Saturday, October 29, 2005

`டெல்லி' அரக்கர்கள்

மனித நேயமற்று
மனதில் ஈரமற்று
மனித காவு வாங்கும்
மிருகங்கள் மனிதர்களா?

இயற்கை அழிவுகள்
இந்தியா முழுதும் உலுக்கி வருகிறது
இடையில் ஏனோ
இந்த இதயமற்ற காட்டுமிராண்டித்தனம்?

தூங்க இடமின்றித் தவிப்பவர்கள்
தூங்கும்போதே அடித்துச் செல்லப்பட்டவர்கள்
தாகத்திற்குக் கூட தண்ணீரின்றித் தவிப்பவர்கள்
கண்ணீர் வரவழைக்கும் துயர்கள் நாடெங்கும்.

மண்ணில் புதைந்தவர்களுக்கு
மலரஞ்சலி செலுத்த முடியாவிட்டாலும்
அண்டையில் வாழ்பவருடன்
அனுசரிக்கக் கூட மனமில்லையா?

அழித்தவரின் கல்லறைக் கணக்குதான்
அடுத்த நாளின் உணவோ அவர்க்கு?
அனைவரையும் அழித்துவிட்டால்
அடுத்த நாளென்பதே தேவையோ அவர்க்கு?

இலக்குகளற்று இயக்கப்பட்டு
நோக்கமின்றி படுகொலை புரிந்து
திரும்பிப் பார்க்கையில் அங்கே
துடித்து இறப்பது உன் தாயோ தந்தையோ.

வெடிக்கும் குண்டுகளுக்குக் கூட
வெடிக்க வேண்டிய எல்லை உண்டு
அழிக்க நினைக்கும் அயோக்கியர்களுக்கோ
அனைத்து பழிஉணர்வும் எல்லையற்றது.

Monday, October 24, 2005

ரட்சகியே ராட்சஸியாவாள்

பாக்கியராஜின் `தூறல் நின்னு போச்சு’ படம் வந்த புதிது. நாட்டில் வான் பொய்த்து வறண்டுகிடந்த நேரம். சினிமாக்களுக்கு இதுபோல் அபசகுனமாக இடப்பட்ட பெயர்களால்தான் மழையே பெய்யவில்லை என்று பெரிய விவாதங்கள் நடந்து கொண்டிருந்தது. வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பதுபோல்! அப்போது அதைக் கேட்டு கேலியாக சிரித்ததுண்டு.
இப்போது `மழை’ படம் சக்கைப் போடு போடுகிறது, மழையும் சக்கைப் போடு போடுது.(யாராவது `ஊழலே ஊரைவிட்டு ஓடு’ன்னு படம் எடுக்கலாமே)

போனவருஷம் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். 1000 அடி போர்வெல் போட்டு கூட தண்ணீர் கிடைக்காத இடங்கள் அதிகம். இன்னும் கொஞ்ச காலத்தில் தென்னிந்தியா முழுவதும் பாலைவனமாகப் போவதாக ஏகப்பட்ட ஹேஸ்யங்கள். அறிவு பூர்வமாக சிந்திக்கத் தெரிந்தாலும், அடிமனதின் சுயநலத்துக்கு நான் மட்டும் விதிவிலக்காக முடியுமா? எதிர்காலம் பற்றி ஏகத்துக்கு கற்பனைகள், கனவுகள்.
(கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் என்று கவிஞர்.மீரா சொன்னது முதலில் நினைவுக்கு வரவில்லை, இப்போது வருகிறது)

நம்ம காலத்துலே பரவாயில்லை, குழந்தைகள் எதிர்காலத்துக்காக சென்னை மாதிரி இடத்துலே கொஞ்சம் இடம் வாங்கிப் போடலாமா என்று பயங்கர யோசனை. தம்பி பக்கம் போகலாமா, அண்ணன் அருகில் இருக்கலாமான்னு ஒரு பட்டிமன்றம். அது சம்பந்தமா முடிவெடுக்கும் முன்பே அதிரடியாய் ஒரு `சுனாமி’ வந்து கதற வைச்சிட்டுது. அதிலிருந்து மீண்டு, உள்ளூர் சரிப்படாது, ஸ்டேட்ஸில் இருக்கும் சித்தப்பாவுடன் துரத்தி விட்டுடலாம்னு நினைச்சு , அதற்கு சம்பந்தப்பட்ட படிப்புகள் பற்றி விச்சரிக்கும்போதே, `ரீட்டா’ `ரீனா’ன்னு அமெரிக்காவே ஆட்டம் கண்டு போயிடுச்சு. சரி, இதெல்லாம் சரிப்பட்டு வராது, வட இந்தியாவில் இருக்கும் அத்தையுடன் ஒட்டிக்கொள்ளட்டும் என்று யோசிக்கும் வேளையில் அங்கு வந்ததோ அதிர்ச்சி தரும் பூகம்பம்.( துளசிக்கு எல்லா ஊரிலும் ஆட்கள் இருப்பதுபோல், எனக்கும் எல்லா இடத்திலும் இருக்கிறாங்களாக்கும்!!)

எல்லோருக்கும் ஆவதுதானே நமக்கும் என்கிற பரந்த மனசு இல்லாமல் என்ன படித்து என்ன பயன் என்று ஒரு வழியாக மனதைத் தேற்றிக் கொண்டு, இருக்கும் இடமே சொர்க்கம்னு இருப்போம்னு பார்த்தால், மேட்டுர் அணை மடை திறந்து வெள்ளமாகி விழுங்கக் காத்திருக்கிறது. இதைத்தான் `நித்திய கண்டம் பூரண ஆயுசு’ன்னு சொல்லுவாங்க போல.

மனிதர்களின் சைக்காலஜி விநோதமானதுதான்(என்னையும் சேர்த்து) நாலு திசைகளிலும் இயற்கையின் சீற்றம் அழிவுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும்போது , `அப்படி நாம் பிழைத்தோம்’ என்ற உணர்வினால் வரும் மகிழ்ச்சியை நம்மால் கட்டுப்படுத்த முடிவதில்லை. அதே அழிவு நம்மைச் சூழ்ந்து நிற்கும்போது, அதன் பாதிப்பில்லாது இருப்பவர்களைப் பார்த்து வெறுப்பும் கோபமும் கொள்வதும் வாடிக்கையாகிறது.

ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் பிள்ளைகளிடம் `பெருமையாக’ சொல்லிக் கொண்டிருந்தேன்.`` ஈரோட்டில் சுனாமி மாதிரி புயலே வராது, மேற்குத்தொடர்ச்சி மலை இருப்பதால்; பூகம்பம் மாதிரி விஷயங்களும் வராது, தென்னிந்தியாவின் அடித்தட்டு தற்போதைக்கு திடமானதா இருக்கு; ஒருவேளை எதாச்சும் நடக்கணும்னா மேட்டூர் டேம் நிறைஞ்சு வெள்ளம் வந்தாத்தான்”-னு. எனக்கு கொஞ்சம் கரிநாக்குன்னு நண்பர்கள் சொல்லுவாங்க. பலிச்சுட்டுதே!(பார்த்திபன் பாணி accent உடன் வாசிக்கணும்)

Saturday, October 22, 2005

``காக்க காக்க"

`யாகாவாராயினும் நாகாக்க' என்பது நிறைய பேருக்கு மறந்துவிட்டது போலும். கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் போன்றவற்றில் இதுவரை தலையிடாத காசி, திடீரென இந்த முடிவெடுக்க வேண்டியிருந்தால், அதற்கு ஏதேனும் முக்கிய காரணம் இருக்கலாம். அதைத் தெளிவுபடுத்தவும் சற்று அவகாசம் தரவேண்டும். அதற்குள் விமர்சனம், எதிர்ப்பு என்ற போர்வையில் எத்தனை வசைபாடல்கள். அவரது முடிவில் எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் அதிருப்தி உள்ளது -அது செயல் படுத்தப் பட்ட அவசரம் குறித்தோ, பதிவுகள் தணிக்கை செய்யும் தன்மை குறித்தோ- எதுவானாலும் ஒரு சின்ன அதிருப்தியைக் காட்டிவிட்டு காத்திருக்க எவருக்குமே பொறுமை இல்லை என்பது, மன முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது.

`(உரிமைகள்)கொடுத்ததைக் கேட்டால் அடுத்தது பகை' என்பது எவ்வளவு பொருத்தம். பதில் சொல்லவில்லை என்பதாலேயே பழிவாங்கிவிட்டதாக கூக்குரலிடுவது என்ன நியாயம். வலைப் பதிவில் ரொம்ப ஜூனியரான என் போன்றோருக்கு இருக்கும் தோழமை உணர்வுகூட `பழம் தின்று கொட்டை போட்ட' மூத்தோர்களுக்குக் காசியிடம் இல்லாதது வியப்பாக உள்ளது. எடுத்த முடிவு சரியா தவறா என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் தவறுதான் என்று தீர்ப்பெழுதித் தண்டனையாகக் கண்டனங்களை தவறான சொற்கள் மூலம் வெளிப்படுத்துவது அத்துமீறல் இல்லையா?

பதிவுகளைத் தனிமனித சொத்தாக நினைத்து யாரும் பதிவதில்லை. எல்லோரும் வாசிக்கவேண்டும் என்றுதானே எழுதுகிறோம். அதை `எல்லோரும்’ (குழந்தைகள் முதல் கிழடுகள் வரை) வாசிக்கும்படியான எழுத்து நாகரீகத்துடன் எழுத வேண்டுமென்பதற்கு இது ஒரு முன்னோட்டமாக இருக்கட்டுமே. ஓரளவு தணிக்கை இல்லாவிட்டால் `தமிழ்மணம்’ மஞ்சள் பத்திரிகை ரேஞ்சுக்கு இன்னும் சில நாட்களில் தள்ளப் பட்டுவிடுமோ என்பதாகத்தான் சமீபத்திய விவாதங்கள் சென்றுகொண்டிருக்கின்றன.
நம்மூரில் வெளியாகும் சாதாரண குப்பைப் பத்திரிகையில்கூட ரெண்டு வரி எழுதி அச்சேற்ற நம்மால் முடியாது. மனதைப் பாதிக்கும் விஷயங்களை மறுநிமிடம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள கிடைத்த அற்புதமான வாய்ப்பு. மாலை தொடுத்தவருக்கு அதிலிருக்கும் நெருஞ்சிப்பூக்களை அகற்ற உரிமையில்லையா? மாலையிலிருந்து உதிராமலிருக்க நினைப்பவர்கள் முட்களைத் துறந்துவிட்டு வர முயற்சிப்பதை விடுத்து காயப்படுத்துவது கண்ணியமாகுமா?

எனது எழுத்துக்கள் எல்லை மீறும்போது எனக்கும் பச்சை விளக்கு அணைக்கப்படும் என்ற உணர்வு எழுத்துக்களின் தரத்தை உயர்த்தத்தானே செய்யும். விவாதத்திற்கும் விரசமான அலசல்களுக்கும் எல்லைக்கோடின்றி ஒரே நோக்கில் பார்ப்பதால்தான் இத்தனை கோபங்கள். முகமற்று எழுதும்போது சுதந்திரமும் கிடைக்கிறது, தரம்கெட்டு எழுதும் தந்திரமும் வருகிறது. விவாதங்களின் போக்கு தனக்கு பாதகமாக வரும் கட்டத்தில் எதிராளியின் மென்மையான பக்கத்தை, அது- மதமோ, ஜாதியோ, பாலினமோ- ஏதோ ஒன்றைக் கொச்சையாகத் தாக்கிவிட்டுத் தானே வெற்றி பெற்றதாகக் கொக்கரிக்கும் தன்மையால் அடைந்தது என்ன? சக பதிவர்களின் வெறுப்பும் அசூயையுமே! அதை விடுத்து நட்புடன், நகைச்சுவையுடன், எழுதிப் பாருங்களேன். துளசியின் பதிவு போல் எண்ணற்ற விருந்தினர்கள் தினமும் எட்டிப் பார்ப்பார்கள்.
``காதலிக்க நேரமில்லை” படம் காலம் கடந்தும் நம்மை சிரிக்கவைப்பது போல்.

``We are not that rich to throw away any friendship

(என்னை ஜால்ரான்னு சொல்லப் போற நண்பர்களுக்கு- இப்போவே நன்றி சொல்லிக்கிறேன்).

Thursday, October 20, 2005

காசியின் பச்சை விளக்கு!!

பச்சை விளக்கு எரியுமென்றார்
புரட்டி புரட்டிப் பார்க்கிறேன்
எந்தப் பக்கம் எரியுமென்று
எவரிடம் கேட்பது?

காசியிடமே கேட்டுவிடுவோம்
கவிதை மூலமாகவே!
கத்திரிக்கோல் நமக்கில்லையெனில்
கண்டிப்பாக தமிழ்மணம் தாய் வீடுதான்

புலம்பக் கிடைத்த இடம் இது
புலமை சோதிக்கும் மேடையும் இது
கருத்துக்களைக் கருத்தரிக்கும்
சொப்பன உலகமும் இது

இடையிடையே ஏஞ்சல்களையும்
இருட்டியபின் சில சாத்தன்களையும்
இடற நேர்ந்தாலும் இனிப்பான
இணையக் கடலல்லவா இது!

தமிழ்மணத்தின் முத்துக்களை
சில சொத்தை முத்துக்களானாலும்
பொத்திப் பாதுகாக்க வேண்டுமென்று
பொறுப்பாக வேண்டிக் கொள்கிறேன்

Thursday, October 13, 2005

வாழ்வின் விளிம்பில் முதுமை

முதுமை என்பதொரு மூன்றெழுத்து
முடிவை நெருங்கும் கடையெழுத்து
இறந்த காலங்கள் இன்பமாயிருக்கும்
வருங்காலமோ கேள்விக்குறியாகும்.

வாழ்ந்த காலங்களின் வசந்தங்கள்
விழியோரக் கதைகள் சொல்லும்
வாழும் வாழ்க்கையின் நிச்சயமின்மை
விழியோரங்களில் நீர் வடிக்கும்

தேர்ந்தெடுத்த துணையோ
பெற்றெடுத்த மகவோ
சுற்றி நிற்கும் சுற்றமோ
சொந்தமற்றுப் போகும் நேரம்.

சேர்த்து வைத்த ஐஸ்வரியம்
அர்த்தமற்றுப் போகும் நேரம்
செல்லாக் காசாய் ஒடுங்கி இங்கே
செல்லரிக்கப் போகும் தேகம்

மீண்டு வந்து வாழ வேண்டுமென்று
மெளன யாகம் ஆங்காங்கே
மீண்டு வர வழிதெரியாத
மெளன சாட்சியான உயிர் இங்கே.

போகும் நேரம் தெரிந்துவிட்டதென்று
புன்சிரிப்பால் உணர்த்திவிட்டு
பொங்கியழும் உறவுகளைப் பிரிந்து
பறந்து செல்லும் இன்னுயிர் ஒன்று!

(எல்லா மரணங்களும் ஏற்படுத்தும் பாதிப்பு-
அது எவ்வளவு முதிய வயதாக இருந்தாலும்
)

Tuesday, October 11, 2005

மெடிக்கல் ராமாயணம்(தேர்வு காதை)

மருத்துவக் கல்லூரியில் படித்து பாஸ் பண்ணுவதைவிட சொதப்பி பாஸ் பண்ணுவது ரொம்ப ரகளையான விஷயம். அதிலும் ரொம்ப காலம் (>8-10 வருடங்கள்) நிதானமாகப் படிக்கும் நண்பர்கள் செய்யும் ரவுசு தாங்க முடியாது. ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் பாஸ் பண்ணிப் போயாவது நம் பிராணனை வாங்காமலிருக்கட்டும்னு சபிச்சுகிட்டே தள்ளிவிடப்பட்ட கேஸ்கள் அப்போதெல்லாம் ரொம்ப சகஜம். அவங்களுக்கு Chronic additionals என்ற பெருமைக்குரிய பட்டமும் உண்டு. ஆனால் அந்த மாதிரி அண்ணன்கள் வெளிப்படையாக முரட்டுத்தனமாகத் தோன்றினாலும் ரொம்ப நல்ல பசங்களாக இருப்பாங்க.

இவங்களோட பாஸ் புராணம், ராகிங் கதைகள், வாத்தியார்களுடன் மோதல்கள் ஒவ்வொண்ணுமே ஒரு எபிசோட் எழுதலாம். எனக்குத் தெரிஞ்சது கொஞ்சம்தான், உண்மையில் நடந்தவைகள் பற்றி சொன்னால் ஒரு இராமாயணமே எழுதலாம் என்று சொல்ல்வார்கள்.அதான் இந்த தலைப்பு.முதல்லே கொஞ்சம் லொல்லு பண்ணின ஆசாமி பத்தி சொல்றேன்.

தியரி பரீட்சை முடிந்ததும் viva voce என்ற ஓரல் டெஸ்ட் நடக்கும். அதில் ஸ்பாட்டர்ஸ் என்பது முன்னால் வைத்திருக்கும் பொருட்களில் ஒன்றை கண்டுபிடித்து சொல்வது. அதிலிருந்து கேள்விக்கணைகளைத் தொடுத்து மாணவர்களின் தகுதியை நிர்ணயம் செய்வார்கள். ஏழெட்டு தரம் படையெடுத்தவர் ஒருவரின் முறை வந்தது. ஏற்கனவே கடுப்பு + கொஞ்சம் குறும்புடன் வந்து அமர்ந்தவரிடம்,அவரை எப்படியாவது பாஸ் பண்ணிவிட்டுவிடவேண்டுமென்று நினைத்திருந்த வாத்தியார் உனக்கு மிகவும் தெரிந்த பொருள் ஏதேனும் ஒன்றை எடு என்று சொன்னார். இவரும் ரொம்ப கர்ம சிரத்தையாக எழுந்துநின்று அப்படியும் இப்படியுமா அலசி சில நிமிடங்களைக் கரைத்து ஒரு பொருளைப் பெருமையுடன் தூக்கிக் காட்டினார். ஆசிரியருக்கே சிரிப்பு தாங்க முடியலை, அது மேஜை மேல் வைக்கப்படும் காலிங்பெல்! ஆனாலும் லொல்லு பண்ணிய மாணவனைக் கொஞ்சமேனும் கடுப்பேத்தாமல் பாஸ் கொடுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டு, அதை ரெண்டு தரம் தட்டிவிட்டு இதிலிருந்து என்ன வந்துச்சுன்னு ஆசிரியர் கேட்டார். பதில் சொல்லித்தானே ஆகணும், `சத்தம்’னு மொட்டையாக பதில் வந்தது. அழைப்புமணியோசைன்னு சொன்னா அதிலிருந்து கேள்வி வந்திடுமாம் , அதனால் ரொம்ப எச்சரிக்கையான பதில்! குட்டி எட்டடின்னா தாய் எத்தனை அடி பாயும்? `சத்தம் எப்படி காதுகளில் புகுந்து மூளைக்குப் போகுதுன்’னு ஆரம்பிச்சு காதுலே தொடங்கி கால்கள் வரை கேள்விமேல் கேள்வி கேட்டு புரட்டி எடுத்திட்டார். இதுதான் மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடறதுன்னு சொல்வாங்க.நம்ம `தலை’க்கு தலை சுற்றலே வந்துட்டதா கேள்வி( ஆனாலும் அந்த அன்பான ஆசிரியர் பாஸ் கொடுத்திட்டதா கேள்வி)
(தேர்வு காண்டம் என்றுதான் தலைப்புக் கொடுப்பதாக இருந்தேன். ஆணுறையின் ஆங்கிலப் பெயராக அர்த்தம் செய்துவிடக் கூடாதேயென்று காதை ஆகிவிட்டது)

கொசுறாக ஒரு ஜோக்:

சளித் தொந்தரவு உள்ள ஒருவருக்கு சீரியசாக பரிசோதனை செய்துகொண்டிருந்தார் நான்காம் ஆண்டு மாணவர் ஒருவர். உள்ளிருக்கும் தொந்தரவை நன்கு விளங்கிக்கொள்ள ந்ன்கு இழுத்து மூச்சு விடுமாறு நோயாளியிடம் கூறினார். அவரும் அவ்வாறே செய்தார். மாணவர் இன்னும் கொஞ்சம் இழுத்து விடச் செய்யும் பொருட்டு `நல்லா இழுத்து மூச்சு விடுங்க’ன்னு சொன்னார். இவர் இம்சை தாங்காமலோ இல்லை நிஜமாகவே சொன்னது புரியாமலோ அந்த நோயாளி மாணவர் காதில் தொங்கிக் கொண்டிருந்த ஸ்டெதாஸ்கோப்பை வலிமையாக இழுத்துப் பிடித்துக்கொண்டு `இழுத்து’ மூச்சு விட்டார். பாவம் அந்த மாணவர் சக மாணவ, மாணவியர் முன் அசடு வழிந்தார்!!

இளைஞர்கள்- அன்றும் இன்றும்

சமீப காலங்களில் இந்நாட்டு மன்னர்களை, வருங்கால இந்தியத் தூண்களை, உரசிப் பார்ர்க்கும் சங்கதிகளையே கேட்டுக் கேட்டு அவர்களைப் பற்றிய ஒரு கவலையுடன் இருந்த காதுகளுக்கு நேற்று ஒரு அருமையான விருந்து கிடைத்தது. சமீபத்தில் பள்ளிப் பருவம் தாண்டி கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கும் தோழியின் மகன். அவனது தெளிந்த சிந்தனைகளையும், தீர்க்கமான முடிவுகளையும் தெரிந்து கொண்ட போது, தேவையற்றுக் குழம்புவர்கள் கிழட்டுப் பருவத்தை எதிர்நோக்கியிருக்கும் நாமே என்று தோன்றியது.

மாநிலத்திலேயே மூன்றாவது இடத்தில் தேறி மருத்துவப் படிப்புக்கு முன்னுரிமை கிடைத்தும் அதை வேண்டாமென்று தள்ளிவிட்டு பொறியியல் துறையில் தனக்குப் பிடித்த பிரிவை தேர்ந்தெடுத்து சேர்ந்துவிட்டான். தாய் மருத்துவராக இருந்தும் அவனைத் தன்வழியில் இழுக்க முடியவில்லை. தாயின் தோழர்களும் தோழியரும் (என்னையும் சேர்த்துத்தான்) மணிக்கணக்கில், வாரக் கணக்கில் விவாதித்தும் அவனின் தெளிந்த முடிவிலிருந்து மாற்ற எள்ளளவும் முடியவில்லை. அவனது நெருங்கிய நண்பனுக்கு மார்க் குறைந்ததால் அதிக பட்ச capitation fee கொடுத்து மருத்துவ சீட் வாங்கியதைப் பார்த்தும் கூட அவன் மனது கொஞ்சம் கூட கலையவேயில்லை.

படிப்பது , குறிப்பிட்ட துறையில் சேர்வது எல்லாமும் அந்தந்த நேரத்திய சூழலைப் பொறுத்தது என்றாலும் கூட , முடிவெடுப்பதில் இளைய தலைமுறைக்குள்ள தீர்க்கம் மனதுக்கு சுகமாக இருந்தது. இத்தனை வயதுக்குப் பிறகும் கூட அநேக நேரங்களில் நமது தீர்க்கமான முடிவுகள் சந்தர்ப்ப சூழலுக்கேற்ப திரிந்து விடுகிறது. அத்தனை pressure மத்தியிலும் அசையாமல் நின்றுவிட்டானே! இவன் மட்டுமே அபூர்வமானவன் என்று சொல்லவில்லை. இந்த வயதுக் குழந்தைகளெல்லோருமே நன்கு தெளிந்த சிந்தனையுடந்தான் இருக்கிறார்கள். அப்பா அம்மா டாக்டராக இருந்தும் பயாலஜி எடுக்க மாட்டேன் என்று கம்ப்யூட்டர் எடுத்த பையன், மாவட்டத்திலேயே பயாலஜியில் முதல் மார்க். ¼ மார்க்கில் மருத்துவப் படிப்பைத் தவறவிட்ட டாக்டர் வீட்டுப் பெண், எத்தனை லட்சம் கொடுத்தாவது, மெடிகல் சீட் வாங்கித்தருவதாகச் சொன்ன அப்பாவின் வாக்கைப் புறம் தள்ளிவிட்டாள். இன்னும் எத்தனையோ உதாரணங்கள்.

இவ்வளவு அறிவுபூர்வமாக தெளிவாக இருக்கும் இவர்களின் அடுத்த பக்கத்தை மட்டுமே பூதாகாரமாகக் காட்டி அசிங்கப் படுத்துவது ஊடகங்களே. எங்கோ நடக்கும் மேல்தட்டு நிகழ்ச்சிகளை விளம்பரத்துக்காக வெளியிடும்போது, அத்தனை இளைஞர்களுமே அதேபோல் இருப்பதாக ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். ஜீன்ஸ் போட்ட பெண்கள் எல்லோருமே தரக்குறைவானவர்கள் போலவும், நண்பர்கள் கூட்டத்துடன் இருப்பவர்கள் எல்லோரும் தவறான உறவு உள்ளவர்கள் போலவும் மிகைப் படுத்தி காட்டும் பத்திரிகைகள்தான் தவறானவை.

பள்ளிப் பருவம் முடியும் வரை குடும்பம் என்ற கூட்டுக்குள், பெற்றோர் என்ற அன்புச் சிறையில் வளர்வதால், வெளி உலக உறவுகளோ நேரப் போக்குக்கான தனித்தன்மையான விஷயங்களோ தேவைப் படுவதில்லை. கல்லூரியில் சேரும்போது வரும் சுதந்திர உணர்வு , தன்னால் முடிவெடுக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அவர்களைச் சிறிது அசைத்துப் பார்ப்பது உண்மைதான். அதனால் காதலிலிருந்து கஞ்சா அடிப்பதுவரை எல்லாவற்றையும் பரீட்சார்த்தமாக முயன்று பார்ப்பதும் நடக்கத்தான் செய்கிறது. சிறிய சதவீதத்தவரைத் தவிர மற்றவரெல்லாம் தங்கள் இயல்புக்குத் திரும்பிவிடுவதும் வாடிக்கைதான். இது இன்று நேற்று தான் நடக்கிறதா? காலம் காலமாக வரும் நிகழ்வுகள்தான். எத்தனையோ கஞ்சா, தண்ணி கேஸ்கள் இன்று புகழ் பெற்ற மருத்துவர்களாகவும், பொறியியல் வல்லுநர்களாகவும் இல்லையா? இந்தப் பதிவை வாசிக்கும் எத்தனை ஆண்கள் இதுவரை தண்ணியே அடித்ததில்லை என்று சொல்லமுடியும். காதலித்துப் பார்க்காத( ஒருவேளை தோல்வியுற்றதாகவும் இருக்கலாம்) மனிதர்கள் எத்தனை பேர்?
Love is a part of life which is unescapable. நாம் நடந்துவந்த பாதையில்தான் நம் சந்ததியும் செல்கிறது. அவர்கள் செய்வதை மட்டும் கண்டனப்படுத்தி அவர்களை அந்நியப் படுத்துவது ஏன்?

சின்னச் சின்ன தவறுகளும் தடுமாற்றங்களுமில்லாமல் வளரும் குழந்தைகள்தான் மிகப் பெரிய தோல்விகளைச் சந்திக்கிறார்கள், அதைத் தாங்க முடியாமல் தேவையற்ற முடிவுகளைத் தேடிக் கொள்கிறார்கள். குழந்தைகளின் திசை மாற்றம் கண்டிப்பாக பெற்றவர்களுக்குத் தெரியும்.அதை திருத்த வேண்டிய கட்டத்தில் தலையிடாமல் போகும்போதுதான் மக்களை இழக்கிறோம். என் மகன் தவறே செய்யமாட்டான் என்ற போலித்தனமான நம்பிக்கையிலிருந்து விடுபட்டு தன் மகனும் சாமான்யன் என்ற உணர்வு வரவேண்டும்.

காதலிப்பதாகத் தெரிந்து கத்தி கபடாக்களைத் தூக்கியோ, காதலர்களைப் பிரித்தோ சாதிப்பது ஒன்றுமில்லை. தண்ணியடிப்பதாகத் தெரிந்து பாக்கட் மணி நிப்பாட்டுவதாலோ, நண்பர்கள் சேர்க்கை சரியில்லை என்று தனிமைப் படுத்துவதாலோ பிரயோஜனமில்லை. உங்கள் குழந்தைகளுடன் பேசுங்கள், அதிக நேரம் பேசுங்கள், அவர்கள் எதிர்பார்க்கும்போதெல்லாம் பேசுங்கள். பெற்றோரின் நட்பில் வாழும் இளைஞர்கள் பாதை மறுவதில்லை.

Saturday, October 08, 2005

தாழம்பூ-வாழைப்பூ-வலைப்பூ!

பின்னூட்டங்களே இட்டுக்கொண்டிருந்தபோது , அடுத்தவர் நெருப்பில் குளிர்காய்வது சரியாக வராதுன்னு தோணியதால், பதிவெழுதப் புகுந்தேன். ஆரம்பித்த புதிதில் அடுக்கடுக்காக எழுதும்போது ரொம்ப புளகாங்கிதமாக இருந்தது. நாம எழுதறதை இத்தனை பேர் வாசிக்கிறாங்களே, இன்னும் எழுதணும்னு ஒரே உத்வேகத்தோடு தினமும் ஒரு பதிவு போடணும்போல் ஒரு அரிப்பு. வேலைப்பளு நெட்டி முறித்தாலும், தூங்குற நேரங்களைத் தியாகம் பண்ணிட்டு சக பதிவர்களுடன் கலந்துரையாடுவதில் ஒரு திரில். சாப்பிடும் நேரங்களை ஒதுக்கிவிட்டு சமபந்தி போஷனம் பண்ணுவதுபோல் ஒரு நிறைவு.

ஆச்சு , ஓரளவு நாமும் ஒரு வலைப்பதிவர்ங்கிற அங்கீகாரம் கிடைச்சாச்சு. ஆறுமுகநேரியிலிருந்து அமெரிக்கா வரை, நெல்லையிலிருந்து நியூஸிலாந்துவரை என்று ஏகப்பட்ட நண்பர்களுடன் அறிமுகம். நாட்டு நடப்பிலிருந்து நவராத்திரி கொலுவரை நல்லது கெட்டது நாலும் பகிர்ந்துகொள்கிறோம். இணையத்தில் தெரிந்துகொண்டவர்களின் குரல்களை தொலைபேசியில் கேட்கும்போது வருவதோ புல்லரிப்பு. நிழலுலகம்போல் காட்சியளிப்பது நிஜமாகிப் போகும்போது இதயத்தில் ஒரு நெகிழ்வு.

ஆஹா, நமக்கு அறிமுகமானது நம் நண்பர்களுக்கும் தெரியட்டுமென்று ஈ-கலப்பையையும், யூனிகோடையும் தெரியவைத்து அவர்களின் பதிவு பார்த்ததும் மனதில் ஒரு பெருமிதம். நித்திரைக்குச் செல்லுமுன் கடைசி பதிவையும் பார்த்துவிட்டு, நாள் தொடங்கியதும் இடைப்பட்ட வேளையில் வந்த பதிவுகளையும் மேய்ந்துவிட்டு, நேரமிருந்தால் பின்னூட்டம், நேரப் பற்றாக்குறையென்றால் நட்சத்திரத்தில் ஒரு குத்து- இப்படி சதா சர்வ நேரமும் திரை முன்னாலேயே உட்கார்ந்திருப்பதிலும் ஒரு ஆனந்தம்.

கண்டதில் கேட்டதில் சுவாரசியமான விஷயங்களை மகள் மகனுடனும், புதிதான விஷயங்களைக் கணவருடனும் பகிர்ந்து கொண்டு அவர்களையும் indirect ஆக பதிவுகளின் தொடர்பில் வைத்திருப்பதிலும் ஒரு சந்தோஷம். வெளிநாடுகளுக்கு பயணம் செய்யவேண்டுமென்றிருந்த ஆசைகூட இரண்டாம்பட்சமாகத் தோன்றுமளவுக்கு நாலு சுவர்களுக்குள்ளேயே இந்த உலகம் முழுவதும் சுற்றிவருவதில் ஒரு பெருமிதம்.

நியூஸியின் காலக்கெடு போன்ற விஷயங்களையும், ரஷ்யாவில்
க்யூவில் நிற்பது எதற்காக போன்றவற்றையும் எந்த பூகோளப் புத்தகத்திலிருந்தும் இவ்வளவு அந்நியோனியமாகத் தெரிந்து கொள்ளமுடியாது என்பதில் ஒரு பிடிப்பு. பெண்களை ஆண்கள் எழுத்துக்களால் தாக்கினாலும், பெண்கள் ஆண்களைக் கண்டித்துக் கடுப்பேற்றினாலும், கடல் அலை போல் மறுபடி மறுபடி பதிவுகளில் புரண்டு, மோதி, முத்தெடுக்கும் முரண்பாடுகளும் ஒரு சுகம் இங்கே.

பதிவு எழுத நேரம் வாய்க்காத தருணங்களிலும் பின்னூட்டங்கள் மூலமே அனைவருடனும் அளவளாவ முடிவது அதிகப்படியான
வசதி இங்கு. வம்பு பேச்சோ, வரம்பு மீறிய பேச்சோ எதுவானால் என்ன, பேச்சுக்கள்தான் எங்களைப் பிணைக்கும் பாலம் இங்கே.
பதிவுகளால் பதியனிடப்பட்டு இணையத்தில் வேரூன்றி நிற்கும்
அட்சய மரத்தின் அபூர்வப் பூ நம் வலைப்பூ.

(தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லை, சும்மா ஒரு attraction-க்காகத்தான்)

Tuesday, October 04, 2005

காதலா.. காதலா!

``தேடி அலைகிறேன் – உன்
தேய்ந்த செருப்பின் சுவடுகளை
பார்த்துக் களிக்கிறேன் – உன்
பாதம் பதிந்த பாதைகளை

எழுதிக் கிழிக்கிறேன் – உன்
நினைவு தொட்ட எண்ணங்களை
பதறித் துடிக்கிறேன் – உன்
பார்வை பட்ட தருணங்களில்

வீம்புக்கு சண்டையிடுவேன்– உன்
விழியசைவில் சரணடைய
காரணமின்றி கடுப்படிப்பேன் – உன்
கரங்களில் என்னை அர்ப்பணிக்க”.

இப்படியெல்லாம் எழுதியிருக்கிறேன்
இளமை எனும் ஊஞ்சலாடியபோது
இன்னும் என்னென்னவோ கிறுக்கியிருக்கிறேன்
இதயத்தில் நீ மட்டுமே இருந்தபோது!
( இப்போதும் இதயத்தில் நீதான்- ஆனால்
இல்லற இடிபாடுகளிடையே நீ!)

Sunday, October 02, 2005

இந்தியன் vs அந்நியன்

(சங்கர் படத் தலைப்புகள் அல்ல)

இன்று இவன் இந்தியன்
எவரையும் சட்டை செய்யாமல்
எதையும் ஆக்ரோஷமாக எதிர்க்கும்
இளவயது சுதந்திரன்.

நாளைமுதல் இவன் அந்நியன்
வெளிநாட்டு வேலை கிடைத்து
சொந்தங்களைப் பிரிந்து செல்லும்
பாவமான பருவ மகன்.

இந்தியனாய் இருந்தபோது
இளமை துள்ளக் களித்திருந்தான்
அந்நியன் ஆனபோதோ
அநியாயத்துக்கு முதிர்ந்துபோனான்.

பொருளாதாரம் உயர்ந்தது
பொறுப்புகளோ தலை நிமிர்த்தியது
வாழ்க்கைகூட இலகுவானது
மனது மட்டுமே தனிமையானது!

இடையிலே
ஆறேழு வருடங்கள் ஓடிவிட்டது!
இல்லறமும்
இனிமையைக் கூட்டிவிட்டது.

பிறந்தமண் பொருந்தாமல் போய்விட்டது
புகுந்த தேசம் பிரிய முடியாததாகிவிட்டது
இன்னாட்டு மன்னன்
பிறதேசப் பிரஜையாகிவிட்டான்.