனது போன்ற மாயத்தைத் தந்த பிழையான ஆண்டு.  பிறந்திருக்கும் புது வருடம் பழையன கழிந்து புதியதாக மாறட்டும். 


”வருஷம் போனால் என்ன 

வயதும் ஆனால் என்ன 

மனம் இருபதைத் தாண்டியதில்லை” 

என்பதுதான் எனது நிரந்தர சிந்தனை என்பதால் வருஷம் பிறப்பதும் முடிவதும் பெரிதாகத் தோன்றவில்லை.   இருந்தும்கூட மனசு இருபதுக்கு கூட வராமல் பள்ளிப் பருவத்துக்குள்ளேயே துள்ளிக்குதித்து முரண்டு பிடிக்கிறது.  கல்லூரி காலத்துக்குள் அலை அடிக்க வைக்கலாம் என்றாலும் முடிய மாட்டேங்குது.  காலையில் வீட்டுத் தோட்டத்தில் பூப்பறித்த நேரத்திலிருந்தே   

மனது மறுபடி ஆறுமுகநேரியின் பூப்பூக்கும் வாசத்திற்கு தாவி விட்டது.


"கொண்டையில் தாழ்ம்பூ" ன்னு ரஜினி பாடினாலும் எங்களுக்கெல்லாம் மல்லிகைதான் மனதைக் கிறங்க அடிக்கும் மலர். ரெட்டைஜடை பின்னிக்கிறதே தொங்கத் தொங்க தினமும் தலையில் பூ வைச்சிக்கத்தான். பூ கிடைக்காது என்று ஆகும் நாட்களில் பரட்டைத் தலையுடன் பத்ரகாளியாகத்தான் வலம் வருவோம். 


தினசரி  தலையில் வைக்க மல்லிக்கைப்பூவே  கிடைக்கும் என்பதில்லை. பனிக் காலங்களில் சீசன் இருக்காது. அப்போதெல்லாம் பிச்சிப்பூ எனச் சொல்லப்படும் ஜாதி மல்லிகைதான் கிடைக்கும். முல்லைப்பூ வருஷம் முழுவதும் கிடைக்கும். 


சந்தையின் எதிர்புறத்தில் பூக்கடை இருக்கும். ஒவ்வொரு விதமான பூவும் கட்டப்பட்டு உருண்டைபோல் சுற்றி வைக்கப்பட்டிருக்கும். தலைக்கு வைக்கும் பூ நெருக்கமாகவும் சாமி விளக்குக்குப் போடும் பூக்கள் நல்ல இடைவெளியுடன் சரம் போலும் வைச்சிருப்பாங்க. தலைக்கு வைக்கும் பூ எண்ணிக்கையில்தான் கிடைக்கும், 50 பூ நூறு பூ என்று எண்ணி கொடுப்பார்கள். விளக்கு சரம் மட்டும் முழம் கணக்கில் தருவாங்க. ரெகுலராக கொடுக்கும் வீடுகளுக்கு அவங்களே கொண்டு வந்து கொடுத்திட்டு போவாங்க. அதை எடுத்துட்டு போகிற பூக்கூடை மேல் எனக்கு எப்பவுமே ஒரு கண்ணு. தென்னங் கீத்துலே பண்ணி சின்னதா கைப்பிடியோட எடுத்துட்டு போறவங்க முழங்கையில் ஊஞ்சல் மாதிரி ஆடிகிட்டே போகும்.


எங்க வீடு எட்டுற தூரத்தில் இருப்பதால் வேணும்கிற சமயங்களில் நாங்களே போய் பூ வாங்கிக் கொள்ளுவோம். கடையில் உள்ளவர்கள் அப்பாவின் நண்பர்கள் என்பதால் அடிக்கடி அப்பா அங்கேதான் உட்கார்ந்திருப்பாங்க. அவங்க வீட்டுப் பையன் நடராசன் ஆரம்பப் பள்ளியில் எனக்கு வகுப்புத் தோழன். மா.முருகன் (பின் காலத்தில் ‘இதயம்’ பத்திரிக்கையின் இணை ஆசிரியர் ஆனவர்) நயினார் அண்ணனின் நெருங்கிய நண்பர். அதனால் அடிக்கடி பூக்கடையில் நாங்களும் உட்கார்ந்து கொள்ளுவோம். நடராசன் நன்றாக பூ வியாபாரம் செய்வான் . தெருவில் கூவிக்கூவி பூ விற்கும் பாங்கு அலாதியாக இருக்கும். அதையே உபயோகித்து ஒரு சுதந்திர தின விழாவில் மாறுவேடப் போட்டியில் பூவிற்பவனாக வந்து பரிசைத் தட்டிச் சென்றான். 


பண்டிகை காலங்களில் நிறைய பூ விற்பனை ஆகும் என்பதால் நாங்களெல்லாம் உதிரிப் பூக்களைக் கட்டிக் கொடுத்து உதவி செய்வோம். முதலில் விளக்குச் சரம் மட்டும் கட்டிக் கொடுப்போம். அதன் பிறகு பயிற்சியும் திறமையும் கூடியதால் தலைக்கு வைக்கும் பூவும் கட்டிக் கொடுப்போம். அந்த சமயங்களில் வீடெல்லாம் பூவாசம் தான்.


பொங்கல் சமயத்தில் சாமந்திப்பூ விளைச்சல்தான் அதிகமாக இருக்கும் அதைக் கட்டுவதும் சுலபமாக இருக்கும். கூடை கூடையாக உதிரிப் பூக்கள் வந்த மாதிரி இருக்கும், ஆனால் சீக்கிரமே கட்டி முடித்துவிடலாம், வாசம் மட்டும் இருக்காது. அந்தக் காலத்தில் பூ கட்டப் படித்தது பின் வந்த நாட்களில் கல்லூரி விழாக்களுக்குக் காகிதப்பூ மாலைகள் கட்ட உதவியாக இருந்தது. 


பள்ளி செல்லும்போது ஜடையில் பூசூடிச் செல்வது மிகவும் பிடித்த ஒன்று. காசு கொடுத்து தினமும் பூ வாங்க முடியாட்டியும் பூ வைச்சுக்க ஏகப்பட்ட தில்லுமுல்லு கதைகள் வைச்சிருப்போம். தண்ணீர் பிடிக்கப்போகும் வீட்டிலிருந்து முல்லை மொக்குகளை முதல் நாளே பறிச்சுட்டு வந்துடுவோம். எல்லார் வீட்டு புறக்கடையிலும் எப்படியும் ரெண்டு மூணு கனகாம்பரச் செடி இருக்கும். சின்னச் சின்ன லில்லிப்பூ செடி கூட அப்பப்போ பூக்கும். 


பள்ளித் தோட்டத்தில் கூட சீசனுக்கு ஏத்த மாதிரி பூக்கள் மலரும். டிசம்பர் பூக்கள் என அழைக்கப்படும் ஊதாக்கலர் பூக்கள்  காடு மாதிரி முளைச்சுக் கிடக்கும். மஞ்சள் கலரில் ஒரு கொடிமலர் வருஷம் முழுவதும் பூத்துகிட்டே இருக்கும். மதிய சாப்பாடு எடுத்துப் போகும் பாத்திரம்தான் மொக்குகளைக் கடத்தும் கண்டெய்னர். எங்க பள்ளி கார்டனர் (தோட்டக்காரர்) ரொம்ப நல்லவர். நாங்க திருட்டுத் தனமாக மொக்குகளைப் பறிப்பதைப் பார்த்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டார். 


அடுக்கு நந்தியாவட்டை மலர்கள் கொத்துக் கொத்தாக பூக்கும். ஆனால் ஆண்கள் பகுதியில் அந்த செடி இருக்கும். அதனால் சிறப்பு வகுப்பு இருக்கும் நாட்களில் எல்லோரும் போன பிறகு நைசாக சென்று பறித்து வருவோம். மறுநாள் குதிரைவால்சடை தாங்காத அளவு அவ்வளவு நந்தியாவட்டையும் கொண்டையில் ஏறியிருக்கும். நல்ல வேலையாக அரளியும் எருக்கம்பூவும் எங்கள் அடாவடியிலிருந்து தப்பித்தன.


எப்போதாவது அபூர்வமாக தாழம்பூ கிடைக்கும். முழு தாழைமடல் மகரந்தக் கொத்துகளுடன் புதுப்பெண் மாதிரி அழகாக இருக்கும். அதைச் சின்னச் சின்ன மடல்களாக வெட்டி ஜடையில்  வைத்து  தைத்து விடுவாங்க. ரெண்டு நாள் ஆனாலும் அதன் வாசம் கூந்தலிலேயே இருக்கும். நல்ல வேளையாக தருமி மாதிரி யாரும் எங்கள் கூந்தலுக்கு இயற்கையான மணம் உண்டா இல்லையா என்று பரிசோதித்துப் பார்க்கவில்லை. 


கல்யாணம் மாதிரி விசேஷங்கள் வீட்டில் வந்தால் மொத்தமாக உதிரிப்பூக்கள் சாக்குமூடையில் வாங்கி வருவார்கள்.  கும்பலாக உட்கார்ந்து பூக்கட்டுவது கல்யாண நிகழ்ச்சியின் சுவாரசியமான பாகம். வீட்டில் உள்ளவங்களுக்கு மிக நெருக்கமாகவும், அழைப்புக்கு வருபவர்களுக்கு  கொஞ்சம் இடைவெளி விட்டும், சம்பிரதாய நிகழ்வுகளுக்கு சரம் மாதிரியும் வித விதமாகக் கட்டணும். அதை ஈரத்துணியில் சுற்றி சுளவு(முறம்)மேல் வைத்து விடுவார்கள். மறுநாள் காலையில் மலர்ந்து மணம் வீசும் மல்லிகை எல்லோரையும் மயங்க வைத்துவிடும். 


ரோசாப்பூ மட்டும் ராணி மாதிரி, எப்போவாச்சும்தான் கண்ணுலே தென்படும். பெங்களூர் ரோஜாவெல்லாம் பஸ் ஏறி எங்க ஊர் பக்கம் வந்ததில்லை. அதனாலே பன்னீர் ரோஜா மட்டும்தான் கிடைக்கும். சுகந்த மணம் வீசும். ஆனால் பூமாலையில் வைச்சு கட்டினாலும் ரெண்டுமூணுதரம் குனிஞ்சு நிமிரும்போது கூட கொட்டிவிடும். உதிர்ந்த இதழ்களைப் பொறுக்கி சாப்பிடவும் ஒரு கூட்டம் அலையும் . 


இப்படி “பூவே உனக்காக” ன்னு நாங்க திரிஞ்சுகிட்டு இருந்தோம். ஆனால் இந்தக்கால இளசுங்க பாப் கட்டிங் வைச்சுகிட்டு ’அய்யே பூவே பிடிக்காது’ ன்னு  சொல்லிட்டு அலையிறாங்க. 


காதலுக்குத் தூது போனதே 

 பூக்கள்தான் அன்று;

”காதலர் தினம்” அன்று மட்டுமே ரோஜாக்கள் கெளரவிக்கப்படுவது இன்று.

அலை-33

 அலை-33

‘‘முத்துக் குளிக்க வாரீகளா” ன்னு செல்லமாகக் கூப்பிடும் தூத்துக்குடிதான் என்னை கடற்கரை ஓரமாகவே உருட்டிச் சென்று அணைத்துக்கொண்ட  அடுத்த ஊர். பள்ளிப்படிப்பு முடிந்ததும் கல்லூரி மாணவி ஆகிவிட்டேனே! கடல் கடந்துபோய்ப் படிக்காட்டியும் கடற்கரை ஓரமாகவே வடக்கு நோக்கிய பயணம்.


அப்பாவின் முயற்சியால் APC மஹாலக்ஷ்மி பெண்கள் கல்லூரியில் PUC சேர்ந்தாச்சு. முதல் தடவையாக பெண்களுக்கு மட்டுமே ஆன கல்விக் கூடத்தில் மாணவியானேன். பள்ளி இறுதிவரை ஆண்பெண் இருபாலர் சேர்ந்து படிக்கும் பள்ளிகளில் படித்துவிட்டு பெண்கள் கல்லூரியில் இணைந்தபோது ஒருவிதமான தயக்கமும் குழப்பமும் வந்ததென்னவோ உண்மைதான். கன்னித்தீவு பாணியில் தனித் தீவில் விடப்பட்ட மாதிரி பயம் கலந்த வெறுமை, அதுவரை வீட்டை விட்டு வெளியில் தங்கிப் படிக்காததால் உடனே வீட்டுக்கு ஓடிப்போய்விடத் தோன்றிய அவசரம் இப்படி எல்லா உணர்வுகளும் கலந்த கலவையாய்க் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தேன்.


ஆறுமுகநேரியின் அன்புப் பிணைப்பில் இருந்து விலகத் தொடங்கிய முதல் பயணம். 

எனது குழப்பத்துக்கு ஏத்த மாதிரியே கல்லூரி தூத்துக்குடியின் அடுத்த எல்லையில் அத்துவானக்காடு போன்ற இடத்தில் இருந்தது. அதைத் தூத்துக்குடி என்றே சொல்ல முடியாது. ஆறுமுகநேரியை விட மிகச் சிறியதாக இருந்த மாப்பிள்ளையூரணி என்ற கிராமம். கட்டிடங்கள் சாலைகள் எதுவுமே முடிக்கப்படாத நிலையில் இருந்ததால் ஒரு அமாநுஷ்யமான தோற்றத்துடன் கல்லூரி கண்முன்னே தெரிந்தது.  கூப்பிடுதூரம் வரை மனித சஞ்சாரமே இல்லை. நேர்ந்துவிட்ட ஆடு மாதிரியே அப்பா பின்னாடி போனேன்.


 கல்லூரி அட்மிசன் எல்லாம் முடிந்த பிறகு விடுதியைக் காட்ட கூட்டிப் போனார்கள். கல்லூரியின் பின்புறமே விடுதி இருந்தது

கல்லூரி கன்னித்தீவு என்றால், விடுதி மர்மத் தீவு மாதிரி தெரிந்தது. ஆள் நடமாட்டமே இல்லாமல் அமைதிப் பூங்காவாக ( இல்லை இல்லை அஸ்தமன அரங்காக) இருந்தது. ‘ப’ வடிவத்தில் மூன்று தாழ்வாரங்களும்,அதை ஒட்டிய அறைகளும் வரிசையாக இருந்தது. கோடை விடுமுறை என்பதால் எல்லோரும் வீட்டிற்கு சென்றிருப்பதால் அமைதியாக உள்ளது கல்லூரி திறந்ததும் கலகலப்பாக இருக்கும் என்று, என் மனோபாவத்தைப் புரிந்து கொண்ட அப்பா ஆறுதலாகச் சொன்னாங்க. 


எனக்கு ஒதுக்கப்பட்ட அறை சாப்பிடும் இடத்தை ஒட்டிய மூலையில் இருந்தது. விடுதிக்குள் ஆண்கள் வரக்கூடாது என்பதால் அப்பா நுழைவாயிலில் நின்று கொண்டார்கள்.  நான்மட்டும் போய் என் பொருட்களை அறையில் வைத்துவிட்டு வந்தேன். ஒரு ரூமுக்கு பத்து பேர் தங்கணுமாம். சுவரை அணைத்த மாதிரி பெட்டிகளை வரிசைப்படுத்திவிட்டு நடுவில் படுத்துக் கொள்ள வேண்டும். வீட்டிலும் அதே தினுசு படுக்கை வசதி என்பதால் எனக்கு அது பெரிய வசதிக் குறைவாகத் தெரியவில்லை. புதிய இடம்,புது தோழியர்கள் எப்படி இருப்பார்களோ என்ற கவலை மட்டும்தான்.


 சண்டை போட்டுக்கொண்டு திரிந்தாலும் தம்பி மாதிரி கம்பெனி கிடைக்காது, அடி வாங்கினாலும் அண்ணன்கள் மாதிரி வராது, திட்டும் கொட்டும் வாங்கினாலும் அக்கா அம்மா மாதிரி யாராவது கிடைப்பார்களா என்ற ஏக்கம் அப்போதே தொடங்கிவிட்டது.

வீட்டிலிருந்து வெளி இடங்களில் படிக்கப் போகும் மாணவ மாணவியரும் புலம் பெயர்ந்த தொழிலாளிகளைப் போலத்தான், நிச்சயமற்ற தன்மையும் நிரந்தரமற்ற உறவுகளும் பெற்றதுபோல் உணர்வார்கள் போலும். நானும் அப்படித்தான் உணர்ந்தேன். படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவசியமும் இல்லாமலிருந்திருந்தால் அன்னைக்கே படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பேன். ஆனாலும் விதி வலியது,என்னை அந்த அத்துவானக் காட்டில் தள்ளிவிட்டது. ‘‘ துள்ளித் திரிந்த பெண் ஒன்று துயர் கொண்டதே இன்று’’ பின்னணி இசையில் சோக கீதம் வேறே கேட்குது. நல்ல வேளையாக கல்லூரி திறக்க சில நாட்கள் இருந்ததால் அப்பாவுடனே திரும்பி வீட்டுக்கு ஓடிவந்துவிட்டேன்.


“சொர்க்கம் என்பது நமக்கு சொந்தம் உள்ள வீடுதான்” என்பது அப்போதான் மண்டையில் ஏறுச்சு. தம்பிகூட சண்டை அண்ணனைப் பார்த்து பயம் எல்லாம் ஓடிப்போயிடுச்சு. கல்லூரியில் சேர்ந்ததுமே தாணு ரொம்ப சாதுவாயிட்டான்னு வேறே எல்லாரும் சொல்லி கிட்டாங்க.சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எல்லோர் கிட்டேயும் வலியப்போய் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தேன். என்னோட வகுப்புத் தோழியர் யாரும் என் கல்லூரியில் சேரவில்லை, வெவ்வேறு கல்லூரிகளுக்குப் போயிட்டாங்க.நான்மட்டும் (பெண்)சிங்கம் மாதிரி அப்பவே சிங்கிளாகக் கிளம்பினேன். 


PUC படிப்பு ஒரு வருஷம்தான். பள்ளிப் படிப்புக்கும்  இளங்கலை (Graduate/professional) படிப்புக்கும் இடைப்பட்ட பருவம். எங்களுக்குப் பிறகு ரெண்டு வருஷத்தில் அந்த முறையையே மாற்றி +2 ம் அதன் தொடர்ச்சியாக நேரடி கல்லூரிப் பருவமும் வைச்சிட்டாங்க. ஆனால் அந்த வருஷத்தில் நான் கத்துகிட்ட நிறைய விஷயங்கள்தான் பின்னாடி ரொம்ப உதவியாக இருந்தது. வெளி உலகமும் அதன் பழக்க வழக்கங்களும் பிறருடன் பழகுவதில் ஏற்படும் சிக்கல்களும் அந்த வருஷத்தில்தான் புரிந்தது. பள்ளியிலிருந்து நேரடியாக மருத்துவக் கல்லூரி சென்றிருந்தால் நிறைய கஷ்டப்பட்டிருப்பேன்.


வீட்டில் இருந்தவரை கன்னுக்குட்டி மாதிரி துள்ளித் திரிய முடிந்தது. ஆனால் கல்லூரியில் காலடி வைச்சதுமே நிறைய பொறுப்புகள் தலையில் சுமத்தப்பட்டது மாதிரி ஆயிடுச்சு. யார்கூட நட்பாக இருப்பது,யாருடன் விலகி நிற்பது என்பதெல்லாம் புரியவே கொஞ்ச நாளாயிடுச்சு. ஒரே அறையில் தங்கியிருதவர்களெல்லாம் வெவ்வேறு பாட வகுப்புகளைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் யாருடன் நட்புடன் இருப்பது என்பதும் தெரியவில்லை.. நான் அறிவியல் வகுப்பு என்பதால் அதே வகுப்புத் தோழிகளை நாடத் தொடங்கினேன். அதில் நிறையபேர் பெண்கள் பள்ளியிலிருந்து வந்திருந்ததால் நிறைய கட்டுதிட்டங்களும் மூட நம்பிக்கைகளும் வைத்திருந்தார்கள். அதனால் நிறைய பேருடன் என்னால் சகஜமாகப் பழக முடியவில்லை.


முதல்நாள் கல்லூரியின் அறிமுக வகுப்பில் ஒவ்வொருவருடைய வருங்காலக் கனவுகளையும் பற்றி எழுதச்  சொன்னார்கள். நான் மருத்துவர் ஆக விரும்புவதாகச் சொல்லி அதுகுறித்து ஒரு கட்டுரை எழுதினேன். என்ன எழுதியிருந்தேன் என்பதெல்லாம் சரியாக நினைவில் இல்லை. ஆனால் எனது கட்டுரைதான் சிறந்ததாக இருந்தது என்று பாராட்டப்பட்டது மட்டும் நினைவில் இருக்கிறது. மேலும் அந்த வகுப்பில் 500 மார்க்குகளுக்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்ததும் நான் மட்டுமே என்பதால் அன்றைக்கே எல்லோருக்கும் தெரிந்தவளாக ஆகிவிட்டேன். படிப்ஸ் கோஷ்டியில் நம்மளைச் சேர்த்துட்டாங்க. அதனால் கல்லூரி வாழ்க்கை கொஞ்சம் பிடிக்க ஆரம்பித்ததுபோல் தோன்றியது. 


எல்லோருக்கும் பொதுவான வகுப்புகள் தமிழ், ஆங்கிலம் போன்ற மொழி வகுப்புகள். சிறப்பு வகுப்புகள் நடைபெறும் போது திக்குக்கு ஒன்றாகப் பிரிந்து விடுவோம். எனது அறைத் தோழி தனலட்சுமி என்பவள் காமர்ஸ் பிரிவில் இருந்தாள்.  ஆனாலும் நாங்கள் இருவரும்தான் நெருக்கமான தோழிகள் ஆனோம். அவள் ஆறாம் வகுப்பிலிருந்தே விடுதியில் தங்கிப் படித்தவள் என்பதால் எனக்கு வீட்டு ஞாபகம் வந்து சோகமாகிவிடும் போதெல்லாம் ஆறுதல் சொல்லி என்னைத் தேற்றுபவளும் அவள்தான். நல்ல ஒட்டகச் சிவிங்கி மாதிரி உயரமாய் ஒல்லியாக இருப்பாள். கான்வெண்ட் மாணவி என்பதால் ஆங்கிலப் புலமை நன்றாக இருக்கும். ஆங்கில நாவல்கள் வாசிக்கும் பழக்கத்தை எனக்குள் விதைத்தவளும் அவள்தான்.


 தாவணிப் பருவத்தின்  பதினாறு வயது ‘மயிலு’’

தனித்து வாழப் பழகிய

தூத்துக்குடி வாழ்க்கை!

முத்துக்கள் குடும்பவாரிசு

முத்துநகர்வாசியாகிறாள்.