Friday, September 25, 2020

பாட மறந்த நிலா

 நிலவுக்கும் உண்டு இங்கு அஸ்தமனம்?


பாடும் நிலா பாலு

பாட மறந்த நாள் இன்று!


எண்ணிலடங்கா பாடல்கள்

எண்ணிக்கையற்ற ரசிகர்கள்

நினைவு தெரிந்த நாளில் இருந்து 

நீங்காது துணைவந்த தேன்மதுரக் குரல்.


காதல் சொல்ல 

உன் குரலே தூதுசென்றது

கல்யாணப் பந்தலிலும் 

உன் இசையே ஓங்கி ஒலித்தது.


மசக்கை முதல் மகப்பேறு வரை

மனத்திடன் கொடுத்ததும் உன்குரலே

மக்களைத் தாலாட்டி தூங்க வைக்க

மயங்க வைத்தாய் மந்திர இசையால்.


துக்கத்தில் அழும் போதும்

துயரத்தில் வெம்பும் போதும்

கோபத்தில் குமுறும் போதும்

குதூகலமாய்த் துள்ளும் போதும்

 

உணர்வுகள் அத்தனையும் 

உன் குரலாய் என் வீட்டில்

பொங்கிப் பிரவக்கித்த வேளையிலும்

 “போதும்” என்று சொன்னதே இல்லையே!


அடுத்தவர்களுக்காக நீ பாடிய

இரங்கல் பாட்டுக்கள் எத்தனையோ

இன்று உனக்காகப் பாட 

ஒன்று கூட நினைவில் வரவில்லை.


இனிய குரலை இனிமேலும் கேட்கலாம்

இசைத்தட்டிலும் இணையத்திலும்

இன்னிசை உலகம் இழந்து நிற்பது

”பாடும் நிலா பாலு” வை!!


இன்னிசையை வழி அனுப்பிட

இதயம் கனிந்த மவுன அஞ்சலி .

Wednesday, September 23, 2020

அலை-17

 அலை-17

எனது அலைக்கு பின்னூட்டமிட்ட தம்பி நானா, இந்த மனுஷி(தாணு)யின் மறுபக்கத்தை உசுப்பி விட்டுட்டான். சின்ன வயசுலே கொஞ்ச நாள் “ அந்நியன்” மாதிரி நான் அலைந்ததை மறந்தே போயிருந்தேன், மறுபடி நினைவூட்டி விட்டான். 


கதைப் புத்தகங்களை வாசிக்கும்போது அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவது நிறைய பேரின் இயல்புதான். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் நான் ஒரு படி அதிகமாகவே  ஒன்றியிருப்பேன் போல் இருக்குது. அதன் பிரதிபலிப்பாக தூக்கத்தில் பினாத்துவது, கனவில் ரீப்-ப்ளே (replay) பண்ணி கதை சொல்லி பக்கத்தில் படுத்திருப்பவங்களை இம்சை பண்ணுவது எல்லாம்  உண்டு. ஆனால்  அதன் உச்சகட்டமாக சில கதைகளின் தொடர்ச்சியாகவோ தூண்டுதலாலோ அப்பப்போ  தூக்கத்தில் எழுந்து நடப்பேன். 

இப்போதைய காலமாக இருந்திருந்தால் “ தூக்கத்தில் நடக்கும் வியாதி” என்று முத்திரை குத்தி Drs. ஷுபா, ராமேஸ்வரி போன்றோரிடம் அழைத்துப்போய் அரைக் கிலோ மாத்திரை வாங்கித் தந்திருப்பாங்க. நல்ல வேளை அப்படியெல்லாம் எதுவும் நடக்கலை.அந்தக்கால பெருசுங்கலெல்லாம் என்னை மாதிரி எத்தனை அரை வேக்காடுகளைப் பார்த்திருப்பாங்க.  ஏதாச்சும் வித்தியாசமான அசைவு கேட்டதும் “ ஏய் தூங்கு” ன்னு ஒரு அதட்டல் போட்டால் அத்தனை கனவும் புஸ்வானமாகி மறுபடி தூங்கிட வேண்டியது தான். அதனாலே நான் அந்த காலத்தில் நோயாளி ஆவது தவிர்க்கப்பட்டு மருத்துவர் ஆகிவிட்டேன்.(ஏதோ வடிவேலு படம் பார்க்கிற மாதிரி இருக்கா?) வாழ்க எங்க வீட்டுப் பெரியவங்க. 


இந்த அதட்டலுக்கெல்லாம் அடங்காத சில நாட்களும் உண்டு. அதன் தாக்கம் எப்படி இருக்குமென்பதை  முந்தைய நிலாச்சோறு பதிவுக்குத் தம்பி நானா பின்னூட்டமாக சிறு கதை போலவே எழுதிட்டான். கண்டிப்பாக எல்லாரும் வாசிக்கணும்.


””பெரிய வீட்டின் ஒரு ஓரத்தில் பதுங்கி கொண்டு இரவலாக கிடைத்த குமுதத்தில் அந்த வார தொடர் கதையை ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினேன்.அந்த நேரம் பார்த்து " ஏய் தாணு எங்க இருக்க. இன்னக்கி சோமண்ணன் கடை லீவு....அந்த கோனார் கடை வரைக்கும் போய் ஒரு கால் கிலோ புளி வாங்கிட்டு வா" சமையல் வேலை அரை குறையா கெடக்கு..... சீக்கிரமா போயிட்டு வா" சமையல் கட்டிலிருந்து வந்த அம்மாவின் குரல் தலையில் நங்கென்று குட்டியது போலிருந்தது. கதையின் சுவாரசியத்தில் இருந்து வெளியே வந்து விழுந்தேன். 

கொஞ்ச நேரம் நிம்மதியா படிக்க விடுறாங்களா! இந்த நானா தம்பிப்பயல் எங்கே போனான். எங்கேயாவது சந்தைக் கடையிலே சுத்திட்டு இருப்பான். அவனக் கூப்பிட்டு போகச் சொல்ல வேண்டியது தானே! வீட்ல இருந்தா இதுதான் வம்பு... சலித்துக் கொண்டே ஏக்கமாக குமுதத்தை கீழே வைத்து விட்டு கோனார் கடையை நோக்கி நடக்கிறேன். சீக்கிரமா புளிய வாங்கி குடுத்துட்டு கதையை விட்ட இடத்துலேர்ந்து படிக்கணும்... 

…வேக வேகமாக நடக்கிறேன்...

ஏய்... ஏய்ய்... நில்லு.. நில்லு... கிடுகுகளில் தூங்கிக் கொண்டிருந்தவரிடமிருந்து எழுந்தது அபாயக் குரல். பரபரப்பு. திடுக்கிட்டு எழுந்து எதுவும் புரியாமல் சிலர் உட்கார, ஒரு சிலர் இருட்டுக்குள் சந்தைக்குள் ஓட... அதற்குள் கோணைப் பூவரசு மரம் வரைக்கும் நடந்து விட்டாள் அவள்(தாணு) நள்ளிரவு காரிருளில் கோனார் கடைக்கு புளி வாங்க போய்க் கொண்டிருந்தவளை பிடித்து இழுத்து வந்தார்கள்....

இப்படியாக தெருப் பைப்புக்கும், தங்கம் தேட்டருக்கும் கூட சில நாட்கள் போய் வருவாள். அன்று கனவுகளில் நடந்தவள் இன்று கதை சொல்ல வந்தாள். கனவுகள் தொடரட்டும்.”” ....


எப்படி நைசா சந்துலே சிந்து பாடியிருக்கான். எனது நினைவலைகளின் பக்கத்து அலைகளாக என் தம்பியின் பின்னூட்டங்கள் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

அவனுக்கு தெருப்பைப்புக்கும் தங்கம் தியேட்டருக்கும் நடந்ததுதான் தெரியும். ஊரு விட்டு ஊர் தாண்டிப் போன கதைகள் தெரியாது. ஸ்ரீவைகுண்டத்தில் இப்போ கேட்டாலும் சொல்லுவாங்க. 


பள்ளி விடுமுறையின் போது ஸ்ரீவை அக்கா வீட்டுக்குப் போயிடுவேன். அத்தான் அங்குள்ள அஞ்சிலாம்பு (அஞ்சு lamp)பக்கத்தில் 

சின்ன பெட்டிக்கடை வைச்சிருந்தாங்க.  நாளிதழ், வாரப்பத்திரிகை, மாத நாவல் எல்லாம் சுடச்சுடவிற்பனைக்கு வரும்.  அத்தனையும் உடனுக்குடன் படிக்கலாம் என்பதாலேயே லீவுக்கு அங்கே ஓடிவிடுவேன். எல்லாத்தையும் வீட்டுக்கு எடுத்துட்டு போக முடியாது. அதனாலே அத்தானுக்கு டீ, காபி கொண்டு போற சாக்குலே போய் காலையில் வர்றதெல்லாம் படிச்சுடுவேன். மத்திய உணவுக்கு அத்தானை மாற்றிவிடும் சாக்கில் கடையிலேயே உக்கார்ந்து மத்த எல்லா புக்கும் படிச்சுடுவேன். அந்த சமயத்தில் பீடி, சிகரெட், வாழைப்பழமெல்லாம் விற்பனை செய்திருக்கிறேன். 


ஞாயிறு அன்று கடை லீவ் என்பதால் எல்லாரும் சினிமாவுக்குப் போவோம். “தாமரை நெஞ்சம்” சினிமா பார்க்கப்போனபோது அக்கா மஞ்சள் நிற புடவை கட்டியிருந்தாள். படம் முடிந்து வெளியே வரும்போது சினிமா காட்சிகளை அசை போட்டுகிட்டே அக்கா பின்னாடி நடந்தேன். ரொம்ப நேரம் நடந்தும் வீடே வரலை. கால் வேறே நல்லா வலிச்சுது. அப்போதான் தலையை நிமித்தி அக்காவைப் பார்த்தால் அது வேறு யாரோ ஒரு பெண், மஞ்சள் புடவையில். அந்த ஊர் பெயர் குருசை கோவில். எதிரே சர்ச். (பின்னாடி வாழ்க்கை சர்ச்சில்தான் என்று அப்போதே மனதில் முடிச்சு விழுந்திடுச்சு போலிருக்கு)


 ஸ்ரீவையிலிருந்து வாய்க்கால் ஓரமா ரொம்ப தள்ளி உள்ள ஊர் அது.பயந்து அழுது அடம் பிடிச்சு என்கிட்டே இருந்து

 ஒரு வழியா விஷயங்களைப் பிடுங்கி விலாசம் தெரிஞ்சுகிட்டாங்க.வீட்லே கொண்டுவிட ஏற்பாடு செஞ்சாங்க.  நேரமோ நடுராத்திரி கிட்டே ஆயிடுச்சு.


 அதுக்குள்ளே வீட்டுக்குப் போன அக்கா அப்போதான் நான் கூட வரலைங்கிறதைக் கண்டுபிடிச்சிருக்கிறாள். நல்லா திட்டு கிடைச்சிருக்கு. பெரியத்தானும் சின்னத்தானும் சைக்கிள் எடுத்துட்டு சினிமா தியேட்டர் , பஸ் ஸ்டாண்டுன்னு தேடி அலைஞ்சிட்டு இருந்தாங்க. ஒருவழியா தேடிப்போன கோஷ்டியும், திரும்ப கூட்டிட்டு வந்த கோஷ்டியும் சந்திச்சுகிட்டதால் சீக்கிரமா வீடு வந்து சேர்ந்தேன். வீட்லே வந்து நல்லா அக்காகிட்டே அடி வாங்கினேன். அதற்குப் பிறகு ஸ்ரீவைகுண்டத்தில் சினிமா பார்க்கப் போனதில்லை.


மேலே நடந்த விஷயங்களை எல்லாம் ஆறுமுகநேரியில் அக்கா சொல்லவே இல்லை. அவளுக்கும் சேர்த்துதான் மண்டகப்படி கிடைக்கும்னு சொல்லாமல் மறைச்சிட்டாள். பெரிய மனுஷி ஆனபிறகு லீவுக்கெல்லாம் வெளியூர் அனுப்பாத காலம் வந்த பிறகுதான் எப்பவோ சொன்னாள். அதற்குள் விஷயத்தின் சூடு தணிந்து என்னைக் கேலி பண்ண முடியாத அளவுக்குப் பிசு பிசுத்துப் போய்விட்டது. 


எனக்கும் நயினார் அண்ணனுக்கும் ஐந்து வருட இடைவெளி. நானாவுக்கும் எனக்கும் இரண்டரை வருடம். என் சம்பந்தப்பட்ட காட்சிகளும் களேபரங்களும் அவனுக்குத்தான் அதிகம் பரிச்சியம் என்பதால் என்னக் கேலி பண்ணவும் கடுப்பேத்தவும் அடிக்கடி இதையெல்லாம் கையில் எடுத்துக்குவான். அவனைக் கேலி பண்ண நானும் சில விஷயங்கள் வைத்திருப்பேன். பதிலுக்குப் பதில் சொல்லம்புகள் பறந்து சண்டை களை கட்டும்போது அண்ணனோ அக்காவோ வந்து அதட்டல் போட்டு அடக்கிவிடுவார்கள். 


தூக்கத்தில் நடந்தது கதை சொன்னதெல்லாம் எப்போது மறைந்தது எப்படி போச்சுது என்பதெல்லாம் விளங்கவே இல்லை. ஆனாலும் அப்பப்போ தூக்கத்தில் எழுந்து சுவரோரம் நின்று பயமுறுத்துவதாக தம்பி அவ்வப்போது கோள் சொல்லுவான். இந்த விஷயங்களை ஒரு குறைபாடாக அம்மாவோ அப்பாவோ கருதவே இல்லை. மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து  (Somnambulism) ”தூக்கத்தில் நடப்பது” பற்றி படித்தபோதுதான் சுமார் 20% மக்களில் இது நடப்பது இயற்கை என்பது புரிந்தது. அளவுக்கு அதிகமான வாசிப்பும் நில நேரங்களில் தூக்கத்தைக் கெடுப்பதால் இந்த மாதிரி நிகழலாம். 


அடடா! என் பதிவுகளை வாசிக்கச் சொல்லி எழிலுக்கு அன்புக் கட்டளை வேறே போட்டிருக்கேன்.  காதலிச்ச காலங்களிலேயே கட்டுரை (composition) மாதிரி இருக்குதுன்னு பாதி கடிதங்களைமட்டும் படிக்கிற ஆளு. இந்த "பின்பக்கத்தின் பளீரொளி" , அதாங்க "Flash-back" கதையை வாசித்துவிட்டு ஏதேனும் விபரீத முடிவெடுத்தால் என்ன செய்வது? கலகத்தை ஆரம்பித்த நாரதர் நாராயணன் (நானா) தான்

 மத்தியஸ்துக்கு வரணும். மச்சானும் மச்சினனும் தோஸ்த்துங்கதான்.

Monday, September 21, 2020

அலை-16

 அலை-16

தென்னந் தட்டிக்குக் ”கிடுகு” என்ற பெயர் இருந்ததே மறந்து விட்டது. நண்பன் அஸ்வதரன் நினைவூட்டிய பின்தான் நினைவுக்கு வந்தது.  


பள்ளிப் பருவத்தில் ஆண்களுக்கு சாரணர் இயக்கம் ( Scout)  இருப்பதுபோல் பெண்களுக்கு சாரணியர் இயக்கம் (Guides) உண்டு. எனது வகுப்புத் தோழன் சுதாகரின் அம்மா அலெக்ஸ் டீச்சர்தான் எங்களுக்கு Guides ஆசிரியை. கண்டிப்பும் கனிவும் ஒரு சேரப் பெற்ற அன்பான ஆசிரியை. வகுப்புத் தோழன் அம்மா என்பதால் எங்களுக்கு எந்த சலுகையும் கிடையாது.  வாரத்தில் ஒருநாள் சாரணியர் வகுப்பு இருக்கும். அதில் நிறைய கைவினைப் பொருட்கள் செய்ய சொல்லித் தருவாங்க.


 கிடுகு பின்னுவதும் அதில் ஒன்று. கிடுகு தட்டி பின்ன மாட்டோம், அந்த மாதிரி பின்னலில் ஓலைப்பெட்டி முடைய சொல்லித் தருவார்கள்.எங்கள் ஊரில் பனை மரம் அதிகம் என்பதால் பனை ஓலைகள் இலகுவாகக் கிடைக்கும். 


கொஞ்சம் இளசாக உள்ள ஓலைகளைக் கிழித்து சமமான அளவுள்ள பனை நார்கள் ரெடி பண்ணுவது முதல் பயிற்சி. சொல்ல ஈஸியாக இருக்கும். ஆனால் நேர் கோட்டில் நார்கள் கிழிப்பது ரொம்பக் கஷ்டம். வகுந்து இழுக்கும் போது குறுக்கு வாக்கில் கிழிந்து பல்லி மாதிரியோ பல்பம் மாதிரியோ கண்ட வடிவங்களில் வரும். நிறைய ஓலைகளை வீணாக்கிய பிறகுதான் கொஞ்சம் நார்கள் கிடைக்கும். அதுக்கே ஒருவாரம் ஒப்பேத்திடுவோம். ஹோம் வொர்க் எல்லாம் உண்டு. ஒருவழியாக ”படித்து கிழித்து”(ஓலையைத்தாங்க) பனை நார்களுடன் அடுத்த வாரம் தயார் நிலையில் இருப்போம்.


ஓலைப்பெட்டியில் முதலில் அடிபாகம்தான் பின்னணும். ரெண்டு பனை நார்களில் முதல் கட்டம் பின்னிவிட்டு அடுத்த கட்டத்துக்கு போகும் முன்னர் முதல் கட்டம் பிரிந்து வந்துவிடும். எப்படியோ திக்கித் திணறி ரெண்டுமூணு கட்டம் போட்ட பிறகும் பிடிமானம் இறுகலாக இல்லாவிட்டால் எல்லாம் உருவிகிட்டு வந்துடும். பரோட்டா சூரி பாணியில் ‘‘மறுபடியும் முதலில் இருந்து’’ ஆரம்பிக்க வேண்டியதுதான். எப்படியோ ரெண்டு மூணுவாரம் வேர்வை சிந்தி உழைச்சு அடிபாகம் போட்டுட்டு பெருமையா அலெக்ஸ் டீச்சர்கிட்டே கொண்டு போவோம். அடுத்த கட்டமாக பெட்டி செய்ய பயிற்சி கொடுப்பாங்க. கூடையை மடக்கி பெட்டிபோல் செய்யவேண்டுமென்றால் நாலு மூலைகளையும் மடக்கி  ஷேப்புக்குக் கொண்டு வரணும்.  எத்தனை தரம் சொல்லித் தந்தாலும் புரியாது. மூலை மடிக்கத்தெரியாமல் கூடை பின்னுவதையே விட்டுட்டு ஓடிப்போனவர்கள் அதிகம். நானெல்லாம் எதுக்கும் கலங்காத வில்லி வீரம்மா. ஒருவழியாக சில பல நாட்கள் முயற்சி செய்து கூடை பின்னி முடிச்சிட்டேன். ஆனால் அதுக்குப் பெயர்  'ஓலைப் பெட்டி"ன்னு சொன்னால் யாருமே நம்பலை,அப்படி ஒரு நசுங்கிய பெட்டி அது.


பெட்டி பின்னுவது போக நிறைய கைவேலைகள்  வாழ்க்கைக்கு உகந்ததாக சொல்லித் தருவார்கள். கைக்குட்டைக்கு மடிப்பு தைத்து பூவேலை செய்வது, வயர் கூடை பின்னுவது, பாசி கோர்த்து மணி பர்ஸ் செய்வது போன்ற பல  பயிற்சிகள் உண்டு. அன்று அழு மூஞ்சியா கத்துகிட்டதெல்லாம் இப்போ நிறைய  பயனுள்ளதாக இருக்குது. இப்பவும் எங்க வீட்லே உள்ள வயர்கூடைகள் சில நான் பின்னியதாகவே இருக்கும்.


பாசியில் மணிபர்ஸ் பண்ண பாசிக்காக அலைவது குட்டி டூர்தான். எங்க ஊரில் ஒரேயொரு கடையில்தான் இந்த விஷயங்களெல்லாம் வைத்திருப்பாங்க. அந்தக் கடை முதலாளி பையனும் என் வகுப்புத் தோழன்தான் .VTS  கடை என்று ஞாபகம்.. ஆனால் அங்கே நினைச்ச கலரில் பாசி இருக்காது. மயில் டிசைன் போடணுமென்றாலும் யானை என்றாலும் ஒரே கலர் பாசிதான். வேண்டிய கலர் சொல்லி, அவங்க கொள்முதல் செய்து எங்க கைக்குக் கிடைப்பதற்குள் வருஷமே முடிஞ்சிடும். அண்ணன் அக்கா  யாராவது திருச்செந்தூரோ திருநெல்வேலியோ போனால் சீக்கிரமாகக் கிடைக்கும். 


வருஷத்துக்கு ஒருமுறை பக்கத்து ஊர்களில் நடக்கும் சாரணியர் கேம்ப்புக்கும் கூட்டிட்டு போவாங்க. அதுக்குன்னு பிரத்தியேக பயிற்சிகளெல்லாம் நடக்கும். வேறு பள்ளிகளிலிருந்து வரும் பெண்களிடம் அறிமுகமாக நல்ல வாய்ப்புகூட.  ஒரே தரம் மெஞ்ஞானபுரம் சென்று வந்தது நினைவிருக்கிறது. 


சாரணியருக்குன்னு ஒரு யூனிபார்ம் உண்டு. கரு நீலக் கலரில் பாவாடை தாவணி, வெள்ளை நிற ரவிக்கை. எனக்கு அந்தக் கலரே பிடிக்காது. நாங்களெல்லாம் அநேகமா  பனை மரம், தென்னை மரம் கலரில்தான் இருப்போம். அந்த கருங்கலர் போட்டால் எங்களுக்கும் துணிக்கும் வித்தியாசமே தெரியாது. வீட்லேயும் ரெகுலர் யூனிபார்ம் தவிர கூடுதலாக இந்த யூனிபார்ம் எடுத்துத் தர மாட்டாங்க. அதனால் பாவாடையிலிருந்து தாவணிக்கு மாறிய பிறகு சாரணிய வகுப்பும் முடிவுக்கு வந்துவிட்டது. 


சாரணர்கள் ஆடை மட்டும் விறைப்பான டவுசர், தொப்பி, கழுத்தில் உள்ள ஸ்கார்ஃப் , பூட்ஸ் என்று அட்டகாசமாக இருக்கும். அதன் ஆசிரியர் நம்பி சாரும் கண்டிப்புடன் இருப்பார். பள்ளியில் பசங்க எல்லோரும் பயப்படுவது நம்பி சாருக்குத்தான். எங்களோட உடற் பயிற்சி ஆசிரியரும் அவர்தான். ஞானையா சாரும் உடற்பயிற்சி ஆசிரியர்தான், ஆனாலு கொஞ்சம் இளகிய மனசுள்ளவர். 


அசெம்பிளிக்கு தாமதமாக வருவது, வகுப்பு நேரங்களில் வெளியே சுற்றித் திரிவது, உடற் பயிற்சி சமயங்களில் கட் அடிப்பது போன்ற நேரங்களில் நம்பி சார் பிரம்புதான் எல்லோரையும் கட்டுப் படுத்தும்  மந்திரக்கோல்.


 பள்ளியின் முன்புறம்,  பின்புறம், பக்கவாட்டில் உள்ள நடைபாதை எல்லாமே மைதானங்கள்தான். எல்லா விளையாட்டுக்களும் அங்கேதான் நடக்கும். ஒரே நேரத்தில் ரெண்டு மூணு வகுப்பு மாணவர்கள் கூட உடற்பயிற்சியில் ஈடுபட்டிருப்பார்கள். அவ்வளவு விஸ்தாரணமான காலி இடங்கள் உண்டு. 


பின்னாடி உள்ள மைதானம் மிகப் பெரியது என்பதால் கால்பந்து விளையாட்டுகள் அங்கேதான் நடக்கும். மாணவர்களின் ஓட்டமும் ஆட்டமும்  "பிகில்" பட காட்சிகளை மிஞ்சும் வண்ணம் இருக்கும். பெண்களெல்லாம் துரைப்பாண்டியன் சார் வீட்டு மாடியிலிருந்து திருட்டுதனமாகப் பார்ப்போம்.


 ஆசைப்பட்டு விளையாடுபவர்களும், அடிக்குப் பயந்து அவஸ்தையுடன் விளையாடுபவர்களும் எல்லா வகுப்பிலும் உண்டு. 

 வேப்ப மரத்தடி நிழலில் ரெண்டு இரும்பு போஸ்ட் இருக்கும். ”முதல் மரியாதை” சிவாஜி மாதிரி கெத்து காட்ட பசங்களெல்லாம் அதில் தொங்கி புல்-அப்ஸ் எடுப்பாங்க.  நாங்களெல்லாம் அதில் தொங்கி ஊஞ்சல் மட்டும் ஆடுவோம்.


 அடர்த்தியான மர நிழல் கபடி விளையாட வசதியான இடம். பேயன்விளையிலிருந்து வரும் பெண்கள் கூட்டம் நல்லா விளையாடுவாங்க. அதிலொரு இரட்டையர்கள் ( ஒருத்தி பெயர் வத்ஸலா) சூப்பரா விளையாடுவாங்க. என் தோழி ஜான்ஸியும் நல்லா விளையாடுவாள்.  நான் அப்போ ரொம்ப நோஞ்சான். எப்போ கபடி விளையாடினாலும் காலில் அடிபட்டு ஜவ்வு கிளிஞ்சிடும். ஒருவாரம் நொண்டிக் கொண்டுதான் வகுப்புக்கு வருவேன்.


ஆண்டு விழா சமயத்தில்மட்டும் எல்லா போட்டிகளிலும் பெயர் கொடுத்திடுவேன். நான் ஆறாம் வகுப்பு சேர்ந்த சமயத்தில் எங்க அண்ணன்கள் 11 ஆம் வகுப்பில் இருந்தார்கள். நான் ஓட்டப் பந்தயத்தில் சேரப் போறேன்னு சொன்னப்போ 8ஆம் வகுப்பு வரை ஒரே தகுதிதான். பெரிய வகுப்பு பொண்ணுங்க கூட விளையாடி நீ ஜெயிக்க முடியாது, சேர வேண்டாம் என்று சொன்னாங்க. ஆனாலும் அண்ணனுக்குத் தெரியாமல் பேர் கொடுத்திட்டேன். அங்கங்கே தனித் தனியாகத்தான் போட்டி நடக்கும், தப்பிச்சுக்கலாம்னு நெனைச்சேன். ஆனால் என் துரதிருஷ்டம், எங்க போட்டிக்கு நயினார் அண்ணன் தான் லைன் அம்பயர். எப்படியோ பயந்துகிட்டே ஓடி ரெண்டாவது பரிசு வாங்கிட்டேன். 


நாங்க பள்ளி இறுதி வருஷம் வந்த போதுதான் கிரிக்கெட் என்ற விளையாட்டு பற்றி பரவலாகப் பேசப் பட்டது. அதுபற்றி எதுவும் புரியாத நாட்களில் கிரிக்கெட் பேட்டை பேஸ்பால் விளையாட பயன்படுத்திக் கொண்டிருந்தோம்.


அடடா இந்த நினைவலை

கிடுகில் ஆரம்பித்து 

கிரிக்கெட்டில் முடிந்துவிட்டதே!!

Saturday, September 19, 2020

அலை-15

 அலை-15

நிலாச்சோறு சாப்பிட்டு இருக்கீங்களான்னு கேட்டால் நிலாவில் போய் சாப்பிடுவதா என்று இன்றைய தலைமுறை கேலியாகக் கேட்கும். அமுதைப் பொழியும் நிலவில் தரையில் அமர்ந்து தலையை நிமிர்த்தி வான் நோக்கி உண்ட சாப்பாடு அமிர்தம் இளவல்களே!!


இப்போதெல்லாம் வருஷத்துக்கு ஒன்றிரண்டு முறைகள் கூட நிலவைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. நிலா அப்படியேதான் இருக்கிறது. நாம்தான் மாறிப்போனோம். கார் கூரையும் கான்க்ரீட் தளங்களும் நம்மை நிலவுக்கு அந்நியமாக்கிவிட்டது. அதனால் “அற்றைத் திங்கள் அந்நிலவில்” என்று பாட்டுமட்டும் பாடிக் கொண்டு  இருக்கிறோம். 


எங்கள் வீட்டில் மின்சாரமே இல்லாதபோது மின்விசிறி மட்டும் எங்கிருந்து வரும். கோடைக்காலங்களில் வீட்டினுள் படுக்க முடியாது,  அவிஞ்சி போயிடுவோம். அதனால் வெளிவாசலில் தான் படுக்கை.தரையில் படுக்க பாயோ போர்வையோ சரியா வராது.  கீழே விரிக்க   தென்னந் தட்டிகள் எப்பொழுதும் தயாராக இருக்கும். 


இரட்டைத் தென்னங் கீற்றுகளை இணைத்து அழகான தட்டி செய்திருப்பாங்க. ஏழெட்டு எண்ணம் எப்போதும் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். மழைக்காலங்களில் அதே தட்டிகள் கூரைமேல் ஒய்யாரமாகப் படுத்து மழைக்குக் காவல் காக்கும்.

 குடும்ப அங்கத்தினர்களின் உயரத்திற்கேற்ப பெரிசும் சிறுசுமாக வாங்கி வைத்திருப்பாங்க.


இரவு மெல்லக் கவிழும்போதே “ மூந்தி கருத்திருச்சு, தட்டியை எடுத்துப் போடுங்க”ன்னு சத்தம் கேட்டவுடனேயே நொடிப்பொழுதில் தரையை அடைத்து பரப்பிவிடுவோம். கடைசியாக விரிக்கிறவங்க நடைபாதையை ஒட்டி படுக்கணும். அங்கே படுத்தால் நாலுகால் நண்பர்கள் சிலர் ( நாய், ஆடு, மாடு, சில சமயங்களில் பன்றிகள்கூட- கிராமங்களில் இதெல்லாம் சகஜமப்பா) நம்மீது ஏறி பச்சைக் குதிரை விளையாடி விடுவார்கள். அலெர்ட் ஆறுமுகமாயிருந்தால்தான் வசதியா இடம் பிடிச்சு நிம்மதியாகத் தூங்கலாம்.


 குறுக்கும் நெருக்குமாக விரிக்கப்பட்ட தட்டிகளில் அவரவர் உடைமைகளைப் ( தலையணை, பெட்ஷீட்) போட்டு ரிசர்வ் செய்து கொள்வோம். நிறைய பேருக்குத் தலையணை கிடைக்காது. சுருட்டி வைக்கப்பட்ட துணிமூட்டைதான் தலையணை. 


காலையில் எழுந்ததும்  அவரவர் தட்டிகளைத் தூக்கி சுவரில் சாத்த வேண்டும். வெயில் பட்டு ஓலை கெட்டுப்போகாமல் இருக்க சில நேரங்களில் தண்ணீர் தெளிக்க வேண்டும். சாயங்காலமே தட்டி விரிக்க வேண்டிய இடங்களில் தண்ணீர் தெளித்து தரையின் சூடு தணிக்க வேண்டும். 

அப்பாவுக்கு ஒற்றை பெஞ்சும் பெரியண்ணனுக்கு சட்டம் வைத்த மரக்கட்டிலும் ரெடியாக போடப்பட்டிருக்கும். அம்மா மதினியெல்லாம் சிறுசுங்க பக்கத்தில் இருக்கும் இடங்களில் ஒண்டிக்குவாங்க.

ரொம்ப வெயில் அதிகமாகும் காலங்களில் ஓலை விசிறி ஒவ்வொருத்தர் கையில் இருக்கும்.


பெளர்ணமி அன்று தென்னந் தட்டியில் மல்லாக்க படுத்து வானத்தைப் பார்க்கிற சுகம் வேறு எந்த இயற்கைக் காட்சியிலும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.


 கவிஞர்களின் வர்ணனை மாதிரி ”நட்சத்திரங்களை எண்ணினாள் கதாநாயகி” எல்லாம் எங்களைப் பார்த்து எழுதியதுதான். வானத்தில் குவிந்து கிடக்கும் நட்சத்திரங்களின் பிரயாணம் ஒவ்வொரு சீசனுக்கும் இடம் மாறுவதை தினம் பார்த்துக் களித்தது எங்கள் தலைமுறை.

மூன்று நட்சத்திரங்கள்  ஒரே கோட்டில் இருக்கும், அதற்குப் பெயர் உலக்கை. நட்சத்திரக் கூட்டத்திற்கு அவ்வப்போது அவரவர் ரசனைக்கேற்ப பெயர்கள் மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கும். மேகக் கூட்டங்களிடையே நட்சத்திரம் மறைவதை ஒட்டி போட்டிகளெல்லாம் கூட நடக்கும். காற்றின் திசை மாறும்போது நாம் கணித்த திசையில் செல்லாமல் மேகம் இடம் மாறிவிட்டால் தோற்றுப் போய்விடுவோம். 


நிலவில் பாட்டி வடை சுட்ட கதை காலம் காலமாக சொல்லப்பட்டது போலவே எங்களுக்கும் சொல்லப்பட்டது. அந்தக் கதையைக் கேட்டுக் கொண்டே நிலவைப் பார்க்கும் போது, உண்மையாகவே ஒரு பாட்டி காலை நீட்டி உட்கார்ந்திருப்பதுபோல் தோன்றியிருக்கிறது. பாட்டி வடை சுட்டது பற்றி ஆச்சி சுவாரஸ்யமாக பீலாவிட்டு அதையே தொடர்கதையாக நீட்டி சொல்லுவாங்க. தினசரி கதை சொல்லும் நேரம் நிலாவிலிருந்தே ஆரம்பிக்கும். அதன் தொடர்ச்சியாக ஏதோ ராஜா ராணி கதையெல்லாம் கூட ஓடும். 


சாப்பிடுவது,கதை சொல்வது, வானத்தை ரசிப்பது எல்லாமே அந்தத் தென்னந் தட்டியில்தான். சில நேரங்களில் சீட்டு விளையாடுவதும் அங்கேதான். அதற்கு வெளிச்சம் பத்தாது என்பதால் தீப்பந்தம் வைத்து விளையாடுவோம். பழைய டானிக் பாட்டில்களின் அலுமினிய மூடியில் ஓட்டைபோட்டு பழைய துணியைத் திரியாக்கி அதில் சொறுகி பாட்டிலில் மண்ணெண்ணெய் ஊற்றினால் பந்தம் ரெடி. ஒரு பந்தம் வைத்தாலே முற்றம் முழுதும் வெளிச்சம் கிடைக்கும். 


நான் கல்லூரி செல்லும் வரை அந்தமாதிரி பந்தத்தில்தான் நிறைய படித்திருக்கிறேன். ஒரு முறை லயித்து வாசிச்சப்போ பந்தத்தின் அருகில் தலை குனிந்ததால் முன் தலையின் முடி கருகி பாரிதாபமாக அலைந்திருக்கிறேன். யாரோ பார்த்து தீயை அணைத்ததால் முகம் கருகாமல் தப்பினேன். 


வானத்தில் உலவும் மேகக்கூட்டங்களை அவரவர் கற்பனைத் திறனுக்கு ஏற்றவாறு உருவகப்படுத்தி கதை பின்னுவதில் நாங்கள் சமர்த்தர்கள். கற்பனைத் திறனற்ற  அடாவடிகளுக்கு எங்கள் கற்பனையைக் கேலி செய்து வெறுப்பேற்றுவதும் ஒரு பொழுதுபோக்கு. இன்றும் கூட வானத்தில் மேகக் கூட்டங்களைப் பார்த்தால் வித விதமான உருவங்களைக் கற்பனை செய்து மகிழ்வது எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு. 


கதை சொல்லி ஓய்ந்து தூங்கும் நேரம் வரும்போது வீட்டிலுள்ள ட்ரான்சிஸ்டரிலிருந்து ஏதாவது சினிமா பாட்டு ஒலித்துக் கொண்டிருக்கும். இசையும் நிலவும் கூட இனிமையான இரவுகளைத் தந்திருக்கிறது.


”வானம் எனக்கொரு போதிமரம்” என்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை. வானம் எங்களின் நாடக மேடை.  அதற்குள் எத்தனை காட்சிகள், கவிதைகள், கற்பனைகள். வீனஸும், ப்ளூட்டோவும், வான சாஸ்திரமும் விஞ்ஞானமும் எங்கள் மண்டைக்குள் புகுவதற்கு முன் வானம் எங்கள் விளையாட்டு மைதானம். 


வெண்ணிலா எங்கள் தோழி , கதாநாயகி.  அவள் நடையழகும், சுருங்கி விரியும் இடையழகும் எங்களுக்கு ஆச்சரியம். அமாவாசையன்று முழுதாக மறையும் போது கவலை கொள்ளும் எங்கள் கூட்டம். பிறை கண்டு பித்துப்பிடித்து மகிழும் மனங்கள். 


விடி வெள்ளியும், வானவில்லும் எங்கள் விளையாட்டுத் தோழர்கள். வானத்து நட்சத்திரங்கள் சினிமா நட்சத்திரங்களைப் போலவே எங்களை மகிழ்விக்கும் கலைஞர் கூட்டம். வடை சுட்ட பாட்டியும் வழி மாறும் மேகங்களும் எங்கள் உறவினர்கள். கிரகணமும் , வால் நட்சத்திரமும் , கார்கால மேகங்களும் எங்களைக் கடுப்பேத்தும் வில்லன்கள்.


வானத்தையும் நிலவையும்

 வேறுபடுத்தி பார்க்க முடியாது

நினைவலைகளையும்

நிலவையும்கூட

வேறுபடுத்தி பார்க்க முடியாது.

Wednesday, September 16, 2020

அலை-14

 அலை-14

எண்ணெய்க் குளியல் போட்ட அநுபவம் எல்லாருக்கும் இருக்கும். ஆனால் அதற்குப் பின்னாலுள்ள இம்சைகள் எத்தனை பேருக்குத் தெரியும்?


 சின்ன வயசிலே எண்ணெய் தேச்சுக் குளிக்க அம்மா கூப்பிட்டால் தப்பிச்சு ஒளிஞ்சுக்குற  முதல் ஆள் நான் தான். வீட்டில் எல்லாருக்கும் வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய்க் குளியல் என்பது எழுதப்படாத விதி, எங்களின் தலைவிதி.


 காலையிலேயே அந்தநாள் அழுகையுடன்தான் ஆரம்பம் ஆகும்.முதலில் எல்லாருக்கும் முகம் வரைக்கும் ஒழுக  (அதுக்குப் பேர் குளிர தேய்க்கிறது) எண்ணெய் தேச்சு விடுவாங்க. ஒழுங்கா நின்னால் சீக்கிரம் தேச்சுக்கலாம். முரண்டு பிடிக்கிறவங்களுக்கு தலையில் ரெண்டு குட்டுவேறே கூடுதலாகக் கிடைக்கும். 


சினிமாவிலும் விளம்பரங்களிலும் வர்ற மாதிரி மென்மையாக எல்லாம் தேய்க்க மாட்டாங்க. சூடு பரக்க சரட் சர்ட் என்று தலையில் எண்ணய் வைத்து அரக்கிவிடுவாங்க. சில நேரங்களில் எண்ணெயை இளஞ்சூடாக்கியும் தேய்ச்சு விடுவாங்க.


எண்ணெய் ஊறணும்னு ரொம்ப நேரம் காத்திருக்கவும் வைச்சிடுவாங்க.அதுக்குள்ளே கண்ணுக்குள்ளே எல்லாம் எண்ணெய் கசிந்து இம்சை படுத்தும். அதுக்குப் பிறகுதான் உண்மையான தண்டனையே இருக்குது. 


குளிக்கப் போவதே கொலைக்களத்துக்குப் போறமாதிரிதான் இருக்கும். தலையில் படிந்துள்ள எண்ணெயை எடுக்க  இப்போ மாதிரி சோப்போ, ஷாம்போ கிடையாது. சீயக்காய் தூள்தான். அது எப்படி இருக்கும் என்னவெல்லாம் பண்ணும்னு இப்போ இருக்கிற யூத்துங்களுக்குத் தெரியவே தெரியாது. 


ஒரு கிண்ணத்துலே சீயக்காத்தூளைக் கொட்டி தண்ணீரில் கலக்கி பேஸ்ட் மாதிரி பண்ணியிருப்பாங்க. அதுலேயிருந்து ஒரு கைப்பிடி எடுத்து உச்சந்தலையில் வைச்சு கரகரன்னு தேய்ப்பாங்க. அதை மேலும்  சுமுகமாகத் தேய்க்க கொஞ்சம் தண்ணீர் வேறே தெளிச்சுக்குவாங்க. 


தேய்க்கத் தேய்க்க அந்த சீயக்காய்த்தூள் கலவை குற்றால அருவிமாதிரி முகமெல்லாம் வடியும். கண்ணை மூடிக் கொண்டு உட்கார வேணுமின்னு சொல்லப்பட்ட அறிவுரையைக் கேட்டு சாமியார் மாதிரி உட்கார்ந்திருந்தால் தண்டனையிலிருந்து தப்பலாம். அவசரக் குடுக்கையாக இடையில் கண்ணைத் திறந்தால் அவ்வளவு சீயக்காயும் கண்ணுக்குள் வடிஞ்சிடும். அந்த எரிச்சலை சொல்லிப் புரிய வைக்க முடியாது. அநுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். 


ஒழுக்கமான பிள்ளைகளுக்கு கண்ணு தப்பிச்சாலும் மூக்கு தப்பிக்காது. எப்படியும் சீயக்காய்த் துகள்கள் மூக்கினுள் சென்று தொடர் தும்மல்களைப் போட வைச்சிடும். எண்ணெய்ப் பிசிறு தலையிலிருந்து போயிட்டாலும் சீயக்காய்த் தூள் அவ்வளவு சீக்கிரம் நம்மளை விட்டுப் போகாது. ரொம்ப பாசக்காரப் பவுடர். தலை துவட்டி முடி காய்ந்த பிறகும்கூட தலையிலேயே படிந்திருக்கும். அப்புறம் நிதானமாக சிணுக்கோலி (மயிர்கோதி) வைத்து சிக்கெடுக்கும் போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டும். 


எங்களுக்கெல்லாம் தலைமுடி புவியீர்ப்பு திசைக்கு எதிர்புறம் வளர்வதால் அதிகம் சிரமம் இருக்காது. நீண்ட கூந்தல் கொண்டவர்கள் பாடு ரொம்பக் கஷ்டம்தான். தலை ஈரம் காய சாம்பிராணிப் புகையெல்லாம் பிடிப்பாங்க.


இன்னும் முடியவில்லை தண்டனைக்காலம். எண்ணெய் தேச்சுக் குளிச்ச அன்னிக்கு இஞ்சி சொரசம் (இஞ்சி சாறு எடுத்து பனங் கல்கண்டோ கருப்பட்டியோ போட்டு கொதிக்க வைத்து செய்வது) குடிக்கணும். இனிப்பு பேருக்குதான் இருக்கும்,காரம்தான் முழுசும். குடிச்சே ஆகணும். சிறுசுங்க அடம் பிடிச்சால் சங்கு(பாலாடை)லே ஊத்தி புகட்டிடுவாங்க. அதுக்கு எங்க அம்மாவோட போஸ் இன்னும் ஞாபகம் இருக்கு. ரெண்டு காலுக்கும் இடையில் குழந்தையைப் பிடித்துக் கொண்டு இடது கையால் குழந்தையோட ரெண்டு கையயும் பிடிச்சுட்டு வலது கையால் சங்கில் இருந்து புகட்டுவாங்க. வாயைத் திறக்காத ஆசாமிகளுக்கு பல்லிடுக்கில் சங்கின் முனை செறுகப்பட்டிருக்கும். குடிச்சுட்டு துப்பிவிடவும் முடியாது. மூக்கைப் பிடித்து சுவாசத்தை நிப்பாட்டி திரவத்தி உள்ளே செலுத்த பக்கத்திலேயே அடியாள் ஒருத்தர் ரெடியா இருப்பாங்க.

பெரிய பசங்க தகறாறு பண்ணினால் குடிக்க வைக்க பெரியண்ணன் பிரம்போட நிற்பான்.


குளிர்காலமானால் அத்தனை பேருக்கும் வெந்நீர் வேறு ரெடி பண்ணணும். வெளியில் விறகு அடுப்பில் மண்பானையில் நீர் கொதித்துக் கொண்டிருக்கும். ஒவ்வொருத்தரும் அடுத்து வர்றவங்களுக்கு ரெடி பண்ணணும். கண்ணில் வடியும் எண்ணெயும் விறகடுப்பின் கரும் புகையும் எங்களின் எண்ணெய்க் குளியலின் கண்ணீர்க் கதைகளைச் சொல்லும். பாத்திரம் கழுவும் சீயக்காய்ப் பவுடர் எங்களின் வாராந்திர எதிரியாவது காலத்தின் கொடுமை.


பெரிய தலைகளெல்லாம் எண்ணெய்க் குளியலை ரசித்து பண்ணுவதைப் பார்த்திருக்கிறேன். 

எண்ணெய் தேய்த்து குளித்த அன்று மட்டும் கண்டிப்பாக தலைக்குப் பூ வாங்கித் தருவாங்க. அது ஒன்றுதான் மனதுக்கு ஆறுதல் தரும் நிகழ்ச்சி. 


இதே எண்ணெய்க் குளியல் தீபாவளி அன்றும் நடக்கும். ஆனால் அன்று எல்லாரும் பிஸியாக இருப்பதால் தலையில் பாத்திரம் கழுவும் நிகழ்ச்சிகள் கிடையாது. நாங்களே அரைகுறையாகக் குளித்துக் கொள்வோம். புதுத்துணி போடும் சந்தோஷம் வேறு இருப்பதால் அன்று மட்டும் அழாமல் குளித்துவிடுவோம். அவ்வளவு பெரிய குடும்பத்தின் வரவுசெலவுகளை நறுவிசாகப் பார்த்துக் கொண்ட அம்மா அவ்ளோ எண்ணெயைத் தலையில் தேய்த்துத் தண்ணீரில் கரைத்திருக்க வேண்டாம். 


தேங்காய் எண்ணெய்க்கும் எனக்குமான உறவு ரொம்ப களேபரமானதுதான். குழந்தை பிறந்ததும் சேனைத் தண்ணீர் என்று கொடுப்பார்களாம். இப்போ வாயில் சர்க்கரைத் தண்ணீர் ஊத்துறாங்களே அது மாதிரி. நான் பிறந்தப்போ கண்ணு சரியாத் தெரியாத ஆச்சி  சேனைத் தண்ணீருக்குப் பதிலாகப் பக்கத்தில் இருந்த தேங்காய் எண்ணெயைப் புகட்டி விட்டுட்டாங்களாம். நல்லவேளையாக புரையேறி போய்ச் சேராமல் தப்பித்து விட்டேன்.  


அந்தக் காலத்தில் எண்ணெய் மேல் ஏற்பட்ட வெறுப்பு கல்லூரி சென்ற நாளிலிருந்து இன்றுவரை தலைக்கு எண்ணெய் வைத்ததே இல்லை. என்னைக் கேலி செய்யும் விதமாக , அவ்வப்போது என் மகள் அவளுக்கு எண்ணெய் தேய்த்து விடச் சொல்லுவாள். ஆனாலும் நான் தப்பித்து ஓடி விடுவேன். 


எண்ணெய் மேலுள்ள கோபத்தில், நமக்கு பிடிக்காத பசங்களுக்கு “சரியான எண்ணெய்” என்று பட்டப் பெயர் வைத்து ஆத்ம திருப்தி பட்டுக்கொள்வதில் ஒரு சந்தோஷம். 


இவ்வளவு வசவு வாங்கிக் கொள்ளும் தேங்காய் எண்ணெய் சமையலில் மட்டும் ரொம்ப பிடித்த எண்ணெய். சின்ன வயசில் தேங்காய் சட்னியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சாப்பிடுவது செம டேஸ்டாக இருக்கும். இப்பவும் அவியலுக்கு மட்டும் தாளிக்கத் தேங்காய் எண்ணெய்தான். 


முன்னோர்களின் மூடநம்பிக்கையா

மருத்துவ நலனுள்ள வழிமுறையா

வாசமான ரசமான எண்ணெய்க்கு 

விரோதியாக்கியது  என்னை!!

Monday, September 14, 2020

அலை-13

 அலை-13

வாசிக்கும் பழக்கம் எப்போதிருந்து தொடங்கியது என நினைவில்லை. ஆரம்பக் கல்வியின் அகர முதல புரிந்த காலத்தில் இருந்தே தொடங்கியிருக்க வேண்டும். ஆனாலும் முனைப்போடு வாசிக்க ஆரம்பித்தது ஆறாம் வகுப்புக்குப் பின்புதான். அதற்கு வித்திட்டவர்கள் சந்தையின் முனையில் இருந்த ஹோட்டல் கடையும், அன்புத் தோழி அமராவதியும்தான்.


கையில் எந்த பேப்பர் கிடைத்தாலும் எனக்கு அதை வாசித்துவிட வேண்டும். பலசரக்கு சுற்றித்தரும் பேப்பர்கூட தப்பாது. அதெல்லாம் யானைப்பசிக்கு சோளப்பொறி மாதிரிதான்.


 எங்க வீட்டில் தினசரி பத்திரிக்கைகளோ வாரமலர்களோ  வாங்கினதெல்லாம் கிடையாது. எல்லாமே இரவல் புத்தகங்கள்தான்.


  அந்த வயதில், கண்டதையும் படித்தால் கெட்டுப் போய்விடுவீங்கன்னு யாருமே சொன்னதில்லை. அம்மா கைநாட்டு, அப்பா அறிவு ஜீவி. அன்று கண்ணில் கண்டதையெல்லாம் படித்ததால் வந்த அறிவுதான் இன்று எழுதிக் கொண்டிருக்கும் அலை ஓட்டத்தின் அடிப்படை.


சந்தையின் முகப்பில் ஒரு ஹோட்டல் கடை உண்டு, இப்போ அதன் பெயர் கூட மறந்துவிட்டது. அதன் வெளி வராந்தாவில் கம்பி வைத்த ஜன்னல் உண்டு. அன்றைய நாளிதழ்களை அந்தக் கம்பிகளில் சொருகி வைத்திருப்பார்கள். யார்வேண்டுமென்றாலும் வந்து படித்துக்கொள்ளலாம். எடுத்துட்டு போகக்கூடாது. உட்கார்ந்து படிக்க தோதாக சிமெண்ட் தரையும் இருக்கும். பள்ளிக்கு செல்லும் முன்போ திரும்பி வரும்போதோ அந்தத் திண்ணைதான் எனது முதல் நூலகம். 


 தினத்தந்தியில் “சிந்துபாத்”  என்ற படக்கதை தொடராக வந்து கொண்டிருந்த காலம். எனது முதல் தொடர்கதை அநுபவமும் அந்த சிந்துபாத்துடன் தான். ஒருநாள்கூடத் தவறாமல் வாசித்துவிடுவேன். அதை விடுத்து வேறு ஏதும் அந்த நாளிதழில் சுவாரஸ்யம் தந்ததாக இப்போது நினைவில்லை.அந்தத் தொடர் என் பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரி சென்றபிறகும் கூட தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. 


மேல்நிலைப்பள்ளியில் அறிமுகமான தோழி அமராவதி வீட்டில் நிறைய புத்தகங்கள் இருக்கும். பள்ளிக்கு அருகிலேயே அவள் வீடு. சக தோழிகள் எலந்தைப்பழம் பறிக்க அங்கு போகும்போது புத்தங்களை மேய்வது என் வாடிக்கை. சோளப்பொறிக்குப் பதிலாக சொர்க்கபுரியைக் கண்டது அங்கேதான்.


 விதவிதமான புத்தகங்கள் இருக்கும். முகமூடி என்ற படக்கதைதான் முதலில் ஆர்வத்தைத் தூண்டியது. அதில் "இரும்புக் கை மாயாவி"  என்ற கதாபாத்திரத்தின் அட்வென்சர்ஸ் என்னை ஆட்கொண்ட பொழுதுகள். அதுவே வெவ்வேறு புதினங்களாக இருக்கும் ( இந்தக்கால ஜேம்ஸ்பாண்ட் சீரியல் மாதிரி) .


 முத்து காமிக்ஸ் புத்தகங்கள் அதிகமாக இருக்கும். புத்தகங்களை இரவல் வாங்கிட்டுப்போய் திரும்பக் கொடுத்து மறுபடியும் வேறு புத்தகம் வாங்கிக் கொள்ளலாம். படக்கதையிலிருந்து நாவல்கள் பக்கம் மனது திரும்பியதும் அங்கேதான். 


வார இதழ்களில் வரும் தொடர் கதைகளை பிரித்து எடுத்து பைண்ட் பண்ணி வைத்திருப்பார்கள். நாவல் புதிதாக வாங்கினால் விலை அதிகமாக இருக்கும். வார இதழ் வாங்குபவர்கள் வீட்டில் இதே மாதிரி பைண்ட் பண்ணப்பட்ட நாவல்கள் நிறைய  இருக்கும். ஒருவருக்கொருவர் மாற்றிக் கொடுத்து வாசித்துக் கொள்ளலாம். இருக்கிறவங்களுக்கு ஒரு புத்தகம், எங்களைப்போல் இல்லாதவங்களுக்கு எல்லோருடைய புத்தகமும் எங்க புத்தகம்தான். சில நேரம் நாவலின் கடைசி பக்கம் கிழிந்து போயிருக்கும் . முடிவு தெரியாமல் முட்டி மோதி அதே புத்தகம் வேறு யாரிடமாவது கிடைக்குமான்னு அலைந்து முடிவு தெரியும் வரை மிகப் பெரிய போராட்டமாக இருக்கும்.


அந்த கால கட்டத்தில் குமுதம், கல்கி, விகடன், ராணி போன்ற புத்தகங்களில் வந்த தொடர்கதைகளெல்லாம் கண்டிப்பாகப் படித்திருப்பேன். சாண்டில்யனையும், அகிலனையும், நா.பாவையும், கல்கியையும் அறிமுகப்படுத்திய அரிய பொக்கிஷங்கள் அவை. பாக்கட் டைரி அளவில் முத்து காமிக்ஸில் தொடங்கிய வாசிப்பு, பெரிய பெரிய பைண்டு புத்தகங்களுடன் தொடர்ந்தது. தீபாவளி பொங்கல் மலரெல்லாம் விசேஷ பதிவுகள். சுடச்சுட கிடைக்காது, சில நாட்கள் கழித்தே கிடைக்கும். அதற்காகக் காத்திருக்கும் தருணங்கள் இம்சையுடன் கூடிய இனிய பொழுதுகள். 


பள்ளியிலும் ஒரு நூலகம் உண்டு. சில ஆங்கில நாவல்களெல்லாம் அங்கே எடுத்து படித்த நினைவு மங்கலாகத் தெரிகிறது. இடைப்பட்ட காலங்களில் அண்ணன்கள் வாசித்த புத்தகங்களின் பரிச்சியம் தொடங்கியது. ஜெயகாந்தன், காண்டேகர் போன்றோரின் எழுத்துக்கள் மெது மெதுவாகப் பரிச்சியமானது. ஜெயகாந்தன் போன்றோரின் எழுத்துக்களைப் புரிந்து உள்வாங்கும் வயதும் மனமுதிர்ச்சியும் இல்லாதிருந்த போதும் அவற்றை வாசிக்கும் லயிப்பு அப்போதே வந்துவிட்டது. 


சரசக்கா படித்து முடித்து வந்த சமயத்திலிருந்து எங்கள் வீட்டிலும் குமுதம் , விகடன் வாங்க ஆரம்பித்தார்கள். அந்தப் புத்தகம் வரும் நாட்களில் மிகத் த்ரில்லாக இருக்கும். யார் முதலில் அதைப் படிப்பது என்பதில் போட்டி வரும். சுஜாதாவின் "கணேஷ்-வசந்த்" உடன் பயணம் செய்து துப்பு துலக்கின பிறகுதான் வாரமலரை அடுத்தவங்க கையில் கொடுப்பேன். சரித்திரத்  தொடர்கதையின் அடுத்த வாரம் என்னவாக  இருக்கும் என கற்பனைக்குதிரையைத் தட்டிவிட்டுக் கனவு காண்பது பிடித்தமான பொழுது போக்கு.(இந்தக்கால சீரியல் ஆண்ட்டீஸ் மாதிரி).


 அதன்பிறகுதான் சிரிப்புத் துணுக்குகள், சிறுகதைகள் எல்லாம் வரிசை கட்டும். பாக்கியம் ராமசாமியின் “அப்புசாமித் தாத்தா”, ராணிபத்திரிக்கையின்  “ குரங்குக் குசலா” போன்ற நகைச்சுவைத் தொடர்கள் ரொம்பப் பிரபலம். பொக்குவாய் அப்புசாமித் தாத்தா இன்னும் மனசுக்குள் குழந்தைபோல் சிரித்துக் கொண்டிருக்கிறார். 


மர்மத் தொடர்கள், அமானுஷ்யக் கதைகளுக்கும் பஞ்சம் இருக்காது. எண்டமூரி வீரேந்திரநாத் என்று ஒருவர் எழுதும் அமானுஷ்யக் கதையின் ஓஷோ தாத்தாவை நினைத்து நிறைய ராத்திரிகள் பயந்திருக்கிறேன். மனதுக்குள் காதலை உணர வைத்தது கூட தொடர்கதையின் கதாநாயகர்களும் நாயகிகளும்தான்.அவர்களின் ஊடல் மனதுக்குள் கவலையையும் , அவர்களின் களிப்பு சந்தோஷத்தையும் தந்தது கதாசிரியர்களின் திறமையும் கதை சொல்லும் நேர்த்தியும்தான்.


எப்போது பார்த்தாலும் கதை புத்தகத்துடனேயே இருப்பதற்கு அம்மா திட்டினாலும், அடுத்தவர்களிடம் சொல்லும்போது பெருமை பிடிபடாது. ”தூங்குற நேரம் போக எப்போ பார்த்தாலும் எதையாவது படிச்சுகிட்டே இருப்பா, கழிவறைக்குக் கூடப் புத்தகத்துடன்தான் போவாள்” என்று திட்டுவது போல் சொல்லி மகளின் அறிவுத் திறனை வெளிச்சம் போட்டு காட்டுவதில் அம்மா கில்லாடி. அன்றைய பழக்கம்தான் இன்றும்கூட கழிவறை வரை புத்தகங்களைத் தூக்கிச் செல்ல வைக்கிறது.


அப்பா படிக்கும் ஆங்கில பத்திரிக்கையில் ஒன்றும் புரியாது. அதிலிருந்த அரசியலோ நாட்டு நடப்போ , வேலை சார்ந்த செய்திகளோ அதிகம் ஈர்க்கவில்லை. ஆனால் நயினார் அண்ணன் வாங்கி வரும் ஆங்கிலப் பத்திரிக்கையில் செவ்வாய் தோறும் “Know your English”  என்றொரு காலம் வரும். ஒரு ஆங்கிலச் சொல்லின் பிரயோகம் மற்றும் உச்சரிப்பைப் பொறுத்து அநுமானிக்கப்படும் பதில்கள் பலவிதமாக வரும். எனக்கு அந்தப் பகுதிதான் மிகவும் பிடித்தது. பள்ளி இறுதி ஆண்டுகளைத் தொட்ட போதுதான் சிறிது சிறிதாக ஆங்கில நாவல்கள் படிக்கக் கிடைத்தது.


பள்ளியில் நாண்டிட்டெயில் (non-detail) வகுப்பு ஒன்று உண்டு. ஆங்கிலத்தில் படக்கதை எல்லாம் சொல்லித் தருவார்கள். அதற்கென்று தனி ஆசிரியரும் இருப்பார்கள். அதன் தொடர்ச்சியாக பள்ளி நூலகத்தில் புத்தகங்கள் பெற்றுக் கொள்ளலாம். அதெல்லாம் ஒரு கடமைக்குத்தான். ஊர்ப்பள்ளிவாசலில் ஒரு பொது நூலகம் உண்டு. பொதுவாக பெண்பிள்ளைகள் அங்கு செல்வதில்லை. ஒன்றிரண்டு முறை அன்ணனுடன் சென்றிருக்கிறேன். இவை எதுவுமே அமராவதி வீடுபோல் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கவில்லை. 


வாழ்க்கையே ஒரு நூலகம்

வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

எத்தனை விதமான கதைகள்

எத்தனை புத்தகங்களின் ஒருங்கிணைப்பு

எவ்வளவு படித்தாலும் முடிக்க முடியாமல்

எப்போதும் ஏங்க வைக்கும் தொடர் சித்திரம் வாழ்க்கை.


விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் 

கிண்டில் (kindle) கதைகள்

கிழிந்த புத்தகங்களில் 

எங்கள் கதைகள்.

Thursday, September 10, 2020

அலை-12

 அலை-12

அரை நூற்றாண்டுக்கு முன் அடிப்படை வசதிகளற்ற காலத்தில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்ட பொழுதுகள் இனிவராது. கீழே உட்கார்ந்தால் தூக்கிவிட ஆள் தேவைப்படும் காலத்தில் பசித்தவர்கள் பழங்கணக்கு மட்டும்தான் பார்க்க முடியும்.


 கூட்டுக் குடும்பம் என்ற கட்டமைப்பே ஒழிந்து போய், ”எனக்கு நீ உனக்கு நான்” என்ற சுருங்கிப்போன குடும்ப சூழல் இழந்தது மிக அதிகம். ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது அரிதாகிவிட்டது, அர்த்தமற்றதாகவும் ஆகிவிட்டது.


பள்ளி செல்லும் நேரங்களில் அவசரமாக சாப்பிட்டாலும் அடுத்தடுத்து அண்ணனோ தம்பியோ சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். மதிய உணவு பள்ளியில் சாப்பிடும்போது தோழியர் கும்பலாக உட்கார்ந்து கதை பேசி சாப்பிடுவோம். இரவுச் சாப்பாடு எப்படியும் ரெண்டு மூணு பேராவது சேர்ந்துதான் சாப்பிடுவது வழக்கம். ஆறுமுகநேரியில் இருந்தவரை  தனிமையில் உணவு உண்டதே இல்லை. ஊரைப்பிரிந்து வெளியேறும்போது சில கலாச்சாரங்களையும் ஊர் எல்லையிலேயே விட்டுவிட்டுதான் பேருந்து ஏறியிருக்கிறோம்.


இரவு நேரத்துக்கு என்று அம்மா தனியாக சமைத்துத் தர மாட்டார்கள். காலையில் மீந்த இட்லி, மதியம் வைத்த சாதம் எல்லாம் இரவுச் சாப்பாடாக வந்து சேரும். மதியம் வைத்த குழம்பு காய்கள் மீதமாகாத நாட்களில்  சாதத்தில் தண்ணீர் ஊற்றிவிடுவார்கள். அதற்குப் பெயர் வெந்நீர்ப் பழையது. மறுநாள் காலையில் சாப்பிட்டால் அது பழைய கஞ்சி. வெந்நீர்ப் பழையதுக்குத் தொட்டுக்கொள்ள கடலைத் துவையல் இருக்கும். சில நாட்கள் அம்மா மதினி யாருக்காவது நேரம் இருந்தால் எல்லோரையும் வட்டமாக உட்கார வைத்து பழையதில் மோர் போட்டு பிசைந்து உருட்டி உருட்டி கையில் கொடுப்பார்கள். பெரிய சட்டியில் மொத்தமாகப் போட்டு பிசைந்து உருட்டித் தரும்போது அடி பிடியில் அவ்வளவு சாதமும் அரைநொடியில் காலியாகிவிடும். 


நடுவாசல் முற்றத்தில் தென்னங் கீற்றில் எல்லோரும் அம்மாவைச் சுற்றி உட்கார்ந்து உருண்டை சாதம் சாப்பிடும் போது நிலாக்காலமாக இருந்தால் அது நிலாச்சோறு ஆகிவிடும். பக்கத்துவீட்டு மதினி பெரியம்மா எல்லாரும் அவங்க சாப்பாட்டை எடுத்து வந்து எங்களுடன் நிலாச்சோறு சாப்பிடுவாங்க. 


 லீவு காலங்களில் கூட்டம் அதிகம் என்பதால் அடிக்கடி இலையில்தான் சாப்பாடு. தட்டுகளைக் கழுவுவதற்குக் கூட தண்ணீர்ப் பஞ்சம் இருக்கும். இலைதான் எக்கனாமிக்கல்.


பண்டிகைக் காலங்களில் வெளியூரில் படிக்க வேலைக்குச் சென்றவர்கள் எல்லோரும் வீட்டுக்கு வந்துவிடுவோம். அது எழுதப்படாத ஒரு ஒப்பந்தம். அபோது மட்டும் எல்லோரும் பெரிய வீட்டில் பந்தி போட்டு உட்கார்ந்து சாப்பிடுவோம். ஆண்களும் சின்னக் குழந்தைகளும் முதல் பந்தி. பெண்கள் இரண்டாவது. அதிலும் அம்மாவும் பெரிய மதினியும் எப்போது சாப்பிடுவாங்களோ தெரியாது.  பந்தியில் சாப்பிடுவது பெரிய பந்தாவாக இருக்கும்.


தீபாவளி பந்தியில் வித விதமாகப் பலகாரங்களே நிறைந்திருக்கும். முந்தின நாட்களிலேயே தயாரித்து வைத்திருக்கும் முறுக்கு, மிக்சர், அதிரசம், முந்திரிகொத்து போன்றவற்றுடன் அன்றைக்கு அதிகாலையிலிருந்து தயாரிக்கப்பட்ட மெதுவடை, ஆமைவடை( பருப்பு வடை), பஜ்ஜி, பூரி எல்லாம் படையெடுத்து கலவை மணத்துடன்  உட்கார்ந்திருக்கும்.  அதைக் கபளீகாரம் பண்ண நாங்களும் ரெடியாக இருப்போம். ஆனாலும் கொஞ்ச நேரத்துக்குள் திகட்ட ஆரம்பித்துவிடும். இலையில் மிச்சம் வைக்கக்கூடாதுன்னு அம்மா கண்டிச்சு சொன்னாலும் பாதி சாப்பிட்டதுமே எல்லாரும் இலையை மூடிட்டு ஓடிடுவாங்க. அடுத்த தீபாவளிக்கு பலகாரமே செய்ய மாட்டேன் என்று அம்மா சூளுரைப்பதும் பிரசவ வைராக்யம் மாதிரி வருடா வருடம் நடக்கும்.


தைப்பொங்கலுக்கு பரிமாறப்படும் பந்தி வேறே மாதிரி இருக்கும். வாசலில் பொங்கல் வைத்த பச்சரிசி சாதம் தான் முக்கிய உணவு. வருஷத்தில் அந்த ஒருதரம் மட்டும் தான் பச்சரிசி சாதம் சாப்பிடுவோம். பருக்கையாக புழுங்கல் அரிசி சாப்பிட்டு பழகினவங்களுக்குப் பச்சரிசி சாப்பிடறது ரொம்பக் கஷ்டம். அதுவும் குழைவாக செஞ்சிருப்பாங்க. முதல் ரவுண்டு வரும்போது தேங்காய்த் துவையலும் நல்லெண்ணெயும் சோற்றில்போட்டு பிசைந்து சாப்பிடணும். ரெண்டாவது தரம்தான் சாம்பார் எல்லாம் தருவாங்க. பெரியவங்க எல்லாம் ஆஹா ஓஹோன்னு சுவைச்சு சாப்பிடுவாங்க. நாங்களெல்லாம் இ.தி.கொ.( இஞ்சி தின்ன கொரங்கு) மாதிரி முகத்தைச் சுளிச்சுகிட்டு சாப்பிடுவோம்.


குறைந்தபட்சம் ஆறுவகை காய்கறிகள் இருக்கும். பருப்பு, பச்சடி, கூட்டு, அவியல்,  ரெண்டு மூணுவிதமா பொறியல்னு நிறைய தினுசுகளில் இருக்கும். காய்கறி ஓவரா சாப்பிடறது எவ்வளவு கஷ்டம் என்று பேட்டி எடுத்தால் அரைமணி நேரம் பேசலாம். எப்படியும் சர்க்கரைப் பொங்கல் எங்களைக் காப்பாத்திடும். ரவுண்டு கட்டிவிடுவோம்.


 எப்படியும் ரெண்டு மூணு விருந்தாளிகளும் பந்தியில்  இருப்பாங்க. அண்ணன் தம்பிகளோட நண்பர்கள் அந்த பந்தியில் இணைவதும் வாடிக்கை.


அநேகமாக சாப்பிட்டு முடிஞ்சதும் வெற்றிலை பாக்கு இருக்கும். ஆனால் என்ன காரணத்தாலோ எங்களைப் போட விட மாட்டாங்க. வெத்தலை போட்டா மாடு முட்டிடும்னு பயங்காட்டி வேறே வைச்சிருப்பாங்க. ஆனாலும் திருட்டுத்தனமா போட்டுகிட்டு, யாருக்கு நாக்கு நல்லா சிவந்திருக்குதுன்னு எங்களுக்குள் போட்டி நடக்கும்


காய்கறிகள் பொறியல் எல்லாம் வேணுமின்னே அளவுக்கு அதிகமா செஞ்சுவைப்பாங்க. பொங்கல் சீசனுக்குன்னே சில காய்கறிகள் வரும். மூக்குத்திக் காய்னு ஒண்ணு அந்த சமயத்தில் மட்டும் பார்த்திருக்கேன். மீதமான சாம்பாரில் அத்தனை காய் பொரியல்களையும் கொட்டி இளந்தணலில் தண்ணீர் சுண்டும் வரை கிளறி இறக்குவாங்க. அதுக்குப் பெயர் “சுண்டக்கறி”. எங்க வீடுகளில் இன்னும் சுண்டக்கறி ஸ்பெஷல் ஐட்டம்தான். மறுநாள் காணும் பொங்கலுக்கு (கரிநாள்) பிக்னிக் போகும்போது பொங்கல் சோறும் சுண்டக்கறியும்தான் எங்கள் காலை உணவு மதிய உணவு எல்லாம். அத்தனைக் கூட்டத்துக்கும் அடுத்த நாள் முழுவதும் சாப்பாட்டுப் பிரச்னை இல்லாமல் கைகொடுக்கும் அமுதசுரபிகள்.  எனக்கு நினைவு தெரிந்து அந்த ஒருநாள் மட்டும் எங்க வீட்டு அடுப்பு அணைந்திருக்கும். 


கல்யாணம், காதுகுத்து, சடங்கு எல்லாமே வீட்டிலேயேதான் நடக்கும். வாசலில் பந்தல் போட்டு வாழை மரம் கட்டிவிட்டால் வீடுதான் கல்யாண மண்டபம்.ஆபட்ஸ்பரி கூட அதுக்கு ஈடாகாது. எங்கவீட்டு விசேஷங்களுக்கெல்லாம் சமையல் செய்ய ஸ்ரீவைகுண்டத்திலிருந்து சுடலை முத்து அண்ணன் வந்துவிடுவாங்க. வீட்டுக்குப் பின்புறம் ஆக்குப்பிறை  (சமையல்கூடம்) போட்டு மூணுவேளையும் சுடச் சுட சமையல் நடக்கும். கேட்டரிங் காலேஜ் பசங்க மாதிரி நாங்களேதான் பரிமாறுவோம். மேஜை துடைப்பதில் இருந்து, பரிமாறுவது, எச்சில் இலை எடுப்பது வரை உள்வீட்டு ஆட்கள்தான் செய்வோம். 


இலையில் பறிமாறுவதற்கு சில ரூல்ஸ் வேறே உண்டு. கரெக்டாக செய்யணும். இலையின் மூக்குப் பக்கம் சாப்பிடுபவரின் இடது கைப் பக்கம் இருக்கணும். முதலில் இலை கழுவ தண்ணீர் தெளிக்கணும். இடக்கை ஓரம் உப்புதான் முதலில் வைக்கணும். அதுக்குப்பிறகுதான்  பொறியல், அவியல் எல்லாம். அதுஅதுக்குன்னு அலாட் பண்ணியிருக்கிற இடங்களில்தான் இலையில் வைக்கணும். மாற்றி வைச்சா திட்டு கிடைக்கும். கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் அடிகூட கிடைக்கும். பாயாசம் இலையில்தான் ஊற்றணும். அதுக்குப் பிறகுதான் மோர்சாதம் பரிமாறணும். இப்போ நினைச்சா சிரிப்பா வருது. ஆனால் அப்போல்லாம் கர்ம சிரத்தையாக வரிசைப்படி பரிமாறியிருக்கோம். 


வீட்டு ஆட்களெல்லாம் கடைசி பந்திதான். நெறைய நேரங்களில் சாப்பாடு தட்டிப்போய் மறுபடி உலை வைத்திருப்பார்கள். மற்ற பதார்த்தங்களும் தட்டிப்போக ஆரம்பித்திருக்கும். எங்களில் கொஞ்சம் விபரமான பசங்க ரெண்டாவது மூணாவது பந்தியில் சாப்பிட்டு விடுவாங்க. எங்களை மாதிரி பேக்குங்க கடைசி பந்தியில் அரைகுறை விருந்து சாப்பிடுவோம். சைவ சாப்பாடுதான் என்றாலும் அண்ணனின் கைமணம் சாப்பிட்டவங்களைக் கூடத் திரும்ப சாப்பிடக் கூப்பிடும். 


அறுபது வயதில் டைனிங் டேபிளில் தனியாக அமர்ந்து உணவருந்தும் நேரங்களில் எல்லாம் சந்தைக்கடை வீடு மனதில் அலையாக எழும்பாமல் இருந்ததில்லை. வேலை காரணமாக ஒவ்வொருத்தர் ஒவ்வொரு நேரம் சாப்பிடும் நிலைமை தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது. எங்க அம்மாவும் அப்பாவும் கூட அந்தக் காலத்தில் சேர்ந்து சாப்பிட்டதில்லை. குழந்தைகளாகக் கிடைக்கும் சந்தோஷங்களில் சில , நாம் பெற்றோர்கள் ஆகும்போது பறிக்கப்பட்டு விடுகிறது.

Tuesday, September 08, 2020

 அலை-11

குழந்தைப்பருவத்து விளையாட்டுகள் எல்லோருக்கும் இனிமையானதுதான். ஆனால் மேல்தட்டுக் குழந்தைகளின் விளையாட்டு வேறுவிதம். எங்க செட்டப் வேறே. இந்தக் காலம் அந்தக்காலம் என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. 


ஒரு சீட்டுக் கட்டு விளையாட வேண்டுமென்றால் கூட மச்சு வீட்டுப் பசங்க கூட விளியாடினால் ஒரிஜினல் கட்டு உண்டு. நாங்க  தனியாக விளையாடும்போது பைரேட்டட் (duplicate) கட்டுகள்தான். பழைய நோட்டுப் புத்தகங்களின் அட்டையை எடுத்து பென்சிலில் அளவுகளை அடையாளம் செய்து, வெட்டி எடுத்து சீட்டுக் கட்டு செய்யவேண்டும்.  உள்ளே இஸ்பேட், டைமண்ட், ஆட்டின் எல்லாம் ஈஸியா வரைஞ்சிடலாம். ஆனால் க்ளாவர் மட்டும் எப்போதும் குடை சாய்ந்து கோணல் மாணலாகத்தான் நிற்கும். அவ்வப்போது பெரிசுங்க விளையாடி கிழியப்போற நேரத்தில் ஒரிஜினல் கட்டுகள் தருவாங்க. 


”கழுதை” (ASS) விளையாட்டுதான் ரொம்ப பேமஸ். நாலைந்து கழுதை வாங்கினவங்க எல்லாம் இருப்பாங்க. எத்தனைபேர் வேணுமின்னாலும் விளையாடலாம். ஆள் அதிகமானால் வெட்டு அதிகம் வாங்கி கழுதைகள் அதிகமாகும். தில் மாட்டாமல் தப்பிக்க சூட்சுமங்ளும் உண்டு. இறங்கின சீட்டு, கையில் உள்ளது, அடுத்தவன்கிட்டே என்ன இருக்கும் என்கிற அனுமானம் துல்லியமாகத் தெரிஞ்சவங்க தப்பிச்சுடுவாங்க. நயினார், தாணு,  நானாவெல்லாம் விளையாண்டால் கடும் போட்டிதான் .


அடுத்தது ”திருடன்” (Thief) விளையாட்டு. கடைசியில் திருடன் ஆனவனைக் கலாய்த்து அழ விட்டு ஓட வைப்பது பெரிய திறமையாக இருக்கும். ஆனால் கழுதை , திருடன் எல்லாம் கொஞ்ச நாளில் சிறியவர்கள் விளையாட்டாகிப் போனது.


 அப்பா ,தனது நண்பர்களுடன் விருந்துகளின் போது ரம்மி (knock-out) ஆடும்போது நானும் நானாவும் அப்பாவின் அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்து பார்த்து அந்த ஆட்டத்தில் கில்லாடி ஆகிவிட்டோம். 

ஆனாலும் பெரிய பசங்க எங்களைச் சேர்த்துக்க மாட்டாங்க. நயினார் அண்ணன் லிட்டரேச்சர் என்று ஒரு விளையாட்டு சொல்லித் தந்தான். கொஞ்சம் மூளையை உபயோகித்து விளையாட வேண்டும். ஞாபகத்திறன் மிக அதிகமாக வேண்டும். அதையும் சீக்கிரமே கற்றுக் கொண்டோம். 


மத்த வீடுகளில் மாதிரி சீட்டுக் கட்டு வெளையாடக் கூடாது, கெட்ட பழக்கம் என்று எங்கள் வீட்டில் என்றுமே யாருமே சொன்னதில்லை. வெளியே வெயிலில் சுற்றாமல் வீட்டில் விளையாண்டாலே போதும் என்று விட்டு விடுவார்கள். பொங்கவும் பந்தி பரிமாறவுமே சுழன்று கொண்டிருக்கும்போது பிள்ளைகளின் பொழுது போக்கில் தலையிட அவங்களுக்கு நேரமே இருந்ததில்லை. படிக்கும் போது படி, விளையாடும்போது விளையாடு  என்பது மட்டுமே அவங்க கொள்கை.


மச்சு வீட்டு பேங்க் அண்ணாச்சி வீட்டில் காரம் போர்டு விளையாடும் போது, சந்தை வீட்டில் தாயக்கட்டை விளையாடலாம். அதுக்கு நகர்த்த வித விதமாய் காய்கள் சேகரிப்போம். புளியங் கொட்டை,  நாவல்பழம் கொட்டை, பூசனிக்காய் விதை என்று ஏகப்பட்ட டிசைன்களில் சேகரித்துவிடுவோம். கூட்டம் அதிகமாக இருந்தால் நாலு பேர் ஆடும் ஆட்டத்தில் ஜோடி போட்டுக் கொண்டு எட்டுபேர் ஆடுவோம். அடி,வெட்டு என்று ஆக்ரோஷமாக எழும் கூச்சல்களை வெளியில் இருந்து கேட்பவர்களுக்கு கலவரம் நடப்பதாகத் தோன்றும்.



கட்டை குச்சி ( கில்லி) விளையாட பக்கத்திலுள்ள மரத்திலிருந்தெல்லாம் கொப்புகளை முறித்து, வெட்டி கூர் செய்து குச்சி செய்வாங்க. அண்ணன்களெல்லாம் அதில் கில்லாடி . பெரிய குச்சி சாதாரணமாக செய்திடலாம். சின்ன குச்சி மட்டும் கொஞ்சம் சிரத்தையோடு செய்யணும். இரண்டு முனைகளும் கொஞ்சம் கூர்மையாகவும் உருண்டையாகவும் இருக்கணும். அப்போதான் அடிச்சுத் தூக்கும் போது ரொம்ப தூரம் போகும். சில சமயம் பக்கத்திலே நிக்கிறவங்க கண்ணு, மூக்குக்கும் போகும். கட்டைக் குச்சியாலேயே வீட்லே அடி வாங்கவும் வைக்கும். அப்பவே கிரிக்கெட் எல்லம் வந்திருந்தா நாங்களெல்லாம் பெரிய பேட்ஸ்மேன் ஆகியிருப்போம்!!


கோலி விளையாட்டு நல்லா ஜாலியா இருக்கும். கையை மடக்கி மோதிர விரலைச் சுண்டி கோலிக்காயை குழியில் தள்ளுவது நல்ல பயிற்சி. இதுதான் கோல்ஃப் (Golf) ஆட்டத்தின் முன்னோடியாக இருந்திருக்கணும். சரியாகக் குழிக்குள் விழுந்திட்டால் அடுத்த குழிக்கு முன்னேறலாம். வெளியே விழுந்திட்டால் நம்ம பாடு கஷ்டம்தான். அடுத்து வர்றவங்க நம்மளைக் குழி பக்கமே வர விடாமல் கோலிகுண்டால் அடிச்சு துறத்துவாங்க. அதுகூடப் பரவாயில்லை,தோத்துப் போனால் கோலியால் நம்ம காய்களை உடைச்சுப் போட்டுறுவானுக, வெற்றி பெற்ற அதிரடிப் படையினர். கோலிக்காய் கலர் கலரா கிடைக்கும். அதுக்கு உள்ளே இருக்கும் பிம்பங்கள்தான் அடையாளம். தாஜ்மஹாலில் இருந்து தாமரைப்பூ வரை எண்ணற்ற விதங்களில் பலவகை வண்ணங்களில் கிடைக்கும். 


பல்லாங்குழி விளையாட தண்ணீர் தெளித்து இறுகின மண் தரையில், பல்லாங்குழியின் அச்சாக குழிகள் தோண்ட வேண்டும்.  நிழலாகவும், பங்கேற்பவர்கள் உட்காரும் விதமாகவும் தோதான இடத்தில் தோண்டணும். அந்த லீவு முடியும் வரை குழிகள் இருக்கும். விளையாண்டு முடித்தவுடன் சாக்கு (கோணி) போட்டு மூடி வைத்துவிடணும். இல்லாட்டி வாசல் பெறுக்கிறவங்க அத்தனை குப்பையையும் அதில் நிரப்பிடுவாங்க.திருச்செந்தூர் போயிட்டு வந்த புதுசுன்னா சோளிகள் கிடைக்கும். இல்லாட்டி புளியங் கொட்டைதான் பல்லாங்குழிக்கும்.


கொஞ்சம் தரமான  விளையாட்டுன்னா ”பொம்மலாட்டம்” தான். அதுக்கெல்லாம் அண்ணன் அக்கா உதவியெல்லாம் வேணும். எங்க வீட்லே ஒரே ஒரு மர மேஜை உண்டு. அதன் மூணு காலையும் இணைத்து வேஷ்டி கட்டி திரை(screen) ரெடியாகும். முந்தின வருஷ புத்தகங்களின் பேப்பர்களை வித விதமாக வெட்டி உருவங்கள் செய்வாங்க. அதை ஈக்கு வாரியல்  (தென்னம் குச்சி துடைப்பம்) குச்சிகளில் ஒட்டணும். அதுக்கு ஏற்கனவே மைதா மாவு பசை செய்திருப்பாங்க. அவசரமா செய்யணும்னா பழைய சோறுதான் அதிரடி பசை(Gum). எங்க வீட்லே மின்சாரம் கிடையாது என்பதால் அரிக்கேன் ( Hurricane) விளக்குதான். 


திரைக்குப் பின்னால் அரிக்கேன் விளக்குடன் அண்ணன்கள் உட்கார்ந்து கொண்டு குச்சியில் செய்த பொம்மைகளை விளக்கின் முன் ஆட்டி ஆட்டி கதை சொல்வாங்க. சூப்பராக இருக்கும். அன்று சொன்ன கதைகள் நினைவில் இல்லை. ஆனால் அந்த மரமேஜையும், வேஷ்டி திரையும், அரிக்கேன் விளக்கு வெளிச்சமும், நிழல் பிம்பங்களும் நீக்கமற நெஞ்சில் நிறைந்துள்ளது. 


பெண்களுக்கே உள்ள ”பாண்டி” விளையாட்டும் உண்டு.  தரையில் கட்டங்களை வரைந்து அதற்குள் கண்ணை முடி நடக்கணும். சரியா தப்பானன்னு கேட்டுகிட்டு வரணும். கோட்டில் மிதித்தாலோ கட்டம் தப்பினாலோ அவுட். 

அதிலும் ரெண்டு மூணு வகை உண்டு. உடைந்த மண்பானை ஓடுகள்தான் அதற்குரிய காய்கள். முதுகைக் காட்டி நின்றுஒடுகளைக் கட்டத்திற்குள் சரியாக வீச வேண்டும். கோடுகளிலோ, கோட்டுக்கு வெளியிலோ விழுந்தால் அவுட். சரியாக விழுந்த ஓடுகளை நொண்டி அடித்தே அடுத்த கட்டங்களுக்குள் தள்ள வேண்டும். காலை ஊன்றினால்அவுட். மறுபடியும் ஒன்றிலிருந்து தொடங்க வேண்டும். நொண்டி அடிக்கும் போது ”கித் கித் கா” என்று சொல்லிக்கோண்டே விளையாடுவதால் அந்தப் பெயரே ஆட்டத்தின் பெயரும் ஆகிவிட்டது. 

ஆயிரங்கால் பாண்டி கொஞ்சம் வேறுமாதிரி. கட்டங்களுக்கு 100 முதல் ஆயிரம் வரை எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். கட்டங்களிலிருந்து தொலைவில் நின்று கொண்டு ஓடுகளை வீச வேண்டும். கண்டிப்பாக கட்டத்திற்கு முன்னரே கீழே விழுந்துவிடும். அதை உதைத்துக் கொண்டுபோய் எந்த எண்ணில் சேர்க்கிறோமோ அந்த மார்க் நமக்கு.  வெறுமனே நொண்டியடித்து அனைவரையும் அவுட் ஆக்குவதும் உண்டு. இதில் ஆண் பெண் இரு பாலரும் இணைந்து விளையாடலாம். 


ஒற்றைக் காலில் நொண்டி அடித்துக் கொண்டிருந்த நாட்களில் அஜீர்ணமோ, அதிக எடையோ, வியாதிகளோ எங்களை அண்டியதே இல்லை.லீவு சமயங்கள் போக மற்ற நேரங்களில் நானாவின் நண்பர்கள்தான் எனக்கும் விளையாட்டுத் தோழர்கள். பேங்க் அண்ணாச்சி மகள் அருணா மட்டும் அப்பப்போ சில விளையாட்டுகளுக்கு வருவாள். சொப்பு வைச்சு, பொம்மை வைச்ச  விளையாட்டுகள் ல்லாம் எனக்கு நினைவே இல்லை. அத்தி பூத்தமாதிரி அபூர்வம்.


 எல்லாமே பசங்க கூட விளையாடின வீர விளையாட்டுகள்தான். பச்சைக்குதிரை தாண்டினால் மட்டும் , பசங்க கூட விளையாடியதுக்கு அடி கிடைக்கும்.

பாரதியார் ஓடி விளையாடு பாப்பான்னுதான் சொன்னார். நாங்க ஓடி, ஆடி, குதிச்சு, தாண்டி , நொண்டியடிச்சு , மூச்சு வாங்குறப்போ பல்லாங்குழி , தாயம் ஆடி சீட்டு பிடிச்சு, படம் காட்டி எத்தனை விளையாட்டுகள் ஆடியிருக்கோம்.


 எங்களோட விளையும் பருவம் விளையாட்டுகளையும் விதையாக்கி செதுக்கப்பட்டிருக்கு.

அலை-10

 அலை-10

திருச்செந்தூர் எல்லாருக்கும் ஆன்மீகத் தலமாகத்தான் தெரியும். ஆனால் எங்க வீட்டு மக்களுக்கோ அடுத்த வீடு மாதிரி. பெரியம்மா இறந்து போய் எங்களின் மூத்த அக்காவாக வளர்ந்த தெய்வூ அக்காவைத் திருமணம் செய்து கொடுத்த இடம் திருச்செந்தூர். 


பெரிய அத்தானும் அவங்க  ரெண்டு தம்பிகளும் சேர்ந்து ஹோட்டல் வைத்திருந்தாங்க. தாலுகா ஆபீஸ் அருகில் கோமதி விலாஸ் அந்தக் காலத்தில் மிகப் பிரபலம். தாலுகா ஆபீஸின் அரசுப் பணியாளர்களும், சுற்று வட்டாரத்தில் இருந்து தாலுகா ஆபீஸ் வரும் மக்களும் கோமதி விலாஸின் வாடிக்கையாளர்கள். அங்கே போடுற டிகிரி காப்பிக்கு முன்னால் இப்போ உள்ள கும்பகோணம் டிகிரி எல்லாம் போட்டி போட முடியாது.


வருஷம் முழுவதும் வியாபாரம் தொய்வில்லாமல் நடந்தாலும் முருகர் கோவிலின் விசேஷ நாட்களில் வியாபாரம் சூடு பிடிக்கும். அக்கா அத்தான்களுக்கு சமாளிக்க முடியாது. உதவிக்காக எங்க வீட்டு வானர சைந்நியங்கள் அங்கே படையெடுப்போம். வேலைக்கு உதவுவதாக சாக்கு போக்கு சொன்னாலும் எங்களின் சுயநலமும் அடியில் ஒளிந்திருக்கும். கடையில் தயாரிக்கப்படும் வித விதமான பலகாரங்களை ருசி பார்க்கலாம், கடற்கரையில் விளையாடலாம்.


ஹோட்டல் என்றால் பெரிய சமையலறையுடனும் டைனிங் மேஜைகளுடனும் இருக்காது. கூரை வேய்ந்த ஹாலில் சில பெஞ்சுகள்  போடப்பட்டிருக்கும்.  உட்கார தாழ்வாகவும், இலை போட கொஞ்சம் உயரம் அதிகமாகவும் பெஞ்சுகள் இருக்கும்.கண்ணாடி போட்ட பீரோ மாதிரி ஷெல்பில் பலகாரங்கள் இருக்கும். 


 வீடுதான் சமையலறை. பெரிய ஓலை ஷெட் போடப்பட்டு நாலைந்து அடுப்புகள் எந்நேரமும் கணன்று கொண்டு இருக்கும். அக்கா சின்னக்கா எல்லாரும் பம்பரமாய் வேலை செய்து கொண்டிருப்பார்கள். தெய்வக்காதான் ஹெட் குக். அடுப்பில் ஏற்றுவது, பதம் பார்ப்பது, ருசி கூட்டுவது எல்லாம் அக்கா நாட்டாமைதான். நாங்கள் எல்லோரும் ராமருக்கு அணில்மாதிரி. 


ஒரு பக்கம் க்ரைண்டரில் மாவு அரைந்து கொண்டிருக்கும், ஒதுக்கி விட்டு தண்ணீர் தெளித்து பக்குவமாக அரைக்கணும். இன்னொரு பக்கம் வடைக்கு வெங்காயம் மிளகாய் எல்லாம் வேகமாய் வெட்டிகிட்டு இருப்பாங்க. பூரிக்கு மாவு பிசைவதும் உருளைக்கிழங்கு உரிப்பதுமாக ஏகமாய் வேலைகள் நடந்து கொண்டே இருக்கும். எங்களோட வயசு, உடம்பின் வலுவைப் பொறுத்து வெவ்வேறு வேலைகள் தரப்பட்டிருக்கும். எனக்குத் தெரிஞ்சு நான் தேங்காய் துருவுவதில்தான் அதிகம் இருந்திருக்கிறேன். 

திருவலக்குத்தியில்  (அரிவாள்மனையுடன் தேங்காய் துருவி சேர்ந்து இருக்கும்) தேங்காயை உரசி உரசி பூக்களாய் சிதற விடுவது தனித்திறமை.


ஆம்பிள்ளைப் பசங்களெல்லாம் கடைக்கும் வீட்டுக்கும் பொருட்களை எடுத்து செல்லும் கூரியர் பாய்ஸ் ( இப்போதுள்ள swiggy , Zomato  மாதிரி). ரொம்ப சின்ன குட்டிகளெல்லாம் உபகாரத்தை விட உபத்திரவம் செய்வதுதான் அதிகம் .தம்பி நானா, அடுத்த தலை முறையில் முத்துராமன் எல்லாம் வந்தால் அக்காவுக்கு தலைவலிதான். எதையாவது எடுத்து உடைச்சிடுவானுக கொட்டி விட்டுறுவானுங்க , ஆனாலும் திட்டு வாங்கிகிட்டே தமாஷா வேலை நடக்கும்.


வருஷத்தில் குறைந்த பட்சம் நாலு விசேஷம் வந்துவிடும். ஆடித்திருவிழா, ஆவணித் திருவிழா, வைகாசி விசாகம், கந்த சஷ்டி, இன்னும் பெரிதும் சிறிதுமாக நிறைய நடந்து கொண்டே இருக்கும். வைகாசி விசாகம் தான் எங்களுக்கு நிரந்தர அசைன்மெண்ட். மே மாத லீவில்தான் வரும். சம்மர் கேம்ப் மாதிரி கிளம்பிடுவோம். சுத்து பத்து ஊர்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் வண்டி கட்டிகிட்டு வருவாங்க. ஆறுமுகநேரியில் எங்க வீட்டு வாசலில் உட்கார்ந்தே வண்டிகளின் எண்ணிக்கையை கணக்கிடலாம். ஆபாவாணன் படம் மாதிரி லாந்தர் விளக்குகளைத் தொங்க விட்டுக் கொண்டு இரவெல்லாம் வரிசையாக வண்டிகள் போய்க் கொண்டே இருக்கும். கூடு வைத்த வண்டிகள் அந்த சமயத்தில்தான் அதிகம் போகும். திருவிழா காலம் முழுவதும் தங்கி செல்லத் தேவையான பொருட்கள் அனைத்தும் அதனுள் இருக்கும்.


கடை வேலைகள் ஓயும் சமயங்களில் கடற்கரைக்கு செல்லுவது ரொம்ப ஜாலி.தனியாகப் போக விட மாட்டாங்க. விக்ரமசிங்கபுரத்திலிருந்து சித்தி சித்தப்பா வரும் நேரங்களில் அவங்களோடு சேர்ந்து ஓடிவிடுவோம். தெய்வு அக்காவின் மகள் ராஜம்தான் எனக்கு தோழி. சின்ன வயசில் ராசமக்காவாக இருந்தவள் நயினார் அண்ணனை மணம் செய்த பிறகு ராஜம் மதினியாக மாறியவள். கான்சர் கொடுத்த சவுக்கடியாக எங்களை விட்டுப் பிரிந்தாலும் நினைவில் வாழ்ந்து இந்த பதிவிற்கு உயிரூட்டுவாள்.


சாயங்காலத்துக்கு மேல் அநேகமாக வேலை இருக்காது. கடற்கரை விளையாட்டுகளைப் பற்றி எழுதுவதென்றால் ஒரு பதிவே பத்தாது. திருச்செந்தூர் கடற்கரை சரிவாக இருக்கும். நாழிக்கிணறு செல்லும் பாதையின் பக்கத்தில் உட்கார்ந்தால் கூட அலை உரசும் இடம் வரை தெளிவாகத் தெரியும். சித்தி உயரத்தில் உட்கார்ந்தது இருப்பாங்க. நாங்களெல்லாம் 

கரையோரம் விளையாடுவோம். ஒவ்வொரு அலையும் சீறி வரும்போது அதில் அகப்படாமல் கால் நனையாமல் எட்ட ஓட வேண்டும். அசையாமல் ஒரே இடத்தில் நின்றால் காலைச்சுற்றி அலைகள் சுருண்டு பள்ளம் உருவாக்கும். ஆனாலும் கீழே விழாமல் நிற்க வேண்டும். கடற்கரை மணல்குன்றுகளை உருவாக்கி அலைகள் அடிக்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும். அங்கங்கே கிடக்கும் மிதக்கக்கூடிய பொருட்களை( தேங்காய் மட்டை, பூச்சரங்கள்) தூக்கி எறிந்து  அவை கரைக்கு வருதான்னு பார்த்து திரும்ப எடுக்கணும். கடலோரக் கவிதைகள் பாரதிராஜாவுக்கு மட்டும் சொந்தமல்ல. பயமின்றி விளையாடும் எங்களுக்கும் அதில்  பங்கு உண்டு.


பகல் நேரத்தில் போனால்தான் கடலில் குளிக்க முடியும். ரொம்ப பாதுகாப்பாகப் போகணும். கொஞ்சம் அசட்டையாகப் போனாலும் தரையில் உருட்டி மண்ணைக் கவ்வ வைத்துவிடும் சேட்டைக்கார அலைகள். காதுலே கழுத்திலே போட்டிருக்கும் நகைகள்,லோலாக்குகள்,பாசிஎல்லாம் கழற்றி விட்டு குளிப்பது உத்தமம். சொன்ன பேச்சு கேட்காமல் தொலைத்தவைகளும் நிறைய உண்டு. 

கடற் சிப்பி, சங்கு எல்லாம் இங்கு கிடைக்காது. வருஷம் முழுவதும் பக்தர்கள் புனித நீராடிக் கொண்டே இருப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் இந்தப் பகுதிக்கு வருவதில்லை.


 கரையை ஒட்டிய பகுதியில் ஏகப்பட்ட பாறைகள் இருக்கும். பக்குவமாக மேலேறிப் போய்விட்டால் கொஞ்ச தூரத்தில் ஆற்றுமணல்போல் அருமையான படுகை கிடைக்கும். ஆரம்பத்திலேயே பாறைகளில் காலை இடறிக் கொள்பவர்கள் அதற்குமேல் போகத் துணிய மாட்டார்கள். எங்களுக்கு கடற்பரப்பு மிகப் பரிச்சியம் என்பதால் முன்னேறிப் போய்விடுவோம். 

அலையில் குளிப்பதற்கு நல்ல பயிற்சி வேண்டும். அலை எழும்பி வரும்போது காலை உயர்த்தி அலைமேல் தவழ வேண்டும். அல்லது அலையின் குறுக்கே புகுந்து எதிர்புறம் போய்விட வேண்டும். பயந்தால் அலையோடேயே போய்விட வேண்டியதுதான்…எங்க வீட்லே எல்லாருமே கடலில் குளிப்பதில் கில்லாடிகள்தான்.


 கடலில் குளித்த பிறகு, உடலில் உள்ள பிசுபிசுப்பு போக நாழிக்கிணற்றில் குளித்தாக வேண்டும்.. அது வற்றாத சுனை நீர், ஓயாசிஸ் மாதிரி. எத்தனை ஆயிரம்பேர் அதில் இடைவெளியின்றி குளித்தாலும் வற்றாமல் நீரூற்று சுரந்து கொண்டே இருக்கும். மதிய நேரத்தில் கடற்கரைக்குப் போயிட்டோம், அதோகதிதான். மணல் சூடு தாங்க முடியாது. சூரசம்ஹாரத்தின்போது அந்த சூட்டிலும் லட்சக்கணக்கில் ஜனத்திரள் கூடும்.

 

ஒவ்வொரு விசேஷ நாட்களுக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஒவ்வொரு திருவிழாவும் ஒரு நிறத்தைக் குறிக்கும். பச்சை சாத்தி என்றால் துளசி மற்றும் சில இலைகள் எல்லாம் வைத்து அலங்காரம் முழுதும் பச்சையாகவே இருக்கும். சிவப்பு என்றால் ரோஜா , செவ்வரளி போன்றவைகள் இருக்கும். வெள்ளை சாத்திக்கு மல்லி, வெள்ளை அரளி, லில்லி போன்ற பூக்கள் இருக்கும். மஞ்சை சாத்திக்கு செவ்வந்தி, மஞ்சள் மற்றும் தங்க அரளி, செண்டு (துலுக்க சாமந்தி)போன்ற பூக்களால் அலங்காரம் இருக்கும். இந்துக்கள் மட்டுமல்ல வீரபாண்டியன் பட்டினத்து கிறித்தவர்களும், காயல் பட்டினத்தைச் சேர்ந்த முஸ்லீம்களும் இந்த அலங்காரங்களைப் பார்க்கவும், கடலில் குளிக்கவும் எப்போதும் வருவார்கள். மத நல்லிணக்கம் இயல்பாக இருந்த காலங்கள் அவை.


எப்போதும் பத்தாம் திருவிழா தேரோட்டமாக இருக்கும். ரொம்ப கூட்டமும், தள்ளு முள்ளும் இருக்கும் என்பதால் ஒரு நாளும் தேர்த்திருவிழா முழுதாகப் பார்த்ததே இல்லை. இவ்வளவு சிறப்பாக திருவிழாக்கள் நடந்து கொண்டிருந்தாலும் வீட்டிலிருந்து யாரும் திருவிழா பார்க்கப் போவதே இல்லை. திருச்செந்தூர்க்காரங்க கடலாட மாட்டாங்க, திருநெல்வேலிக்காரங்க தேர் பார்க்க மாட்டாங்கன்னு எங்க ஆச்சி அடிக்கடி சொல்லுவாங்க. உள்ளூர் மகிமை எப்போதும் அசலூர்க்காரங்களுக்குத்தான் தெரியும்.


திருச்செந்தூர்

திரும்பவும் வரும்.....

Saturday, September 05, 2020

அலை-9

 அலை-9

”ஆசிரியர் தின வாழ்த்துக்கள்”

காணியாளர் தெருவின் திரவியம் ஆரம்பப் பாடசாலைதான் எங்கள் குடும்பத்தின் வாரிசுகள்    எல்லோருக்கும் அறிவுக்கண் திறந்த முதல் படிக்கட்டு. பள்ளியின் பெயர் எப்போதும் மறக்கப்பட்டு தெருப் பெயர்தான் விலாசமாகக் கொண்ட பாடசாலை. அதன் சமகால இந்து ஸ்கூல் இந்த அளவு பிரபலமாக இருந்ததாக நினைவில்லை. 


பள்ளியின் தாளாளர் திரு. வேதமுத்து சார், அப்பாவின் நெருங்கிய நண்பர். இருவரும் ஒரே உயரம், எடை, ஒத்த சிந்தனை என நெருங்கிய நண்பர்கள். காணியாளர் தெருவின் முனையில் இருக்கும் காபி கிளப்தான் அவர்களின் சந்திப்பு இடம். மூங்கில் பட்டியலிட்ட ஜன்னல் மூலம் அவர்கள் பேசிக் கொண்டு இருப்பதைத் தினமும் பள்ளி செல்லும் போது பார்க்கலாம்.


ஆரம்பப் பாடசாலை என்ற பெயருக்கு ஏற்றவாறு ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை தான் உண்டு. நாலாம் மற்றும் ஐந்தாம் வகுப்புகள் ஓடு போட்ட முன்னாடி ஹாலில் நடக்கும். சின்ன வகுப்புகளுக்கு கூரையும், மணல் தரையும்தான். ரெண்டாம் வகுப்புக்குப் பிறகு மனைப்பலகை போன்ற பெஞ்சுகள் கிட்டத்தட்ட ஆறடி நீளங்களில் கிடத்தப்பட்டு அதன் மேல் உட்காரலாம். முதல் வகுப்பு மட்டும் முழுவதுமே மணல்தரைதான். அந்த மணலில்தான் முதல் முதலில்  “ அ ” வரைந்து படிக்க ஆரம்பித்தோம். கரும் பலகையும், கல்சிலேட்டும், சிலேட்டுக் குச்சியும் தான் எங்களுக்கு முதலில் படிப்பு கற்பித்த தோழர்கள்.


எல்.கே.ஜி. மாதிரி பள்ளிப் பருவங்கள் இல்லாத கால கட்டம். ஆனாலும் கொஞ்சம் வயது குறைந்த குழந்தைகளை கவனிக்கும் வகுப்பு ஒன்றே ஒன்று உண்டு. அதற்கு குட்டிப் பால்ராப்பு (குட்டி பாலர் வகுப்பு)ன்னு பெயர். என் அண்ணனின் பேத்தி என்னிடம் நர்ஸரி பாடல் சொல்லித் தரச் சொல்லிக் கேட்டாள்.. அவளை கொஞ்சி கலாய்க்கும் விதமாக “என்னையெல்லாம் எல்.கே.ஜி.யில் படிக்கவே வைக்கலை. அதனால் நர்ஸரி பாடலே தெரியாது” ன்னு கதை விட்டேன். ரொம்பவும் கவலைப்பட்டாள். என்னோட அறிவு கொஞ்சம் அவளைவிட குறைவுன்னு பீல் பண்ணி நிறைய ரைம்ஸ் எல்லாம் சொல்லித் தந்தது தனிக்கதை. நான் தான் குட்டிப் பால்ராப்புலேயும் படிக்கலையே, நேரா ஒண்ணாங் கிளாஸ்தான்.


கதவுகளோ ஜன்னலோ இல்லாத நீண்ட கூரைப் பந்தலுக்குள்ளேயே எல்லா வகுப்புகளும் அடக்கம். வகுப்புகளின் எல்லைகள், எந்தவித தடுப்புகளுமின்றி உத்தேசமாக வரையறுக்கப் பட்டிருக்கும்.  நல்ல காற்றோட்டத்துடன் கூடிய ஆரோக்யமான சூழல் இருந்ததையும் மறுக்க முடியாது. இடையிடையே கூரையைத் தாங்கும் கம்புகளில் சாய்ந்து உட்காரவும் சண்டை நடக்கும். 


பள்ளிக்கூடம் முழுவதையும் காலையில் பெருக்குவது, தேவைப்படும் இடங்களில் தண்ணீர் தெளிப்பது, கழிவறைக்கு தண்ணீர் நிரப்புவது எல்லாமே மாணவர்கள் வேலைதான். அந்தக் காலத்தில் “மாணவர்களை வேலை வாங்குவதாக” எந்த பெற்றோரும் கம்ப்ளெயிண்ட் சொன்னதில்லை. எந்த ஆசிரியரும் அதைக் குற்றமாக நினைத்ததும் இல்லை. இயல்பாக நடக்கும் நிகழ்வுகள்.  ஆண் பெண் வேற்றுமை, பொருளாதார , ஜாதி சமய வேற்றுமைகள் அனைத்தும் அற்றுப் போய் மாணவர்கள் என்ற ஒரே குடைக்குள் அனைவரையும் இணையச் செய்த சக்தி வாய்ந்த அநுபவங்கள் அவை.


 மதிய உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்ட காலகட்டம் அது. அனைவருக்கும் ஒரு அலுமினியத் தட்டு உண்டு. அனைத்தையும் கிணற்றடியில் வைத்து கழுவி சுத்தப் படுத்துவதும் மாணவ மாணவிகளே! 


தினமும் வாய்ப்பாடு வகுப்பு உண்டு. ஒரு மாணவன் சொல்லச் சொல்ல அனைத்து மாணவர்களும் கோரசாக திருப்பிச் சொல்ல வேண்டும். அன்று படித்த வாய்ப்பாடுகள்தான் இன்றும் எங்கள் கணக்குகளுக்கு அடித்தளம். லாகிருதம் புக், கால்குலேட்டர், கணிணி என எத்தனையோ அறிவியல் முன்னேற்றங்கள் வந்துவிட்ட போதும் ”எண்ணெட்டு அறுபத்து நாலு”ன்னு வாய்ப்பாடு மூலம்தான் இன்றும் என்னால் கணக்குப் போட முடியும். அந்த வாய்ப்பாடு கோரஸ் இன்னும் காதுகளில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கிறது.


பள்ளியின் கிழக்குபுறத்தில் ஒரு மைதானத்தில்தான் எங்கள் விளையாட்டுகள், போட்டிகள் எல்லாம் நடக்கும். பந்து, வலை, பேட் போன்ற பொருட்களெல்லாம் கிடையாது. கபடி, கோகோ, ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுகள்தான் அதிகம் இருக்கும். பள்ளியின் வெளி வராந்தா கொஞ்சம் உயரமான திண்டு.அங்குதான் பள்ளியின் மணி கட்டியிருக்கும். பள்ளி ஆரம்பிப்பது, இடைவேளை, மதிய உணவுக்கு, பள்ளி முடிந்ததற்கு என்று அடிக்கடி ஓசை எழுப்பும் மணி, உண்மையிலேயே மணி கிடையாது. உடைந்த தண்டவாளத் துண்டு கம்பி போட்டு கட்டியிருக்கும். இடையிலுள்ள துவாரத்தில் அதில் ஓசை எழுப்ப இன்னுமொரு இரும்புத் துண்டு சொருகப் பட்டிருக்கும். மனி ஓசை சத்தம் மட்டும் தெருவே அதிரும்படி இருக்கும்.


அந்த கால கட்டத்தில் கான்வெண்ட் போன்ற பள்ளிகள் அருகில் இல்லாததால் அய்யாதுரை டாக்டர் வீட்டுப் பிள்ளைகளும் எங்கள் பள்ளியிலேதான் படித்தார்கள். அந்த சிறப்பின் காரணமாக எத்தனையோ டாக்டர்கள், வக்கீல்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், ஆசிரியர்கள், பொறியியல் வல்லுநர்கள் என எண்ணிலடங்கா மேதைகளை எங்கள் பள்ளி உருவாக்கி இருக்கிறது. இப்போது வரும் ஆண்டுவிழா மலர்களில் முன்னாள் மாணவர்களின் முன்னேற்றம் உருப்பெற்றுக் கொண்டே இருக்கிறது.

அரை நூற்றாண்டு (சுமார் 50 வருடங்கள்) க்குப் பிறகு ஆரம்பப் பள்ளியின் நினைவலைகள் மேலெழும்பி வந்தாலும் , பெயர்களும் நிகழ்வுகளும் புகை படிந்த ஓவியங்களாகவே தெரிகிறது. அறியாப் பருவம் என்பது மிகச் சரியே. அதன் பிறகு வந்த உயர்நிலைப் பள்ளி, கல்லூரி போன்றவற்றின் நினைவுகள் ஆரம்பப்பள்ளி நினைவுகளை அமுக்கி விட்டன போலும். அதனால்நிறைய பெயர்கள் மறந்துவிட்டன. ராம்கியிடம் பேசியிருந்தால் சில நினைவுகளைப் பகிர்ந்திருப்பான். 


சுதந்திர தினத்துக்கு ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் கலை நிகழ்ச்சிகளில் பங்கு எடுத்துக்கணும். அதுக்கு தகுதித் தேர்வெல்லாம் நடக்கும். “கொடியில் இரண்டு மலருண்டு”ன்னு பாடல் பாடி நான்கூட  பாட்டுப் பாட தேர்வானேன். ஏதோ ஒரு ஆசிரியை “ சுதந்திரத் திருநாளாம் இன்று ; இந்நன்னாளிலே கூடினோம்” என்று ஒரு பாட்டு எழுதிக் கொடுத்து என்னைப் பாட வைச்சாங்க. அப்போல்லாம் என் குரல் கொஞ்சம் கேட்கிற மாதிரிதான் இருந்தது. பரிசு கூட வாங்கினேன். 

எங்க அக்கா அண்ணன் எல்லாரும்ம் கூட இங்கேதான் படிச்சாங்க. மரகதம் அக்கா மட்டும் இந்து ஸ்கூலில் படிச்சான்னு நினைக்கிறேன். வேதமுத்து சாரோட மகன் விவேகானந்தன் சார் நாங்க படிக்கும் போதே ஆசிரியராக வந்து சேர்ந்தார். அவர் கை பிரம்புக்குத்தான் பசங்க பயப்படுவாங்க. இன்னமும் அவர்தான் எங்கள் பள்ளியைத் திறம்பட நடத்தி வருவதாக கேள்விப்பட்டேன். ஐந்தாம் வகுப்பு (அஞ்சாப்பு) வாத்தியார்தான் தலைமை ஆசிரியராக இருப்பார். பஞ்சாயத்துகளெல்லாம் அவர் முன்தான் போகும். 

மொத்தமே ஐந்து முதல் ஆறு ஆசிரியர்களை மட்டும் வைத்து அனைத்து குழந்தைகளுக்கும் ஆணித்தரமான அடிப்படைக் கல்வியைக் கொடுத்த அத்தனை ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தினத்தில் இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன். 

 

ஆரம்பப் பள்ளி நினைவலைகளின் முதல்புள்ளி

ஆலமரமென ஆணிவேர் விட்டு செழித்து வளர்ந்து

விழுதுகளை வையமெங்கும் பரப்பி சிறப்பற்று நிற்கும்

வேதமுத்து வாத்தியாரின் திரவியம் பள்ளி!!

Friday, September 04, 2020

அலை-8

 அலை-8

உள்ளூர் ரோடும் உட்கார்ந்து படித்த பனைமர நிழலும் நெளிந்து செல்லும் கருவேல மரக்காடுகளும் அன்று எங்களின் குறும்புகளுக்கு சாட்சியாக இருந்தன. மரங்களும் காடுகளும் அழிக்கப்பட்டு தெருக்களும் வீடுகளுமாக மாறி நிற்கின்றன. பூர்வீக வாசம் கொஞ்சம் அந்நியப்பட்டது போல் இருக்கிறது


மெயின்ரோடு வழியாகப் பள்ளிக்குப்போவது தூரம் என்பதால் குறுக்குப் பாதை பனங்காடும் ஒடங்காடும்தான். ஆனால் தனியாகப் போக கொஞ்சம் பயம்தான். எப்படியாவது துணை கிடைத்துவிடும். 

அதிலும் ரெட்டைப் பனை மரத்தைத் தாண்டும்போது கொஞ்சம் திக்திக் தான். எல்லாம் இந்த பெருசுங்க சொல்ற கதைகளால்தான். அந்த வயசில் பேய் பயமெல்லாம் நிறையவே இருந்திருக்கு.


பனங்காட்டின் மணல் பரப்பு உதிரி மணலாக இருப்பதால் நடப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். கால் உள்ளே பதியும். பள்ளிக்கு நேரமாகி விட்டதேன்னு ஓடுவதும் முடியாது. 

ஒடங்காட்டுப் பாதை நெளிந்து நெளிந்து போகும். ஒடை மரங்கள் வேறே கோணல் மாணலாக வளர்ந்து கீறல் போடும்.. பள்ளிக்குக் கொஞ்சம் முன்னாடி மெயின் ரோடில் ஏறும்போது அப்பாடான்னு இருக்கும். நமக்குத் துணையாக ஏகப்பட்ட மக்கள் அரக்கப்பரக்க போய்கிட்டு இருப்பாங்க. அசெம்ப்ளி ஆரம்பிக்கிறதுக்குள்ளே போயிடணும்..


பள்ளி முடிந்து திரும்பும் பயணம் மட்டும் களை கட்டிடும்.  எப்படியும் நாலைஞ்சு பேர் சேர்ந்துதான் வருவோம். நேரம் இருப்பதைப் பொறுத்து கபடி,கண்கட்டி விளையாடுவதெல்லாம் சிலநாள் நடக்கும். இடையில் கடக்கும் ரயில்வே தண்டவாளத்தில் கீழே விழாமல்நடக்கும் போட்டியும் உண்டு; கைகோர்த்துகிட்டு ஜோடி போட்டு நடக்கிறதும் உண்டு.


மழைக்காலங்களில் ஈர மண்ணில் சிவப்பு நிற பட்டுப்பூச்சி ஊர்ந்தால் அதைப்பிடித்து தீப்பட்டி பாக்ஸில் போட்டுக்கிறது, புட்டான் (தட்டான் அல்லது தும்பி) பிடிக்கிறது, பட்டாம்பூச்சியைத் துறத்துறது எல்லாம் நடக்கும். அந்தக் காலத்தில் பெரிய வேட்டைக்காரங்களா இருந்திருக்கோம்.


ஒடைமரத்தின் நீளமுட்கள்  அநேகரின் பிய்ந்துபோன பொத்தான்களாக மாறியிருக்கிறது(என்ன தங்கர்பச்சான் படம் மாதிரி இருக்கா?) அதே முள்ளைக் கால் பெருவிரலில் சொருகிக் கொண்டு பக்கத்தில் இருப்பவர்களைக் குத்தி அலறவிடும் ஆசாமிகளும் உண்டுதான். குறும்பு செய்யாத குழந்தைப் பருவம் ஏது? 


நேரம் அதிகமாக இருக்கும்போது மெயின் ரோடு வழியாவே போகலாம். இடையில் என்தோழி வேல்கனி வீட்டுக்குப்போய் அவளுடன் சேர்ந்து போவேன். அவள் வீட்டில் அவல் வியாபாரம். வேல்கனி கிளம்பும் வரை அவல் இடிக்கும் உபகரணங்களையும் அதன் அசைவுகளையும் பார்த்துக் கொண்டிருக்க ரொம்ப பிடிக்கும். வலதுகையால் பலகை மாதிரி லீவரை ஒரு மண் குழியில் மோத வைத்து அவல் பொறி மாதிரி வருவதைப் பார்க்க அதிசயமாக இருக்கும்.


எங்க ஊர் பள்ளிவாசல் பஜார்தான் மெயின் கடைத்தெரு.  பிரதான பேருந்து நிறுத்துமிடமும் அதுதான். எப்போதும் கூட்டமும் சத்தமும் அதிகமாக இருக்கும். அதைக் கடந்துதான் பள்ளி செல்ல வேண்டும். அதனாலேயே காட்டுவழியே போகப் பிடிக்கும்.


தோழிகள் துணை இல்லாதபோது புத்தகம் வாசித்துக் கொண்டே நடப்பது என் வாடிக்கை. பள்ளிப் புத்தகங்களெல்லாம் சுமந்து செல்ல நீள கைப்பிடியுடன் உள்ள தோள்பைதான் (ஜோல்னாப்பை) எல்லாருக்கும். ஆதைத் தலையில் மாட்டி முதுகுப் பக்கம் தொங்க விட்டுக் கொள்ளலாம். கை ரெண்டும் ப்ரீ ஆகி புத்தகத்தைப் பிடிக்க முடியும். சில நேரம் சந்தைக்குப் போகும் மாட்டு வண்டியின் பின் பக்கத்தில் பையைத் தொங்க விட்டுட்டு படிச்சுகிட்டே போவேன்.


புத்தகம் இரவல் கொடுத்த தோழியிடம் மறுநாளே திருப்பித் தரவேண்டும் என்பதால் நேரத்தை வீணாக்காமல் படிப்பேன். வீட்டில் மின்சாரம் கிடையாது என்பதால் பொழுது சாயறதுக்குள்ளே படிச்சு முடிக்கணும்.


தலையில் பையை மாட்டிகிட்டு புத்தகம் வாசிச்சுகிட்டே நடந்தால் நாவலின் நாலைந்து அத்தியாயங்கள் படித்துவிடலாம். வீட்டுக்கும் பள்ளிக்கும் இடையில் அளோ தூரம். இப்போது அடுத்த தலைமுறை அதே பள்ளிக்கு வாகனத்தில் செல்லும் சொகுசு வந்விட்டது. நடக்க விடணும்,எடை குறைக்கணும் என்ற வார்த்தைகளும் கூடவே ஒட்டிக்கொண்டுட்டது.


ஆண்பிள்ளைகளுக்கு தோள்பை தூக்கிட்டு வறது கெளரவக் குறைச்சலாகத் தோணும் போலிருக்கு. கல்லூரி மாணவர்கள் போல் ஸ்டைலாக நாலு புத்தகங்களோடு வருவாங்க. கொஞ்சம் சின்சியர் சிகாமணிகள் மட்டும் பிளாஸ்டிக் கூடையுடன் வருவாங்க.


பென்சில் உபயோகித்தபோது, இதுக்குமேலே சீவ முடியாதுங்கிற வரை உபயோகிச்சுடறது. பேனா பிடிக்க ஆரம்பிச்ச பிறகு தினமும் கடையில் போய் மை நிரப்பிக்கிறது எல்லாமே வாடிக்கைதான். 'மூன்றாம்பிறை' ஸ்ரீதேவி மாதிரி மைபாட்டில் உடைப்பதெல்லாம் மிக அபூர்வம். பால்பாயிண்ட் பேனா இருந்ததாக நினைவே இல்லை.


பள்ளிக்கூட நினைவுகள் வாழ்வின் கணிசமான வருடங்களை அசை போட வைக்கிறது.

அலை-7

 அலை-7

“ தண்ணீர் தண்ணீர் ” என்று ஒரு படம் வந்தது. தண்ணீர் கஷ்டத்தைப் பற்றித்தான் இருக்குமென்று போனால்,  கதையின் கருவே வேறு. ஆனால் தண்ணீர்க் கஷ்டத்தை நிஜ வாழ்வில் தெரிஞ்சுக்கணும்னா ஆறுமுகநேரிக்கு வரணும்.


 எட்டு குழந்தைகளைக் கொண்ட வீட்டில் சொட்டுத் தண்ணீர் வேண்டுமென்றால் கூட ரொம்ப கஷ்டப்பட்டுதான் பெறணும்.


கடற்கரையை ஒட்டிய கிராமம் என்பதால் கிணறுகளில் கிடைப்பது உப்பு நீராகவே இருக்கும். குடிக்கவோ சமைக்கவோ உதவாது. குளிக்கவும், துணி துவைக்கவும், பாத்திரங்கள் கழுவவும் அந்த உப்பு நீரையே கொண்டு வருவோம். எங்க வீட்டு முற்றத்திலேயே சின்ன கிணறு உண்டு , அது மகா உப்பாக இருக்கும். வாசல் தெளிக்க மட்டுமே பயன்படும். அவசரத்துக்கு பாத்திரங்கள் அலம்பலாம். 

சந்தையின் குறுக்கே சென்றால் இன்னுமொரு கிணறு சற்று ஆழமாகவும் கொஞ்சம் உப்பு குறைச்சலாகவும் இருக்கும். அதிலிருந்து தண்ணீர் எடுத்து வரும் வேலை வழக்கம்போல பெண்களுக்கு. ஒரு குடம் ரெண்டு குடமெல்லாம் போதாது. அத்தனை பேரும் குளிக்க வேண்டுமே! பெரிய அண்ணன் மட்டும் காலையிலேயே கிணற்றில் போய் குளித்து வருவான். மற்ற ஆண்கள் நேரத்தைப் பொறுத்து கிணற்றிலோ வீட்டிலோ குளிப்பார்கள். பின்வாசலில் ஒரு கல்தொட்டி இருக்கும். ஒரு குடம் தண்ணியை ஊற்றிவிட்டு அடுத்த குடம் கொண்டு வருவதற்குள் நீர் மட்டம் அடியில் போயிருக்கும். எத்தனை குடம் ஊற்றினாலும் , அமுத சுரபிக்கு எதிர்பதம் போல் அடி மட்டத்திலேயே தண்ணீர் இருக்கும். பயன்பாடு அவ்ளோ அதிகம்.


குளிர் காலம் வந்துவிட்டால் சுடு தண்ணீர் வேண்டுமென்பதால், எல்லோருக்கும் வீட்டுக் குளியல்தான். விறகு அடுப்பில் மண்பானையில் தண்ணீர் கொதிதுக் கொண்டே இருக்கும். உனக்குப் பிறகு நான், எனக்கு பிறகு அவன் என வரிசை கட்டி சுடு தண்ணீருக்கு பட்டியல் ரெடியாக இருக்கும். நல்ல கொதிக்க வைத்து பாதி பானை சுடுநீரும் மீதி பாதி பச்சைத் தண்ணீரும் கலந்து தொடர் வண்டியாகக் குளியல் தொடரும். ஆண்கள் வெளி வாசலிலேயே குளிக்க பெண்பிள்ளைகள் மட்டும் தடுப்புக்கு உள்ளிருந்து குளிப்போம். (இந்த காட்சிகளெல்லாம் பாரதிராஜா படத்தில் காட்டிய பின்னர்தான் நகர வாசிகளுக்குப் புதுமையாகத் தெரிந்தது. எங்களுக்கு அன்றாட வாழ்க்கையாக இருந்தது) 


 பள்ளிக்குச் செல்லும் முன் என் பங்குக்கு எடுக்க வேண்டிய தண்ணீர்க்குடங்கள் வீட்டை அடைந்தாக வேண்டும். இல்லாட்டி பள்ளிக்கு செல்ல முடியாது.எனக்கு தண்ணி வண்டின்னு பட்டப் பெயர்கூட உண்டு. சமையல் வேலையெல்லம் ஓய்ந்த பிறகு பெரிய பெண்கள் கிணற்றடியில் துணி துவைக்கச் செல்வார்கள். கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து ஊற்றினால் அது பெரிய தொட்டியில் விழுவது போன்ற அமைப்பு இருக்கும். தண்ணீர் நிறைய உள்ள நாட்களில் அதில் தண்ணீர் பிடித்து நீச்சலடித்துக் குளிக்கலாம்.


நல்ல தண்ணீர் எடுக்கச் செல்வது அதைவிடக் கொடுமை. தெருவுக்கு தெரு ஒரு ஆத்து தண்ணீர் குழாய் இருக்கும். அதில் குடங்களை வரிசையிலிட்டு காத்திருந்து பிடிக்க வேண்டும். நம் முறை வரும்போது சில நேரம் தண்ணீர் நின்றுவிடும். கொஞ்சம் பொருளாதாரத்தில் உயர்வுள்ளவர்கள் (நாச்சியாரக்கா வீடு) பணம் கட்டி சொந்தமாக நல்ல தண்ணீர் குழாய் வாங்கியிருப்பார்கள். அவர்களிடம் பணம் கட்டி நல்ல தண்ணீர் வாங்கிக் கொள்வோம். எட்டு குடம், பத்து குடம் என்று எண்ணிக்கை வாரியாக பணம் கட்ட வேண்டும். 

அப்படியும் சுலபத்தில் தண்ணீர் பிடித்துவிட முடியாது. தரையிலிருந்து நாலு முதல் ஆறு அடி வரை தொட்டி மாதிரி கட்டி அதற்குள் குழாய் பதித்து இருப்பார்கள். அப்போதான் தண்ணீர் வரும் அளவு அதிகமாக இருக்கும். உள்ளே இறங்கி தண்ணீர் பிடித்து, கனமான குடத்துடன் மேலே ஏறி வரணும். அந்தக் காலங்களில் ப்ளாஸ்டிக் குடமெல்லாம் கிடையாது. வெண்கலம் அல்லது எவர்சில்வர் தான். அதுவே ரொம்ப கனமாக இருக்கும். எட்டு குடம் எடுத்து முடிப்பதற்குள் இடுப்பெலும்பே காய்த்துப் போனதுபோல் ஆகிவிடும். 

இப்போதான் அதன் கஷ்டங்களை யோசித்து எழுதத் தோன்றுகிறது. அப்போதெல்லாம், எப்போதடா தண்ணி எடுத்து முடிச்சுட்டு பள்ளிக்கூடம் ஓடலாம் என்ற நினைப்பு மட்டும் தான் இருக்கும்.


 தண்ணீர் எடுக்கப் போகும்போது அவங்க வீட்டு முல்லைக் கொடியில் மொட்டுக்கள் பறித்து கட்டி வைத்துக் கொள்வது சந்தோஷமான நிகழ்வுகள். நாலைந்து வீட்டுப் பெண்கள் தண்ணீர் பிடிக்க வருவதால் ஒன்று கூடி வம்பு பேசுவதும் வாடிக்கை மற்றும் வேடிக்கை.

தண்ணீர் வரும் நேரங்கள் மாறி மாறி வரும். சாயங்கால முறை வரும்போது, பள்ளி விட்டு ஓடி ஓடி வரணும், இல்லாட்டி தண்ணீர் நின்றுவிடும். ஆஹா ஜாலின்னு தப்பிக்க முடியாது. இங்கே தண்ணியைத் தவறவிட்டால் பொதுக்குழாய் மெயின் ரோட்டில் இருக்கும் அங்கு போய் பிடித்து வரணும். அங்கு மறுபடியும், வரிசையில் நிக்கணும், ஒரு குடம் தான் கிடைக்கும், ஏகப்பட்ட இம்சை. அதுக்கு ஓடி வந்து நாச்சியாரக்கா வீட்டில் பிடிப்பதே புத்திசாலித்தனம்.


இதெல்லாம் சாதாரண காலங்களின் நடைமுறை. வெயில் காலம் வந்துவிட்டால் ரொம்பக் கஷ்டம். லீவுக்கு அக்கா குடும்பங்கள் வந்துடுவாங்க, வீட்டு ஜனத்தொகை கூடிடும். ஆத்துலே (தாமிரபரணி) தண்ணீர் அளவும் குறைந்துவிடும். அதனால் ஒருநாள் விட்டு ஒருநாள்தான் தண்ணீர் வரும். சில சமயங்களில் வாரம் இரு முறை மட்டுமே  வரும்.அதை சரிக்கட்டுவதும் எங்கள் தலையில்தான் விடியும்.


 காயல்பட்டிணம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் ஒரு நல்ல தண்ணீர்க் கிணறு உண்டு, வருஷம் முழுதும் அதில் தண்ணீர் இருக்கும். எங்க வீட்டிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் இருக்கும். அங்கே போய் தண்ணீர் எடுத்துட்டு வரணும். ஆனால் எல்லாரும் கும்பலாக போவதால் , குதூகலமாகப் போவோம். (அதையும் தாண்டி ஒரு பர்லாங்கு போனால்தான் எங்கள் பள்ளி வரும்.) குடிக்க சமைக்க தண்ணீர் எப்படியோ கிடைத்துவிடும்.


அத்தனை கூட்டமும் குளிக்க துணி துவைக்க இருக்கவே இருக்குது பண்டாரகுளம். எதனால் அந்த பெயர் வந்தது என்று தெரியாது. எங்களின் முதல் நீச்சல் குளம் அதுதான். பெண்கள் படித்துறையில் அக்கா மதினியெல்லாம் துணி துவக்கும் போது நாங்களெல்லம் அதைத் தாண்டி ஓடிவிடுவோம். குளத்தை ஒட்டி ஒரு கிணறு துலா போட்டு வாளியோடு இருக்கும். அதன் சுற்றுச் சுவரிலிருந்து குளத்தில் குதிக்க ஏதுவாக இருக்கும். அண்ணன்களெல்லாம் அநாயசமாக குதித்துக் குளிக்கும் போது பொடிசுகள் நாங்க மட்டும் பயந்து, தயங்கி ஓரமாகக் குளிப்போம். ரொம்ப பயந்தவங்க துலா போட்டு கிணத்திலிருந்து தண்ணீர் மொண்டும் குளிப்பாங்க.


இந்தக் குளமும் அக்கினி நட்சத்திரத்தில் வற்றிப் போய்விடும். அந்த சமயங்களில் இன்னும் தூரமாக நல்லாங்குளம் நோக்கிப் போவோம். தாமிரபரணியின் கடைக்கோடி கால்வாய் என்பதால் வருஷம் முழுவதும் அங்கே தண்ணீர் இருக்கும். குனிந்து பார்த்தால் தரை தெளிவாகத் தெரியும். பண்டார குளம் சேறாக இருக்கும், நல்லாங்குளம் சுத்தமாக இருக்கும். ஆனால் தனியாகவெல்லாம் அங்கே போக விட மாட்டாங்க. கோடை விடுமுறையில் கும்பலாகத்தான் போக முடியும்.குளம் ஆழமாக இருந்தால் நீந்தி குளிக்கலாம்.ஆனால் ஆகாயத்தாமரை அதிகமாக இருக்கும். சிறுசுகளெல்லாம் கீழ்ப்புறமாக மடையிலிருந்து வரும் வாய்க்காலில் குளிக்கலாம். தண்ணீர் தெளிவாகவும் சுகமாகவும் இருக்கும். சின்னச் சின்ன மீன்கள் துள்ளி விளையாடும். துண்டு வீசி மீன்பிடித்து விளையாடுவது சூப்பர் பிக்னிக். 


அக்காக்கள் பிரசவம் முடிந்த காலங்களில் வந்திருந்தால் கண்டிப்பாக மதகு வாய்க்காலுக்குத் தான் போக வேண்டும். ஏனென்றால் குழந்தைகளின் கழிவு கலந்த துணிகளை அங்கேதான் அலச முடியும். அக்காவும் மதினியும் மூட்டை மூட்டையாக துணி துவைப்பார்கள், பாவம்.

குளத்தை ஒட்டி வயல்காடு நிறைஞ்சிருக்கும். வரப்புமேலே ஏறி, ஓடி விளையாடுவது எல்லோருக்கும் பிடித்த விளையாட்டு.


 நல்லாங்குளத்துக்குப் போயிட்டு வர ரொம்ப நேரமாகும் என்பதால் அம்மா ஏதாவது பலகாரம் கட்டிக் கொடுப்பாங்க. துணி துவைச்சு, குளிச்சுட்டு அதைச் சாப்பிடும்போது கிடைத்த ருசி எந்த ரிசார்ட்டிலும் இதுவரை கிடைத்ததில்லை. குளிச்சுட்டுத் திரும்பி வரும்போது , ஈரத்துணிகளையெல்லாம் சுமந்துட்டு வரும்போதுதான், ஏண்டா இவ்ளோ தூரம் வந்தோம்னு மலைப்பா இருக்கும். ஆனால் மறுநாளும் அங்கே போகத்தான் கால்கள் கெஞ்சும். 


சந்தையில் எங்கள் வீடு இருந்ததால் வீட்டுக் குழாய் பெறுவதில் ஏதோ சட்டச் சிக்கல் இருந்தது போலும். தொண்ணூறுகள் வரை குழாய் போடவே முடியவில்லை. செக்கண்ணன் கிராம நிர்வாக அலுவலர் ஆன பிறகுதான் முதல் முதலாக ஒரு ஆற்றுத் தண்ணீர்க்குழாய் பதிக்க முடிந்தது என்று கேள்விப்பட்டேன்.


அன்று தண்ணீருக்குப் பட்ட கஷ்டம் அடிமனதில் ஆழப் பதிந்துவிட்டதால் இன்றளவும் சொட்டுத் தண்ணீரைக்கூட வீணாக்குவதில்லை.


அரிசி களையும் தண்ணீர், காய்கறி கழுவும் தண்ணீர் எல்லாம்தான் எங்கள் வீட்டுத் தோட்டத்தின் நீர் மேலாண்மை. 


நீரின்றி அமையாது உலகு

நீரை வீணாக்காமலிருக்க

உறுதி கொள்வது நமது கடமை.

Tuesday, September 01, 2020

அலை-6

 அலை-6

“அழியாத கோலங்கள்’ அநேகம் பேருக்குத் தெரியும். அழியும் கோலங்களிலும் அழகு உண்டுன்னு ரசித்துப் பார்ப்பவர்களுக்குப் புரியும். ஓணம் அன்று போட்ட பூக்கோலம், மனதில் வரைந்து விட்டகோலம் இந்த அலை.


விபரம் தெரிந்த நாளிலிருந்து எங்க வீட்டின் முன்வாசலில் கோலம் போடுவது அநேகமா நானாகத்தான் இருக்கும். பெரியவங்களுக்கெல்லாம் சமையல் வேலை, என்னைச் சுற்றியோ மூணும் பசங்க, அதனால் கோலம் போடுவது எப்போதும் என்னோட பொறுப்பு. சாதாரண காலங்களில் கோலம் போடுவது பெரிய பிரச்னை இல்லை. ஆனால் மார்கழி மாசம் குளிரில் போடணும் பாருங்க., யாரையாவது அதில் மாட்டி விடலாமானு மனசு அடிச்சுக்கும்.


சும்மாவெல்லாம் போய் கோலம் போட்டுட முடியாது. சந்தைக்கடை புழுதி மண்ணை முதலில் சுத்தமாகப் பெருக்கணும். பிறகு புழுதி அடங்கத் தண்ணீர் தெளிக்கணும். இப்போ மாதிரி பைப்பைத் திறந்தால் தண்ணீர் வரும் வசதியெல்லாம் அப்போ கிடையாது. வாளி போட்டு கிணத்துலேயிருந்து தண்ணி இறைச்சுத் தெளிக்கணும். பசங்களெல்லாம் ஜாலியா தூங்கிட்டு இருக்கும்போது பொண்ணுங்க மட்டும். மாங்கு மாங்குன்னு தண்ணி இறைச்சு தெளிக்கணும்.


ஆரம்ப காலங்களில் அவஸ்தையாகத் தெரிந்தது, நாள் செல்லச் செல்ல மிகவும் பிடித்த ஒன்றாகிப் போனது. கோலப்பொடி விரலில் எடுத்து கோலம் போட ஆரம்பித்ததும் எனக்குள் ஒரு ஓவியன் இயல்பாகவே  தலையெடுப்பான்.


 அந்தக்கால வார இதழ், நாழிதழ் எல்லாம் கோலம் பகுதியோடுதான் வரும். அந்த பேப்பர் பகுதிகளைத் தேடி அலைவது, கட்டிங் எடுத்து சேகரித்து வைப்பது எல்லாம் சுகமான காலங்கள்.

கோலங்களில்தான் எத்தனை விதங்கள். தினமும் வாசலில் போடுவது கோலப்பொடி. சாதாரண நாட்களில் வெள்ளைக் கலரில் சிரிக்கும் கோலங்கள், பண்டிகைக் காலங்களில் பல வண்ணங்களில் மலர்ந்து பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும். 


அன்றாடம் போடும் போது அவசரக்கோலமாக அள்ளித்தெளித்து விட்டு பள்ளி செல்ல ஓடினாலும், விசேஷ நாட்களில் தெருவை அடைத்து வாசல் முழுக்க கோலம் போட்டால்தான் மனது திருப்தியாகும். 


கம்பிக் கோலம், புள்ளிக் கோலம்னு ரெண்டு தினுசு கோலம் உண்டு. கம்பிக் கோலம் சுலபமானது, ரெண்டு புள்ளிகளை அங்காங்கே இணைத்து இஷ்டப்பட்டபடி போடலாம் (சுடிதார் போட்ட கல்லூரி மாணவி மாதிரி) வரையறைகள் அதிகம் கிடையாது. கம்பிக் கோலத்தில் அழகழகான உருவங்களை வரையலாம். ரங்கோலி கோலம் கூட இதிலிருந்துதான் வந்திருக்கும். புள்ளிக் கோலம் கொஞ்சம் கடினமானது. வளைச்சு வளைச்சுப் போடணும். ஒரு வளைவு தப்பாகப் போனாலும் , முழுக் கோலமும் தப்பாகப் போய்விடும் ( புடவை கட்டும் பெண் மாதிரி, மடிப்பு வராட்டி சேலை கட்ட முடியாது) எனக்கு ரெண்டு கோலமும் அத்துப்படி என்பதால் சுடிதாரும் புடவையும் மாறி மாறி கட்டுவேன்.


கோலத்திற்குப் புள்ளி வைப்பதில்தான் திறமையே இருக்கின்றது. அடிஸ்கேல், கம்பு , நூல் போன்ற எந்த உதவியும் இல்லாமல் கண்ணும் விரலும் ஒன்றிணைந்து  புள்ளி வைக்க வேண்டும். நேர் கோட்டில் வைக்கணும், புள்ளிகளுக்கு இடையில் இடைவெளி சமமாக இருக்கணும், புள்ளிகளின் எண்ணிக்கை சரியாக இருக்கணும். நேர் புள்ளியும் உண்டு, ஊடு புள்ளியும் உண்டு. புள்ளி சரியா வைச்சுட்டாலே பாதி கோலம் போட்டு முடிச்ச மாதிரிதான். என்ன? கணக்குப் பாடம் கேட்ட மாதிரி இருக்கா? கோலம் எல்லாமே கணக்கின் அடிப்படையில்தான். அது சரியில்லை என்றால் அலங்கோலம் ஆகிவிடும். அஞ்சு புள்ளியில் போடுற கோலம் , அதன் பெருக்குத் தொகைகளில் ( பத்து, பதினைந்து புள்ளிகள் கூட) அகலப்படுத்து வகையில் நிறைய கோலங்கள் உண்டு.


மார்கழி மாசம் வெறுமனே கோலம் மட்டும் போட்டுவிட்டு போக முடியாது. அதன் மேல் சாணி பிள்ளையார் பிடித்து வைத்து, அதில் ஏதாவது பூ சொறுக வேண்டும். அப்படி பூ வைப்பவர்கள் வீட்டில்தான் பொங்கலுக்கு அடுத்த நாள் குழந்தைகளின் சிறுவீட்டுப் பொங்கல் கொண்டாடுவார்கள். அதனால் எங்கள் வீட்டு வாசலில் எல்லா மார்கழியும் பிள்ளையார் பூ வைத்திருப்பார். எங்க அப்பா சாமியே கும்பிடுவதில்லை, சாஸ்திரமே பார்ப்பதில்லை என்றலும் கூட குழந்தைகளின் குதூகலத்துக்கு தடை சொன்னதும் இல்லை, விமர்சித்ததும் இல்லை. 


மார்கழி மாசம் பூ கிடைப்பது ரொம்ப கஷ்டம். எல்லாப் பூவும் வைக்க முடியாது. பூசணி, பீற்கு, தங்கஅரளி, செம்பருத்தி போன்ற சில வகைகள்தான் வைக்கலாம். இதுலே எந்தப் பூவும் எங்க வீட்லே கிடையாது. எப்பவாவது பீற்கம்பூ மட்டும் கூரைமேல் இருக்கும். மத்த நாட்களிலெல்லாம் பூவுக்கு அலைவதே ரொம்ப சுவாரஸ்யமான அநுபவங்கள். 


தெரிந்தவர்களின் தோட்டத்தில் அநுமதி பெற்று காலையிலேயே எழுந்துபோய் பூ பறிப்பது வாடிக்கை. அதிலும் காய் பூக்களைப் பறித்துவிடக்கூடாது, அதிகாலை இருட்டில் செடிகளை மிதித்து நாசப் படுத்திவிடக் கூடாது என்று ஏகப்பட்ட கெடுபிடிகள். ஆனாலும் எல்லா நாளும் அங்கும்  பூக்கள் கிடைக்காது. தொலைவில் உள்ள தெரிந்தவர்களின் தோட்டத்திலிருந்து முந்தின நாளே மொட்டுக்களைப் பறித்து வந்து தண்ணீர் தொட்டியில் போட்டு வைத்து சில நாள் சமாளிக்கலாம். அப்படியும் சில நாள் பூவே இல்லாத போது பக்கத்துத் தோட்டங்கள், சிவன்கோவில் நந்தவனம் எல்லாவற்றிலும் ஏறிக்குதித்து திருட்டுத்தனமாகப் பூ பறித்த நாட்கள் திரில்லானது. பராமரிப்பற்றுக் கிடக்கும் புதர்களில் முளைத்துக் கிடக்கும் பூக்களைப் பறித்து முள்குத்தி அவஸ்தைப்பட்டதும் வித்தியாசமான அநுபவங்கள்தான்.


பிள்ளையாரை பிடிப்பது மட்டும் ஈஸியா? எங்க வீட்லே மாடும் கிடையாது சாணியும் கிடையாது. பால் ஊத்துறவங்க வீட்லே போய் சாணி எடுத்து வைச்சுக்கணும். நிறைய ஸ்டாக் வைக்கவும் முடியாது, காஞ்சு போயிடும். அப்பப்போ போய் எடுத்துட்டு வரணும். சில சமயம் சந்தை நாட்களில் வண்டி கட்டி வரும் மாடுகள் சப்ளையர்கள் ஆயிடுவாங்க.


 மாட்டுச் சாணத்துக்கு இந்த மருத்துவர் அந்தக் காலங்களில் அல்லல் பட்டது விசித்திரமாக இருக்குதில்லே. ஆனால் , இந்த அநுபவங்களெல்லாம் பின்னர் மருத்துவக் கல்லூரியில் பயிலும் போது அசூயை படாமல் அனைத்து பொருட்களையும் பிணியாளர்களையும் கையாள முகாந்திரமாக இருந்திருக்கிறது. 


இவ்ளோ கஷ்டப்பட்டு பூ பறிக்க தேவை இருந்திருக்காதுதான்.ஒரு பூ வைச்சாலே போதும். ஆனால் எத்தனை பூக்கள் கிடைக்கிறதோ அதைப் பொறுத்து மூணு, ஐந்து, ஏழுன்னு ஏகப்பட்ட பிள்ளையார்கள் பிடித்து வைக்கலாம். ஒற்றைப்படையில்தான் வைக்கணும்  எண்னிக்கையைப் பொறுத்து பெரிய பெரிய கோலமாகப் போடலாம். பூசணிப்பூ கிடைத்தால் ரொம்ப அதிர்ஷ்டம். பெரிய பூவாக இருக்கும், வாசலே நிறஞ்ச மாதிரி இருக்கும். ( வாசலிலே பூசணிப்பூ வைச்சுப்புட்டா வைச்சுப்புட்டா’ன்னு இப்போ ஒரு சினிமா பாட்டுகூட இருக்கு)


வாசலோடேயே நின்னா எப்பிடி? வீட்டுக்குள் போடும் கோலங்கள் பத்தி தெரிய வேண்டாமா? எங்க வீடு சாணி பூசின மண் தரை ஒரு புறம், காரை போட்ட உடைந்த தரை மறுபுறம். ரெண்டுமே கோலம் போட்டால் புதுப் பொலிவு பெற்று விடும். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விதமான கோலம் போடுவோம். மாவுக்கோலம், சுண்ணாம்புக் கோலம், வண்ணம் கரைத்த மாவுக் கோலம்- அடடா எத்தனை விதங்கள், எவ்வளவு அற்புதங்கள்.


தைப்பொங்கல், திருக்கார்த்திகை , பிள்ளையார் சதுர்தியெல்லாம் மாவுக் கோலம்தான். தீபாவளிக்கு சுண்ணாம்புக் கோலம்னு நினைக்கிறேன்.சிறிய அகலப் பாத்திரத்தில் மாவு கரைச்சு எடுத்துகிட்டு கோலம் போட ஆரம்பிச்சா நேரம் போறது தெரியாமல் போட்டுக் கொண்டு இருந்திருக்கேன். அநேகமா எல்லா வேலையும் முடிஞ்சு படுக்கப் போற நேரத்தில்தான் கோலம் போட ஆரம்பிக்கணும், அப்போதான் நல்லா காஞ்சு பளிச்சுன்னு தெரியும். இல்லாட்டி எல்லா வாண்டுகளும் கோலத்தைக் கலைச்சிடுவாங்க.


கரைச்ச மாவை சின்ன துணியில் நனைத்து உள்ளங்கையில் வைச்சுகிட்டு , சொட்டு சொட்டா மோதிர விரல்வழியா இறங்குற மாதிரி பக்குவமா பண்ணணும். விரல் அசைவுக்கு ஏற்ப தரையில் கோலங்கள் உயிர் பெறும். ஏதாச்சும் சின்ன தப்பு வந்தால் துடைக்க இடது கையில் ஈரத் துணி இருக்கும். விரல் நுனி தரையில் உரசி காயமாகாமலிருக்க சின்ன ரப்பர் உறை போட்டுக்குவோம். அந்த கால பீடிங் பாட்டில் ரப்பர்தான் தற்காலிக விரல் உறை!! மாவுக்கோலம் போடும் போது பிரச்னை இல்லை. சுண்ணாம்புக் கோலம் போடும் போது சில சமயம் கையெல்லாம் வெந்துவிடும். ரப்பர் போடாத இடங்கள் சுருக்கம் வந்து எரியும். ஆனாலும் கோலம் போட்டு முடிச்சுட்டு ஒருதரம் தரையப் பர்க்கும் போது அந்த அழகில் கஷ்டமெல்லாம் கடந்து போய்விடும். 


சின்ன இடைவெளிகூட இல்லாமல் பெரிதும் சிறிதுமாக தரையை அடைத்து கோலம் கோலோச்சும். வெளித் திண்ணைகூட கோலத்தில் ஜொலிக்கும்.

திருக்கார்த்திகையின் போது கரைத்த மாவில் கையை முழுவதுமாக நனைத்து வாசல் கதவு முழுவதும் ஒற்றி கை அச்சுவைப்போம். ( நல்ல வேளையாக அப்போது கை சின்னம் வந்திருக்கவில்லை. இல்லாவிட்டால் எங்க அப்பாவின் அரசியல் சின்னமே கேலி பண்ணப்பட்டிருக்கும்).


பள்ளிப் படிப்பு முடியும் வரை கோலம் என் துறை ( department) சார்ந்து இருந்தது. கல்லூரி சென்ற பிறகும் கூட அதை மாற்றாமல் எனக்காக தரையெல்லாம் காத்திருக்கும். விடிய விடிய கோலம் போடுவேன். முன்வாசலில் இரவில் கோலம் போடுவதென்றால் ஒத்தை பெஞ்சில்  அப்பா காவலுக்கு படுத்திருப்பார்கள். இரண்டாம் ஆட்டம் சினிமா சென்றவர்கள் வரும்வரை கோலமும் தொடரும்.



கோலங்கள் 

கோடுகளைத் தாங்கினாலும்

நினைவுகள் 

கோலத்தில் சிக்கிக்ககொண்டது.