Thursday, October 29, 2020

அலை-24

 அலை-24

”ஆறுவது சினம்” பொதுவான தத்துவம்தான் என்றாலும் ”ஆறாது சினம்” என்பதுதான் என்னுடைய  பால்யகாலப் பண்பு. எவ்வளவு முயற்சி பண்ணினாலும் கோபம் வரும்போது கண்ணு மண்ணு தெரியாமல் போவது என் பலவீனமும்கூட.. எங்க அப்பாவுக்கு கோபம் வந்தே பார்த்ததில்லை. எங்க அம்மாவுக்கு கோபபப்டவே நேரம் இருந்ததில்லை. யாரிடமிருந்து அந்த கோபம் என்னைத் தொற்றிக் கொண்டது என்று தெரியவும் இல்லை. 


 ரோஷத்தின் அடிப்படையில்தான் அநேக நேரங்களில் அந்தக் கோபம் இருக்கும். ஒரு புத்தகத்தை லயித்து படித்துக் கொண்டிருக்கும்போது கடைக்குப் போகச் சொன்னால் வருமே ஒரு கோபம். அந்த நேரத்தில் தம்பி தடித் தாண்டவராயன் விளையாடிக்கொண்டு தான் இருப்பான்,ஆனால் கண்ணிலே படமாட்டான். நான்தானே கண்ணெதிரிலே இருப்பேன்.பிறகென்ன ஜிவ்வுன்னு கோபம் தலைக்கேறிவிடும்.


 பெண்பிள்ளைகளை விட ஆம்பிள்ளப் பசங்க மேலே அம்மாக்களுக்கு தனிப் பிரியம்தான். கோபத்தை யாரிடம் காட்ட முடியும். படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை மூலையில் எறிய வேண்டியதுதான். 

இதேமாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் உரசி உரசி கோபம் என்பது தொடர்கதையாகவே வந்து என்னுடைய அடுத்த முகம்  ஆகிவிட்டது. வீட்டிலே உள்ளவங்களுக்கு என் கோபம் உறுத்தத் தொடங்கியபோது நான் “கோவக்காரி” என்ற அடைமொழிக்கு சொந்தக்காரி ஆகியிருந்தேன்.


 கோபம் வரும்போது கையில் இருக்கும் பொருளெல்லாம் ஃப்ளையிங் சாஸர் மாதிரி பறக்கும். எதாவது சொன்னால் கோவப்படுவாள் என்று சொல்லிச் சொல்லியே என் கோபத்தை சாணை தீட்டி விடுட்டாங்க. நானும் விஸ்வாமித்திரர் ரேஞ்சுக்கு மூக்குக்கு மேலே கோபத்தை தூக்கி வைச்சுகிட்டேன். 


ஒருதரம் சின்ன சண்டை எதுக்கோ கோபப்பட்டு முற்றத்தில் இருந்த கிணத்துலே குதிக்கப் போயிட்டேன். பக்கத்தில் நின்றிருந்த சரசக்காதான் பிடித்து இழுத்து வெளியே போட்டாள்(அந்த கிணத்தில் தலை கீழே நின்னாலே கழுத்துவரைதான் தண்ணி இருக்கும் என்பது தனிக்கதை) அதுக்குப்பிறகு நல்ல செமத்தியா அடியும் கிடைச்சுது. என்னோட கோபத்தின் பரிமாணங்களை நல்லா தெரிஞ்சுக்கிட்டவங்கதான் என்னோட நட்பாக இருக்க முடியும். அப்படி நல்ல நட்புகளும் எனக்கு அநேகம்பேர் உண்டு. அதில் ராம்கியின் நட்பு முக்கியமானது.


எங்க 25 வது திருமணநாள் விழாவில் அவன் பேசியது இன்னும் நினைவில் இருக்கிறது. ”சிவசக்தி தியேட்டர் வாசலில் பார்த்த இவளது கோபம் , வாழ்க்கையில் எவ்வளவு பிரச்னைகளை எதிர் நோக்குமோ என்று பயந்திருந்தேன். வெள்ளிவிழா கொண்டாடும் வகையில் நல்ல வாழ்க்கை அமைந்தது எழில் என்ற மாமனிதரால்தான்” என்று உருக்கமாகச் சொன்னான். உண்மையாகவே கால்கட்டுன்னு திருமணத்திற்கு சொல்வது என்னைப் பொறுத்த மட்டும் கோபத்திற்குப்பூட்டு என்றால் மிகையாகாது. எழிலுக்கு முன்னாடி இந்த பெண்சிங்கம் எலியாகிப் போனது உண்மைதான்.


கோபம்வந்தால்தான் நான் கொஞ்சம் அந்நியன்மாதிரி, மத்த நேரங்களில் காமெடி பீஸ்தான். பிரளயமே வந்தால்கூட என் கண்ணிலிருந்து பொட்டு கண்ணீர் வராது. ஆனால் சினிமாவில் பார்க்கிற மொக்கை செண்டிமெண்டல் சீனுக்கெல்லாம் பொலபொலவென்று கண்ணீர் வந்திடும். அது என்ன லாஜிக் என்று இன்னமும் புரியவில்லை.பக்கத்திலே உக்கார்ந்திருக்கிறவங்களுக்குத் தெரியாமல் நைசா கண்ணீரைத் துடைச்சுக்கிறது அடிக்கடி நடக்கும்.


பாவப்படறது, பச்சாதாபப் படறது போன்ற உணர்ச்சிகளெல்லாம் அப்போ இருந்திச்சான்னே தெரியலை. மாங்கு மாங்குன்னு அம்மா மதினியெல்லாம் வேலை செய்யும்போது காலை ஆட்டிட்டு புத்தகம் வாசித்திருக்கிறேன். அவங்களுக்கு உதவி செய்யணும்னு தோணினதே இல்லை. ஆனால் இப்போ, அதே நிலைமையில் நாம இருக்கிறப்போ “அடுத்த தலைமுறைப் பிள்ளைகளெல்லாம் ரொம்ப மோசம்; வீட்டு வேலையே செய்றதில்லை; காலாட்டிட்டு செல்போனை நோண்டிட்டு இருக்காங்க”ன்னு புரணி பேசறோம். மோசமான பழைய வார்ப்புகள் நாம்தான்.


அலங்காரம் பண்ணிக் கொள்வதில்கூட அத்துணை ஈடுபாடு இருந்ததில்லை. அதற்குரிய வாய்ப்புகளும் கிடைத்ததில்லை. பள்ளிக்குச் செல்லும்போது இரட்டை ஜடை மடிச்சுக் கட்டிட்டு போகணும். சரசக்காதான் எனக்கு மேக்- அப் அம்மிணி. தலையிலே தேங்காய் எண்ணெயை வழியத்தேய்ச்சு இறுக்கமா ரெண்டுஜடை போடுவாள். அங்கே இங்கே திரும்பினால் ரெண்டு குட்டு வேறே வைப்பாள். அந்த பாலியஸ்டர் ரிப்பனில் பூ மாதிரி விரிச்சுவிடறதுதான் பெரிய அலங்காரம். நாலுநாள் ஆனாலும் அந்த ஜடை பிரியாது, அவ்ளோ ஸ்ட்ராங்காக இருக்கும்..


முகத்துக்கு பாண்ட்ஸ் பவுடர்தான் மொத்த குடும்பத்து ஆண் பெண் எல்லா பாலருக்கும். 

முகம் கழுவ, குளிக்க எல்லாத்துக்கும் “ஆரோக்கிய வாழ்வினைக் காக்கும்” லைப்பாய் சோப்புதான். பெண்களுக்கு மட்டும் முகத்துக்கு மெருகூட்ட பச்சை மஞ்சள் உண்டு. துணி துவைக்கிற கல்லில் பச்சை மஞ்சளைத் தேய்க்கும் போது ஒரு சுகந்த மணம் வரும். அந்த மஞ்சள்தான் முகத்துக்கு பூசிக் குளிக்கணும். மஞ்சள் தேய்த்த முகத்தில் பவுடர் பூசினால் பளீரென்று முகம் இருக்கும். அறுபது வயது கடந்த பின்பும் இன்னும் முகத்தில் சுருக்கம் வராமலிருப்பது அன்று செயற்கைப் பூச்சுகளில்லாமல் பேணப்பட்ட முகப்பொலிவினால்தான்.

 பள்ளி நாட்களில் மஞ்சள் பூசவும் தடை இருக்கும். ஸ்கூல் யூனிபார்ம் வெள்ளை சட்டை என்பதால் மஞ்சள் நிறம் அதில் இறங்கி துணி துவைப்பது சிரமமாக இருக்கும். ஆனாலும் அப்பப்போ தெரியாமல் பூசிக்கொள்ளுவேன்.


இரட்டை ஜடையில் வைக்க பூவுக்கு நாங்களே நிறைய திருட்டுத்தனம் பண்ணிக்கொள்வோம். ஸ்கூல் கார்டனில் டிசம்பர் பூக்கள் என்று சொல்லப்படும் வகையில் நிறைய செடி இருக்கும். மஞ்சள் வயலட் என்று கலர் கலராகப் பூக்கும். முந்தின நாள் சாயங்காலமே அதிலுள்ள மொட்டுகளைப் பறிச்சுட்டுபோய் தண்ணீர்த் தொட்டியில் போட்டு வைச்சா மறுநாள் ஜடைக்கு வைக்க பூ ரெடி. சீசன் இல்லாத சமயங்களில் கிணற்றடிக்கு கீழ்ப்புறம் உள்ள அடுக்கு நந்தியாவட்டை செடியிலிருந்து மொட்டுக்கள் அபேஸ்.


காலுக்கு செருப்பு தேவைக்கு மட்டுமே என்றிருந்த காலம் அது. இந்தக்காலம் மாதிரி கலர் கலராகவோ துணிகளுக்கு மேட்சாகவோ இருக்காது. ஒரு செருப்பு வாங்கித் தந்தால் அது தேய்ந்து அற்று விழுந்த பிறகுதான் அடுத்த ஜோடி கிடைக்கும். நல்ல வேளைக்கு, கால் வளர்ந்து செருப்பு சின்னதாகும் முன்பே அத்துப்போயிடும். 


மழைக்குக் குடை எடுத்துப்போன நியாபகமே இல்லை. வீட்லே பெரிய கம்பிக் குடை இருக்கும், நாலைஞ்சுபேர் நனையாமல் போகலாம். மழைக் காலத்தில் யாராவது அந்தக் குடையைக் கொண்டுவந்து கூட்டிப் போவார்கள். யாரும் வராட்டி தற்காலிக மழைக்காகித குடைகளில் வர வேண்டியதுதான். வீட்டுக்கும் பள்ளிக்கும் இடையிலுள்ள சுமார் இரண்டு கிலோமீட்டரையும் நனையாமல் கடக்க முடியாது. இடையிலுள்ள கடைகளிலோ தாழ்வாரங்களிலோ நின்னு நின்னு வந்துடவேண்டியதுதான்.


அடடா! இந்த அலை ஆறாத சினத்தில் ஆரம்பித்து குடைக்குள் மழையில் முடிந்துவிட்டதே!!

அலை-23

 அலை-23

விடலைப் பருவத்திற்குரிய வியாக்கியானங்களே தனிதான். பதின்ம வயதுகளில் வரக்கூடிய கிளுகிளுப்போ காதலோ  பள்ளிப் பருவத்தில் ஏன் வரவில்லை என்று இப்போது கூட விளங்கவில்லை. படிப்பு மட்டுமே முதன்மையானதாக இருந்ததால் இருக்கலாம். வாழ்க்கைச் சூழலின் அடுத்த படிக்கட்டிற்கு ஏற படிப்பு மட்டுமே உதவும் என்பது மனதில் ஆழப் பதிந்து கொண்டிருந்த காலமல்லவா அது. 


எனக்கு முன்னால் இரண்டு அண்ணன்களும் அடுத்ததாகத் தம்பியும் இடைசொறுகலாக நானும் இணைந்து பள்ளி சென்ற நாட்கள். எல்லோருக்கும் பீஸ் கட்ட வேண்டிய நிலைமை இருந்தால் என்னோட பீஸ் மட்டும் கேள்விக்குறியாக இருக்கும். பொட்டப்பிள்ளைக்கு என்ன படிப்பு வேண்டிக் கிடக்குது, பயலுகளுக்கு பீஸ் கட்டிவிடலாம்னுதான் எங்கஅம்மாவோட ஆர்டர் வரும். அதனால் பீஸ் கட்டாமல் வீட்டுக்கு அனுப்பபட்டவர்களில் அடிக்கடி நானும் இருப்பேன். ஆனாலும் அப்பாவின் உறுதியான நிலைப்பாடு எப்படியாவது என்னை மறுபடியும் பள்ளிக்கு அனுப்பி வைக்கும். 


பசங்களுக்கு பீஸ் கட்டிப் படிக்க வைக்கலாம், பொண்ணுங்களுக்கு முடிந்தால் கட்டலாம் என்ற மனோபாவம் அந்த காலத்தில் ரொம்ப சாதாரணம். ஆனால் அந்த மனோபாவத்தால் என்னையறியாமல் அடிமனதில் விதைக்கப்பட்ட கோபம், பசங்களைவிட நல்ல மதிப்பெண்கள் எடுத்து சாதிச்சுக் காட்டணும் என்ற உறுதியை உண்டாக்கியிருந்தது. வகுப்பில் எப்பவும் முதல் மாணவியாக வரணும் என்ற பிடிவாதத்துடனேயே பள்ளிப் பருவம் முழுவதும் படித்திருக்கிறேன்.


 சக மாணவர்களைப் போட்டியாளர்களாகவே பார்த்திருந்தேன். ”அழகி” பட ஷண்முகமாக யாருமே கண்ணுக்குத் தெரியவில்லை. நாமளும் ”கோபுரங்கள் சாய்வதில்லை” சுஹாசினி தோற்றத்தில்தானே இருந்தோம். பல்லவர் பரம்பரை என கேலி செய்யப்படும் வகையில் இருந்த எடுப்பான பல் வரிசைவேறு.(இப்போமட்டும் உலக அழகி ஐஷ்வர்யா ராயாகவா இருக்கோம்.) 

படிப்பு ஒரு காரணமாக இருந்தாலும் பசங்களைப் பார்த்தால் வர வேண்டிய குறுகுறுப்பு பள்ளிப் பருவத்தில் வரவே இல்லை. ஹார்மோன்களின் வெளிப்பாடு கல்லூரிப் பருவத்தில்தான் தொடங்கியது போலிருக்கு. சக தோழிகளின் சிலபல கதைகளைக் கேட்டாலும் ஒரு பாதிப்பும் ஏற்படவே இல்லை.


 எந்நேரமும் அவனை முந்திடனும்; இவன் முதலாவதா வந்திடக்கூடாது;நாமதான் முதல் மார்க் வாங்கணும் என்ற நினைப்பே இருக்கும்போது ஹார்மோன் எங்கே வேலை செய்யும். 

வகுப்புக்குள் போட்டியாளர்கள் எனறால்  நான் , ராஜதுரை, K.மாரியப்பன் மூன்று பேரும்தான். போட்டி போட்டு படிப்போம். அதிலும் எனக்கும் ராஜதுரைக்கும்தான் கடும் போட்டியாக இருக்கும். ராம்கி நல்லா படிப்பவன் என்றாலும் போட்டிக்கெல்லாம் வரமாட்டான். நல்லா படிக்கிறவங்ககிட்டே மத்தவங்க எல்லாம் ஹோம்வொர்க் படிச்சு ஒப்பித்துவிட்டு போகணும்.சாயங்காலம் அதுவே மினி கிளாஸ் மாதிரி இருக்கும். நிறைய சந்தர்ப்பங்களில் பசங்க கூட என்கிட்டேதான் ஒப்பிச்சுட்டு போவாங்க.அதுக்காகவே என்னைத் திட்டித் தீர்க்குற கோஷ்டியெல்லாம் உண்டு. எட்டாம் வகுப்பு படிக்கட்டை சுத்தி உக்கார்ந்துதான் இந்த வேலையெல்லாம் நடக்கும்.


 கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு பிறகு சென்ற கிறிஸ்துமஸ் விடுமுறையில், என் வகுப்புத் தோழன் உதயன் அந்தக் கதையை என் மகளிடம் சொல்லி கேலி பண்ணியது கேட்க சுவாரஸ்யமாக இருந்தது. நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்றெல்லாம் வேறே சொன்னான்.


சயின்ஸ் பரீட்சை பேப்பரெல்லாம் சதானந்தன் சார் என்னைத்தான் திருத்த சொல்லுவார். கிடத்தட்ட அவர் மாதிரியே மார்க் போடறதா வேறே சொல்லுவார். சந்தோஷமாக இருக்கும். துரைப்பாண்டியன் சார் க்ளாஸ் ஜாலியாகப் போகும். நிறைய ப்ராக்டிகல் டிப்ஸ் கொடுப்பார். ஒரு வேலை செய்யும் போது அதை பாதிக்காத இன்னொரு வேலையும் சேர்த்து செய்வது நல்லதுன்னு அடிக்கடி சொல்லுவார். உதாரணமா ஒரு படிக்கட்டு ஏறும்போது எத்தனை படிகள் இருக்குதுன்னு பொதுவாக எண்ணிகிட்டே ஏறணும் என்பார். இன்னைக்கும் நான் படி ஏறும்போது என்னை அறியாமல் எண்ணிகிட்டேதான் ஏறுவேன். இதே மாதிரி நிறைய டிப்ஸ் உண்டு.


தமிழ் அய்யா வகுப்புதான் மனசுக்குப் பிடிச்சது. அவரோட இயற்பெயர் குழைக்காதன் சார் என்பதே மறந்து போய் எல்லோருக்கும் “பெரியப்பா”ன்னு தான் தெரியும்.ராம்கிக்கு அப்பா, எங்களுக்கெல்லாம் பெரியப்பா. அஸ்வதரன் மாதிரி ஆட்கள் ஏதாச்சும் குரங்கு சேட்டை பண்ணிகிட்டே இருப்பாங்க. கோபத்திலே அய்யா அடிப்பது போல் பாசாங்கு செய்வது தனி வித்தை. அவரோட கைவிரல்கள் நீளமாக இருக்கும். ஓங்கி அடிப்பது மாதிரி கையைத் தூக்கி முதுகில் தட்டும்போது தடவிக் கொடுப்பது மாதிரிதான் இருக்கும்.மாணவர்கள் மேல் அவருக்கு அவ்வளவு அன்பு. தமிழ் இலக்கணத்தை இன்றும் மறக்காமலிருப்பது அய்யா கற்றுத் தந்த விதத்தால்தான். பல்லவன் பஸ்ஸில் ஏறும்போது திருக்குறளை அடி,சீர் பிரிப்பது ; வினைத் தொகைகளை விரும்பிச் சொல்வது; இன்றைய அலைகளைக் கூடியவரை பிழையின்றி எழுதுவது எல்லாமே அய்யா கற்றுத் தந்ததுதான்.


நாங்க படிச்சப்போ +2 வெல்லாம் கிடையாது, எஸ்.எஸ்.எல்.சி.தான். எந்த க்ரூப் எடுத்தாலும் டாக்டருக்கோ எஞ்சினீயருக்கோ படிக்கலாம். கூட்டு மதிப்பெண் அதிகம் வரும் என்பதால் கணக்கு விருப்பப்பாடமாக எடுத்து படித்தேன். இப்போ மாதிரி எண்கணிதம் எல்லாம் கிடையாது. அல்ஜிப்ரா & ஜியாமெட்ரிதான். அதை சொல்லித் தந்த இப்ராஹிம் சாரை மறக்கவே முடியாது. ரொம்ப கண்டிப்பான ஆசிரியர். பசங்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனம், அப்படி ஒரு அடி அடிச்சு வெளுத்துடுவார். நாங்களெல்லாம் அவருக்கு பிடித்த மாணாக்கர்கள். அத்தனை ஆசையுடன் எடுத்தும் இறுதி பரீட்சையில் 98/100 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியின் முதல் மாணவியாகும் வாய்ப்பைத் தவற விட்டேன். 


அந்தக்கால பெருசுகளுக்கெல்லாம் யாரையாவது உதாரணம் காட்டுவது, ஒப்பிட்டு பார்த்து உசுப்பேத்துவது எல்லாம் கைவந்த கலை. எவ்வளவு நல்லா படிச்சாலும் யாருடனாவது ஒப்பிட்டுக் கொண்டே இருப்பாங்க. பள்ளிப் படிப்பு முடிச்சு கல்லூரி போகணும்கிற கால கட்டத்தில் அங்கேயும் ஒரு செக் . எனக்கு முன்னாடி படித்த இந்திராக்காதான் எனக்கு அளவுகோல்னு வைச்சிருப்பாங்க. இந்திராவைவிட ஒரு மார்க் அதிகம் எடுத்தால் கல்லூரிக்குப் போகலாம், இல்லாட்டி வீட்லே அடைபட வேண்டியதுதான்னு சொல்லிட்டாங்க. கரெக்டா 2 மார்க் அதிகம் வாங்கி 503/600 வாங்கி பந்தயத்தில் ஜெயிச்சுட்டேன், அப்போதெல்லாம் 500மார்க் வாங்குவதுதான் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண்ணாக இருக்கும். கவெர்ன்மெண்டோட மெரிட் ஸ்காலர்ஷிப்புக்கும் தேர்வாகிவிட்டேன். அப்படி ஒரு முனைப்போட படிக்காமல் போயிருந்தால் இன்னைக்கு என்னவாக ஆகியிருப்பேனோ தெரியாது.


என்னோட வகுப்புத் தோழி ஸ்ரீலக்ஷ்மி, டாக்டரோட பொண்ணு. அந்தக்காலத்திலேயே அவங்க அம்மா ஸ்டைலா கார் ஓட்டிட்டு வந்து அவளை ஸ்கூலில் இறக்கிவிட்டுட்டு காயல்பட்டிணத்தில் இருந்த அவங்க கிளினிக்குக்குப் போவாங்க.எங்க ஹெட்மாஸ்டர் அவளை எப்பவும் பேர் சொல்லிக் கூப்பிட மாட்டார், டாக்டரம்மான்னுதான் கூப்பிடுவார். நல்லா படிக்கிற பிள்ளைகளைவிட நல்லா படிச்சவங்களோட பிள்ளைகளுக்கு அதிக மரியாதை கிடைப்பதை அப்போதுதான் உணர்ந்து கொண்டேன். அப்போ விழுந்த வித்துதான் என்னை டாக்டராக்கியிருக்க வேண்டும்.


 இதே விஷயத்தை பின்னாட்களில் என் பொண்ணும் சிலாக்கியமாக சொல்லியிருக்கிறாள். அவளோட பேரண்ட்-டீச்சர் மீட்டிங் போகும்போது, அத்தனை பெர்றோர்களையும்விட டாக்டர் பொண்ணு என்பதால் அவளுக்கு தனி அங்கீகாரம் கிடைப்பதாகச் சொல்லுவாள்.


நல்ல மதிப்பெண்கள் வந்ததும் பி.யூ.சி. படிக்க பாளையங்கோட்டையில் உள்ள சாரா டக்கர் கல்லூரிக்கு சென்றதும், இருகரம் கூப்பி சேர்த்துக் கொள்வதாகச் சொல்லிட்டாங்க. ஆனால் அங்கே சேர முடியாமல் மறுபடியும் பீஸ் கட்டும் பிரச்னை. அப்பாவின் நண்பர் வீரபாகு அவர்களின் கல்லூரியான A.P.C வீரபாகு. கல்லூரி , தூத்துக்குடியில் இலவசமாக சேர்க்கப்பட்டேன். அங்கேயும் கல்லூரி முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர நினைக்கும்போது, அங்கிருந்து விடுவிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. சான்றிதழ்களைப் பிடிச்சு வைச்சுகிட்டாங்க. நல்ல மாணவிகளை இழக்க விரும்பவில்லையாம். மறுபடியும் அப்பா தலையிட்டு சான்றிதழ்களையெல்லாம் வாங்கிட்டு வந்தாங்க.


மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் வாழ்க்கையின் பாதையும் போக்கும் மாறியது. நயினார் அண்ணன் படித்து முடித்து வேலைக்கு வந்துவிட்டதால் எனது படிப்பு சம்பந்தமான காரியங்களை அவனே பார்த்துக் கொள்ள ஆரம்பித்தான். அதன்பிறகு படிப்பும் வாழ்க்கைத் தரமும் முன்னேற்றப் பாதையில் தடங்கலின்றி ஓட ஆரம்பித்துவிட்டது. அண்ணன் வங்கியில் வேலை பார்த்ததால் வங்கியிலிருந்து படிப்புக் கடன் உதவி இலகுவாகக் கிடைத்தது. மெரிட் ஸ்காலர்ஷிப் தடையின்றி வரத் தொடங்கியது. எல்லா இடர்ப்பாடும் நீங்கிய பிறகுதான் ஹார்மோன்களே சுரக்கத் தொடங்கி காதல்களம் களை கட்டத் தொடங்கியது. அது பெரிய கதையாச்சே!


பெண்குழந்தைகளின் படிப்பு எவ்வளவு சோதனைகளுக்கு உட்பட்டது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்த குடும்பம் என்பதால் எங்களின் அடுத்த தலைமுறை பெண்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்பதில் எல்லோரும் ஒருமித்த கருத்து கொண்டுள்ளோம்.


பெண் குழந்தைகளைப் 

படிக்க வைப்போம்

அறிவார்த்தமான 

அடுத்த தலைமுறையின் 

ஆணிவேர் பெண்களே!!

அலை-22

 அலை-22

“நாவின் சுவை அரும்புகள் மலரட்டும்” 

 யூ ட்யூப் ஸ்டெஃபியின் ரெசிபிகளைப் பார்த்து தினம் தினம் புதுவிதமாக சமைத்தாலும் சுவை அரும்புகள் பால்ய காலத்திற்கே பயணிக்கிறது. ஒரேவிதமான சமையலை அறுசுவை எண்சுவை என்று வேறுபடுத்திக் காட்டும் திறமை மிக்கவர்கள் எண்பதுகளின் அம்மாக்கள்.


எங்க வீட்லே தினமும் சோறு+குழம்புதான். 365 நாளும் அதே ரெசிபிதான்.  அதை சலிப்பில்லாமல் சாப்பிட வைக்க எத்தனை தந்திரங்கள் கையாளப்படும். சாம்பாரில்கூட இத்தனை விதங்களா என்று அதிசயிக்க வைக்கும் கைமணம். 


பருப்பும் காய்கறிகளும் போட்டு செய்யப்படும் சாம்பார்தான் பொதுவாக இருக்கும். அதிலேயே பருப்பு சேர்க்காமல் தேங்காய் அரைத்துக் கலக்கி சட்டி நிறைய வைத்தால் “வெள்ளைக் குழம்பு”. புளிப்பும் காரமும் தூக்கலாக இருக்கும். அதே குழம்பில் வறமிளகாய், சீரகம், வெங்காயம் எல்லாம் அரைத்து கலக்கினால் ”அரைத்துவைத்த குழம்பு”.


 அதை அம்மியில் அரைச்சுக் கொடுக்கிறவங்க கை அன்னைக்கு முழுதும் எரிச்சலாகவே இருக்கும். தேங்காய் எண்ணை போட்டு எரிச்சலைத் தணிச்சுட்டு அலைவாங்க. அதிலே கொஞ்சம் கொத்துமல்லித் தழைகளைச் சேர்த்து கொதிக்க வைத்தால் “கொத்தமல்லி சாம்பார்”. சின்ன வயசுலே கொத்துமல்லி சாம்பார் வாசமே பிடிக்காது. முனங்கிக் கொண்டேதான் சாப்பிடுவோம். 


எல்லா மசாலாக்களையும் வறுத்து உரலில் போட்டு உலக்கையில் இடித்து  தயாராகும் பொடியைக் கலக்கி வைத்தால் “இடிசாம்பார்”, அன்று முழுவதும் வீடே மணக்கும். சாம்பார் கணிசமான அளவில் தேவைப்பட்டால் அதனுடன் வறுத்த அரிசியையும் சேர்த்து பொடி பண்ணுவாங்க. அது கொஞ்சம் வித்தியாசமான மணம் கொடுக்கும். இன்னைக்கும் ஆறுமுகநேரியில் இருந்து எனக்கு இடிசாம்பார் பொடி வந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் உரலில் இடித்து அல்ல, மிக்ஸியில் பொடித்து. 


குழம்பையே கொஞ்சம் வேறுபடுத்தி வைப்பதால் இன்னும் நிறைய பெயர்களில் ஐட்டங்கள் வரும். புளி சேர்க்காமல் தக்காளி மட்டும் போட்டு மசாலா வறுத்து அரைத்து வைக்கும்போது கிடைக்கும் “புளில்லாக் கறி” (புளி இல்லாக் குழம்பு). காய்ச்சல் வந்து படுத்து எழுந்திருக்கிறவங்களுக்கு அம்மா செய்யும் ஸ்பெஷல் குழம்பு (காரம் குறைவாக இருக்கும்). அதிலே மிதக்கும் உருளைக்கிழங்கின் சுவைக்கு ஈடு கிடையாது. இட்லிக்கும் தொட்டுக்கொள்ள ஏதுவானதாக இருக்கும்.


மங்களகரமான மஞ்சள் கலரிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு மழையில் நனைந்த பனைமரம் நிறத்திலும் குழம்புகள் வைக்கப்படும். புளியிலேயே காயெல்லாம் வேகவைத்து செய்யப்படும் “புளிக்குழம்பு” குழந்தைகளின் வில்லன். அதை அட்ஜஸ்ட் பண்ண கெட்டிப் பருப்பு (உப்பு பருப்பு) வைச்சிடுவாங்க. தப்பிச்சோம் பிழைச்சோம்னு பருப்புசாதம் சாப்பிட்டுடலாம். அன்னைக்கு ஒருநாள் மட்டும்தான் பருப்பு கெட்டியாகவும் கிடைக்கும்.


 இதே புளிக்குழம்பை பிரசவித்த அன்னையருக்கு செய்வாங்க பாருங்க, அப்படி ஒரு சுவையாக இருக்கும். நிறைய பூண்டு போட்டு நல்லெண்ணெய் தூக்கலா ஊத்தி, கெட்டியாக செய்வாங்க. ரெண்டு மூணு நாள்கூட கெட்டு போகாது. ஆனால் எங்களை மாதிரி பொது ஜனங்களுக்கு துளி கூடக் கிடைக்காது. சீக்ரெட் தயாரிப்பு.


தேங்காய் விலை குறைவாக இருக்கும் போது ”சொதி குழம்பு”ன்னு வைப்பாங்க. கல்யாண வீடுகளில் இரண்டாம் நாள் “சொதி விருந்து” நடக்கும். அந்த பாணியில் எப்போதாவது வீட்டில் செய்வாங்க. எல்லா காய்களும் தேங்காய்ப் பாலிலேயே வேகும்.  உடனே சாப்பிட்டுறணும். சீக்கிரம் கெட்டு போயிடும். 


எப்பவாவது ரசம் வைப்பாங்க. காய்ச்சல் வந்தவங்களுக்குதான் பொதுவாக ரசம் வைப்பதால் நாங்க அந்த திசைக்கே போறதுல்லை.

என்னைக்காவது குழம்பு டக்குன்னு தீர்ந்துடுச்சுன்னால் அவசரமாக “புளித்தண்ணீர்” தாளிச்சுக்குவாங்க. வற மிளகாய் கிள்ளிப்போட்டு பெருங்காயம் சேர்த்து புளிகரைத்து கொதிக்கவிட்டால் இன்ஸ்டண்ட் குழம்பு ரெடி. சில நேரங்களில் அவசர அடியாக தயாரிக்கப்படும் “பச்சப்புளி”இன்னொரு வகை. காட்ட சாட்டமாக இருக்கும்.சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ரெண்டையும் பொடியாக நறுக்கி புளித்தண்ணியும் நல்லெண்ணெயும் கலந்து கையிலேயே பிசைவாங்க. சுடு சோறில் போட்டு சாப்பிட்டால் சுவையோ சுவைதான். 


மோர்க்குழம்புலேயும் ரெண்டு விதமா செய்வாங்க. கொஞ்சம் புளிக்காத மோர் என்றால் வெறுமனே தாளிச்சுக் கொட்டி இரவு சாப்பாட்டுக்கு தந்திடுவாங்க. அதுவே புளிச்ச மோராக இருந்தால் மசாலாவெல்லாம் அரைச்சு காய்கள் போட்டு கொழுகொழுன்னு வைப்பாங்க. ஆனால் அநியாயத்துக்கு அதுலே வெண்டைக்காய் அல்லது சேப்பங்கிழங்குதான் போடுவாங்க. ரெண்டுமே வழுவழுப்பாக இருப்பதால் மோர்க்குழம்பு மேலேயே அந்தக் காலத்தில் ஒரு வெறுப்பு இருந்தது. 


இதுவெல்லாம் போக இட்லி சாம்பார் தனி சுவை . துவரம் பருப்பு, பாசிப்பருப்பு எதுலே வேணா செய்யலாம்.  ராத்திரி சமையல் முடிஞ்சதும் அந்த கங்கு(தணல்)லேயே பருப்பு வேகப்போட்டிருவாங்க. கத்தரிக்காய் சின்ன வெங்காயம் எல்லாம் அதுகூடவே வேகும். இளஞ்சூட்டில் வேகும் பருப்பில் செய்யப்படும் சாம்பார் தனித்த சுவையுடன் இருக்கும்.


விடிய விடிய கதைகேட்டுட்டு  வெள்ளைக்குழம்பு மஞ்சளா இருக்கே; புளிக்குழம்பிலே 'புலி'யைக் காணுமே; பச்சப்புளி கருப்பா இருக்குதேன்னு எல்லாம் ஆராய்ச்சி பண்ணக்கூடாது. சுவைகளை ரசிக்கணும்.


குழம்பு மட்டும்தான் வித விதமாக இருக்கும் என்பதில்லை. ஒவ்வொரு குழம்பிற்கும் அதற்கேற்ற தொடுகறிகள்(side dish) கூட ஸ்பெஷலாகத்தான் இருக்கும்.


  பொதுவான சாம்பார், வெள்ளைக் குழம்பு  கூடவெல்லாம் எந்தக் காய், பொறியல் வேண்டுமானாலும் ஜோடி சேர்ந்துக்கும். இடி சாம்பாருக்கு அவியல்தான் சரியான இணை. புளிக் குழம்புக்கு கடலைத் துவையல்தான் சிறப்பு. சொதி குழம்புக்கு இஞ்சி துவையல் கூடுதல் சுவை கொடுக்கும். புளிப்பு தூக்கலான குழம்புகள் எல்லாத்துக்கும் கூழ் வத்தல்தான் சரியான சைடு டிஷ். மோர்க்குழம்புக்கு எலுமிச்சை அல்லது மாங்காய் ஊறுகாய் பொருத்தமாக இருக்கும். 


எத்தனை விதமாக குழம்புகள் செய்யப்பட்டாலும் சாம்பார்தான் எங்கள் எல்லோருக்கும் அன்றைய கதாநாயகன். மண்பானைச் சோறும் சிரட்டை அகப்பையில் மொந்து ஊற்றப்பட்ட சாம்பாரும் எங்களை எல்லா நோய்களிலிருந்தும் தப்பிக்க வைத்து ஆரோக்கியமாக வளர்த்திருக்கிறது. 


”நாவின் சுவை அரும்புகளை மீட்டியது 

நாகம்மா(எங்க அம்மா)வின் நளபாகம்”

அலை-21

 அலை-21

”தைப்பொங்கல்”

பிக்னிக் அல்லது டூர் போறதுக்கு முன்னாடி, அதற்கு செய்யப்படும் முன்னேற்பாடுகள் பிக்னிக்கை விட சுவையாக இருக்கும்.அதே மாதிரிதான் பண்டிகைகள் வருவதற்கு முன்பு செய்யப்படும் ஏற்பாடுகளும். முக்கியமா தைப் பொங்கலுக்கு முன்னாடிதான் ஏகப்பட்ட வேலைகள் இருக்கும். மார்கழி மாதம் தொடங்கியதுமே  சாணிப் பிள்ளையார் கோலத்தில் பூச்சூட்டிக் கொள்வார். காலையிலேயே மார்கழி மாத பஜனையும் தொடங்கிவிடும். 


பொங்கல் வைக்க அடுப்புக்கட்டி செய்ய ஆரம்பிப்பதிலிருந்தே பொங்கல் வேலைதான். அது ஒரு பெரிய தொடர்கதை மாதிரி மாசம் முழுக்க ஓடும். களிமண்ணில்தான் அடுப்புக்கட்டி செய்யணும், ரெடிமேட் மண் அடுப்பெல்லாம் உபயோகிக்கக்கூடாது. இப்போ மக்கள் செய்யுற மாதிரி வீட்டுக்குள் அடுப்பில் பொங்கல் வைப்பதில்லை, முன்வாசலில்தான் பொங்கல் வைப்போம். சூரியன் உதிப்பதற்குள் பால் பொங்கணும். 


வீட்டிலிருந்து ரொம்ப தூரமா உள்ள வயக்காட்டில்தான் களிமண் கிடைக்கும், பச்சைக் களிமண் எடுக்க விடமாட்டாங்க. வரப்பு ஓரம் இருக்கும் காய்ந்த களிமண்ணை எடுத்து வந்துதான் ஊற வைக்கணும். அப்புறம் அதை வட்டமா பரப்பிட்டு நடுவிலே குடம் குடமா தண்ணீர் ஊற்றி மிதிக்கணும்.


 நாலைஞ்சு குட்டீஸ் அதுலே நின்னு குதிச்சு விளையாடினாலே பாதி மண் இளக ஆரம்பிச்சிடும். அப்புறம் மண்ணை புரட்டி விட்டு மறுபடி மறுபடி மிதிச்சு பதத்துக்கு கொண்டு வரணும். விளையாட்டா கொஞ்ச நேரம் மிதிக்கும் போது ஜாலியாக இருக்கும். அப்புறம் கால் வலிக்கும், களிமண்ணுக்குள்ளே கால் புதைஞ்சுகிட்டு இம்சை பண்ணும், எப்போடா இதிலிருந்து தப்பிக்கலாம்னு பொடிசுங்க ரெடியா இருக்கும். 


நல்லா பதத்துக்கு வந்தப்புறம் மண்வெட்டி அல்லது சாந்து கரண்டி வைச்சு களிமண்ணை போணிச்சட்டி ( குத்து போணி) அல்லது சிலிண்டர் வடிவ டப்பாவில் அடைக்கணும். அடிபாகம் தட்டையாக இருக்கக்கூடாது, வளைஞ்ச மாதிரி இருக்கணும். இடைவெளி இல்லாமல் கெட்டியாக மண்ணை அடைச்சுட்டு பாத்திரத்தைத் தலை குப்புற தட்டும்போது அழகான “அடுப்புக்கட்டி” வந்துடும். 


அதை மாதிரி மூணு அடுப்புக்கட்டி போட்டல்தான் ஒரு அடுப்புக்கு சரியாக இருக்கும். சில சமயங்களில் ரெண்டு அல்லது மூணு அடுப்புகூட வைப்பாங்க. புதுசா கல்யாணம் ஆன ஜோடி இருந்தால் கண்டிப்பாக மூணு அடுப்புதான். அதனால் ஏழு கட்டி வரை ரெடி பண்ணணும். எங்க வீட்டுக்கு மட்டும்னு பண்ண முடியாது. பக்கத்து வீட்டு பெரியம்மா, மாரி மதினி எல்லாருக்கும் சேர்த்துதான் செய்யணும். அதனால் இருபதுக்கு குறையாமல் அடுப்புக்கட்டிகள் அணிவகுத்து உட்கார்ந்திருக்கும்.


வாசலில் பூசணிப் பிள்ளையார் வைக்கிற வீடுகளில் சிறு வீட்டுப் பொங்கல்னு ரெண்டாவது நாள் வைப்பாங்க. சிறுபிள்ளைகளுக்கான பொங்கல் .அதுக்கு தேவையான அடுப்புக்கட்டிகளும் செய்யணும். அளவு சிறியதாக டம்ப்ளர் அச்சில் செய்யணும். அதெல்லாம் எங்க சொத்து. தனியா தூக்கி வைச்சுக்குவோம்.


இந்த கட்டிகளெல்லாம் காய்வதற்கே ஒரு வாரத்துக்கு மேலே ஆயிடும். மழை வந்தால் நனையாத மாதிரி எதாவது ஒரு தார்சா(திண்ணை)வில் தூக்கி வைச்சிடணும். முதல் ரெண்டுநாள் கீறல் விழுத்திடாமல் இருக்க அப்பப்போ தண்ணீர் தெளிச்சு வைப்பாங்க.


எங்க வீடெல்லாம் பொங்கலுக்கு பொங்கல்தான் வெள்ளை அடிப்பாங்க. வெள்ளை அடிக்கிறதுக்கு முந்தி வீட்லே உள்ள பாத்திரங்கள், டப்பாக்கள், மத்த எல்லா அசையும் பொருட்களும் வெளியே வந்திடும். ரொம்ப நாள் கண்டு கொள்ளப்படாமல் இருந்த வெண்கலப் பாத்திரங்களும் அதில் அடக்கம். எல்லாவற்றையும் கழுவி துடைத்து காயவைத்து, வெள்ளை அடித்து காய்ந்ததும் வீட்டுக்குள் எடுத்துட்டு போகணும். மரக்கட்டில், மேஜை எல்லாம்கூட வெளியே வந்திடும்.  


இந்த வெண்கல பாத்திரங்கள் இருக்கே, அதுதான் எங்க எதிரி. கலரே மாறி கறுத்து போய் இருக்கும். அதையெல்லாம் புளி போட்டு பழுப்பு நிறம் வரும் வரை தேய்க்கணும். எவ்வளவு தேய்ச்சாலும் கலர் மாறாத ஐட்டங்களும் அதில் இருக்கும். மறுபடி சாம்பல் அல்லது திருநீறு போட்டு தேய்த்து பாலிஷ் போடணும். மறுபடியும் பரணுக்குப் போற ஆசாமிகளுக்கு இவ்வளவு பவிசு தேவையான்னு தோணும். ஆனால் பொங்கல் பானை வெண்கலத்தில்தான் இருக்கும். வேறே வழியே இல்லை, தேய்க்க வேண்டியதுதான். எங்க வீட்டு குத்து விளக்கு கூட பொங்கலுக்கும் தீபாவளிக்கும்தான் பரணை விட்டு கீழே இறங்கும். 


வெள்ளை அடிப்பது பொங்கலுக்கு ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடிதான் நடக்கும். அப்போதான் அம்மாவுக்கு நேரம் கிடைக்கும். வசதியானவங்க ஆள் வைச்சு அடிப்பாங்க, ஆட்கள் நிறைய உள்ள வீடுகளில் அவங்களே அடிச்சுப்பாங்க.  இப்போ உள்ள மாதிரி ஏசியன் பெயிண்ட், பிர்லா பெயிண்ட் எல்லாம் கிடையாது. ஒன்லி சுண்ணாம்புதான். எங்க ஊர் சந்தையில் சுண்ணாம்பு விற்பனை படு ஜோராக நடக்கும். ஊரைச்சுத்தி நிறைய சுண்ணாம்புக் காளவாய்களும் உண்டு.சுண்ணாம்பு சுப்பிகளேகூட ரகம் ரகமாய் இருக்கும்.


சுண்ணாம்பு கலக்கவே தனியா மண்பானைகள் ரெடியாக இருக்கும். அதில் சுண்ணாம்பு சுப்பிகளைப்போட்டு இளஞ் சூடாக தண்ணீர் ஊத்தணும். சிப்பிகள் கரைஞ்சு நுரைச்சுகிட்டு சூடாகி சுண்ணாம்புக் கரைசல் ரெடியாகிவிடும். முந்தின நாளே கரைச்சு வைச்சிடுவாங்க. 


சுண்ணாம்பு சுவரில் அடிக்க பிரஷ் எல்லாம் கிடையாது. தென்னை மட்டையின் முனையை சுத்தியல் வைச்சு நசுக்கி ப்ரஷ் மாதிரி பண்ணிடுவாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒரு மட்டை கிடைச்சிடும். சின்னச் சின்ன டப்பாக்களில் சுண்ணாம்பு எடுத்துகிட்டு ஆளாளுக்கு ஒரு சுவரை ரிசர்வ் பண்ணிக்குவோம். சின்னவங்களெல்லாம் குச்சி வீட்டுக்கு வெள்ளை அடிப்போம். பெரிய அண்ணன்களெல்லாம் ஓட்டு வீட்டுக்கு அடிப்பாங்க. உயரத்தில் அடிக்க ஏணியெல்லாம் கிடையாது. மேஜையை போட்டு, அதுவும் எட்டவில்லை என்றால் மேலே ஸ்டூல் போட்டு அடிப்பாங்க.


 இந்த வேலை மராமத்துகளெல்லாம் முடியவும் போகிப்பண்டிகை வரவும் சரியாக இருக்கும். 

காய வைத்திருக்கும் அடுப்பு கட்டிகளுக்கு வெள்ளை அடிக்கணும். காலையில் அடிச்சிட்டா சாயங்காலம் அது காய்ந்ததும், சின்னச் சின்ன கோடுகளாய் காவி அடிக்கணும். அவங்க அவங்க கற்பனையைப் பொறுத்து டிசைன் எல்லாம் போடுவோம்.அடுப்புக்கட்டி அலங்காரமாய் ரெடி.


 வீடு முழுக்க வெளிப்புற சுவரில் இடுப்பளவுக்கு காவி அடிக்கணும். முதலில் நேர் கோடாய் பார்டர் வரைஞ்சுக்கணும். கீழே வரிசையாக இடைவெளி விட்டு கோடு போடணும்.ரெண்டு கோட்டுக்கும் நடுவில்  V மாதிரி போடணும். அதென்னவோ வருஷா வருஷம் இந்த நடைமுறை மாறுவதே இல்லை. வெள்ளை அடித்த சுவரில் செம்மண் காவி கோடு கட்டி நிற்பது தனி அழகுதான். 


பொங்கல் வைக்க வேண்டிய இடத்தில் காவி அடித்து பார்டர் கட்டிடணும்.அடுப்புக் கட்டிகளை ராத்திரியே காவி பார்டருக்குள் கொண்டுவந்து வைத்து அடுப்புகளை செட் பண்ணிடணும். கோலம் போடுவது, மாவிலை கட்டுவது என்று அதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும்.


பொங்கல் அன்று அதிகாலையிலேயே முன்வாசலில் அடுப்பு பக்கத்தில் குத்துவிளக்கு வைத்து அதன் முன்பு தலை வாழை இலை விரிக்கப்பட்டிருக்கும். அதில் ஊரிலுள்ள அத்தனை காய்கறிகளும் ரெண்டு மூணுன்னு அடுக்கப்பட்டிருக்கும். நிறைநாழியில் நெல்லு வைச்சிருப்பாங்க. குத்துவிளக்குக்கு காவல்காரன் மாதிரி கரும்பு நிறுத்தப்பட்டிருக்கும். பனங் கிழங்கு சீசன் அப்போதுதான் என்பதால் பெரிய கட்டு வைச்சிருப்பாங்க.


எங்க அம்மாவும் மதினியும் அதிகாலையில் குளித்துவிட்டு பொங்கல் பானையை ரெடி பண்ணுவாங்க. எங்க அம்மா காலையிலேயே குளிப்பது பொங்கல் அன்று மட்டும்தான் இருக்கும். தீபாவளி அன்னைக்குக் கூட பலகாரமெல்லாம் செய்துட்டு கடைசியாகத்தான் குளிப்பாங்க. பொங்கல் பானையின் கழுத்தில் மஞ்சள் குலை கட்டப்பட்டிருக்கும். பச்சரிசியைக் களைந்து அந்த கழனித் தண்ணீரை பொங்கல்பானையில் முக்கால் பாகம் ஊற்றுவாங்க. சர்க்கரைப் பொங்கலுக்கு அடுத்த பானை ரெடியாகும். 


பானைகள் அடுப்பில் ஏற்றப்பட்டதும் தீ போடுவது ருசிகரமான விஷயம். பனை ஓலையில்தான் தீ போடணும், விறகு பயன்படுத்தக்கூடாது. மூணு பக்கத்திலிருந்தும் தீ போடணும், ஆளுக்கு ஒரு மூலை. தீ போடும் திறமையைப் பொறுத்து யார் பக்கம் தண்ணீர் பொங்குதோ அவங்க ஜெயிச்சவங்க. ஓலையில் தீ போடுவது சாதாரண வேலையில்லை. காத்து திசை மாறினால் முகமெல்லாம் சிவந்துவிடும், பார்த்து பக்குவமா போடணும். 

பால் பொங்கியதும் பெண்கள் எல்லோரும் சேர்ந்து கொல(குலவை) விடுவாங்க.


 அரிசியை பானையில் போட்டு பொங்கல் வேக ஆரம்பிக்கும். அதுக்கு பிறகு தீயை தணித்து பக்குவமாக பண்ணுவது அம்மா வேலை. பால் பொங்கிடுச்சா என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் பரஸ்பரம் விசாரித்துக் கொள்வார்கள். பொங்கல் இறக்கியதும் உள்ள தணலில் பனங் கிழங்குகளை சொருகி வைத்துவிடுவோம். சுட்ட கிழங்கு ரொம்ப சூப்பராக இருக்கும்.


பொங்கல் பானைகளை அடுப்பு முன் இறக்கி வைத்து சிம்பிளாக ஒரு பூஜை பண்ணியதும், முதலில் காக்காவுக்குத்தான்  சோறு வைக்கணும். சின்ன தட்டில் பொங்கல், சர்க்கரைப் பொங்கல் எல்லாம் வைத்து எல்லாரும் கூட்டமாக நின்று “கா கா “ என்று கூப்பிட்டால் நாலைந்து காக்காவாவது வந்து சாப்பிட்டுச் செல்லும். அதற்குப் பிறகுதான் எங்களுக்கு சாப்பாடு கிடைக்கும். காக்கா வராட்டி மொட்டை தட்டட்டியில் கொண்டுபோய் வைத்து காத்திருக்கணும். காக்கா வாய் வைச்சாதான் நமக்கு சாப்பாடு! ஆனாலும் நாங்களெல்லாம் அதுக்கு கலங்குறவங்க கிடையாது. கரும்புத் துண்டும் சுட்ட கிழங்கும் கைவசம் எடுத்துட்டு சிட்டாய்ப் பறந்திருப்போம்.


பொங்கலோ பொங்கல் 

பொருத்திப் பார்க்கிறேன் 

வாசலில் வாசமாய் இருந்தது அன்று

கேஸ்அடுப்பில் ரெசிபி பார்த்து இன்று!

அலை-20

 அலை-20

கூழ் வற்றல் வடகம் சாப்பிட ஆசைப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் அதை செய்யும் கலை இருக்குதே, அது ஒரு வரலாறு. போனவாரம் சீதாவும் சிவகாமியும் ஈரோட்டுக்கு வந்திருந்தபோது ஒரு பெரிய டப்பா நிறைய கூழ் வத்தல் போட்டு தந்திட்டுப் போனாங்க. ரொம்ப சுவை.


கோடை விடுமுறை ஆரம்பித்ததுமே வத்தல், வடகம் எல்லாம் போடற வேலையும் ஆரம்பிச்சுடும். கையளவோ தம்ளர் அளவோ எல்லாம் கிடையாது. அண்டா அண்டாவாத்தான் பெரிய அளவில் செய்வாங்க. முதல் நாள் சாயங்காலமே அரிசியை ஊற வைச்சு தோசைக்கு அரைப்பதுபோல் மையாக அரைச்சு வைச்சிடுவாங்க.


 அநேகமா எப்பவும் எங்க குப்பம்மா மதினிதான் நடமாடும் க்ரைண்டர். எங்க வீட்டு ஆட்டு உரல் தரையிலேயே பதிக்கப்பட்டிருக்கும், பெரிய சைஸ் கல்.எங்க மதினி ரொம்ப குள்ளமா இருப்பாங்க. அவங்க சைஸுக்கு அந்த முழு உரலையும் சின்னக்கையால் சுத்துவது பெரிய திறமைதான். சலிக்காமல் மாவாட்டுவாங்க. அரிசி மாவில் உப்பு போட்டு கலக்கக் கூடாது. 


அதிகாலையிலேயே கூழ் காய்ச்சும் வைபவம் தொடங்கிடும். அகலமான அலுமினியம் அல்லது ஈயம் பூசின பித்தளைப் பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கணும். பிறகு அரைச்சு வைச்சிருக்கும் அரிசி மாவை அதில் கொட்டி கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கணும். அதுக்குண்ணு ஸ்பெஷலா மர அகப்பை நீள கைப்பிடியோட இருக்கும்.அரிசிமாவு வேகும் வரைக்கும் கிளறிகிட்டே இருக்கணும். இல்லாட்டி கட்டி விழுந்திடும். அதுலேயே தண்ணிவத்தல், கெட்டி வத்தல்னு ரெண்டு தினுசா கூழ்காய்ச்சுவாங்க. தினசரி செலவுக்கு தண்ணி வத்தல், கொஞ்சம் மாவில் நிறைய வத்தல் கிடைக்கும், எக்கனாமிகல். கெட்டி வத்தல் யாராவது விருந்துக்கு வரும்போது மட்டும். எனக்கு தண்ணி வத்தல்தான் பிடிக்கும். ஈஸியா நாக்கில் கரைந்துவிடும், சுவையும் நல்லாவே இருக்கும்.


கூழ் சரியான பதம் வந்ததும் சில வாசனைப் பொருட்கள் சேர்ப்பாங்க. சீரகம், பச்சிமிளகாய், பொடியாக நறுக்குன சின்ன வெங்காயம் , இதுலே எது வேணுமின்னாலும் போட்டுக்கலாம். அதைப்பொறுத்து வத்தல் பெயர் மாறும். தனித்தனி டப்பாவுக்குள் அடைச்சு வைப்பாங்க.கூழ் காய்ச்சி இதெல்லாம் சேர்த்தவுடன் வர்ற வாசம் தூங்கிட்டு இருக்கிற பொடிசுகளையெல்லாம் எழுப்பி விட்டுடும். அம்மாவுக்குத் தெரியாமல் கூழை கையில் எடுத்து நக்கிப் பார்க்க ஒரு கோஷ்டி படையெடுக்கும். ஆனால் செம சூடாக இருப்பதால் யாரோட பருப்பும் வேகாது. 


கொஞ்சம் சூடு தணிந்ததும் எல்லா கூழையும் சின்ன சின்ன பாத்திரங்கள், தட்டு, மூடி எல்லாத்திலேயும் ஊற்றுவாங்க. அகல பாத்திரங்களில் ஊற்றும் போது சீக்கிரம் சூடு தணியும்.ஆனால் முழுவதும் ஆறுவதற்குள் கூழ் ஊத்திடணும், இல்லாட்டி கட்டியாகி பாத்திரத்திலேயே செட்டில் ஆயிடும். 


எங்க வீட்டுக்கு அடுத்து ஒரு மொட்ட தட்டட்டி ( மொட்டை மாடி) உண்டு. அதுலேதான் கூழ் ஊத்தி காய விடணும். அதுக்கு ஏறுவதற்கு படிக்கட்டெல்லாம் கிடையாது. சாய்வான சுவர் மீது பக்குவமா காலை வைச்சு ஏறணும். அவ்ளோ கூழ் பாத்திரங்களையும் மேலே ஏத்தணும், அதெல்லாம் ஆம்பிளைப் பசங்களோட வேலை. 


பழைய வெள்ளை வெஷ்டியில்தான் கூழ் ஊத்துவாங்க. அப்பா, அண்ணனோட பழைய வேட்டிகள் இதற்கென்றே பத்திரப் படுத்தப் பட்டிருக்கும். தரையை நன்கு பெருக்கி, வேஷ்டிகளை நனைத்து தரையில் விரிக்கணும். வேஷ்டி பறக்காமலிருக்க நாலு மூலையிலும் கல் ஏதாச்சும் வைக்கணும். நாலு முனையிலும் நாலுபேர் உக்காந்துக்குவோம். அந்தந்த முனையிலிருந்து கூழ் வடகம் ஊற்ற ஆரம்பிக்கணும். அப்போதான் ஒருதரை ஒருத்தர் இடிக்காமலும், வேஷ்டியில் இடைவெளி இல்லாமலும் வத்தல் ஊற்ற முடியும். அதுலேயும் நாந்தான் நிறைய ஊற்றினேன்னு பீலா போட்டி பெருமையெல்லாம் கூட நடக்கும்.


கூழ் வத்தல் ஊத்தறது இப்போ எழுதற மாதிரி ஈஸி கிடையாது. சூடான கலவையைக் கையில் எடுத்து வடட வட்டமா ஒரே அளவில் ஊத்தணும். மேல் பக்கம் சூடு தணிந்த கூழை முதலில் எடுக்கணும். ஆர்வக் கோளாறில் ஆழமாகக் கையை விட்டால்  வெந்து போயிடும். எங்க அக்கா மதினியெல்லாம் கைதேர்ந்த வல்லுநர்கள் . பட படன்னு ரெண்டு மூணு வேஷ்டியில் ஊற்றி முடிச்சுடுவாங்க. வெயில் ஏர்றதுக்குள்ளே ஊத்திடணும். இல்லாட்டி மண்டை காஞ்சிடும். எங்களை மாதிரி சின்னப் பசங்களுக்கு ஸ்பூன் தருவாங்க. ஆனால் அதில் ஊத்தும்போது ஒருநாளும் அளவும் இடைவெளியும் சரியாவே வராது. சித்திரம் மட்டும் கைப்பழக்கம் அல்ல, கூழ் ஊத்துவதும் தான். கூழ் ஊத்தும்போதே அப்பப்போ கொஞ்சம் கொஞ்சம் டேஸ்ட் பார்க்கிறேன்னு காலி பண்ற வேலையும் இருக்கும்.


பெரிசுங்க எல்லாம் அவங்கவங்க வேலையை முடிச்சுட்டு கீழே இறங்கிடுவாங்க. எங்க ஊர் காக்காவெல்லாம் இந்த மாதிரி கூழ் வத்தல்லேயே வாழ்ற ஆட்கள். கும்பலா வந்திடுவாங்க கொத்திட்டுப் போக. கொஞ்சம் அசந்தால், அழுக்குக் காலோட வேஷ்டியில் உக்காந்து அதனையையும் நாசம் பண்ணிடுவாங்க. அதனாலே பொடிசுங்க எல்லாருக்கும் காவல்காரன் வேலை. இன்பமான இம்சை வேலை அது. 


காவல் காக்கிறவங்க உக்காரகூட இடமே இருக்காது, வெயில் சுட்டெரிக்கும். மொட்டை மாடியின் ஓரத்தில் ஒரு கொடுக்காபுளி ( கோணப்புளியங்கா) மர நிழல் விழும் . அதுக்கு மேலே ஒரு பெட்ஷீட் அல்லது துண்டு போட்டு தற்காலிக டெண்ட் உண்டாக்கிக்குவோம்.

தனியாக மாட்டிக் கொள்ளும் போது புத்தகங்கள் வாசிக்க நல்ல இடம். சில சமயம் துணை கிடைத்தால் அங்கேயே உக்காந்து சீட்டுக் கட்டு விளையாடுவோம். 


சில நேரம் காவல்காரர்களையும் ஏமாத்திட்டு காக்கா வந்துடும். அதிலிருந்து காப்பாற்ற அம்மாவின் மயிர்க்குடி(சவுரி)யை கம்பில் கட்டி நிறுத்தியிருப்போம். காக்கா பக்கத்திலேயே வராது. சாயங்காலம் வரைக்கும் அங்கேயேதான் இருக்கணும். வேலைத் தளர்வு எல்லாம் கிடையாது. சாப்பிட போறப்போ ஷிஃப்ட் மாத்திக்குவோம்.


முதல்நாள் சாயங்காலம் வத்தல் முழுசும் காய்ந்து இருக்காது. கொஞ்சம் ஈரமா இருக்கும். அதனாலே வேஷ்டியோட எடுத்துட்டுப்போய் கொடியில் தொங்க விடணும். மறுநாள் காலையில் வத்தல் உள்ள வேஷ்டியை தட்டட்டிக்கு எடுத்துட்டுப் போய் மறுபடியும் காய வைக்கணும். இன்னைக்கு அடுத்த டீம் காவல் வேலைக்குப் போவாங்க. 


ரெண்டாம் நாள் நல்லா காய்ந்து வத்தல் ரெடியாயிடும். ஆனால் வேஷ்டி அதை அன்போட பிடிச்சுட்டு இருக்கும். அதனாலே வேஷ்டியின் பின்பக்கத்தைத் திருப்பி போட்டு கொஞ்சமா தண்ணீர் தெளிச்சு நனைக்கணும். ஒவ்வொரு வத்தலாக வேஷ்டியிலிருந்து பிரித்தால் இலகுவாக வரும். இந்த வேலையெல்லாம் எங்க கிட்டே கொடுக்க மாட்டாங்க. ஒண்ணு வேஷ்டியைக் கிழிச்சுடுவோம், அல்லது கணிசமான வத்தல் கடவாய்க்குள் போயிடும். அதனாலே பெரியவங்கதான் சுத்தி உக்காந்து புரணி பேசிகிட்டு வத்தல் உடையாமலும், வேஷ்டி கிழியாமலும் எடுப்பாங்க.


 இதோட வேலை முடிஞ்சுடலை.

வேஷ்டியிலிருந்து எடுத்த வததலையெல்லாம் சொளவு(முறம்)லே கொட்டி வைச்சிருப்பாங்க. தண்ணீர் நனைச்சு எடுத்ததால் கொஞ்சம் ஈரம் இருக்கும். அப்படியே டப்பாவில் போட்டால் பூசனம் பூத்துவிடும். அதனால் மறுபடியும் மூணாம் நாள் காலையில் மாடியில் பேப்பர் அல்லது பாய் விரித்து  அன்னைக்கு முழுதும் காய விடணும். டண்டடான் – கூழ் வத்தல் ரெடி. 


இதே வேலை ,இடைவெளி விட்டு நாலைந்து தரமாவது கோடை விடுமுறையில் நடக்கும். ஒரு வருஷத்துக்கு தேவையான வத்தலை அப்போதே செய்து டப்பாவில் அடைச்சு வைச்சிடுவாங்க. காய் பொறியல்கள் தட்டிப் போகும் சமயங்களிலும், திடீர் விருந்தாளிகள் வரும்போதும், மழை காலங்களிலும் கூழ் வத்தல்தான் அம்மாவுக்கு ஆபத் பாந்தவன்.

இதே பாணியில் வெங்காய வடகம், தேன்குழல் வத்தல் என்று ரக வாரியாக ஏதேதோ செய்து கொண்டே இருப்பாங்க. ரெடிமேட் வத்தல் உண்டு என்பதே நகர வாழ்க்கைக்கு வந்த பிறகுதான் தெரிந்தது.


 அப்பளம் கூட சிறு தொழிலாகத்தான் வீட்டிலிருந்தே போட்டு தருவார்கள். எங்க ஊரில் அப்பளக்கார பெரியம்மாவே உண்டு. எங்களுக்கு தூரத்து சொந்தம் கூட. அவங்க வீட்டில் அப்பளம் வாங்க போகும்போது நானே நிறைய நாள் அப்பளம் உருட்டிக் கொடுத்திருக்கிறேன்.  உளுந்து மாவில்தான்  அப்பள உருண்டைகள் செய்து வைச்சிருப்பாங்க. நல்ல வாசமாக இருக்கும். அதை எண்ணெயில் பொறிக்கும் போது சன்னமாகவும் மொறு மொறுவென்றும் சுவையாகவும் இருக்கும்.


வத்தலும் வடகமும் 

வருஷம் முழுக்க மணக்கும்

அதை நினைப்பது 

வருடங்கள் பல கடந்தும்

மொறு மொறுப்பாக

நினைவலைகளில் நொறுங்கும்.


(பி.கு: என் அலைகளில் நிறைய தென் தமிழக வழக்குச் சொற்களை அப்படியே உபயோகித்துள்ளேன். எனது எண்ணங்களின் நடை ஓட்டம் மாறாமலிருக்கவும், வழக்குச் சொல் அழியாமலிருக்கவும். பொருத்தருள்க)

Thursday, October 01, 2020

அலை-19

 

அலை-19

பள்ளிப் பருவத்தில் சென்ற சுற்றுலாக்கள் ரொம்ப குறைவுதான். ஆனாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காவியம். என்னோட நினைவுகளைக் கசக்கி வெளிக் கொணர்ந்ததில், ”சுனைக்கு போனதுதான் முதல் சுற்றுலான்னு தெரியுது. இன்று சுற்றுலா மேம்பாட்டுத் துறையால்அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில்என்று பெயரிடப்பட்டிருந்தாலும் எங்கள் குழந்தைப்பருவத்தில் அதன் பெயர் வெறும் சுனை தான்.

 

எங்க ஊரிலிருந்து சுனைக்குப் போக பஸ் கிடையாது, நடந்துதான் போகணும். கிட்டத்தட்ட 5 -7 கி.மீ. இருக்கும். குளக்கரை, வரப்பு போன்ற குறுக்கு வழியில் போனால் 5 கி.மீ. தான். முதல் சுற்றுலாவின் போது காலையிலேயே நடக்க ஆரம்பித்துவிட்டோம். முன்னாடியும் பின்னாடியும் ஆசிரியைகள் வந்த மாதிரி ஞாபகம் இருக்கு. நாங்களெல்லாம் கும்பலா பேசி, கத்தி, சிரித்து , குதித்து நடந்தோம். தூரம் பற்றிய பயமோ சோர்வோ அந்த வயதில் ஏது? பயமறியா இளங் கன்றுகள்.

 

பள்ளிவாசல் பஜார் வழியாகப் போய் பண்டார குளம் தாண்டி குதிரைக்காரன் குண்டு (சின்ன தண்ணீர்க் குட்டை) பக்கமாக வந்து புதுக்குளம் வரை ஏற்கனவே அறிமுகமான இடங்கள்தான்.  வரப்பில் நடக்கும் போது இரண்டு பக்கமும் வயல்வெளி பரந்து கிடக்கும். சில வயல்களில் அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் தலை கவிழ்ந்து சாய்ந்திருக்கும். அதிலிருந்து முற்றிய கதிர்களைக் கை கொள்ளாமல் பறித்துக் கொண்டோம். வழிப் பயணத்துக்கு வெறும் வாயை மெல்லாமல் நெல்மணிகளை சுவைத்துக்கொண்டே நடந்தோம்.

 

புதுக்குளம் தாண்டி சோனங்காட்டுவிளை (சோனகன்விளை)வரைக்கும் குறுகலான பாதையில் காட்டு மலர்களும், பெயர் தெரியாத தாவரங்களும் மண்டிக்கிடக்கும். கொத்துக்கொத்தாக வளர்ந்திருக்கும் காட்டு மலர்களைப் பறித்துவிட்டால் கையெல்லாம் நாற்றம் அடிக்கும். ஒரு சிலருக்கு கையில் எரிச்சலும் அரிப்பும் கூட வந்தது. அதுக்குள்ளே வெயில் வேறே அதிகமாயிடுச்சு.

 

 அவங்கவங்க கட்டிக் கொண்டு .திருந்த காலை உணவை இடைவழியில்  எங்கேயோ வைச்சு சாப்பிட்டோம்.

சோனங்காட்டுவிளையில் தார் ரோடு குறுக்கிடும். திருநெல்வேலி - திருச்செந்தூர் பஸ் ரூட் அது.

 

அத்துடன்  முக்கால்வாசி தூரம் கடந்திருப்போம். எறும்புக் கூட்டம் ஊர்வது மாதிரி  ரெண்டு ரெண்டுபேராகக் கைகோர்த்துக் கொண்டு ரோட்டைக் கடந்தோம். அதற்குள் நிறைய பேருக்கு கால்வலி, மூச்சிரைப்பு, வியர்வை வெள்ளம் என கொஞ்சம் அலுப்பு தட்ட ஆரம்பிசுடுச்சு. ரோடு தாண்டினதும் சுனைதான் என்று சொல்லி உற்சாகப்படுத்தி மீண்டும் நடக்க வைச்சாங்க. அதற்குப் பிறகே கிடத்தட்ட ஒரு மணி நேரம் நடந்திருப்போம்.

 

 நிறைய மரங்களும் ஓடையும் வழியெங்கும் இருந்ததால் அலுப்பு கொஞ்சம் குறைந்த மாதிரி இருந்தது.

மணல் குன்று மாதிரி ஒரு இடத்துக்கு வந்ததும் சுனை வந்துடுச்சுன்னு சொன்னாங்க. சுற்றி சுற்றி பார்த்தாலும் எங்கேயும் எதுவுமே தெரியலை. மணல் குன்று சரியுற எடத்தில் தாழம்பூ செடிகள் மண்டிக் கிடந்தது. ஒற்றையடி பாதை ஒன்று கீழ் நோக்கி இறங்கியது. எல்லோரும் ஆட்டு மந்தைகள் மாதிரி கும்பலாக இறங்கினோம். கீழே வந்ததும் தெரிந்த காட்சி அலுப்பையெல்லாம் ஆனந்தமாக்கிவிட்டது.

 

காட்டுக்கு நடுவில் ஒரு கோவில், அதை ஒட்டி ஒரு குளம். நாங்கள் சென்றது வெயில் காலம் என்பதால் தண்ணீர் குறைவாக இருந்தது. மழை காலத்தில் தண்ணீர் நிரம்பி வழியும் என்று சொன்னார்கள். இயற்கை அழகுடன் ரம்யமான சுனை. 

 

சரியாகச் சொல்லணும்னா சுனை இருக்குமிடம் திருச்செந்தூருக்கும் நாசரேத்துக்கும் இடைப்பட்ட செம்மண் தேரியின் நடுவில். ஒரு விதமான பாலைவனம்தான்.(desert sand) அதிலிருந்த சுனை  பாலைவனச் சோலைவகையைச் சார்ந்ததாகத்தான் இருக்கும். சுனை என்றால் நீரூற்று (fountain) என்றும் பொருள் உண்டு. வருஷம் முழுவதும் வற்றாத நீரூற்று.

 

கோயிலையும் குளத்தையும் பார்த்ததும் பயங்கர சந்தோஷம். திகட்ட திகட்ட விளையாட விட்டுட்டாங்க. ஒரு பக்கத்தில் கல் அடுப்பு கூட்டப்பட்டு மதிய சமையல் ஆரம்பிச்சாங்க. பெரிய வகுப்பு மாணவ மாவிகளும் சில உதவியாளர்களும் சேர்ந்து "கிராமத்து சமையல்" செய்தார்கள்.

 

குளத்தில் கல் எறிந்து விளையாடுவது ரொம்ப ஜாலி. உடைந்த மண்பாண்டங்களில் உள்ள ஓடுதான் அதற்குரிய ஆட்டக்காய்.அதை லாவகமாக தண்ணீரில் வீசினால் ரெண்டு மூணுதரம் தண்ணீரைத் தொட்டு எழும்பி வழுக்கிப் போகும். பார்க்க ரம்யமாக இருக்கும். எத்தனை தரம் ஓடு எம்பிக் குதிக்கிறதோ ( ஸ்டெபி க்ராஃப் மாதிரி இல்லை) அதை வீசினவங்கதான் வீரர்கள். கோயிலுக்கு வர்றவங்க மண்பானையில் பொங்கல் வைப்பது வழக்கம் என்பதால் உடைந்த ஓடுகளுக்கு பஞ்சமே இருக்காது.

 

ஆம்பிளைப் பசங்களெல்லாம் மரத்திலே ஏர்றது தாவுறதுன்னு இருந்தப்போ நாங்களெல்லாம் தாழம்பூ பறிக்கிறது, நவ்வாப்பழம் (நாவல்பழம்) பொறுக்கிறதுன்னு பிஸியா இருந்தோம்.

 

மதிய உணவு அதற்குள் ரெடியாகிவிட்டதால் அனைவரும் வரிசையாக உட்கார வைக்கப்பட்டோம். வாழை இலையில் சுடச் சுட சோறும் குழம்பும் ஊற்றப்பட்டது. எல்லா காய்களும் வெட்டி போடப்பட்டு மிளகாய் சாம்பார் வைத்திருந்தார்கள். அது போன்ற மிளகாய் சாம்பார் அதன் பிறகு இன்றுவரை சாப்பிட்டதில்லை. அதன் மணமும் ருசியும்  Dejavu வாக அப்பப்போ மிளகாய் சாம்பார் சாப்பிடும் போதெல்லாம் வருவதுண்டு.

 

சாயங்காலம் இருட்டுவதற்குள் வீடு திரும்ப வேண்டுமென்பதால் சாப்பிட்டு கொஞ்ச நேரத்திலேயே கிளம்பச் சொல்லிவிட்டார்கள். பிரியா விடையுடன் மறுபடி நடக்க ஆரம்பித்தோம். அசதியும் சலிப்புமாக திரும்பும் போது யாருக்கும் சுரத்தே இல்லை. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப் பிறகுதான் மறுபடியும் சுனைக்கு செல்ல முடிந்தது. அதன் மண்வாசனையும் அமைதி தன்மையும் மறைந்து போய் சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது. கார், பஸ் எல்லாம் வருகிறது , கழிவுகளும் குவிகிறது.

 

சுனைக்கு பிறகு சுற்றுலான்னு போனது திருநெல்வேலிக்குத்தான். கொஞ்சம் பெரிய பிள்ளைகள் ஆகிவிட்டதால் வெளியூருக்கு அனுப்ப பெற்றோர்கள் அனுமதி கிடைத்தது. புகை வண்டி மூலம் காயல்பட்டினம் ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டோம். முதலில் பார்ப்பது அபிஷேகப்பட்டி கோழிப்பண்ணை . அதற்கு காலையிலேயே போக வேண்டும். எங்கள் ஊரிலிருந்து அதிகாலை புகை வண்டி கிடையாது. எனவே முதல் நாள் மாலை வண்டியில் கிளம்பி நெல்லை சென்றோம். அப்போதெல்லாம் தங்குவதற்கு ஹோட்டலோ விடுதியோ ஏற்பாடு செய்ய மாட்டார்கள். திருநெல்வேலியில் கட்டி முடிக்கப்படாத இரண்டடுக்கு மேம்பாலம்தான் எங்களின் தற்கால தங்கும் விடுதி. ஏற்கனவே போர்வை கொண்டுவரச் சொல்லியிருந்தார்கள். அதனால் முதல் அடுக்கில் போர்வை விரித்து படுத்திருந்தோம். இரண்டாம் அடுக்குதான் எங்களுக்குக் கூரை.

 

எங்களுக்குத் துணையாக நம்பி சார், ஞானையா சார், ஏஞ்சலா டீச்சர் எல்லாம் வந்திருந்தார்கள்.

காலையில் டவுண் பஸ்ஸில் அபிஷேகப்பட்டி போனோம். போகும் வழியில் சின்னச் சின்ன வாய்க்கால்கள் ஸ்டெப் ஸ்டெப்பாக இறங்கி வழியும் போது ஏற்பட்ட சின்னச் சின்ன அருவிகளையும் வயல்வெளிகளையும் ரசித்துவிட்டு கோழிப்பண்ணையையும் சுற்றிப்பார்த்தோம். அது கல்விச்சுற்றுலா என்பதால் முதலில் கோழிப்பண்ணை. மதியம் வரை அங்கேயே சுற்றிவிட்டு மதிய உணவிற்குப்பின் கிருஷ்ணாபுரம் விசிட்.

 

தமிழர்களின் சிற்பக்கலைக்கு இன்றும் உதாரணமாக விளங்கும் கிருஷ்ணாபுரம் கோவில் அன்று பெரிய மலைப்பாகத் தெரிந்தது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட யாளியும் அதன் வாயினுள் உருண்டுகொண்டிருந்த கல்பந்தும் எல்லாரையும் வாயைப் பிளக்க வைத்தது. இன்னோரு சிற்பத்தில் மேலிருந்து ஊசி போட்டால் எப்படி வருகிறது என்று தெரியாமலே கீழே வந்து விழுவதை மறுபடி மறுபடி சோதித்தி பார்த்தோம். இன்னும் நிறைய சிற்பங்களின் பெருமைகளை ஆசிரியர்கள் விளக்க உற்சாகமாக கேட்டுக் கொண்டோம்.

 

இவற்றையெல்லாம் சுற்றிப் பார்த்து முடிக்க சாயங்காலம் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு எங்கள் ஊருக்கு புகை வண்டி கிடையாது. மறுநாள் காலைதான் கிளம்ப முடியும். அதனால் முதல் ஆட்டம் சினிமாவுக்குக் கூட்டிச் சென்றார்கள். திருநெல்வேலியில் செண்ட்ரல் தியேட்டர்தான் மிகப் பெரியது. அங்குசிவகாமியின் செல்வன்சிவாஜி படம் பார்த்தோம். ஒத்த வயதுடையவர்களுடன் படம் பார்க்கும் சுகமே அலாதிதான். காதல் காட்சிகள் வந்தபோது வகுப்புத் தோழர்கள் உடனிருந்ததால் சின்ன குறுகுறுப்புடன் படம் பார்த்தது இன்னும் நினைவிருக்கிறது.

 

சினிமா முடிந்ததும் இரவு தங்கும் விடுதியாக திருநெல்வேலி புகை வண்டி நிலையத்தின் பிளாட்பாரம் அமைந்தது. வரிசையாக படுத்து, அன்று நடந்த விஷயங்களைப் பற்றி பேசி சிரித்து சந்தோஷமான இரவாக கடந்து போனது. காலையில் எழுந்து முதல் வண்டியில் ஊர் நோக்கி பயணம் தொடங்கியது.

 

இதற்குப் பிறகும் சில சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒரு முறை சென்றோம். ஆனால் வெயில், நீண்ட நடைப்பயணம், வறண்ட உப்பளமும் , துறைமுகமும் அதிக சுவாரஸ்யத்தை அளிக்கவில்லை.

 

அன்று நடந்து சுற்றியதன் சுவை

இன்று காரிலும் விமானத்திலும்

கடல் கடந்து  செல்லும்போதும்

கணக்கற்று செலவளிப்பதிலும் இல்லை

பிளாட்பாரம் தந்த அரவணைப்பு

ரிஸார்ட்டுகளின் சொகுசிலும் இல்லை.

 

நெட்ஃப்லிக்ஸ் ப்ரைம் டைம்

நூறு படம் பார்த்தாலும்

எதிலும் புதுமையில்லை

எல்லாமே நேரப்போக்குதான்.

தரைடிக்கெட்டுக்கும் தங்கம் தியேட்டருக்குமே

தாகத்துடன் மனம் ஏங்குகிறது.