Friday, July 21, 2023

அலை-91

 அலை-91

“வாசிப்பும் வாசகியும்”

சங்கம் வளர்த்த மதுரையில் “கலைஞர் நினைவு நூலகம்” திறக்கப்பட்டுள்ளது. வாசிப்பு என்பது பேப்பரில் இருந்து இணையத்திற்குத் தாவிவிட்ட பிறகு நூலகத்தின் பயன்பாடு எப்படி இருக்கும் என்று அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. ஆனால் அதிக அளவில் பயன்பட வேண்டும் என்ற ஆதங்கம் இருக்கிறது. புத்தகங்களைச் சொந்தமாக வாங்கமுடியாத நடுத்தர வர்க்க வாசகர்களுக்கு நூலகத்தின் அருமை புரியும்.


தமிழை எழுத்துக்கூட்டிப் படிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே வாசிப்பு என்பதும் ஆரம்பித்துவிட்டது. ஆரம்பப் பள்ளி நாட்களில் சந்தைக்கடை முனையிலிருக்கும் ஹோட்டலின் திண்ணைதான் எனது முதல் நூலகம். தினத்தந்தி என்ற பத்திரிகைதான் முதலில் பரிச்சயமான நாளிதழ். எல்லோரும் இலவசமாக படிக்கும் வகையில் தினத்தந்தி நாளிதழும், “ராணி” வார இதழும் ஜன்னல் கம்பிகளில் சொறுகி வைக்கப்பட்டிருக்கும். பள்ளிக்குச் செல்லும் முன்பு “சிந்துபாத்” தொடர்கதைச் சித்திரத்தைத் தவறாமல் வாசிக்கும் அளவுக்கு நிரந்தர வாசகியானது அந்த திண்ணை நூலகத்தில்தான். சிந்துபாதின் தண்ணீர்க் குடுவை ரொம்ப பிடித்த பொருள்.ராணி வார இதழில் வரும் “ குரங்கு குசலா”வுக்கு தனி இடம் மனதில் உண்டு. 


உயர்நிலைப் பள்ளிக்கு வந்ததும் வாசிப்பின் எல்லைகள் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்தது. தோழி அமராவதி வீட்டில் கிடைத்த சித்திரக் கதைகளும் அதில் வீர சாகசம் செய்யும் “இரும்புக் கை மாயாவி” போன்றவர்களும் கனவுகளில் வரும் கதாநாயகர்கள் ஆனார்கள். அப்போதைய மாயாவிதான் இப்போதைய அநிமேஷன் விளையாட்டுகளின் முன்னோடி.  ரிமோட் இல்லாமலே தாவுவதும் குதிப்பதும் சண்டையிடுவதும் அபாரமாயிருக்கும். பாக்கியம் ராமசாமியின் “அப்புசாமித் தாத்தா” சிரிக்க வைத்தபோது ஜாவர் சீத்தாராமனின் ”உடல் பொருள் ஆனந்தி” அமாநுஷ்யங்களுடன் பயம் காட்டியது. வார இதழ்களிலிருந்து பைண்டு பண்ணப்பட்ட தொடர் கதைகள் அகிலன், கல்கி, சாண்டில்யன், நா.பா., போன்ற நாவலாசிரியர்களை அறிமுகம் செய்ததோடு  இளஞ்செழியன், இதயச்சந்திரன், கருணாகரன், அநபாயன் என ஏகப்பட்ட நாயகர்களைக் கனவுலகில் சஞ்சரிக்க விட்டன. வந்தியத்தேவன் அந்தக் காலத்திலேயே எங்களைக் கொள்ளைகொண்ட நாயகன்.


சரித்திர நாவல்களுக்கு இணையாக சமூக நாவல்களின்பால் காதல்வயப்பட வைத்தது ஜெயகாந்தனின் படைப்புகள். பதின்ம வயதுகளில் படித்தபோது புரியாத நிறைய விஷயங்கள் காதல் வயப்பட்டபோது வேறு விதமாகவும், நாற்பது வயதில் இன்னுமொரு கோணத்திலும் புரிதலுக்குள்ளானது ஜெயகாந்தனின் சிந்தனைகள் செய்த ஜாலம். அந்த வயதில் புரிதல் குறைவாகவும் ஞாபக சக்தி அதிகமாகவும் இருந்ததால் அன்று படித்த புத்தகங்களின் சில மேற்கோள்கள் இன்றளவும் பசுமரத்தாணியாக மனதில் உள்ளன. காதலுக்கு முன் (கா.மு.)  காதலுக்கு பின் (கா.பி.) என்று வாசிப்பை ஈஸியாக வகைப் படுத்திவிடலாம். ஒவ்வொரு மேற்கோளும் கவிதை வரிகளும் நமக்காகவே எழுதப் பட்டவை போன்றே இருக்கும். குறிஞ்சி மலர் நாவலில் வரும் கவிதைவரிகள்  மாதிரி.

  

“கூப்பிட்டா மலர் தேடி வண்டு வரும்

தேதி குறிப்பிட்டா கொய்யாவைக் கிளிகள் கொத்தும்

சாப்பிட்டால் வருகின்ற ஏப்பம் போல 

கண்கள் சந்தித்தால் வர வேண்டும் உண்மைக்காதல்”-

 

இதுபோல் எத்தனையோ உதாரணங்கள் கைவசம் உண்டு. பிடித்த நாவல்கள் மறுபடி மறுபடி வாசிக்கத் தூண்டும். காதலில் உருகிப் போகும்போதும் ஊடலில் கொதித்துப் போகும்போதும், ஏதாவது ஒரு நிகழ்வு அந்தக் கதைகளின் அத்தியாயத்தை நம்முடன் கைகோர்த்துக் கொள்ளும்.

 

வீட்டில் நாங்கள் எல்லோரும் பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்தில் இருந்ததால் குமுதம், விகடன், கல்கி போன்ற வார இதழ்கள் வீட்டில் வாங்க ஆரம்பித்தார்கள். முன்பக்க அட்டையிலிருந்து பின்பக்கம் வரை ஒருவரிகூட விடாமல் படிக்க ஆரம்பித்தபோது சுஜாதா, சிவசங்கரி, இந்துமதி என பலரையும் தெரிந்து கொள்ள முடிந்தது. கைக்கூ கவிதைகளும், சிரிப்பு துணுக்குகளும் வாசிப்பை மேலும் மேலும் தூண்டியது. ஒவ்வொரு எழுத்தாளரின் நடையும் வெவ்வேறு விதமாக இருந்ததைப் புரிந்து கொள்ளும் வயதும் வந்துவிட்டது. கிடைத்ததையெல்லாம் படித்த நிலைமை மாறி, பிடித்ததை எல்லாம் தேடிப்போகும் ஆவல் கூடியது.


 “யாதுமாகி நின்றாய் காளி” என்ற சிறுகதையை ரயில் பயணத்தின் போது வாசித்துவிட்டு யாருப்பா இந்த பாலகுமாரன் என்று ஆர்வத்தோடு தேட ஆரம்பித்தபோது கிடைத்த “அகல்யா”வும்  “மெர்க்குரிப் பூக்களும்” வேறு உலகத்தைக் காட்டின. தமிழில் இன்னும் எத்தனையோ எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார் முதல் ரமணி சந்திரன் வரை பாரபட்சமின்றி வாசிப்புக்குத் தீனி போட்டு நேரங்களைக் களவாடிக் கொண்டார்கள். விவரிக்க ஆரம்பித்தால் சுஜாதாவின் “கற்றதும் பெற்றதும்” சின்ன புத்தகமாகிவிடும். 


தமிழுக்கு இணையாக ஆங்கில நாவல்களும் என் வாசிப்பு வட்டத்துக்குள் அடக்கம். காண்டேகரின் “கிரெளஞ்சவதம்” பற்றி சொல்லாமல் தமிழ் லிஸ்ட் முடிவடையாது.


கல்லூரிப் படிப்பிற்கு ஆங்கிலப்புலமை அத்தியாவசியம் எனக்கருதி ஆங்கில பத்திரிகைகளைப் புரட்ட ஆரம்பித்தது செவ்வாய்க் கிழமை வரும் ஹிண்டுவின் “Know your English” பகுதி. நயினார் அண்ணன் BBA படிப்பில் ஆங்கில உச்சரிப்புகள் சம்பந்தமான துணைப்பாடம் எடுத்திருந்ததால் ஆங்கில நாவல்கள் வீட்டுக்குள் எட்டிப்பார்த்தன. அது போக Sherlock Homes, James Hardley Chase போன்ற துப்பறிவு நாவல்களே முதலில் பரிச்சயமாகி இருந்தது, ஏனென்றால் வாடகை நூலகங்களில் அவைதான் கிடைக்கும். ஏதோ ஒரு நாள் Harold Robbins Novel ஒன்று கிடைத்து வாசித்துக் கொண்டிருந்தபோது பாவியைப் பார்ப்பதுபோல் சில தோழியர் என்னை முறைத்துக் கொண்டிருந்தனர். புரியாத புதிருக்கு விடை சில நாட்கள் கழித்துதான் தெரிந்தது.  Harold Robbins ஆபாச எழுத்தாளராம், அவர் கதையை வாசித்ததால் நான் பாவியாகிப் போனேனாம். அட்டையில் வேறு அமெரிக்கன் ஸ்டைலில் பெண்கள் படம் இருக்கும். எதுக்கடா வம்பு என்று அதற்குப் பிறகு ஆங்கில நாவல்களுக்கு அட்டை போட்டு படிக்க ஆரம்பித்தேன். 


Sidney Sheldon என்பவரின் கதைகள் உனக்கு பிடிக்கும் என்று Rage of Angels புத்தகத்தை எபி தந்ததிலிருந்து அடுத்தடுத்து ஆங்கில நாவல்கள் மீதும் மோகம் அதிகமானது. இரவுப் பணிகள் சமயத்தில் சுப்பாராவ் சார் எனக்கும் தில்லைக்கும்  “கோமா” என்ற நாவலின் கதை பற்றி சிலாக்கியமாக சொன்னதிலிருந்து ராபின் குக் நாவல்களுக்கு அடிமையாகிப் போனேன். மருத்துவரான அவருடைய கதைகள் நிறைய மருத்துவம் சார்ந்து இருப்பதால் இன்னும் கொஞ்சம் அதிக ஈடுபாடு வந்துவிட்டது. அதிலும் அவரது TOXIN கதையில் மாட்டிறைச்சி பதப்படுத்துவது பற்றி தத்ரூபமாக  எழுதியிருந்ததை வாசித்த பிறகு மாமிசம் சாப்பிடுவதையே பத்து வருடங்களுக்கு மேல் நிப்பாட்டி விட்டேன். அவ்வளவு ஒன்ற வைத்துவிடும் எழுத்துநடை. Jeffery Archer, Irwing Wallace, Arthur Hailey என்று லிஸ்ட் நீண்டுகொண்டேதான் போகிறது. ஈரோடுக்கு வந்த பிறகுகூட நிறைய எழுத்தாளர்களைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். கண் மருத்துவர் கனகசபை Pelican brief தந்த பிறகுதான் John Grisham  கதைகளே பரிச்சயமானது.


தைப் பொங்கலை ஒட்டி சென்னையில் காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு எப்படியாவது போய் விடுவேன். நிறைய புத்தகங்கள் வாங்கினாலும் அதில் பாதியாவது  pirated copies ஆகத்தான் இருக்கும். அவற்றின் விலை குறைவாக இருக்கும். அப்போதான் யாராவது படிக்கக் கேட்டால் மொத்தம் மொத்தமாக குடுக்க முடியும். அடுத்த வருஷமும் அதே பிரதிகள் வாங்கிக்கலாம். படிக்க ஆசைப்படுபவர்களுக்கு புத்தகம் கொடுப்பது ஒரு சுகாநுபவம். ‘மக்கள் சிந்தனைப் பேரவை’ மூலமாக அதே மாதிரி புத்தகக் கண்காட்சி எங்கள் ஊரிலும் வந்துவிட்டதால் என் மினி நூலகத்தின் புத்தக எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.


வாசித்து முடிக்காத புத்தகங்களும் நிறைய இருக்கிறது. தெரிந்து கொள்ளப்படாத எழுத்தாளர்களும் நிறையபேர் இருக்கிறார்கள். வாசிப்பதும் எழுதுவதும் இலக்கு அல்ல , பயணம். தொடர்ந்துகொண்டே தான் இருக்கும். வாசிப்பை நேசியுங்கள்.

Thursday, July 13, 2023

அலை-90

 அலை-90

“கேள்விகள் ஆயிரம்”

மருத்துவப் படிப்பின் முக்கியமான பகுதி நோயாளிகளை பரிசோதனை செய்து வியாதியையும் அதற்குரிய மருத்துவ நிவாரணங்களையும் அலசுவது. அதை இரண்டு பகுதியாக பிரித்திருப்பார்கள். காலை ஏழரை மணிமுதல் புறநோயாளிகள் பிரிவும் 11 மணிமுதல் உள் நோயாளிகள் பிரிவும் மாணவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். ஒவ்வொரு துறையிலும் நான்கு பிரிவுகள் உண்டு. ஒன்று முதல் நான்கு யூனிட்டுகள். அதிலும் வெகு நாட்கள் பதவியிலிருக்கும் துறைத் தலைவரின் பெயரிலேயே யூனிட்டுகள் இருக்கும். முதல் யூனிட் என்றால் அறுவை சிகிச்சையில் MSS unit,  பொது மருத்துவத்தில் AS unit என்றிருக்கும். நான் நாலு வருஷமும் மூணாவது யூனிட் ஆன RH Unitதான்.மெடிசினில் ஐந்தாவது வருடம் மட்டும் GVS Unit, மீதி எல்லாமே மூணாவது யூனிட்தான்.


எல்லா பிரிவிலும் மூன்று வருட மாணவர்களுடன் ஹவுஸ் சர்ஜன்களும் சேர்ந்து நான்கு வருட மாணவர்களின் சங்கமமாக இருக்கும். அதன்படி நமக்கு முன்னாடி உள்ள மூணுவருஷம், பின்னாடி உள்ள மூணுவருஷம் என ஏழு வருட மாணவர்கள் அனைவரையும் ஓரளவு தெரிந்து கொள்ளலாம். திருநெல்வேலி மருத்துவமனை மூன்றே தளங்கள், அதில் ஏழெட்டு வராண்டாக்கள் என மிகச் சிறிய அளவில்தான் அப்போது இருந்தது. அதனால் எல்லா யூனிட் மாணவர்களும் அங்கும் இங்குமாகத்தான் சுற்றிக் கொண்டிருப்போம். ஒரு யூனிட்டிலிருந்து எட்டிப் பார்த்தால் அடுத்த யூனிட் அட்டகாசங்கள் தெரியும்.


புறநோயாளிகள் பிரிவில் சில துறைத் தலைவர்களின் வகுப்பு அட்டகாசமாக இருக்கும். அப்போது நிற்கக்கூட இடம் கிடைக்காது. சில நாட்கள் உப்புச் சப்பின்றி இருக்கும்போது மெலிந்த ஜனத்தொகையுடன் காட்சி தரும். அந்த மாதிரி நாட்களில் கையெழுத்துப் போட்டுவிட்டு காஃபி கடைகளை நோக்கி ஒருகூட்டம் நகர்ந்துவிடும். நிரந்தரப் புத்தகப் புழுக்களான அறிவுஜீவிகள் எல்லா வருடமும் ரெண்டுமூணு பேராவது இருப்பாங்க. அவங்களை வைச்சு தொய்வில்லாமல் வகுப்பு நடக்கும். தியரி படிக்கிறோமோ இல்லையோ புறநோயாளிகள் பகுதியில் எண்ணற்ற வியாதிகளின் தன்மைகளைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். OP க்கு OP அடிச்சா நஷ்டம் நமக்குத்தான்.


வியாதிகளின் வகைகள் எத்தனையோ இருக்கும். ஆனால் அதை வெளிப்படுத்தும் நோயாளிகளின் சொற்களும் அவர்கள் சொல்லும் கதைகளும் அதைவிட எத்தனையோ மடங்கு வித்தியாசம் விதியாசமாக இருக்கும். History Taking என்று சொல்லப்படும் முதல்கட்ட விசாரணைதான் நோயின் தன்மைக்கு நம்மை இழுத்துச் செல்லும் வழிகாட்டி. ஆனால் அது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை. சாதாரண சளி பிடித்த விஷயத்தைச் சொல்லுவதற்கு குற்றாலத்துக்கு டூர் போன கதையிலிருந்து விஷயம் ஆரம்பிக்கும். தும்மல் போட ஆரம்பித்த கதை வருவதற்குள் கேள்வி கேட்பவர் தூங்கிவிடாமல் இருக்கணும். சரியான கேள்விகளைப் போட்டு வியாதிக்குரிய விஷயங்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள அடிப்படைப் பயிற்சி அங்கிருந்துதான் ஆரம்பமாகும்.


நிறைய நேரங்களில் அறிவார்த்தமாக கேள்வி கேட்பதைவிட இலகுவான கேள்விகள்தான் சரியான பதிலைத் தரும். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்குக்கும் ஏகப்பட்ட கனெக்க்ஷன் இருக்கும். சர்க்கரை நோயால் கால்விரல் அழுகிவிடும் நிலையில் இருக்கும். ஆனால் தலையில் ஏதோ ஒரு இடத்தில் அரிப்பு இருப்பதைத்தான் முதலில் சொல்லுவார்கள். அதன் தன்மை அறிந்து வேறு ஏதாவது புண் இருக்கிறதா என்று கேட்கும்போதுதான் புரையோடிப்போன விரல்களைக் காட்டுவார்கள். சரியான கேள்விகள் கேட்கப்படாவிட்டால் நிறைய வியாதிகள் கண்டுபிடிக்கப்படாமல் போய்விடும். அதனால்தான் சரளமாகப் பேசுபவர்கள் இலகுவாக டயக்னோஸிஸ் பண்ணிவிடுவார்கள்.


நோயோடு அவஸ்தைப் படுபவர்களுடன் மன்றாடிக் கொண்டிருக்கும் போது அவ்வப்போது சில நகைச்சுவைக் காட்சிகளும் நடக்கும். அதிலும் மகப்பேறு மருத்துவப் பகுதியில் தான் அதிகக் காமெடி நடக்கும். தனது கணவருடன் சேர்ந்திருக்கும் நேரங்களில் வயிற்று வலி வருவதை ஒரு பெண் ஜாடை மாடையாக “எனது கணவருடன் பேசும்போது வயிற்று வலி வருகிறது டாக்டர்”  என்று சொல்லிக் கொண்டிருந்தார். எதிரில் அமர்ந்திருந்த மருத்துவ மாணவி பெருநகரங்களில் வசித்தவர் . வட்டார வழக்குகள் அவ்வளவாகத் தெரியாது. ரொம்ப சீரியஸாக “இப்போ என்கூட பேசிக்கொண்டு இருக்கீங்களே, வயிற்று வலி வருகிறதா” என்று கேட்க அந்தப் பெண் பேந்தப் பேந்த விழித்ததும் அருகிலிருந்தவர்கள் வாய் மூடிச் சிரித்ததும் செம காமெடி.


சில சமயங்களில் நோயாளிகளால் நமக்கே மாரடைப்பு வந்துவிடவும் வாய்ப்புகள் உண்டு. விஷமுறிவு பற்றி வகுப்பு நடந்துகொண்டிருந்தது. கடிவாய் தனமை குறித்து நோயாளியின் கால்பகுதியைக் காட்டி வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார் பேராசிரியர். இயல்பாக நோயாளியைப் பார்த்து “ என்ன பாம்பு கடித்தது” என்று கேட்கவும் அந்த நோயாளி டிரவுசர் பாக்கெட்டிலிருந்து  நிஜ பாம்பையே எடுத்துக் காட்ட ரெண்டு மூணுபேருக்கு மயக்கம் வந்தது உச்ச கட்டம். இதே மாதிரி அடிக்கடி பாம்பு கொண்டுவரும் கணவான்களைப் பார்த்துப் பார்த்து அப்புறம் பழகிப் போய்விடும்.


கண், காதுமூக்குதொண்டை, குழந்தைகள்நலம், தோல், டிபி , தொற்றுநோய் என ஏகப்பட்ட துணைப் பிரிவுகளுக்கு புறநோயாளிகள் பகுதிக்கு செல்லுவோம். அது honey-moon posting என்று அழைக்கப்படும். அதிலேயெல்லாம் தனித்தனியே பரீட்சைகள் கிடையாது.கண்ணுக்கு மட்டும் உண்டு.அதனால் வேதாந்தம் சாரிடம் கொஞ்சம் பயம் உண்டு. ஒவ்வொரு பிரிவிலும் கற்றதும் கேட்டதும் அவ்வப்போது கட் அடிப்பதும் நடந்தாலும் போஸ்ட்டிங் முடிந்ததும் ஒரு பார்ட்டி நடத்தி பிரிவு உபசாரம் செய்து கொள்வது  உண்டு. புறநோயாளிப் பிரிவின் பார்ட்டிகள் அருகிலுள்ள ஆஸ்தான ஹோட்டலான சீத்தாலட்சுமியில்தான் நடக்கும். தோல் மருத்துவப்பிரிவு எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். மஹாகிருஷ்ணன் சார் மாதிரி மாணவர்களிடம் அன்பாகப் பழகும் ஆசிரியர்களால் அது சாத்தியமானது.


ஆண்கள் எல்லோரும் சைக்கிளில் வந்துவிடுவதால் சரியான நேரத்துக்கு வந்துவிடுவார்கள். நாங்கதான் பெண்கள் விடுதியிலிருந்து லொங்கு லொங்குன்னு நடந்து வரணும். பாதிநாள் சாப்பிடவே நேரம் இருக்காது. இடைவேளையில் ஹோட்டல் சீத்தாலட்சுமியின் சிற்றுண்டிகள்தான் துணை. மொத்த மாணவ கும்பலும் அங்கேதான் இருக்கும். காலையில் கொஞ்சம் லேட்டாப் போனாலும் யாரும் அவ்வளவாகக் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் Dr. DKP OP என்றால் நேரம் தவறாமல் போயிடணும், இல்லாட்டி அன்னைக்கு நம்ம பாடு அதோகதிதான். ஆனால் அவரது வகுப்புகள் ரொம்ப நல்லாயிருக்கும்.


இருதய நோய், நுரையீரல் பாதிப்புகள், பக்கவாதம் போன்றவைகள் தான் படிப்பதற்கென உள்ள முக்கிய வியாதிகள் இடத்தில் இருக்கும். அது சம்பந்தமான கேள்விகள் எல்லோருக்கும் தளபாடமாக இருக்கும். என்ன தொந்தரவுடன் வந்தால் என்ன கேள்வியெல்லாம் கேட்கலாம் என உருப்போட்டு வைத்திருப்போம். ஒரு காய்ச்சலோ வாந்தி பேதியோ தீக்காயமோ வந்தால் ஒன்றிரண்டு கேள்விகளைத் தாண்டி குறுக்குக் கேள்விகள் கேட்கத் தோன்றாது. ஆனால் தினசரி பார்க்கும் புறநோயாளிகளில் இதுபோன்ற நோயாளிகள்தான் அதிகம் வருவார்கள் என்று அதிலும் எங்களைச் சிறந்த மருத்துவர்களாக பயிற்சி கொடுத்த ஆசிரியர்கள் அநேகம்பேர் உண்டு.


நாங்க நோயாளிகளிடம் கேள்வி கேட்பது போக வாத்தியார்களிடம் கேள்வி கேட்டே அவர்களை ஒரு வழியாக்கிவிடும் ஜாம்பவான்களும் உண்டு. புரிதலுக்காக சிலரும் , பிகர் முன்னாடி பந்தாகாட்ட சிலரும் , உள்ளேன் ஐயா என்பதைக் கேள்வி கேட்பதன் மூலம் நிலை நாட்ட சிலரும் கேட்கும் கேள்விகள் ஆயிரத்தில் முடியாது.


கேள்விகள் தொடரும்.

அலை-89

 அலை-89

“தேர்வுகள் பலவிதம்”

மருத்துவக் கல்லூரித் தேர்வு முறைகளே அலாதியானவை. ஆனால் எல்லாமே நியாயமானவையா என்று அறுதியிட்டுக் கூற முடியாது. மருத்துவக் கல்லூரியில் நுழையும் தகுதி வாய்ந்த மாணவர்கள் அனைவருமே சராசரி மாணவரைவிட நன்கு தேறியவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனாலும் எங்கள் கல்லூரியில் ஐந்தரை ஆண்டுகால படிப்பைப் பத்து வருடங்களுக்குமேல் படித்தவர்கள் உண்டு. அவர்களின் நீடித்த மாணவப் பருவத்திற்கு அன்றைய தேர்வு முறைகளே காரணம். 


வகுப்பறைக்கு ஒழுங்காக வந்ததாலோ பாடத்திட்டத்தைத் திறம்படக் கற்றுக் கொள்வதாலோ தேர்ச்சி அடைந்துவிட முடியாது. 

தேர்வுத் தாள்கள் அனைத்தும் எங்கள் பேராசிரியர்களே திருத்தும் நிலைமைதான் அந்தக்காலத்தில். அதனால் பேராசிரியர்கள் முடிசூடா மன்னர்களாகவே  வலம் வந்த நாட்கள்.  அந்த மாண்புக்கு ஏற்ப மாணவர்களின் ஆதர்ச உதாரணங்களாகவும் வழிகாட்டிகளாகவும் நிறைய ஆசிரியப் பெருந்தகைகள் இருந்தாலும் சில கொடுங்கோல் மன்னர்களும் உண்டு. ”இம் என்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்” என்பதுபோல் துறைத் தலைவரிடம் உரசிக் கொள்ளும் மாணவர்கள்  Chronic additionals என்ற அவப்பெயருடன் அதிக நாட்கள் கல்லூரியைச் சுற்றித் திரிய வேண்டியிருக்கும். 


ஒவ்வொரு பரீட்சைக்கு முன்பும் விடுதிக்கு ஒரு பட்டியல் வரும்.  அதில் HIT LIST இல் இருப்பவர்கள் அநேகமாக அந்த வகுப்புப் பேராசியரிடம் ஏதாவது ஒரு வகையில் சேட்டை செய்திருப்பார்கள் என்று அர்த்தம். இரண்டாவது வருஷத்தில் இருந்தே என் பெயர் அந்தப் பட்டியலில் இடம் பிடிக்க ஆரம்பித்து விட்டது. என்ன சேஷ்டை பண்ணினேன் என்றே எனக்குத் தெரியவில்லை. தெரிந்தபோது அழுவதா சிரிப்பதா என்றும் தெரியவில்லை.


விடுதிக் காவலாளியின் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு கல்லூரியைச் சுற்றி வருவது எங்களுக்கு விடுமுறை நாட்களின் பொழுதுபோக்கு. அந்தமாதிரி சென்ற நாளில் எதிரில் வந்த பேராசிரியருக்கு வணக்கம் சொல்லாமலும் , வண்டியை விட்டு இறங்காமல் கடந்து சென்றுவிட்டதால் கோபத்தில் இருந்ததாகக் கேள்வி. கையைத் தூக்கி வணக்கம் வைச்சா நிலை தடுமாறி விழுந்திருப்போம். அவர்தான் தூக்கி விடுறமாதிரி இருந்திருக்கும். கீழே இறங்கிவிட்டால் மறுபடி வண்டியில் ஏறத் தெரியாது. அதனாலே மிதி மிதின்னு மிதிச்சு ஓடிட்டோம் .அந்த வருடம் எங்களைக் கண்டிப்பாக பெயில் செய்துவிடுவார் என்று வதந்தி.  எதுக்கு வம்புன்னு கடந்து போயிட்டதுக்கு இவ்ளோ கடுமையான தண்டனையா என்று புலம்பிக் கொண்டே மஹா சீரியசாக படித்தோம். 


அந்த வருஷம் வந்த வினாத்தாளில் மிக அற்பமான ஒரு பகுதியிலிருந்து வந்த சுமாரான கேள்வி என்னைக் காப்பாற்றிவிட்டது. தோழி சூரியகாந்திக்குத் தான் படித்ததை யாருக்காவது சொல்லிக் கொடுப்பதில் அலாதிப் பிரியம். நிறைய பாடங்களை நான் புத்தகத்தில் படிக்காமல் கேள்வி ஞானமாகவே அவளிடம் கற்றிருக்கிறேன். வில்வாத ஜன்னி போன்ற ஒரு நிகழ்வு நரம்பு மண்டல பாதிப்பால் ஏற்படுவதை நாய் ஒன்றின் படம் மூலம் அழகாக விளக்கியிருந்தாள். எனக்கு மனதில் சினிமா படம் போல் பதிந்துவிட்டது. அது புத்தகத்தில் கடைசி ஒரு வரியாக மட்டுமே இருந்த பாடம். அந்தக் கேள்வி வந்தபோது அட்டகாசமாக படமெல்லாம் போட்டு நன்றாக எழுதியதால் என் தலை தப்பியது, பாஸாகிவிட்டேன்.


ஆனால் அந்த வருஷ பேராசிரியருக்கு எங்கள் வகுப்பின்மேல் என்ன காண்டு என்று தெரியவில்லை. Ultra Filtration என்று பாதிக்கு பாதியாக பெயிலாக்கிவிட்டார். ரொம்ப ரொம்ப நல்லாப் படிக்கிற பிள்ளைகள் எல்லாம்கூடப் பெயிலாகி வகுப்பே கலகலத்துப் போய்விட்டது. எழுபத்தைந்துபேர் கொண்ட வகுப்பில் முப்பத்து ஐந்துபேர் மட்டுமே ரெகுலர் வகுப்பில் சென்றோம். இதைத் தேர்வுமுறைக் கோளாறு என்றுதானே சொல்ல வேண்டும். பாஸ் ஆனவர்களை எல்லாம் பாவிகளைப் போல் பார்த்து முறைத்துக் கொண்டே சென்றவர்களும் உண்டு.


மூன்றாவது வருடம் வந்தபோது காசிப்பாண்டி என்ற நண்பருக்கும் எனக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையில் முடிந்து, அதற்குத் துணைக்கு வந்த தோழிகளைப் பற்றித் தரக்குறைவாக சுவர்களில் எழுதி பெரிய விசாரணைக் கமிஷனே நடந்தது. சண்டையின் மூல காரணத்தை விசாரிக்காமல் ஒவ்வொருவரின் அந்தரங்கங்களை அலசுவதற்கு அதை பயன்படுத்திக் கொண்ட பெரிய தலைகளும் உண்டு.விசாரணையின் மூல காரணம் நானே என்பதால் அந்த வருடமும் பெயில் ஆயிடுவேன்னு HIT-LIST இல் சேர்த்திட்டாங்க. ஆனால் அந்த வருடப் பேராசிரியர்கள் மிகவும் பெருந்தன்மையானவர்களாக இருந்ததால் படிப்புக்கு ஏற்ப மார்க் வாங்கி பாஸ் ஆயிட்டேன். நாலாவது வருடம் எந்த தொந்தரவும் இல்லாமல் படித்துக் கொண்டிருந்தபோது முழுப் பரீட்சைக்குப் பத்து நாட்களே இருந்த நிலையில் அப்பா தவறிவிட்டார்கள். மிகப் பெரிய சோகம். கண்டிப்பாகப் பரீட்சை எழுத முடியாது பெயில்தான் என்று நினைத்திருந்தபோது ஒரு ஸ்டிரைக் வந்து பரீட்சையே தள்ளிப் போய்விட்டது. 


ஐந்தாவது வருடம்தான் எல்லாருக்குமே ஒரு கண்டம் மாதிரி. எனக்கு அதிலும் ஒரு அதிர்ஷ்டம் இருந்தது. எல்லா வருஷமும் மூணாவது யூனிட்டில் இருந்த நான் கடைசி வருடம் மட்டும் இரண்டாவது யூனிட் வந்துவிட்டேன். அதன் துறைத் தலைவர் மாணாக்கர்களுக்கு நன்கு உதவி செய்யும் இயல்புடையவர் என்பதால் இலகுவாக பாஸ் ஆகிவிட்டேன். இன்னொரு உள்துறைப் பேராசிரியரே என்னை பெயில் பண்ணும் நோக்குடன் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த போது “நீ தியரியில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கிறாய் ,இப்போது கேட்கப்படும் கேள்விகள் மேலும் அதிக மதிப்பெண்கள் தருவதற்காகவே”என்று ஒரே போடாகப் போட்டு பொதுமருத்துவத்தில் இலகுவாகத் தேறவைத்துவிட்டார்.


எழுத்துத் தேர்வுகளைவிட orals என்று சொல்லப்படும் நேர்முகத் தேர்வுதான் எல்லோருக்கும் சிம்ம சொப்பனம். மேஜையில் பரப்பி வைத்திருக்கும் மருத்துவம் சம்பந்தப்பட்ட பொருட்களில் ஏதாவது ஒன்றை எடுக்கச் சொல்லிக் கேள்விகளைக் கேட்க ஆரம்பிப்பார்கள். அது சுற்றி சுழண்டு எங்கே வரை போகும்னு யாருக்கும் தெரியாது. OMIT பண்ணியும் படிக்க முடியாது ஒண்ணும் தெரியாதுன்னும் சொல்ல முடியாது. அவ்வளவு தெளிவாகப் படிக்க வேண்டும், அப்போதான் முழுமை பெற்ற மருத்துவராக முடியும். துறைத் தலைவர் உள் பரிசோதகராக இருப்பார். வேண்டாத மாணவருக்குக் கேட்கப்படும் கேள்விகளே வில்லங்கமாகத்தான் இருக்கும். பெயில் உறுதிதான்னு அப்போவே தெரிந்துவிடும்.


சமீபத்தில் நஸ்ரியா மருத்துவ மாணவியாக நடித்த படம் பார்த்தேன். முன்னால் இருக்கும் பொருட்களில் ஏதாவது ஒன்றை எடுக்கச் சொல்லும்போது ரொம்ப வெகுளித்தனமாக GOOD DAY BISCUIT எடுக்கும் காட்சி அவ்ளோ காமெடியாக இருக்கும். எங்கள் சக மாணவர்கள் அதையெல்லாம் விட காமெடியாக நடந்து கொண்ட நிகழ்ச்சிகள் நிறைய உண்டு. கடுப்பேத்துறார் மை லார்ட் என்று சொல்லும் பேராசிரியர்களையே படுத்திவைத்த பெரிய தலைகளெல்லாம் உண்டு.


நேர்முகத்தேர்வில் சின்ன கேஸ் ஒன்றும் பெரிய கேஸ் ஒன்றும் உண்டு. ஒன்று முடிந்ததும் காத்திருந்து அடுத்த கேஸ் பற்றி விளக்கணும்.ஆனால் ஒரு கேஸ் முடிந்ததும் பரீட்சையே முடிந்துவிட்டதாக எண்ணி வீட்டுக்கு சென்று தூங்கிவிட்ட நண்பரை அட்டெண்டரை அனுப்பி மறுபடி அழைத்து வந்து அடுத்த கேஸ் முடிக்க வைத்து பாஸ் வழங்கிய நல்ல உள்ளங்களும் உண்டு. பெண் பிள்ளைகள் லேசாக அழுது செண்டிமெண்டலாக தேர்வாளர்களை நெகிழ்வுறச் செய்து பாஸ் வாங்கி விடுவதாக ஆண்கள் கூட்டம் எப்போதுமே பொரணி பேசுவார்கள். எனக்கு அதில் உடன்பாடு கிடையாது, என்னை மாதிரி ஆட்களுக்கு கண்ணீரே வராது. கண்ணீர் சுரப்பி பெயிலானாலும் எப்படியோ கஷ்டப்பட்டு பாஸ் பண்ணி  பயிற்சி மருத்துவராக பணி ஏற்றபோது அதுவரை பட்ட பாடுகளெல்லாம் பஞ்சாய்ப் பறந்துவிட்ட்து.


தீர்ப்புகள் மட்டும் திருத்தப் படுவதில்லை, தேர்வுகளும் திருத்தப்பட்டுள்ளது. பொதுவான திருத்துதல் முறை , ஆன்லைன் தேர்வுகள் என மாற்றங்கள் ஏற்பட்ட பிறகு Chronic Additionals என்ற பதம் வழக்கொழிந்துவிட்டது.

அலை-88

 அலை-88

“காதல் சடுகுடு”

காதலிக்கணும்னு தலையில் எழுதியிருந்தால் கபடி ஆடித்தானே ஆக வேண்டும். அது எப்படி வீர விளையாட்டோ காதலும் அதே மாதிரிதான். நினைச்சா காதலில் விழுந்துவிடலாம். ஆனால் அதில் வெற்றி பெறணும் என்றால் பலீஞ்சடுகுடு ஆடணும். ஏகப்பட்ட அடிகள், காயங்கள் , அவமானங்கள் எல்லாவற்றையும் தாண்டித்தான் வெற்றி பெற முடியும். காதலில் ஜெயிச்சவங்க எல்லாருக்குமே ஒரு சடுகுடு கதை இருக்கும். 


ஆட்டத்தின் முதல் கட்டமே கஷ்டமானதுதான். காதலிக்கிற ரெண்டுபேரும் காதலைச் சொல்லி , ஒருதலைக் காதலாகிவிடாமல் மனமொத்த காதலாவதற்கே ஒரு மாமாங்கம் ஆயிடும். ஆரம்பகால கிளுகிளுப்புகள் முடிந்து யதார்த்தத்திற்குள் வரும்போதுதான் உண்மையான ஆட்டம் தொடங்கும். அம்மா அப்பாவில் ஆரம்பித்து ஜாதி, மதம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, படிப்பு என எத்தனை எத்தனைப் படிக்கட்டுகள் தடைக் கற்களாகி நிற்கும். ஆனால் எல்லா காதலுக்கும் தூது போகவும் , துணை நிற்கவும், உதவி செய்யவும் ஏதாவது ஒரு நல்ல ஆத்மாவும் இருக்கும்.இதெல்லாமே காதல் அகராதியின் எழுதப்படாத விதிகள். 


எங்களோட கால கட்டத்தில் கெமிஸ்ட்ரி பாடத்தில் வரும் உப்புக்களின் பெயரை ஜாதிக்கு அடையாளமாக வைத்திருப்பார்கள். ரொம்ப பாடாய்ப் படுவது சோடியம் உப்புதான். எழில்கூட கொஞ்சம் நெருங்கிப் பழக ஆரம்பித்த சமயத்தில் ஒருநாள் சில சீனியர் அக்காக்கள் என்னைக் கூட்டமாக வழிமறித்து ’எங்க உப்பு ஜாதியில்  சேராத நீ எப்படி எழில்கூடப் பேசலாம். எங்க பொண்ணே ஒருத்தி எழிலுக்கு ரெடியாக இருக்கிறாள். நீயாக விலகாவிட்டால் விளைவுகளைச்  சந்திக்க வேண்டும்’ என சினிமா பாணியில் எச்சரித்து அனுப்பினார்கள். ஜாலியாக ஆரம்பித்த காதல் ஜாதிப் பிரச்னையில் வாங்கிய முதல் குட்டு அது. நான் சும்மாவே ரொம்ப ரோஷக்காரி. இப்படி பேச்சு வந்ததும் நானே அந்த பொண்ணு சார்பா பேசி எழிலுடன் சேர்த்து வைக்கிறதா சபதமெல்லாம் போட்டுட்டு வந்தேன். அது பொருந்தாக் காதலாகி பொசுக்கென்று போனது தனிக்கதை. 


எழில், எபி,  ஜியோ என்ற மும்மூர்த்திகளும் சேர்ந்தேதான் சுற்றுவார்கள். பெண்கள் விடுதிக்கு வரும்போது தம்பித்துரை,சுரேஷ் எல்லோரையும் சேர்த்துக் கொண்டு கும்பலாக வருவார்கள். நாங்களும் தாணு, பானு, ஷுபா, உஷா என கூட்டமாகத்தான் அவர்களுடன் கடலை போடுவோம். அதனால் நாங்கள் அனைவரும் நல்ல நண்பர்கள் என்ற தோற்றம்தான் இருந்தது. எழில் என்ற பிம்பத்துக்கு ‘ரொம்ப நல்ல பையன், தீவிர பக்திமான், பைபிள் தவிர ஒண்ணுமே தெரியாத அப்பாவி’ என்று ஏகப்பட்ட அடை மொழிகள். அதனால் நிறைய பேருக்கு நாங்கள் காதலிக்கிறோம் என்பதே ரொம்ப நாள் தெரியாது.

கல்யாணங்களுக்குப் போனாலும், கருமாதிக்குப் போனாலும் கூட்டமாகவே தான் போவோம். அவ்ளோ பெரிய கூட்டத்தில் எழில் கூட நான் தனியாகப் பேசிய பொழுதுகள் ரொம்பக் குறைவாகவேதான் இருந்திருக்கும். எங்க கூட்டத்தில் இருந்தவர்களும் சினிமாத்தனமாக எங்களுக்குத் தனிமை ஏற்படுத்திக் கொடுக்கும் பாங்கு இல்லாமல் இயல்பான நட்புடன் இருந்ததால் அது சாத்தியமானது. 


ஆனாலும் எங்க ரெண்டுபேருக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி நெருங்கியவர்களுக்கு எளிதில் புரிந்துவிடும் போலிருக்கு. 

ஒருநாள் நயினார் அண்ணன் சாதாரணமாகப் பேசுவதுபோல் கேட்டுவிட்டான். வேறு ஜாதி வேற்று மதம் எல்லா விஷயங்களிலும் முரண்பட்ட வாழ்க்கை முறை இருக்கும். சுத்த சைவமாயிருக்கும் நான் முழுநேரம் அசைவம் சாப்பிடுபவருடன் ஒத்துப் போக முடியுமா? வீட்டில் சாமியே கும்பிடாவிட்டாலும் இந்து சமயத்தைச் சார்ந்த நான் கிறித்தவ சமயத்தை வழிபடுபவர்களுடன் வாழ்க்கை நடத்த முடியுமா என்றெல்லாம் ஆய்வுபூர்வமாகவும் அனுசரணையாகவும் கேட்டான். நான் ஒரே ஒரு உத்திரவாதம்தான் கொடுத்தேன். எந்த சந்தர்ப்பத்திலும் எழில் விட்டுக் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்க மாட்டேன். என்னால் முடிந்தவற்றை அனுசரித்துச் சென்றுவிடுவேன் என்று சொல்லிவிட்டேன். அதுதான் என் வீட்டில் என் காதலைச் சொல்லிய தருணமாக இருந்திருக்கும்.


எழில் வீட்டிற்கும் ரொம்ப நாள் எங்க கதை தெரியாமல்தான் இருந்த்து. அவங்க தம்பி தங்கை எல்லாம் கல்லூரிக்கு வந்தால் என்னை வந்து பார்ப்பார்கள். சேர்ந்து ஹோட்டலுக்கு போவோம். ஆனாலும் விஷயம் வெளிப்படையாகத்  திறக்கப்படாமலே இருந்தது. இதற்கிடையில் எழிலுக்கு இறுதியாண்டு பரீட்சை நெருங்கிவிட்டது. படிக்க ஆரம்பித்துவிட்டால் யாரோடும் பேச மாட்டாங்க. சீரியஸாக மூஞ்சை வைச்சுகிட்டு தாடி வளர்த்துகிட்டு அலைவாங்க. எதிரே பார்த்தாலும் சண்டை போட்டவங்களைப் பார்க்கிற மாதிரியே முறைச்சுகிட்டு போவாங்க. ஒரு ஸ்டேஜில் எங்களோட காதல் இருக்கா முடிஞ்சுபோச்சான்னு கூட சந்தேகம் வந்துடுச்சு. பரீட்சை முடிஞ்சதும் சரியாகிவிடுவான் என்று ஜியோவும் எபியும்தான் சமாதானப் படுத்துவாங்க. சொன்ன மாதிரியே ஹவுஸ் சர்ஜன் ஆகும்போது முன்னே மாதிரி ஆயிட்டாங்க. 


ஆனால் அவங்க வீட்டிலிருந்து நெருக்கடி ஆரம்பித்தது. நிறைய பெண்வீட்டுக்காரர்கள் படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவங்க ‘உப்பு’ கூட்டத்தில் டாக்டர் மாப்பிள்ளைக்கு ஏக மவுசு. கிலோ கணக்கில் தங்கம், கார், லட்சங்களில் வரதட்சணை என ஏக மதிப்பு. எழில் பிடி கொடுக்காமல் இருக்க ஆரம்பித்ததும் விஷயம் அம்பலமாகியது, போராட்டமும் தொடங்கிவிட்டது. 


வேறே ஜாதி இந்துப் பொண்ணு கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டேன் என மாமனார் பிடிவாதத்துடன் நின்றுவிட்டார்கள். அப்பாவை உடனடியாக சம்மதிக்க வைப்பது கஷ்டம் என்பதைப் புரிந்துகொண்டு எழில், ஈரோடு மிஷன் ஹாஸ்பிடலில் ஜுனியர் டாக்டராக சேர்ந்து விட்டார்கள். கொஞ்சம் விட்டுப் பிடித்தால்தான் காரியம் கைகூடும் என்பது தெரிந்துவிட்டது. அதன்பிறகு ஏகப்பட்ட போராட்டங்கள் , சண்டைகள்  நடந்துகொண்டேதான் இருந்தது. எழில் நாசரேத் போகும் நாட்களே குறைந்து போய்விட்டன. அதற்குள் எனது படிப்பும் முடிந்துவிட்டதால் எங்கள் வீட்டிலும் திருமணப் பேச்சை எடுத்தார்கள். ஆனால் எனது முடிவில் உறுதியாக இருந்தால் என்னை மீறி எதுவும் செய்யவில்லை.தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன்.


அவங்க அப்பாவை  சமாதானப்படுத்த பலவிதங்களிலும் முயற்சி பண்ணிக் கொண்டேதான் இருந்தார்கள். சொந்தக்காரர்கள் மூலம் பேசுவது ஒருபக்கம் நடந்தது. மாமியாரின் தீவிர உபவாச பிரார்த்தனைகள் மறுபக்கம்.நான் மதம் மாற்றத்துக்கு சம்மதம் தெரிவித்தால் ஒருவேளை மனது மாறலாம் என்று நான்சி தாணு ஆனேன். என்ன மதம் மாறினாலும் ஜாதி வேறுதானே என்று சொல்லிட்டாங்க.அதுக்கு மேலே என்ன பண்ணமுடியும்னு நாங்களும் அமைதியாயிட்டோம்.எத்தனை வருஷம் ஆனாலும் ரெண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் தான் கல்யாணம் பண்ணிக் கொள்வது என்பதில் ரெண்டுபேரும் தெளிவாக இருந்தோம். ஆனால் சேர்ந்து ஊர் சுற்றுவதை நிறுத்துவதில்லை என்பதிலும் உறுதியாக இருந்தோம். 


எப்படியே எட்டு வருடங்கள் காத்திருந்து கபடியில் கப் ஜெயிச்ச மாதிரி கல்யாணமும் மிக விமரிசையாக நடந்தது. கபடியோ காதலோ ஜெயிக்கும் வரை போராட்டம்தான். ஜெயிச்சதும் கொண்டாட்டம்தான்.

அலை-87

 அலை-87

“சக உதிரங்கள்’


“முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் ஒன்றுக்குள் ஒன்றாக”- இதுதான் எங்க குடும்ப தீம் பாடல்.. தம்பி நானா இந்த மாதிரி தத்துவப் பாடல்களை உணர்வுபூர்வமாகப் பாடுவான். குடும்ப கூடுகைகளின் போது இந்தப்பாடல் கண்டிப்பாக மேடையேறும். சகோதர சகோதரிகளின் பங்களிப்பு வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்த தலைமுறை எங்களுடையது.


மூத்த குழந்தைக்குத் திருமணமாகும் சமயம் வரை குடும்பக் கட்டுப்பாடு என்ற பேச்சுக்கு வழியே இல்லாமல் வாரிசுகள் பிறந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் அதன் எண்ணிக்கையைப் பொறுத்து விசேஷித்த அடைமொழி கூட சொல்லுவாங்க.முதல் இரண்டுக்கும் ஏதாவது சிறப்பு உண்டான்னு தெரியலை. மூணாவது பெண் பிறந்தால் “முற்றமெல்லாம் பொன்”; நாலாவது பையன் பிறந்தால் ‘நடைக் கல்லைப் பெயர்த்துவிடுவான்’ ; ஐந்தாவது பெண் பிறந்தால் ‘அடுக்குப் பானையெல்லாம் பொன்”; ஏழாவது பெண் ‘இரந்தாலும் கிடைக்காது’. எட்டாவது பிள்ளை ’மேதை’ என்றெல்லாம் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறோம். 


வரிசையாக குழந்தை பெற்றுக் கொள்வதை நியாயப்படுத்த இந்த மாதிரி சொல்லிக் கொள்வார்கள் போலும். எங்க வீட்டில் ஏழாவது பெண்ணாக நானும், எட்டாவது மேதையாக தம்பி நானாவும் அந்தப் பெயர்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தினோம், மற்ற எண்ணிக்கை எதுவும் சரியாகப் பொருந்தி வரவில்லை. எல்லாருக்கும் பெயர் வைப்பது கூட ஆச்சி, தாத்தா, ஒன்றுவிட்ட தாத்தா, பெரியம்மா என யாரோ ஒருத்தரோட பெயர்தான் இருக்கும். அந்தந்த கிழடுகளும் பெயர் வைத்த பேரப் பிள்ளைகளைத் தனியாக் கவனித்துக் கொள்வார்கள். பலகாரம் வாங்கிக் கொடுப்பது காசு கொடுப்பது எல்லாம் நடக்கும். சரசக்கா மட்டும் ஸ்பெஷல், சரஸ்வதி பூஜையன்று பிறந்ததால் சாமி பெயர் கிடைத்தாலும் நாங்கள் கூப்பிடுவது என்னவோ சச்சு அக்காதான்.


மாமனார், மாமியார் பெயர் சொல்லிக் கூப்பிடுவது மரியாதைக் குறைவு என்பதால் எல்லோருக்கும் ஒரு பட்டப் பெயரும் இருக்கும். உண்மையான பெயரே மறந்து போகுமளவுக்கு அந்தப் பெயர் பிரபலமாக இருக்கும். அதனால்தான் ராம்குமார் துரையாகவும், சிவகாமிநாதன் செக்கன் என்றும் ஆறுமுக நயினார் பூந்தி எனவும் செல்லமாக அழைக்கப்படுவார்கள். தம்பி கூட நாராயணன் பெயர்கூட நானாவாக சுருங்கியது. என் பேரை மட்டும் எதுவுமே பண்ண முடியாமல் தாணுவாகவே இருந்தேன். அதனால்தானோ என்னவோ திருமணத்திற்குப் பிறகு நான்சி தாணு ஆகிவிட்டேன். 


இப்போது உள்ள நியூக்ளியர் குடும்ப வாசிகளுக்கு இவ்ளோ பெரிய குடும்பமும் அதன் ஜனத்தொகையும் மலைப்பைத் தரலாம், நாங்களெல்லாம் மியூஸியத்து ஆட்கள் மாதிரிகூடத் தெரியலாம். ஆனால் அதனால் அடைந்த நன்மைகளும் கிடைத்த, கிடைத்துக் கொண்டிருக்கும் சந்தோஷங்களும் அவர்களுக்குப் புரியுமா என்று தெரியவில்லை. முன் ஏர் போகும் வழியில்தான் பின் ஏர் போகும்னு சொல்லுவாங்க. அண்ணன்களும் அக்காக்களும் சொல்லிக் கொடுத்த எண்ணற்ற விஷயங்கள்தான் பின்னாடி வந்த தலைமுறையை வழி நடத்திக் கொண்டிருக்கிறது.

பள்ளிக்கூடம் கற்பிக்காத எத்தனையோ விஷயங்களை வீட்டில் தெரிந்து கொண்டிருக்கிறோம். நண்பர்களுடன் சுமுகமாகப் பழகுவது, விட்டுக் கொடுப்பது, தலைமை ஏற்று வழி நடத்துவது போன்ற பல விஷயங்கள் சிரமமின்றி வசப்பட்டது சக உதிரங்களின் கவனிப்பால்தான். 


சாப்பாடு ஊட்ட அம்மாவோ, படிப்பு சொல்லித்தர அப்பாவோ கஷ்டப்படதில்லை. மூத்த குழந்தைகளே இளையவர்களைக் கவனித்துக் கொள்வார்கள். மூத்தவர்கள் போட்ட ஆடைகள் வழி வழியாக அடுத்த குழந்தைக்கு தரப்படுவது எழுதப்படாத விதிகள். 

துரை அண்ணன் உள்ளூரிலேயே இருந்த ஆலையில்தான் வேலை பார்த்தான். என்ன மழைபெய்தாலும், மார்கழிமாதக் குளிர் என்றாலும் கரெக்டாக ஆறேமுக்காலுக்கு வீட்டிலிருந்து கிளம்பிவிடுவான். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அதே நடைமுறைதான். விடுப்பு எடுத்தோ காலதாமதமாகச் சென்றோ பார்த்ததில்லை. இப்போ அவன் மகன் அதே மாதிரி வேலைக்கு செல்வதைப் பார்க்க முடிகிறது. 


மரகதக்கா சரியான சட்டாம்பிள்ளை. உட்கார்ந்த இடத்திலிருந்தே எல்லோரையும் ஆட்டுவித்து வேலை வாங்கிவிடுவாள். வாத்தியாரம்மா என்ற கெத்தும் உண்டு. சுடலி அக்கா எது நடந்தாலும் கவனம் சிதறாமல் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டே இருப்பாள். எங்கள் வீட்டில் படிக்காத மேதை அவள்தான். சச்சக்கா கொஞ்சம் சாது. அவளுக்கும் எனக்கும் பத்து வயது வித்தியாசம் இருக்கும். ஆனாலும் அவளுடன் தான் எனக்கு ஒட்டுதல் ஜாஸ்தி. செக்கண்ணன் கோபக்காரன். அதனால் கொஞ்சம் ஒதுங்கியே இருப்பேன். நயினார் அண்ணணும் நாராயணனும்தான் ரொம்ப நெருக்கம்.


குடும்ப விழா ஏதேனும் வந்துவிட்டால் வீட்டுமட்டுக்கும் செய்துக்குவோம் என்று முடிவெடுத்தாலே வீடு நிறைந்துவிடும். நாங்களே சமைத்து, பரிமாறி, அலங்கரித்து,கொண்டாடி ஓயும்போது கோடானுகோடி சந்தோஷம் கிடைக்கும். பிரச்னைகள் ஏதும் வந்தால் பெருசுங்க பார்த்துக்கும். உடல் உழைப்பைக் கொடுக்க இளவட்டங்கள் இருக்கும். வீட்டையே ரெண்டுபடுத்தும் மழலைப் பட்டாளம் இருக்கும். 


இப்போ உள்ள தலைமுறைகள் Destination Wedding என்று மொத்தமே அம்பது அறுபதுபேரை மட்டும் அழைக்கிறார்கள். அதைத் தாண்டி நிறைய பேரை அழைக்கும் அளவுக்கு உறவுகளும் இல்லை, இழுத்துப் போட்டு செய்ய அவர்களுக்கு நேரமும் இல்லை. குடும்பம் சிறுத்துவிட்டது. இரண்டு குழந்தை பெற்றால் வளர்ப்பது கஷ்டம், ஒன்றோடு நிப்பாட்டிக் கொள்ளலாம் என்ற நிலை வந்த பிறகு உறவுகள் நலிந்த சமூகம் ஆகிவிட்டோம். ஜனத்தொகை கட்டுப்பாடு சமுதாயத்திற்கு நல்லதுதான். ஆனால் குடும்ப உறவுகளுக்கு சாபக்கேடு. அத்தை மாமா, சித்தி சித்தப்பா என்ற உறவுகளே இல்லாமல் போய்விடுகிறது.


பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் தனிமைப் பட்டு நிற்கும் முதியவர்கள் பற்றிய செய்திகள் வந்த வண்ணமாகவே இருக்கின்றன. அள்ள அள்ளக் குறையாத சொத்துக்கள் இருந்தாலும் அன்புடன் கவனிக்கும் உறவுகள் இல்லாமல் தனிமைப் பட்டவர்கள் அதிகம். தவமிருந்து பெற்ற மகனோ மகளோ வெளிநாடு சென்றுவிட்டால் இன்னும் மோசமான நிலையில் தங்கக்கூண்டில் அடைக்கப்பட்ட கிளிகள் போல் ஆகிவிடுகிறார்கள். கணவன் மனைவி குழந்தைகள் என எல்லா உறவுகளுமே இடையில் வந்தவை. குழந்தைகளின் பாதைகள் பிரியும் போது மறுபடியும் தனிமைதான். ஆயுசு பரியந்தம் உடன் வரக்கூடிய கணவருக்கு அடுத்தபடியாக உள்ள உறவு உடன் பிறந்த சகோதர சகோதரிகளுடையதுதான்.  என் சக உதிரங்கள் அனைவரும் அறுபதுகளைத் தாண்டி நிற்கிறோம். என்றைக்காவது மன சோர்வோ தனிமையோ தோன்றினால் சட்டென்று முடிவெடுத்து சென்னையோ ஆறுமுகநேரியோ போய்விட்டால் போதும். அக்கா அண்ணன்களுடன் உறவாடிவிட்டு கதைபேசி களித்துவிட்டு வரலாம். என்னால் போக முடியாவிட்டால் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அவர்களை இங்கே வர வைத்துவிடலாம். 

இப்போது உள்ள அண்ணன் தங்கைகள் எங்களைப்போல் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. 


ஊடகமும், சமூக வலைத் தளங்களும் தனி நபர் தொடர்புகளை அதிக அளவில் சேதப்படுத்திவிட்டது. நாற்பது வயதுவரை உறவுகள் துச்சமாகத் தெரியும். ஐம்பதுகளில் அதன் அருமை தெரியும். அறுபது தாண்டும்போது அதன் இன்றியமையாத் தேவை புரியும். 

“உறவுகள் தொடர்கதை”