Thursday, January 23, 2025

அலை அலை-9

 அலை அலை-9

ஒடிஸாவுக்கு ஓடிவா-2ஆம் பகுதி


புவனேஷ்வரில் டிசம்பர் மாத குளிர் கடுமையாக இருக்கும் என்று நினைத்து ஸ்வெட்டர் scarf எல்லாம் பெட்டியில் அடைத்து வைத்திருந்தோம். ஆனால் வெயில் நம்ம ஊர் மாதிரியே இருந்தது. அதுவும் நல்லதுக்குத்தான். வித விதமாக உடைகள் அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கலாம் என சந்தோஷப் பட்டுக் கொண்டோம். ரயில் பயணத்தின் போதே க்ரூப்பில் எல்லோரும் ஒருவருகொருவர் பரிச்சியம் ஆகிவிட்டதால் யாரையும் தனிப்பட கவனிக்க வேண்டிய அவசியமின்றி இணைந்த கரங்களுடன் இனிதே பயணம் தொடங்கியது.


புவனேஷ்வரில் முதலில் பார்த்தது லிங்கராஜா கோவில். மிகவும் புரதானமான கோவில். கட்டிடக் கலைக்கு சான்றாகவும் ஆன்மீகத்தின் அங்கமாகவும் அட்டகாசமாக இருந்தது. கலிங்க கோபுரங்கள் கூம்பு வடிவில் உயரமாக இருந்தன.ஆனால் சாமி தரிசனம்தான்  காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை ஒரே மாதிரி இருக்கிறது. ஒழுங்கற்ற வரிசைகள், பக்தியை வியாபாரமாக்கும் புரோக்கர்கள், எதற்கு முண்டியடிக்கிறோம் என்ற உணர்வே இல்லாத பக்தர்கள், சாமியை மறைத்துக் கொண்டு அர்ச்சனைத் தட்டில் விழும் காணிக்கைகளையே குறி வைத்திருக்கும் அர்ச்சகர்கள் என சலிப்புற வைக்கும் காட்சிகள். ஆனாலும் அத்தனை அசெளகரியங்களிலும் உண்மையான பக்தியுடன் வணங்கி வழிபட்ட பக்தர்களின் பொறுமை பாராட்டப்பட வேண்டியது. எங்களுடன் வந்த guide ஒழுங்காக ஸ்தல புராணம் சொன்னாரோ இல்லையோ ஜெயந்தி தீர்க்கமாக எல்லாவற்றையும் விளக்கிக் கொண்டிருந்தாள். பிற மதத்தவர்கள் கோவிலுக்குள் வர தடை என்று சொல்லியிருந்ததால் எனக்கு ஸ்டிக்கர் பொட்டு வைக்கப்பட்டு நான்சி என்ற பெயரை உச்சரிக்காமல் தாணு என எல்லோரும் கூப்பிடும்படி அறிவுறுத்தப்பட்டது. எனக்கு இவற்றிலெல்லாம் உடன்பாடும் இல்லை ஆட்சேபனையும் இல்லை. ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்தேன். SLR Camera சகிதமாக எங்களை அழகாக போட்டோ எடுக்க ஜெயாவின் கணவர் பாபா தயாராக இருந்ததால் ஓடி ஓடி போஸ் கொடுத்துக் கொண்டோம்.


புவனேஷ்வரிலிருந்து பூரி செல்லும் வழியில் அமைந்துள்ள இடங்களைப் பார்த்துவிட்டு இரவு தங்குவதற்குப் பூரி செல்ல வேண்டும். அடுத்ததாக சென்ற இடம் வரலாற்று சிறப்பு வாய்ந்த தெளலி மலை. கலிங்கத்து போரில் வெற்றி வாகை சூடிய சக்க்ரவர்த்தி  அசோகர் மனம் திரும்பி பெளத்த மதத்தைத் தழுவிய இடம். அதைப் பறை சாற்றும் விதமாக அசோகரின் கல்வெட்டு அந்த மலையில் அமைந்திருக்கிறது. பாறையைப் பிளந்துகொண்டு யானை முகம் வெளிவருவதுபோன்ற சிற்பத்தின் அடியில் பிராகிருத மொழியில் செதுக்கப்பட்ட கல்வெட்டு சரித்திர சான்றாக நிற்கிறது. யானை முகத்தை சுற்றி நின்று க்ரூப் போட்டோ எடுத்துக் கொண்டோம். நல்ல வேளையாகக் கலிங்கத்துப் போரின் கூக்குரல்கள் காதில் ஒலிப்பது போல் தோன்றவில்லை. அதை ஒட்டிய பகுதிகளில் சமாதானத்தைப் பறைசாற்றும் விதமாக சாந்தி ஸ்தூபி, அசோக ஸ்தம்பம்,புத்த விஹாரங்கள் என அமைதியான சூழல் உலவுகிறது. மறு புறம் கலிங்கத்துப் போரில் இரத்த ஆறாக ஓடிய தயா நதி இதுதானா என ஆச்சரியப்படும் விதமாக அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. மலை உச்சியில் அமைந்துள்ள இந்த இடங்களைப் பார்வையிட பார்க்கிங் இடதிலிருந்து குறைந்த  வாடகைக்கு ஆட்டோ  கிடைக்கிறது. 


பக்தியும் சரித்திரமும் படுத்திய பாட்டில் நேராக மதிய உணவில் பாய்ந்துவிட்டோம். உண்ட மயக்கம் தீரும் முன்பே பிபிலி என்ற கிராமத்திற்கு சென்றோம். அப்ளிக் கைவினைப் பொருட்கள் செய்வதில் பிரசித்தி பெற்ற இடம். பெரிய துணியில் பல வண்ணங்களில் சிறு சிறு துணிகளும் கண்ணாடிகளும் பதித்து பைகள்,சேலை,சுடிதார், விளக்கு என பலதரப்பட்ட பொருள்கள் செய்கிறார்கள். பொருட்காட்சிகளில் அப்பொருட்களுக்கு ஒட்டப்படும் விலையுடன் அங்கு சொல்லப்பட்ட விலையை ஒப்பிட்டுப் பார்த்தால், உழைக்கும் மக்கள் சுரண்டப்பட்டு இடைத் தரகர்கள் செழிப்பது நன்கு புரிந்தது. சுற்றுலா செல்லும்போது ஷாப்பிங் போகக்கூடாது என முடிவெடுத்து இருந்ததையும் மீறி நிறைய பொருட்கள் வாங்கினேன். 


ஒடிஸாவின் பாரம்பரிய நடனத்தை கிராம அளவில் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க பூரிக்குக் கொஞ்சம் முன்னதாக ஒரு வீடு போன்ற இடத்தில் கைடு ஏற்பாடு செய்திருந்தார். வேன் போகமுடியாத இடைஞ்சல் நிறைந்த சந்துக்குள் போய் இருட்டடித்த குறுகலான படிகளில் ஏறி வெராண்டா போன்ற இடத்தில் அமர வைத்த போது எல்லோரும் சேர்ந்து என்னை உதைக்கப் போறாங்கன்னு கொஞ்சம் கிலியாகத்தான் இருந்தது. ஆனால் ஆட்டம் ஆரம்பித்ததும் எல்லோருமே மெய் மறந்து போனோம்.முன் காலத்தில் பெண்களை நாட்டியம் ஆட விடமாட்டார்களாம்.அதனால் ஆண்கள்தான் பெண் வேடமிட்டு ஆடுவார்களாம். அதை இன்னும் கிராமங்களில் கடைப் பிடிக்கிறார்கள். 4 முதல் 12 வயதுவரையுள்ள ஆண் குழம்தைகள் ஆடுகிறார்கள். எங்கள் முன் ஆடிய க்ரூப்பில் ஒருவரைக் கூட எங்களால் ஆண்பிள்ளையாகப் பார்க்க முடியவில்லை, அத்தனை நளினமும் பாவனைகளும். உடல் வளைவும் நெளிவும் அபாரம். 14 வயதுக்குப் பிறகு நடன ஆசிரியர்கள் ஆகி விடுகிறார்கள் .பொருளாதார முன்னேற்றமில்லாத அவர்களின் வாழ்க்கைச் சூழல் எங்களைக் கலங்க வைத்ததும் உண்மை. பூரியில் Navy யின் கண்காட்சி நடந்து கொண்டிருந்ததால் வண்டி நிறுத்துவதில் குழப்பம் ஏற்பட்டு ஹோட்டலுக்காக கொஞ்ச தூரம் நடக்க வேண்டியிருந்தது. மறுநாள் காலை பூரி ஜெகனாதர் ஆலயத்திற்குப் போக வேண்டியிருந்ததால் எல்லோரும் சீக்கிரம் தூங்கிவிட்டோம்.


பிரசித்தி பெற்ற பூரி ஜெகனாதர் ஆலய தரிசனத்துக்கு அதிகாலையிலேயே போய் க்யூவில் நின்று கூட்டத்தில் இடி பட்டு மூச்சு வாங்கி ஒரு வழியாக தரிசனம் முடிந்தது. சரசக்கா கூட்டத்தில் மாட்டி கீழே விழுவதுபோல் ஆனபோது செக்கண்ணனும் முத்துராமனும் ஓடிப்போய் பாதுகாத்து விட்டார்கள். நாங்கள் திரும்பி வரும்போது பார்த்தால் கூட்டமும் இல்லை நெரிசலும் இல்லை. அதிகாலை பூஜை பார்க்கணும் என்று யரோ சொன்னதைக் கேட்டதால் சிக்கிரமே வந்தது எங்க தப்பு.ஆனாலும் எங்க ப்ரோகிராம் tightஆக இருந்ததால் காலையில் போனதே நல்லதுன்னு நெனைச்சுகிட்டோம். அடுத்தடுத்து அநுமார் கோவில், காளி கோவில் எல்லாம் பார்த்துட்டு கோனார்க் போயிட்டோம்.மணல் சிற்ப கண்காட்சி ஆரம்பமாகவில்லை. அதனால் கோனார்க் சூரிய பகவான் கோவிலை சுற்றிப் பார்த்தோம். கல்லில் கட்டப்பட்ட தேர் வடிவ கோவில். மிக நுட்பமாக் செதுக்கப்பட்ட கடவுள்கள், நடன மங்கையர், விலங்குகள்,பாலியல் விளையாட்டுகளைக் காட்டும் சிற்பங்கள் அனைத்தும் உண்டு.சூரிய பகவானை சிருஷ்டி தேவனாக பாவித்து பாலியல் சிற்பங்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. 12 ஜோடி பிரம்மாண்டமான சக்கரங்களும் எட்டு குதிரைகளும் தேரை இழுப்பதுபோல் அமைக்கப் பட்டுள்ளது. சக்கரங்கள் 12 மாதங்களைக் குறிக்கின்றன. சக்கரத்தின் உள் பக்கம் எட்டு spokesகளுடன் நாள் கணக்கு சொல்கிறது. “கல்லின் மொழி மனிதனின் மொழியைத் தாண்டிச் செல்கிறது”என இரவீந்திரநாத் தாகூரால் பாராட்டப் பெற்ற கோவில்.இந்த சக்கரம் புதிய பத்து ரூபாய் தாளில் அச்சிடப்பட்டுள்ளது.கோவிலின் பல பகுதிகள் இடிந்துவிட்டாலும்  கோவில் இன்றும் மிடுக்குடன் நிமிர்ந்து நிற்கிறது.


வருடம் தோறும் டிசம்பர் 1-5 தேதிக்ச்ளில் நடைபெறும் மணல் சிற்பங்களின் கண்காட்சி மாலை 4 மணிக்கு ஆரம்பித்தார்கள். முதல் ஆட்களாக உள்ளே நுழைந்து இருள் கவியும் வரை திகட்டத் திகட்ட பார்த்து ரசித்தோம். கண்முன்னே மணல் குவியலாக இருந்தது கண் மூக்கு வாய் என உருவானதும் மலை குகை என்று செதுக்கப்பட்டதும் பாம்பாகவும் சிங்கமாகவும் சீறிப் பாய்ந்ததும் வார்த்தையில் விளக்க முடியாத மாயாஜாலம். டூர் ஏற்பாடு செய்ததன் முழுப் பயனையும் அடைந்தோம். இரவு கவிழ்ந்ததும் கோனார்க் கோவிலின் பின்னணியில் நடந்த நடனவிழா முத்தாய்ப்பாகக் கண்களுக்கு விருந்தாகியது. 


மறுநாள் சிலிக்கா ஏரி போகும்போது பஸ்ஸில் நடத்திய (Dumb-Sharads) “ஊமை வேடங்கள்” எல்லாரையும் ஆடவும் பாடவும் அபிநயம் பிடிக்கவும் வைத்தன. “ஒவ்வொரு பூக்களுமே” பாடலை சரசக்கா சுருதி பிசகாமல் அற்புதமாகப் பாடி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றாள். 74 வயதில் அப்படிப் பாடுவது பெரிய விஷயம்.ஏரியில் பறவைகளூக்கு கார்ன் ப்ளேக்ஸ் போட்டு டால்பின் குதிப்பதைப் பார்த்து டைட்டானிக் ரேஞ்சுக்கு புகைப்படங்கள் எடுத்து ரசித்தாலும் அங்கே நடந்த பாட்டுக் கச்சேரிதான் ரொம்ப சூப்பர். எல்லோரையும் பாட வைத்த பாபா சார்தான் எங்கள் க்ரூப்பின் விழா மாஸ்டர். நந்தன்கனன் மிருகக் காட்சி சாலையையும் விட்டு வைக்கலை,எட்டிப் பார்த்துட்டோம். Safari van இருக்குன்னு சொன்னதால்தான் போகவே செஞ்சோம். வெள்ளை புலி, உள்ளங்கை அளவில் வித விதமான குரங்குகள் எல்லாம் நல்லாவே இருந்துச்சு. செயற்கையாக உருவாக்கப்பட்ட Zoo என்றாலும் பார்க்க நன்றாகவே இருந்தது.


பார்த்தவை ஏராளம் என்றாலும் பகிர்ந்தவை மிக சொற்பம். ஒரிஸாவை தீர்த்த யாத்திரை ஆக்காமல் சிறந்த சுற்றுலாவாக மாற்றிய க்ரூப் மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அலை அலை-8

 அலை அலை-8

ஒடிஸாவுக்கு ஓடிவா!
முருகர் உலகமெல்லாம் மயில் ஏறி சுற்றி வந்தாலும் அப்பா அம்மாவைச் சுற்றிய விநாயகருக்குத்தான் பழம் கிடைத்தது. அது போலத்தான் உலகமெல்லாம் வெவ்வேறு இடங்களுக்குப் பயணம் செய்திருந்தாலும் குடும்பத்துடன் ஒடிஸா சென்று வந்தது வித்தியாசமான அநுபவம், மனம்நிறை நினைவுகள். 20 வருடங்களுக்கு முன் 60 பேர் கொண்ட கும்பலாக குடும்ப சுற்றுலா ஊட்டிக்கு சென்று வந்தது பின்பக்கத்தின் பளீரொளி(FLASK-BACK)யாக நினைவு வந்தது. இந்த முறை வித்தியாசமாக நீண்ட புகைவண்டிப் பயணம் செல்லலாம் என யோசித்தபோது நயினார் அண்ணன் கூட்டிச் சென்ற சிக்கிம் , டார்ஜிலிங் பயண நினைவுகள் அதை ஊக்கப்படுத்தியது.
முன்பு இதேபோல் யோசித்து ஹைதராபாத் போகலாம் என்று முயற்சி செய்தபோது கொரோனா சதி செய்து முட்டுக்கட்டை போட்டு விட்டது.டெல்லி,ஆக்ரா நிறையபேர் பார்த்திருப்பாங்க. அதனால் ஒடிஸா போகலாம்னு முடிவு பண்ணினேன். ஆனால் எங்கெங்கு காணினும் கோவில்களே தெரிந்தது. தீர்த்த யாத்திரை மாதிரி ஆகிவிடுமோன்னு கொஞ்சம் தயக்கமாக இருந்தது.
டிசம்பர் 1-5 ஆம் தேதிகளில் மணல் சிற்பங்களின் கண்காட்சி (International Sand-Art Festival) மற்றும் கோனார்க் டான்ஸ் Festival நடைபெறுவது வழக்கம் என தெரிந்தது. அத்துடன் பூரி ஜெகனாதர் கோவில், கோனார்க் சூரிய பகவான் கோவில் எல்லாம் மிகச் சிறப்பு வாய்ந்த இடங்களாகவும் தெரிந்தது. எப்பவும் போலவே GT Holidays இல் பேசி எடுத்து மிகக் குறைந்த package இல் (Chennai to chennai all inclusive 21000/-) FIX பண்ணி குடும்பம் க்ரூப்பில் இதைப் பற்றி பேச ஆரம்பித்ததுமே சரசு அக்கா, சிவகாமிநாதன் அண்ணன், நயினார் அண்ணன், தம்பி நானா என நாங்கள் ஐவரும் சேர்ந்துவிட்டோம். பெரியண்ணனின் மகன் முத்துராமன், மருமகன் முருகன், சோம்ஸ் அங்கிள் ,நானாவின் சம்பந்தி பாலு,விஜி என 15 பேர் ரெடியாகிவிட்டோம். தற்செயலாக வகுப்புத் தோழர் ஆண்ட்ரூ வீட்டு கல்யாணத்தில் இதைப் பற்றிப் பேசும்போது இன்னும் கொஞ்சம் பேர் இணைந்து 25 பேர் கொண்ட க்ரூப்பாக மாறிவிட்டது. புகைவண்டியின் முன் பதிவு மூன்று மாதங்களுக்கு முன்பே செய்ய வேண்டியிருந்ததால் அனைவருக்கும் ஆகஸ்ட்டு மாதத்திலேயே பதிவு பண்ணியாச்சு. வர முடியாதவர்களுக்கு பின்னாடி கேன்சல் பண்ணிக் கொள்ளலாம் என்று ஏற்பாடு.
பிரயாணம் கிளம்பும் வரைக்குமே ஒரே நெகடிவ் கருத்துகள்தான். ஒடிஸாவில் அந்த சமயத்தில்தான் புயல் சூறாவளி எல்லாம் வரும், ”அன்பே சிவம்” படம் மாதிரி ரயில்வே ஸ்டேஷன் மிதக்கப் போகுது, பேருந்து கூரைமேல்தான் ஏறி வரணும் எண்று ஏக விமரிசனங்கள். சரசக்கா (74 வயது) வேறே ஏற்கனவே ஆஸ்த்துமா நோயாளி , சரிப்பட்டு வராது வேறு மாசத்தில் போகலாம்னு சிலர்; 20 மணிநேரத்துக்கும் அதிகமான ரயில் பயணம் உடம்பு தாங்காது விமானத்தில் போகலாம்னு இன்னும் சிலர்; ஒரே கோயிலா பார்க்கணும்னா கும்பகோணம் போனால் போதுமே எதுக்கு இவ்ளோ தூரம் போகணும்னு சிலர்; இப்படி ஏகப்பட்ட கருத்துக்கள். ஆனாலும் நான் பிடிவாதமாக இருந்துவிட்டேன். டிசம்பரில்தான் மணல் சிற்பங்கள் கண்காட்சி ஆண்டுதோறும் நடக்கிறது,புயல் வரும் என்றால் தொடர்ந்து நடத்துவாங்களா?அக்காவுக்கு தொந்தரவு வராதவாறு மருத்துவ உதவிகள் செய்து கொள்ளலாம், க்ரூப்பில் ஆறுக்கும் மேற் பட்ட மருத்துவர்கள் உண்டு;ரயில் பயணத்தின் சந்தோஷத்தை அநுபவிக்கத்தான் இந்தப் பயணமே என்று தகுந்த விளக்கங்கள் சொல்லி எல்லோரையும் சமாதானப் படுத்திவிட்டேன்.
ஒருவழியாகக் கிளம்பவேண்டிய நாளும் வந்தது. நவம்பர் 29ஆம் தேதி காலை பத்து மணிக்கு சென்னையிலிருந்து ரயில் ஏற வேண்டும். எல்லோரும் பயங்காட்டிய மாதிரியே பெங்கல் புயல் வீசட்டுமா வேண்டாமா என்று கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது. வெளியே வீறாப்பு பேசினாலும் உள்ளே கொஞ்சம் உதறல்தான்.Dr.Jeya& Dr. Kandhabhabha கோவையிலிருந்தும் நான், Dr.சோம்ஸ்,பிரபா ஈரோட்டிலிருந்தும் ஒரே ரயிலில் சென்னை வந்துவிட்டோம். மார்த்தாண்டத்தில் இருந்து Dr.Saliteeswaran& Dr.jeyanthi , பழனியிலிருந்து Dr.Hemaltha & வக்கீல் நீதிசெல்வன் சார் எல்லோரும் முந்தினநாளே சென்னையில் மகன்,மகள் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். பெரிய கும்பல் தூத்துக்குடியில் இருந்து வரணும், காலை 7.30க்குத்தான் கனெக்க்ஷன் ட்ரெயின் வந்து சேரும். மழையினால் தாமதமாகிவிட்டால் எல்லாம் சொதப்பல் ஆகிவிடும். ஏழு மணி சுமாருக்கு தாம்பரம் தாண்டிவிட்டோம் என முத்துராமன் சொன்னதும் தான் நிம்மதியாச்சு. ஏற்கனவே
பிரயாணத்திற்கான முன்னேற்பாடுகளெல்லாம் ஒழுங்கு படுத்தப்பட்டு ஒவ்வொருவருக்கும் பொறுப்புகள் கொடுத்திருந்தோம். பயண இடைவேளை சில மணி நேரங்களே என்பதால் வெளியில் ஹோட்டல் எதுவும் ஏற்பாடு செய்யவில்லை. செண்ட்ரல் ஸ்டேஷன் இல் இருந்த IRCTC யின் A/C retiring Hall ரொம்ப வசதியாக இருந்தது. ஒரு மணி நேரத்துக்கு 35 ரூபாய்கள் மட்டுமே கட்டணம். கழிவறை, குளியல் அறைகள், வசதியான இருக்கைகள் என எதிர் பார்த்ததைவிட செளகரியமாகவே இருந்தது.அங்கேயே வீட்டு உணவு சாப்பிடவும் அனுமதித்தார்கள். GT Holidays Van ஒழுங்கு பண்ணியிருந்ததால் எக்மோரில் இருந்து தூத்துக்குடி க்ரூப்பும் நேரத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். பெங்கல் புயல் கூட எங்கள் கூட்டத்தைப் பார்த்து வலுவிழந்துவிட்டதாகச் சொன்னார்கள்.காலை உணவு தம்பி நாராயணன் ஏற்பாடு செய்து கொண்டு வந்திருந்தான். இட்லி ,சட்னி ,சாம்பார் என நளபாகம்தான். அவன் மனைவி கடைசி நேரத்தில் வர முடியாவிட்டாலும் எனக்கு மட்டும் என்று ஆறுமுகநேரி லைன் சட்னி கூட செய்து அனுப்பியிருந்தாள். சரசக்கா மருமகள் பருப்புவடை செய்து வழியனுப்ப வந்திருந்தாள். நண்பர் சால்ட்(சாலிட்டீஸ்வரன்) மருமகளுக்கு பிறந்தநாள் என அருமையான கேக் பொட்டணங்கள் வேறு வந்திருந்தது. ஆரம்பமே அட்டகாசம்தான். நயினார் அண்ணன் வர முடியாதது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. பானு, லோகா, விஜி, இந்திரா எல்லாம் தவிர்க்க முடியாத காரணங்களால் வரவில்லை. முடிவாக 20 பேர் கொண்ட சிறப்புக் குழு புவனேஸ்வர் நோக்கி செல்ல ரயில் ஏறினோம்.
ரயில் பயணங்கள் எப்போதுமே அலாதியானவை.மொத்த கூட்டமுமே இரண்டுமூணு பகுதிகளுக்குள் அடங்கிவிட்டது. முன்னேற்பாடாக ஆண்கள் அனைவரும் ஒரு பகுதி,பெண்கள் அடுத்த பகுதி,தம்பதியர்கள் கொஞ்சம் ஒதுங்கியமாதிரி என வறையறுத்துக் கொண்டோம். வண்டி கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே பெண்கள் குழாமின் அரட்டை கச்சேரி ஆரம்பமாகிவிட்டது. நாங்களும் உங்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என ஆண்கள் சீட்டுக் கச்சேரி ஆரம்பித்து விட்டார்கள்.சூட்கேஸ்கள் மேஜை மாதிரி அடுக்கப்பட்டு club-house rangeக்கு த்டபுடலாக ஆரமிச்சுட்டாங்க. ஏற்கனவே எட்டுபேர் இருந்ததால் நான் நைசாக கழண்டுபோய் வகுப்புத்தோழர்களுடன் “பிரண்டை” துவையல் செய்ய போய்விட்டேன். இன்னுமோரு சீட்டு கட்டு இருந்ததால் நாங்களும் ஒரு சீட்டு கச்சேரி ஆரம்பிச்சுட்டோம் . விஜி, அவங்க அத்தான்,ஜெயா,சால்ட், நான் என சூப்பர் க்ரூப் .ஊரிலிருந்து சரசக்கா கொண்டு வந்திருந்த பலகாரங்கள் கேக் என சிற்றுண்டி நொறுக்கல்களுடன் மதிய உணவு வரை நேரம் போனதே தெரியவில்லை. மதியத்திற்கும் புளிசாதம் தயிர்சாதம் என பொட்டலங்கள் துவையல் ஜோடி சேர்ந்து நளபாகம்தான். மதியம் எல்லோரும் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என முடிவுசெய்து செம தூக்கம். எழுந்த பிறகும் Non-stop கொண்டாட்டமாக அதே அரட்டை,சீட்டுக் கச்சேரி,கடலை போடுவது என நேரம் பறந்ததே தெரியாமல் இரவு உணவு வேளை வந்துவிட்டது. நானாவின் கச்சிதமான ஏற்பாட்டால் இரவுக்கும் பொடி இட்லி, சப்பாத்தி ,தக்காளி தொக்கு என விருந்துண்ணல்தான். உண்ட மயக்கத்தில் தொந்தரவே இல்லாத நிம்மதியான உறக்கம். விடிந்து பார்த்தால் 23மணிநேரப் பயணம் சட்டென்று முடிந்ததுபோல் புவனேஸ்வர் வந்துவிட்டது.

அலை அலை-7

 அலை அலை-7

“மஸாய் மாரா” -கென்யா
பகுதி -1
ஆடுன காலும் பாடின வாயும் நிக்காதுன்னு சொல்லுவாங்க. அதுமாதிரிதான் ஊர் சுத்துற காலும் ஓரிடத்தில் நிக்காது. இடையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் சில காலம் ஓய்வில் இருந்ததால் ஊர் சுற்றுவது கொஞ்சம் குறைந்திருந்தது. ஆனாலும் ஆடி பிறந்ததுமே ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது. ப்ராக்டீஸ் கொஞ்சம் மந்தமாக இருக்கும் ஆடியில்தான் பெரிய டூர் கிளம்புவோம். இந்த முறை அட்டகாசமான ஆப்பிரிக்கா பயணம்.நெடுநாள் கனவாக இருந்த கென்யா சஃபாரி என்ற மறக்க முடியாத பயணம். தான்சானியா நாட்டிலிருந்து தண்ணீர் தேவைக்காக கென்யாவின் மஸாய் மாரா காட்டிற்கு மில்லியன் கணக்கில் விலங்குகள் இடம் பெயரும் கண்கொள்ளா காட்சிகள். ஆப்பிரிக்கா கண்டத்தின் சிறப்பு வாய்ந்த நிகழ்வு இது . காட்டின் நுழைவு பீஸ், தங்குமிடம், பயணச் செலவு எல்லாமே கொஞ்சம் அதிகமாக இருந்ததால் பெரிய க்ரூப் சேர்க்கவில்லை. நான், எழில்,மகள்,மருமகன் , சம்பந்திகள் என சிக் என்று சிக்ஸ் பேக்ஸ் கிளம்பிட்டோம்.
பெங்களூருவிலிருந்து கிளம்பி கென்யா தலைநகரான நைரோபியில் இறங்கி காட்டுக்கு நடுவில் இருந்த மாரா புஷ் கேம்ப் நோக்கி பயணித்தோம். போகும் வழியில் கொஞ்ச நேரம் கண்ணை மூடிவிட்டு திறந்தால் ஒரே குழப்பம். மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் பயணித்துக் கொண்டு இருப்பது போலவே இருந்தது. மரங்கள், புதர்கள், செடிகள், தட்ப வெப்பம் எல்லாமே நம்ம ஊர் மாதிரியே இருந்துச்சு. எப்பவும் போல் GT Holidays மூலம்தான் பதிவு செய்திருந்தோம். ஆனாலும் முக்கிய தங்கும் விடுதிகள், ப்ளான் எல்லாம் மகள் அலீஸ்தான் முடிவு செய்தாள். காட்டிற்குள் நடுநாயகமான காட்டு விடுதியில் தங்குறமாதிரி புக் பண்ணினாள். கொஞ்சம் காசு அதிகம்தான் என்றாலும் வித்தியாசமான தங்கும் இடம். விடுதியில் வந்து இறங்கியதும் ஆட்டம் பாட்டத்துடன் பழங்குடியினரின் வரவேற்பு அற்புதமாக இருந்தது. இசை வல்லுனரான எழிலுக்கு FOUR-PARTS இல் அவர்கள் பாடியதைக் கேட்டதும் புளகாங்கிதமாகி அவர்களுடன் நடனமாடத் துவங்கிவிட்டார்கள்.
ஒரு பொதுவான உணவருந்தும் இடத்தைச் சுற்றி தற்காலிகமான கூடாரங்கள் டைப்பில் தங்கும் இடங்கள் இருந்தன. ஆரவாரமான சத்தங்களோ காதைக் கிழிக்கும் பாட்டு சத்தமோ இல்லாமல் இயற்கையான சத்தங்களுடன் அமைதியாகவும் கொஞ்சம் அமாநுஷ்யமாகவும் இருந்தது. ஆனால் மனதுக்குப் பிடித்த விதமாக இருந்தது. கூடாரங்கள் எல்லாம் யானை ஓங்கி மிதிச்சா சட்னியாகிவிடும் போல் தார்பாலின் துணிகளால் ஆனது. ஆனால் மூன்று நட்சத்திர ஹோட்டல் போல் எல்லா வசதிகளும் உள்ளேயே செய்திருந்தார்கள். விடுதியின் வரவேற்பறையில் இருந்து கூடாரத்திற்குக்கூட பாதுகாவலர்கள் துணையுடன் தான் செல்ல வேண்டும். அங்குள்ள பழங்குடியினர்கள்தான் பாதுகாவலர்கள். ஈட்டி, கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்கள் எப்போதும் கையில் வைத்திருப்பார்கள். உள்ளே போய்விட்டால் அவர்களது துணையின்றி அடுத்த கூடரத்துக்குக் கூட செல்ல முடியாது. ஏனென்றால் சுற்றுச் சுவரோ வேலியோ கிடையாது. கதவைத் திறந்தால் நேரடியாகக் காடுதான். பகலெல்லாம் சோலார் மின்சக்தி, இரவில் 10 மணிவரை ஜெனரேட்டர் மூலம் மின்வசதி. ஏற்கனவே லே லடாக்கில் இதே மாதிரி அநுபவம் இருந்ததால் பயமாக இல்லை. மின்விளக்கு, மின் விசிறி, ஏர்-கண்டிஷன் இல்லாமலும் வாழ முடியும் என்பதை நினைவு படுத்திக் கொள்ளவாவது இது போன்ற பயணங்கள் அவசியம்.
பிரத்தியேகமான விறகு அடுப்பில் சுடுதண்ணீர் கொதித்துக் கொண்டே இருக்கிறது. குழாய்கள் மூலம் எல்லா கூடாரங்களுக்கும் விநியோகம் ஆகிறது. அதிகாலை நாலு மணிக்குக் கிளம்பினாலும் சுடச்சுட காஃபி , டீ எல்லாம் தயாராகவே இருக்கும். சாப்பாடும் நம்ம நாக்குக்கு உகந்த மாதிரி இருந்துச்சு. மசாலா சுவைகூட கொஞ்சம் நம்ம பக்கத்து பக்குவம் போலவே இருந்துச்சு. பாசுமதி அரிசி சாதம்தான் அடிப்படை உணவு. அசைவம் சாப்பிடுபவர்களுக்கு மீன், மட்டன்,மாடு, பன்றி ,முட்டை என சகல ரகங்களும் உண்டு. மருமகனும் சம்மந்தியும் சுத்த சைவம் என்பதால் அங்குள்ள சமையல்காரர்கள் கேட்டு கேட்டு அவங்களுக்கு ஏற்ற மாதிரியும் செய்து கொடுத்தார்கள். அங்கு சாப்பிட்ட சிக்கன் சமோசா மாதிரி வேறெங்கும் சாப்பிட்டதில்லை. கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டாலும் சுடச் சுட பரிமாறுவதில் கவனமாக இருந்தார்கள். பெரிய ஹோட்டல் மாதிரி பலதரப்பட்ட உணவுகள் கிடையாது. ஆனால் சிம்ப்பிளாகவும் சுவையாகவும் இருந்தது.
கென்யாவில் மட்டுமே நிறைய தேசிய விலங்கு பூங்காக்கள் இருக்கின்றன. சுற்றுலா அழைத்து செல்பவர்கள் ரெண்டு மூணு பூங்காக்களுக்கு அழைத்து செல்வார்கள். இடைப்பட்ட தூரம் கடக்கக் குறைந்தது ஆறுமணி நேரப் பயணம் செல்ல வேண்டும். ஆனால் எல்லா இடத்திலும் அதே விலங்குகள்தான். அதனால் நாங்கள் ஒரே பூங்காவில் தங்கி சஃபாரி செல்லும் பயண எண்ணிக்கைகளை அதிகரித்துக் கொண்டோம். அதனால் எல்லா திசைகளையும் சல்லடை போட முடிந்தது. Packing, un-packing போன்ற பிரச்னைகள் இல்லாமல் ஜாலியாகவும் சுற்ற முடிந்தது. அதிகாலையில் ஆரம்பித்தால் மதியம் வரை ஒரு ட்ரிப். சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து அடுத்த பிரயாணம் ஆரம்பித்தால் இருள் சூழும் வரை போய்க்கொண்டே இருப்போம். அதிகாலையும் பொழுது சாயும் வேளையும் மிக அரிதான விலங்குகள் பார்க்க முடியும்.
முதல்நாள் மதிய சாப்பாட்டிற்குதான் போய்ச் சேர்ந்தோம். கொஞ்ச நேரம் இளைப்பாறியதும் முதல் ரவுண்டு போகலாம் என்று சொன்னார்கள். ஆலீஸ் முன்யோசனையுடன் பெங்களூரிலிருந்தே நான்கு பைனாகுலர்கள் குறைந்த வாடகைக்கு எடுத்து வந்திருந்தாள்.நாங்களும் நண்பர்களிடமிருந்து இரண்டு பைனாகுலர் வாங்கி வந்திருந்தோம். கொழுந்தன் வேறே அமெரிக்காவிலிருந்து ஸ்பெஷல் பரிசாக SLR Camera கொடுத்து அனுப்பியிருந்தான். மகள் அறிவுரைப்படி குளிர் கண்ணாடி, தொப்பி எல்லாம் போட்டுக்கொண்டு முதல் சவாரிக்காக விடுதி வாசலுக்கு வந்தோம். நம்ம ஊர் டிரெக்கர் ஜீப் மாதிரி ஒரு வண்டி நின்னுச்சு. அதில்தான் போகணும்னு சொன்னப்போ எதிர் பார்ப்பெல்லாம் அடங்கி புஸ் வாணமாயிடுச்சு. நாலு சக்கரமும் ஏழெட்டு சீட்டும் ஒரு கூரையும்தான் இருந்துச்சு. பாதுகாப்புக்கான ஜன்னலோ கம்பிகளோ எதுவுமே இல்லை. சிங்கம் வந்தால் ஜம்மென்று மடியில் சிங்காசனம் போட்டுக் கொள்ளும் அளவுக்கு தாழ்வாகவும் இருந்தது. ஆனால் அந்த மாதிரி வண்டியில் போனால்தான் விலங்குகளை அருகில் பார்க்கலாம் என ஓட்டுநர் கம் கைடு சொன்னார். மகளும் அப்படியே சொன்னாள். நேர்ந்துவிடப்பட்ட ஆடுகள் மாதிரி எல்லோரும் ஏறி அமர்ந்தோம் ….. திக் திக் என்ற உணர்வோடு………….பயணம் தொடங்கியது.

அலை அலை-6

 அலை அலை-6

“வைனு பாப்பு வான் காணகம்”
பயணம் போகணும்னு ஆரம்பிச்சுட்டா அதற்குரிய முன்னேற்பாடுகள் பக்காவா இருக்கணும். அவசரத்துலே அள்ளித் தெளிச்ச மாதிரி கிளம்பினால் சூடு பட்டுகிட்டுத்தான் திரும்பணும். பார்த்துப் பார்த்து எடுத்து வச்சாலும் கடைசியிலே ஏதாவது முக்கியமான ஒண்ணு மறந்து வச்சிட்டுதான் போயிருப்போம். பள்ளி , கல்லூரிகளில் டூர் போகும்போது யாராவது ஏற்பாடு செய்வார்கள், நாம ஜாலியா ஏறி உக்காந்து போயிட்டு வந்திடலாம். எதாச்சும் தடங்கல் ஏற்படும்போது டூர் அமைப்பாளர்களை வைச்சு செய்யுறதோட நம்ம கடமை முடிஞ்சிடும். ஆனால் நாமளே எல்லா ஏற்பாடும் செய்ய ஆரம்பிக்கும்போது முதலில் கொஞ்சம் டென்ஷனாகத்தான் இருக்கும்.
மருத்துவப் படிப்பு முடிஞ்சதும் அண்ணனோட அரவணைப்பில் சென்னைக்கு வந்து செட்டில் ஆனபிறகுதான் ஒழுங்கு படுத்தவும் ஒருங்கிணைக்கவும் கற்றுக் கொண்டேன். நுங்கம்பாக்கத்தின் ராமானுஜம் செட்டி தெருதான் எங்கள் பயணங்களின் முதல் புள்ளி. கிராமத்திலிருந்து சென்னைக்கு வருபவர்களுக்கு ஊரைச் சுற்றிக் காட்டுவதுதான் என்னோட முதல் பயணத்திட்டம். அண்ணா சமாதி, மெரினா பீச், திருவேற்காடு, மாங்காடு, குன்றத்தூர் என திட்டம் போட்டு பல்லவன் பேருந்து பிடித்தே எல்லா இடமும் போயிட்டு வருவோம். சென்னை மாதிரி பொது போக்குவரத்து அமைப்பு எந்த ஊரிலும் இருக்காது. பல்லவனுக்கு இணை பாரினில் கிடையாது. பொழுது விடியும் முன்பு கட்டுசாதம் கட்டிகிட்டு கிளம்பினால் அர்த்த ராத்திரிவரை பயமில்லாத பயணங்கள்.
மஹாபலிபுரம் மாதிரி தூரமா போகணும்னா மட்டும் அண்ணன் வேன் ஏற்பாடு செய்து தருவான். போற வழியில் டைகர் கோவ் என்ற இடத்தில் அமர்ந்து இட்லி சட்னி சாப்பிட்டுவிட்டு போனால்தான் கற்சிற்பங்களின் அழகைக் கவனத்துடன் பார்க்க முடியும். வழியில் கோல்டன் பீச்சில் நுழைவுக் கட்டணம் அதிகம் என்பதால் எல்லா நேரத்திலும் அதனுள் நுழையும் வாய்ப்பு கிடைக்காது. MGM, கிஷ்கிந்தா மாதிரி தீம் பார்க்குகள் எல்லாம் அப்போது ஆரம்பிக்கப் படவில்லை. ஊர் சுத்துறதெல்லாம் கட் ஆகி எனக்கு அரசு வேலை வேலூர் மாவட்டம் (தற்போது வட ஆற்காடு )ஆண்டியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போட்டுவிட்டார்கள். சென்னையிலிருந்து அந்த ஊருக்கு செல்வதே பெரிய டூர் மாதிரிதான். ஜோலார்ப்பேட்டை வரை புகை வண்டியில் போய் அங்கிருந்து பஸ் பிடிச்சு போனால் தப்பிச்சேன். 102B பஸ்ஸில் திருப்பத்தூர் போய் அங்கிருந்து ஆண்டியப்பனூர் போனால் ஒரு நாள் ஆயிடும். 1986இல் பஸ் வசதிகள் குறைவாகவே இருந்தது.
அங்கே நாலு மாசம்தான் இருந்தேன். சரசக்கா கோடை விடுமுறைக்கு அங்கே வந்திருந்தாள். பக்கத்தில் ஜவ்வாது மலையில் காவலூர் என்ற இடத்தில் வான் ஆய்வகம் (observatory) புதிதாகத் திறந்திருப்பதாகச் சொன்னார்கள். பிரதமர் திரு.ராஜீவ் காந்தி அவர்களே வந்து திறந்து வைத்ததாகவும் சொன்னார்கள். அப்படிப்பட்ட இடத்துக்குக் கண்டிப்பாகப் போகணும்னு முடிவெடுத்தாச்சு. ஆனால் அது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ( Reserve forest). அரசுப் பணியின் மேன்மை அப்போதுதான் தெரிந்தது. எங்கள் சீனியர் மருத்துவர் நீதிநேசன் சார் அருமையாக ஏற்பாடு செய்து அங்கிருந்த விருந்தினர் மாளிகையில் தங்கவும் வானோக்கி நிலையத்தை சுற்றிப் பார்க்கவும் அநுமதி பெற்றுவிட்டார். மறக்க முடியாத பயணம்.
ஆ.சு.நி. வண்டியிலேயே போனோம். அப்போதான் அநுமதி சிக்கலில்லாமல் கிடைக்கும் என சார் சொல்லியிருந்தார். உடன் பணியாற்றும் மருந்தாளுநர்கள், செவிலியர் எல்லோரும் சேர்ந்து குழுவாகச் சென்றோம். முதல் posting இல் அரசுப்பணிமேல் வெறுப்பு வராமல் பார்த்துக் கொண்டவர் நீதிநேசன் சார். அவருக்கு “ புன்னகை மன்னன்” எனவும், வண்டி ஓட்டுநருக்கு “அக்கினி மன்னன்” (சிரிக்கவே மாட்டாரு மனுஷன்) எனவும் சரசக்கா நாமகரணம் செய்து வைத்திருந்தாள்.ஆலங்காயத்துக்கு மதியமே போய்ச் சேர்ந்துவிட்டாலும் சாயங்காலம்தான் தொலை நோக்கி கருவியில் பார்க்கணும்னு சொல்லிட்டாங்க.அதனால் நல்லா சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு அந்தி சாயும் நேரத்தில் கிளம்பிப் போனோம்.
டெலெஸ்கோப் என்றால் ஸ்டாண்டில் மாட்டி வைச்சுருப்பாங்க , அது வழியா பார்க்கணும்னுதான் நெனைச்சிருந்தோம். ஆனால் கண்ணுக்கு முன்னாடி பெரிய பூதங்கள் மாதிரி ரெண்டுமூணு கட்டிடங்கள் வித்தியாசமான அமைப்புடன் நின்றிருந்தன. அவைதான் வானோக்கிகள் என்று சொன்னார்கள். அசந்து போயிட்டோம். அந்த பிரமிப்பு சுற்றிப் பார்த்து முடித்துவிட்டு வரும்வரை இருந்தது. அந்தக் கட்டிடத்தின் மேற்கூரையே ஒவ்வொரு கோணத்திலும் திறந்து மூடி வானத்தின் அற்புதங்களைக் காட்டியது. ஒரு 25 பைசா நாணயத்தை 40 கி.மீ.க்கு அப்பால் வைத்தால்கூடத் துல்லியமாகத் தெரியுமாம். விஞ்ஞானி அல்லாத பாமரர்களுக்கு அதன் துல்லியத்தை இந்த விதமாக விளக்கினார்கள். பெளதிகம் எனக்குக் கொஞ்சம் தராறுதான் என்றாலும் அங்கிருந்தவர்கள் விளக்கிச் சொல்லக் கேட்டபோது ஒவ்வொரு கோளும் நட்சத்திரமும் பார்க்கப் பார்க்கப் பிரமிப்பாக இருந்தது. சனி, யூரேனஸ், ஜுபிடர் என ஒவ்வொன்றாக விளக்கினாலும் எதுவும் மண்டையில் ஏறவில்லை. ஆனால் எல்லாவற்றையும் மிக அருகில் பார்த்த பிரமிப்பு மட்டும் இன்னும் நினைவில் இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாகப் பத்து வருடங்களுக்கு முன்பு என் குழந்தைகளுக்கு அந்த அற்புதத்தைக் காட்ட வேண்டுமென்று அழைத்து சென்றேன். ஏலகிரி மலையில் விடுதி எடுத்து தங்கிவிட்டு காவலூர் சென்றோம். சனிக்கிழமை மதியம் ஒரு மணிக்குமேல்தான் அனுமதி உண்டு என்று சொல்லிவிட்டதால் அருகிலேயே இருந்த சின்ன நீர் வீழ்ச்சியில் குளித்துவிட்டு அதன்பிறகு சென்று பார்த்தோம். இப்போது எல்லாமே இணையத்தில் கிடைப்பதால் எனக்குக் கிடைத்த பிரமிப்பு அவர்களுக்கு ஏற்பட்டதா என்று சொல்ல முடியவில்லை. ஆனாலும் ரசித்து பார்த்தார்கள்.Vainu Bappu Observatory என்று அந்த விஞ்ஞானியின் பெயரிலேயே செயல்படுகிறது.
ஜவ்வாது மலைப்பகுதி அந்தக் காலத்தில் நக்ஸலைட்டுகளின் கூடாரமாக இருந்தது. அதனால் இந்த மதிரி அரிய பிரதேசங்கள் வெளியில் தெரியாமலே இருந்தது. தண்டனை மாறுதலில்(Punishment transfer)தான் இந்த இடங்களுக்கு பணிநியமனம் செய்வார்களாம். எப்படியோ நானும் இங்கே வந்து மாட்டிக் கொண்டேன். எனது குவார்டர்ஸ் ரொம்ப பெருசு. சுத்தியும் புதரும் காடும்தான். நடந்து போற பாதையில் சுருட்டைப் பாம்பு என்று சொல்லப்படும் விஷப்பாம்பு சர்வ சாதாரணமா படுத்திருக்கும். எப்படியோ வீட்டிலிருந்து யாராவது SHIFT போட்டு துணைக்கு இருந்தார்கள். சென்னையிலிருந்து அக்கா மகன்,தம்பியின் தோழன் என ஒரு கூட்டம் வந்திருந்தார்கள். மருத்துவமனையின் எதிரிலேயே இருக்கும் பெரிய மலையில் மலையேற்றம் செய்து உச்சியில் போய் சீட்டுக் கட்டு விளையாடினோம்.
அண்ணன் சீக்கிரமே காஞ்சிபுரம் அருகில் பாலுசெட்டி சத்திரத்துக்கு மாறுதல் வாங்கிக் கொடுத்துவிட்டான். மாறுதலில் செல்வதற்குள் எங்க மருத்துவமனையின் எல்லைக்குள் இருந்த ஏலகிரி மலை, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி என்று எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டேன்.எல்லா இடத்துக்கும் அரசு வண்டியில் போய் செம மரியாதையுடன் சுற்றி வந்தேன். இப்போது அவையெல்லாம் சிறந்த சுற்றுலாத் தலங்களாக மாறி இருக்கிறது.
பி.கு.:
காரில் சென்றால் வாணியம்பாடியிலிருந்து ஒரு மணி நேரத்தில் காவலூர் சென்றுவிடலாம். சனிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு அங்கிருப்பதுபோல் சென்றால் இலகுவாக சுற்றிப் பார்க்கலாம்

Wednesday, June 05, 2024

அலை அலை-5

 அலை அலை-5

“போவோமா ஊர்கோலம்”
படிச்சவங்களோ பாமரர்களோ, ஏழையோ பணக்காரனோ, முதலாளியோ தொழிலாளியோ-பயணம் போவது எல்லோருக்குமே பிடித்த ஒன்றுதான். தூரமும் இடமும் ரசனையும் வேறுபடலாம். ஆனால் ஆசை எல்லோருக்கும் பொதுவானதுதான். எனக்கு உலகத்தையே சுற்றி வர ஆசை. என் வீட்டுக்காரருக்கோ ஈரோட்டிலிருந்து வெளியே கிளம்பினால் மூச்சு வாங்கிவிடும். ஈரோட்டின் காவல் தெய்வம் என்று நாங்களெல்லாம் கலாய்ப்பது கூட உண்டு. சித்தோட்டில் இருக்கும் எங்க தோட்டத்திற்குப் போவதுதான் அவங்களுக்கு ரொம்ப பிடிச்ச பிரயாணம். அதைத் தாண்டி வெளியூர் நகர்த்தணும்னா ரொம்ப சிரமம்தான். அதனாலேதான் நான் வெவ்வேறு குழுக்களுடன் இணைந்து அவ்வப்போது ஊர் சுற்றக் கிளம்பிவிடுவேன்.
77 Batchmates உடன் ஒரு டூர், ஈரோடு மகப்பேறு மருத்துவர்கள் குழுவுடன் ஒரு டூர் என வருஷத்துக்கு ரெண்டு பயணம் கண்டிப்பாக உண்டு. அது வட நாடாகவும் இருக்கலாம் அயல்நாடாகவும் இருக்கலாம். அதுபோக குடும்பத்துடன் அவ்வப்போது எட்டிப் பார்க்கும் தூரத்தில் இருக்கும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என வார இறுதிகளில் செல்வது பாயாசத்தில் பனங்கற்கண்டு சேர்ப்பது மாதிரி. அம்மாவீடு,மாமியார் வீடு,மகள்வீடு என குழுமங்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போவதால் அப்பாயிட்மெண்ட் ஒழுங்கு பண்ணுவது tight ஆகத்தான் உள்ளது. காலில் சக்கரம் கட்டிகிட்டு சுத்திகிட்டே இருக்கியே, எப்போதான் வீட்லே இருப்பாய் என கலாய்ப்பவர்களும் உண்டு.
இந்த மாதிரி பிரயாணங்கள் போவது எப்போதிலிருந்து தொடர்கதை ஆச்சுன்னு தெரியலை. ஆனால் பள்ளிப் பருவத்தில் அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலுக்கு பிக்னிக் போனதிலிருந்தே ஆரம்பித்துவிட்டது. மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பிறகு கொஞ்சம் முன்னேறி, ஆ ஊன்னா குற்றாலம் பாபநாசம் போவோம். ரொம்ப அரிதாக திருவனந்தபுரம் ஒருதரமும் பெங்களூரு ஒருதரமும் போனோம்.அவைதான் என்னுடைய நீண்ட பயணங்கள். திருவனந்தபுரம் விமான நிலையத்தின் வெளியே நின்று ஓடுபாதையில் பறந்த விமானத்தை அண்ணாந்து பார்த்தோம். அப்போது வரைக்கும் பேருந்தும் புகைவண்டியும்தான் பழக்கப்பட்ட வாகனங்கள்.
படிப்பு, திருமணம், குடும்பம், குழந்தைகள் என வாழ்க்கைச் சக்கரம் ஓடிக் கொண்டே இருந்தபோது கால்களில் கட்டியிருந்த சக்கரம் உள்ளுக்குள்ளேயே உறங்கிக் கொண்டிருந்தது.
இனிமேல் இதுதான் நம்ம ஊர் என ஈரோட்டில் செட்டில் ஆன பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக ஊர் சுற்றல் ஆரம்பித்தது. காரில் டூர் போக ஆரம்பித்ததே கல்யாணத்துக்கு அப்புறம்தான் , அதுவும் அந்தக்கால அம்பாசிடரில். வருஷத்தில் இரண்டுதரம் கண்டிப்பாக வெளியில் செல்வது என முடிவு செய்து பயணம் செய்ய ஆரம்பித்தோம். ஆடி மாசமும் தைப்பொங்கல் சீசனும் நோயாளிகள் வரவு குறைவாக இருக்கும் என்பதால் அதையே ரெகுலராக கடைப்பிடித்தோம். எழில் Sterling Holidays membership வாங்கியிருந்தது ரொம்ப வசதியாகப் போயிடுச்சு. குழந்தைகள் கொஞ்சம் பெருசாகிறவரை அக்கம் பக்கத்தில் இருந்த மலைகளையும் கோடை வாசஸ்தலங்களையும் பார்த்து முடிக்கவே சரியாகப் போச்சுது. எல்லா ஸ்டெர்லிங் ரிசார்ட்டும் எங்க பேர் சொல்லும் அளவுக்கு தங்கியிருப்போம்.
எழில் தங்கை புனிதா ஹைதராபாத் விமான நிலையத்தில் வேலை பார்த்ததால் அங்கு போனதுதான் முதல் நீண்ட புகைவண்டி பயணம். எழிலின் வேலைப்பளு காரணமாக எங்களுடன் வரமுடியவில்லை. குழந்தைகள் மற்றும் மாமனார் மாமியாருடன் ஒரு ஜாலி ட்ரிப். லும்பினி பார்க்கில் லேசர் விளக்கில் பார்த்த காட்சிகள் மலைப்பாக இருந்தது. அடுத்தடுத்து நயினார் அண்ணன் ஏற்பாடு செய்திருந்த சிக்கிம் , டார்ஜிலிங் பயணம்; புனிதா மாறுதலாகி டெல்லி விமான நிலையம் சென்றதால் முதல் முதல் விமான பயணமாக டெல்லி சென்றது என பயணங்களின் எல்லைகள் விரிவடைந்துகொண்டே போனது. ஆனாலும் இதுவரை ஒருதரம் கூட வெளிநாட்டுப் பயணம் செல்லவில்லையே என்ற குறை இருந்து கொண்டே இருந்தது.
அரசுப் பணியில் இருந்ததால் அது சாத்தியமாவதில் சிக்கல் இருந்தது. அந்த நேரத்தில் அடிக்கடி பணியிடை மாற்றம் செய்து கொண்டே இருந்ததால் கடுப்பாகிஅரசுப் பணியில் இருந்து நீண்ட விடுப்பில் சென்றேன், கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள். அந்த இடைவெளியில்தான் பாஸ்போர்ட் எடுத்து முதல் முதலாக சிங்கப்பூர் சென்றோம். மறக்கமுடியாத முதல் அயல்நாட்டுப் பயணம். மறுபடியும் அரசுப் பணியில் இணைந்ததால் வெளிநாடு பயணங்கள் தடைபட்டது. புனிதா டெல்லியிலேயே இருந்ததால் கிழக்கிலிருந்து மேற்காக இமய மலையின் ஒவ்வொரு மலை வாசஸ்தலத்தையும் பார்த்து மனதைத் தேற்றிக் கொண்டேன். சிம்லா, காஷ்மீர் எல்லாம் மனதைத் தொட்ட பயணங்கள். 2018 இல் பணிநிறைவு பெற்றவுடன் கால்களில் சக்கரம் துடிப்புடன் எழுந்து நிரந்தரமாக ஒட்டிக் கொண்டது.
வானமே எல்லை தூரங்கள் தடைகள் இல்லை என்று பறந்து பறந்து பார்க்கிறேன். பலவித அநுபவங்கள், எண்ணற்ற நிகழ்வுகள்; சந்தோஷங்கள்; பிரச்னைகள் என பயணங்கள் என்னை முழுதாக ஆக்ரமித்துக் கொண்டுவிட்டன. ஒரு இடத்திற்குப் போயிட்டு வரும் முன்பே அடுத்த இடம் எங்கு செல்கிறோம், யாருடன் செல்லப் போகிறோம் என்பதெல்லாம் ப்ளான் பண்ணி அதற்குரிய ஏற்பாடுகளில் இறங்கிவிடுவேன். மூணுமாசம் அமைதியாக உட்கார்ந்து நர்ஸிங் ஹோமைப் பார்த்துக் கொண்டு அடுத்த பயணத்திற்கு தேவைப்படும் தொகையை சேமித்துக் கொள்வேன். வீட்டு செலவுகள், பிள்ளைகள் படிப்பு, திருமணம் எல்லாம் எழில் பார்த்துக் கொள்வதால் என் வருமானத்திலிருந்து பயணங்களுக்கு செலவு செய்வதில் பிரச்னையே இல்லை.
பயணங்கள் செல்வது பொழுது போக்குக்காக மட்டும் அல்ல. பலவித மனிதர்கள், கலாச்சாரம், உணவுப் பழக்கங்கள், இயற்கை சூழல்கள், நவீன தொழில் நுட்பங்கள் என எத்தனையோ விஷயங்கள் நம் பார்வைகளை விசாலப் படுத்துகிறது. மெத்தப் படித்த மருத்துவர் என்று பீலாவாக சுற்றித் திரிந்தாலும் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் படபடக்கும் இதயத்தை மறைக்கத் தெரியாது. ஒவ்வொரு முறை விமானத்தில் பயணிக்கும் போதும் பிரசவத்திற்குக் காத்திருக்கும் கர்ப்பிணிபோல் இறுக்கமாக நுழைந்து வெளியில் வரும்போது அப்பாடா என பெருமூச்சு விடுபவர்கள் ஏராளம். வீட்டில் துரும்பைக் கூட எடுத்துபோடாதவர்கள் தங்கள் உடமைகளைத் தாங்களே தூக்கி கன்வேயரில் போடும்போது முகம் சுழிக்கும் சுவாரஸ்யமான காட்சிகளும் உண்டு. வரிசையில் நிற்பதும், வழி கொடுத்து ஒதுங்கி நிற்பதும், நன்றி சொல்லப் பழகுவதும், குப்பைகளைக் கூடையில் போடுவதும் சாதாரண விஷயங்கள்தான். ஆனால் அன்றாட வாழ்வில் நாம் அடிக்கடி மறந்து போகும் விஷயங்களும்கூட. அதையெல்லாம் சிறு குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பதுபோல் பயணங்கள் நமக்கு போதித்துக் கொண்டே இருக்கும். ஆரோக்கியமாகவும் FIT ஆகவும் நம்மை நாமே செதுக்கிக் கொள்ள பயணங்கள் நல்ல கிரியா ஊக்கி. நாள்பட்ட சர்க்கரை நோய் கூட நடைப் பயணத்தில் கட்டுக்குள் வந்துவிடும். ருசித்து ருசித்து சாப்பிட்டவர்கள் எல்லாம் பசிக்கு சாப்பிடப் பழகிவிடுவார்கள். மிக முக்கியமாக நேர மேலாண்மை (TIME MANAGEMENT) கண்டிப்பாகப் பழகிவிடும். என்னைவிடவும் மிக அதிகமான பயணங்களை மேற்கொண்டவர்கள் கணக்கில் அடங்காமல் இருப்பார்கள்.
ரஷ்யாவின் தலைநகரம் மாஸ்கோ என்று பூகோளத்தில் படித்ததை அந்த ஊரின் சாலையில் நின்று உணரும்போது வரும் புல்லரிப்பு ஆச்சரியப்படுத்தும். இதுபோல் இன்னும் எத்தனையோ உணர்வுகளும் உண்மைகளும் பிரயாணம் செய்ய வேண்டிய அவசியத்தை உணர வைக்கும். இன்னும் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பே இங்கே வந்திருக்க வேண்டும் என்று எண்ண வைத்த இடங்கள் நிறைய உண்டு. நேரமின்மை, பணத்தேவை, அவசியம் என்று தோணாமலிருந்தது போன்ற காரணங்களால் நிறைய பயணங்களைத் தள்ளிப் போட்டிருப்போம். நேரம் பொன் போன்றவர்களுக்கு அதிதுரித விமானங்களும், சாமானியர்களுக்கு பட்ஜெட் புகைவண்டி பேருந்து போன்றவைகளும் ஈசியாக ப்ளான் பண்ண முடியும். நட்சத்திர விடுதிகள் முதல் மாணவர் விடுதிகள் வரை இணையம் மூலமே இலகுவாக முன்பதிவு செய்யும் அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. பயணங்களில் அடுத்து வரும் முக்கியமான சந்தோஷம் நண்பர்களுடன் கதை பேசுவதும் பொரணி பேசுவதும்தான். ஸ்பெஷல் ஐட்டம் பிரண்டைத் துவையல். பழங்கதைகள் பேசுவது எல்லோருக்குமே பிடிக்கிறது என்பதே பயணங்களின்போதுதான் புலப்பட்டது. கல்லூரி நாட்களில் சண்டை போட்டதைக் கூட காமெடியாக எடுத்துக் கொண்டு கலாய்ப்பதும் இலகுவாக இருக்கும்.ஈகோ குறைந்து விட்டுக் கொடுக்கும் பாங்கு அதிகரிப்பது நிதர்சனமாகப் புரியும். மனது விசாலமாகி மறுபடியும் குழந்தைத் தனம் கூடிவிடுகிறது. குறும்புச் சேட்டைகளுக்கும் பஞ்சமிருப்பதில்லை.இப்படி எத்தனையோ நினைக்க நினைக்கத் திகட்டாத அநுபவங்கள். பயணங்கள் மூலம் நான் பெற்ற இன்பத்தை எல்லோருடனும் பகிரும் வண்ணம் கட்டுரைகளாக எழுதலாமா என்று யோசிக்கிறேன். மேலோட்டமாக எழுதினாலே ஒரு நூறு பதிவுகள் தாண்டிவிடும் போலிருக்குது.
என்னோடு சேர்ந்து ஊர் சுற்றலாம் (இல்லை இல்லை)
உலகம் சுற்றலாம், வாங்க!!
Like
Comment
Share

அலை அலை-4

 அலை அலை- 4

“அறுவை மன்னர்கள்’
பொதுவாக இப்படிச் சொன்னால் பேசியே போரடித்து உயிரை வாங்கும் நபர்கள்தான் நம் கண் முன் வருவார்கள். ஆனால் எங்களுக்கெல்லாம் அறுவை மன்னர்கள் என்றால் அறுவை சிகிச்சை செய்வதில் கிங் என்று அர்த்தம். அதிலும் இளங்கலை மருத்துவம் படிக்கும்போது ஒவ்வொருவருக்கும் அமையும் யூனிட் பொறுத்து அவங்கவங்க துறைத் தலைவர்கள்மேல் தேவதா விசுவாசம் இருக்கும். எங்க கல்லூரியில் மொத்தமே நாலு யூனிட் தான் உண்டு MSS, DKP, RH,SR என்று அவர்களின் பெயர்ச் சுருக்கமே யூனிட் பெயராக இருக்கும்.. எனக்கு எல்லா வருஷமும் மூணாவது யூனிட் RH (Dr.R.Hariharan) சார் unit தான். மாணவப் பருவத்தில் மூணுவருஷம், House surgeon பண்ணும்போது ஒருவருஷம் என நான்கு வருஷமும் அங்கேதான் போஸ்ட்டிங்.
MBBS மூன்றாம் வருஷம்தான் க்ளினிகல் சைடில் முதல் வருஷம். என்ன செய்யணும் என்ன படிக்கணும்னு தெரியாமலே கோட் மாட்டிகிட்டு பெரிய டாக்டர் மாதிரி அங்கும் இங்கும் சுத்திகிட்டு இருப்போம். நோயாளிகள் வாயால் டாக்டரம்மா என அன்போடு அழைக்கப்படும் முதல் அநுபவம் அப்போதுதான் கிடைக்கும். ஊசி போட சிரிஞ்ச் எடுத்தால் கை நடுங்குவதும், புண்ணுக்குக் கட்டுப் போடப் போனால் பேண்டேஜ் ரோல் கைநழுவி நழுவி சுற்றிக் கொள்வதும் எங்களுக்கு மட்டுமே தெரியும் தர்ம சங்கடங்கள். ஆனால் நோயாளிகள் முன்னால் மெத்தப் படித்த மேதாவிகள் மாதிரி எக்ஸ்ரேயைத் தூக்கி ஸ்டைலாகப் பார்ப்பது, ஸ்டெத் வைச்சு பரிசோதனை செய்வது எல்லாம் பந்தாவாகச் செய்வோம்.
அப்படிப்பட்ட எங்களுக்கு அறுவை சிகிச்சைப் பிரிவில் போஸ்ட்டிங் போடும்போது எப்படி இருக்கும் என்பது தனித்தனி அநுபவங்கள். புறநோயாளிகள் பிரிவிலேயே பிரச்னை ஆரம்பித்துவிடும். ஆண் பெண் இருபாலரும் உள்ள அறையில் இடுப்புக்குக் கீழ் துணி நீக்கப்பட்ட ஆண் மகனின் வியாதி குறித்து பேராசிரியர் சீரியசாக வகுப்பெடுத்துக் கொண்டிருப்பார். சீனியர்கள் அக்கறையுடன் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பார்கள். மூன்றாம் வருட மாணவர்களை யாரும் கண்டுக்க மாட்டார்கள். அவங்களில் வியப்பாக சிலரும், வெட்கத்துடன் சிலரும், குறும்புப் பார்வையுடன் சிலரும் நெளிந்து கொண்டிருப்பார்கள். நோயாளிகளில் பேதம் பார்க்காமல் நோயை ஆராய்ந்து வைத்தியம் செய்ய வேண்டிய அடிப்படைக் கல்வி அங்கிருந்துதான் ஆரம்பிக்கும். கண்ணால் பார்ப்பது (inspection), கையால் தொட்டு உணர்ந்து பரிசோதிப்பது ( palpation) என விலாவாரியாக பரிசோதிக்கும் போது சில குறும்புக்கார சீனியர்கள் திடீரென்று ஜூனியர்களை பரிசோதனை செய்யச் சொல்லி சிக்கலில் மாட்டிவிட்டு கலாய்ப்பதும் உண்டு.
புறநோயாளிகள் பகுதி முடித்துவிட்டு வார்டுக்குப் போகும்போது கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருக்கும். பேண்டேஜ் சுற்றப்பட்டவர்களும், மூக்கு கைகளில் பிளாஸ்டிக் குழாய் பொருத்தப்பட்டவர்களும், சிறுநீர் வடிகுழாய் பொருத்தப் பட்டவர்களும் படுத்திருப்பதைப் பார்க்கும்போது அந்நிய தேசத்துக்குள் பிரவேசித்தது போல் இருக்கும். பலவிதமான வாசனைகள் மூக்கைப் பதம் பார்த்து நிறைய பேரை வாந்தி எடுக்கவும் வைத்துவிடும். அதனாலெல்லாம் வார்டை விட்டு ஓடிவிட முடியாது. அங்கும் வகுப்புகள் நடக்கும். ஒரே நோயாளியை அக்குவேறு ஆணிவேறாக பரிசோதித்து கலந்துரையாடி நோய் கண்டறிவது அங்குதான். Case presentation பண்ணும் மூத்த மாணவர் நேர்ந்துவிட்ட ஆடு பாணியில் பரிதாபமாகக் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பார். திடீரென வார்டு மிக அமைதியாகிவிட்டால் தலைமை மருத்துவர் வார்டு ரவுண்ட்ஸ் வருகிறார் என்று அர்த்தம்.
எங்கள் சீஃப் டாக்டர். மரு. ஹரிஹரன் அவர்கள் இராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால் முறையான நெறிமுறைகள் யூனிட்டில் கனகச்சிதமாகப் பின்பற்றப்படும். உதவி பேராசிரியர்கள், சீனியர்கள் எல்லாம் கர்ம சிரத்தையுடன் அவர் பின்னே செல்லும் போது ஊர்வலம் மாதிரி இருக்கும். மூன்றாம் ஆண்டு அரை டிக்கெட்டுகள் நாங்களும் பின்னாடியே போவோம். ஒண்ணும் புரியாது, அவர் பேசுறது எதுவும் காதில் கேட்காது. ஆனாலும் அப்படி கிராண்ட் ரவுண்ட்ஸ் போவது மிகப் பெருமையாக இருக்கும் .ஒவ்வொரு நோயாளியின் முன்னேற்றம், பிரச்னைகள் எல்லாம் கேட்டு அதற்குரிய தீர்வுகளை மின்னல் வேகத்தில் சொல்லிக் கொண்டே செல்வார். பயிற்சி மருத்துவர் பின்னாடியே குறிப்பெடுத்துக் கொண்டு ஓடுவார்.
ஆண்கள் வார்டு, பெண்கள் வார்டு, ஆப்பரேஷன் வார்டு, தீக்காயங்கள் மற்றும் தொற்று வார்டு என எல்லா வார்டுக்கும் இந்தப் படை அப்படியே ஊர்வலம் போகும். கோமதிநாயகம் சார், சுப்பாராவ் சார், மாரிமுத்து சார், வைகுண்டராமன் சார் நால்வரும் ஒவ்வொரு வார்டுக்குப் பொறுப்பாக இருப்பார்கள். அதுபோக பெரிய மீசை வைத்த சீனியர் ரெஸிடண்ட் ஒருவரும் உண்டு, செல்லதுரைன்னு நினைக்கிறேன், பெயர் மறந்துவிட்டது. வாட்ட சாட்டமாக ஆறடி உயரத்தில் அய்யனார் மாதிரி இருப்பார். ஆசிரியர்களைவிட அவரிடம்தான் எங்களுக்கு அதிக பயம்.
வார்டு முடித்துவிட்டுதான் ஆப்பரேஷன் தியேட்டருக்குப் போகணும். முதல் முதலாக தியேட்டருக்கு போன அநுபவம் வித்தியாசமாக இருந்தது. என்னமோ நாமளே ஆப்பரேஷன் பண்ணப்போறமாதிரி பந்தாவாக உள்ளே போக நினைச்சால் ஒண்ணும் நடக்காது, குட்டுப்பட வேண்டியதுதான். தியேட்டர் நர்ஸ் மனசு வைச்சால்தான் உள்ளேயே போக முடியும். தியேட்டர் உடை பத்தாது என்று சொல்லி பாதி நாள் துரத்தி விட்டுடுவாங்க. மீறி உள்ளே போனாலும் அறுவை அரங்கில் ஒரு ஓரமா பூனைக்குட்டி மாதிரி நிக்கணும். ஏதாவது தெரியுதான்னு ஸ்டெஃபி கிராஃப் மாதிரி எம்பி எம்பி குதிச்சு பார்க்கணும். ஒண்ணும் தெரியாததால் போரடிச்சுப்போய் மெதுவா ஆப்பரேஷன் நாள் அன்று கட் அடிச்சுட்டு வேறு எங்கேயாவது சுத்தப் போயிடுவோம். கடைசி வருஷம் வரும்போது படிச்சுக்கலாம் என்ற தெனாவெட்டுதான்.
வைகுண்டராமன் சார் உருவத்தில் அதுக்கும் ஆப்பு வந்திடும். சார் குழந்தை நல அறுவை சிகிச்சை முடித்திருந்தாலும் அவர் துறையில் வேகன்ஸி இல்லாத்தால் RH Unit இல் கொஞ்ச நாள் இருந்தார். சும்மா சுத்திகிட்டு இருக்கிற எங்களை மாதிரி ஆட்களைக் காதைப்பிடிச்சு இழுக்காத குறையாக தொற்று நோய் வார்டுக்கு அழைச்சுட்டுப் போயிடுவார். எங்க க்ரூப்பில் இருந்தவங்க எல்லோரும் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவாங்களான்னு தெரியாது. ஆனால் தீக்காயமும், சீழ் பிடித்த புண்களும் எல்லோரும் கண்டிப்பாக குணப்படுத்த வேண்டிய கட்டாயம் வரும் என்று சொல்லி அதற்குரிய விளக்கங்களை அருமையாக சொல்லித் தருவார். சர்க்கரை நோயால் சீழ் பிடித்த பாதங்கள் குறித்து அவர் சொல்லிக் கொடுத்ததெல்லாம் பின் வந்த நாட்களில் எவ்வளவோ நோயாளிகளைக் குணப்படுத்த உதவியிருக்கிறது.
மாரிமுத்து சார் கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் அவ்வப்போது கோபப்படுவதும், எரிந்து விழுவதுமாக இருப்பார். வேறு எந்த யூனிட்டிலும் அவரை விரும்பி சேர்த்துக் கொள்ளாதபோதும் RH unit அவரைத் தாயுள்ளத்தோடு அரவணைத்து வைத்திருந்தது. சுப்பாராவ் சார் ஆங்கில நாவல்களை மாணாக்கர்களுடன் விமர்சனம் செய்து நல்ல சூழ்நிலையை உருவாக்கிவைத்திருப்பார். கோமதி நாயகம் சார் பற்றி நினைத்தாலே சிவப்பு நிற ஏப்ரன் கட்டிக் கொண்டு அறுவை அரங்கில் சுற்றிக் கொண்டிருப்பதுதான் நினைவுக்கு வருகிறது.
உதவி பேராசிரியர்களில் அவ்வப்போது மாறுதல் வந்தாலும் சீஃப் டாக்டர் ஹரிஹரன் சார்தான்.
அவர் சத்தமாகப் பேசி கேட்டதே இல்லை. மிக மென்மையாக பேசுவார். ஆனாலும் அவரது சொல்லுக்கு மூணாவது யூனிட்டே ஆடும். சக பேராசிரியர்களிடம் கண்ணியமாகவும் மரியாதையுடனும் பந்தா இல்லாமல் நடந்து கொள்வார். அவர்களின் சிகிச்சை முறையில் அத்து மீறி தலையிடுவதே இல்லை. சீனிராஜ் சாரும் தன்னைப் போலவே சென்னையிலிருந்து மாறுதலில் வந்திருந்த married bachelor என்பதால் அவரையும் மூணாவது யூனிட் டாக்டர் போலவே சேர்த்துக் கொள்ளும் அளவு எல்லாரிடமும் அன்புடன் பழகக் கூடியவர்.சமீபத்தில் அவரது 92 வது வயதில் மரணமடைந்தார் எனக் கேள்விப்பட்டு முன்னாள் மாணவர்கள் நிறையபேர் அவரது சிறப்புகள் குறித்து வாட்ஸ் அப்பில் எழுதியிருந்தார்கள். எனக்கும் எழுத நிறைய விஷயங்கள் இருந்தது. ஆனால் நேரமின்மையால் அதையே இந்த அலைக்குள் கொண்டுவந்துவிட்டேன்.
என் தம்பிக்கு திடீரென ஒட்டுக்குடல் வீக்கம் ஏற்பட்டு ஹைகிரவுண்டில் அட்மிட் செய்து அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு பண்ணிக் கொண்டிருந்தார்கள், மாலை 4 மணிக்குமேல் அறுவை சிகிச்சை என்று சொல்லியிருந்தார்கள். யாருமே எதிர்பாராத விதமாக ஹரிஹரன் சாரே வந்து அறுவை சிகிச்சை செய்தார், அனைவருக்கும் மிகுந்த ஆச்சரியம். எமர்ஜென்சி அறுவை சிகிச்சைக்கு சீஃப் டாக்டர்கள் வர மாட்டார்கள். நமது யூனிட் மாணவியின் தம்பி என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். என்னை யாரென்றுகூட அவருக்கு சரியாகத் தெரிந்திருக்காது. மூன்றாம் ஆண்டு மாணவர்கள் முக்கியமற்றவர்கள் என்ற தொனியில்தான் மொத்த மருத்துவமனையும் இருக்கும். ஆனாலும் தார்மீக பொறுப்புடன் வந்து தம்பிக்கு அறுவை சிகிச்சை செய்த பெருமைக்குரிய மனிதர். எங்கள் குடும்பத்தில் RH என்ற பெயருக்கு மிகுந்த மரியாதை உண்டு.
உயர்ந்த பதவியில் இருப்பவர்களைப் பற்றி பலவிதமான கருத்துக்களும் கிசுகிசுக்களும் உலவுவதுபோல் சார் பற்றியும் பலவிதமாக பேச்சுக்கள் உலவும். ஆனால் RH unit doctors க்கு மட்டும் அவர்மேல் உள்ள பற்றுதலும் மரியாதையும் என்றுமே குறைந்ததில்லை. மாணவியாக இருந்ததைக் காட்டிலும் house-surgeon ஆக அவர் யூனிட்டில் இருந்தபோது இன்னும் அதிக மரியாதை ஏற்பட்டுவிட்டது. யூனிட் பார்ட்டிக்காக முண்டந்துறை செல்ல ஏற்பாடானபோது நான் மட்டுமே பெண் என்பதால் தயங்கி நின்றபோது பத்திரமாக அழைத்து சென்று வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து ராணி மாதிரி பார்த்துக் கொண்டார்கள். எனது நெருங்கிய நண்பர்கள் தில்லை, தங்கராஜ் பாதுகாப்பு கவசங்களாக இருந்தார்கள்.
Physicians are always Conservative;
Surgeons are always aggressive.

அலை அலை-3

 அலை அலை-3

“மதம்” பிடிக்காத பருவம்.
மலர் பிடிக்காத வயதே இல்லை; காதல் வயப்படாத காளைப் பருவமே அரிது. ஆனால் “மதம்” பிடிக்காத மானிடர்கள் அரிதாகிக் கொண்டே போவது நிகழ்காலம். மதம்னா என்ன என்று கேட்டு, அவற்றைப் புறம் தள்ளிவிட்டுத் துள்ளித் திரிந்த காலங்கள் பழங்கணக்கு பார்ப்பது போல்தான் தெரிகிறது. நாங்கள் இந்துக்கள், அவர்கள் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் என்று பிரித்துப் பேசத் தெரிந்திராத பிள்ளைப் பருவம் கொண்ட அதிர்ஷ்டசாலிகள் நாங்கள்தான். பள்ளிப் பருவம் முடிக்கும் வரைகூட கிட்டத்தட்ட இந்த நிலைதான்.
பொட்டு வைப்பதும் , கோவிலுக்குப் போவதும் ஒரு சாரார்( இந்துக்கள்). பொட்டு வைக்காதவங்க வேதக்காரங்க (கிறிஸ்தவர்கள்) அல்லது பாய் வீட்டுக்காரங்க (முஸ்லீம்கள்), அவ்வளவுதான் எங்களுக்குத் தெரிந்த மத வேறுபாடு. பண்டிகைகளின்போது பலகாரங்கள் மாற்றி மாற்றி பறிமாறிக்கொள்ளப்படும். தீபாவளிப் பலகாரங்களின் சுவைக்கு ஆவலோடு காத்திருப்பதும், கிறிஸ்துமஸ் கேக்கிற்கு எதிர்பார்ப்போடு இருப்பதும், பாய்வீட்டு பிரியாணிக்கு பந்திபோட்டு காத்திருப்பதும் உள்ளூர் மக்களின் யதார்த்தமான பரிவர்த்தனைகள். அண்ணாச்சி என்று அழைத்து தோள்மேல் கைபோட்டுப் பேசும் இயல்பான உறவு முறைகள் அப்போது எல்லோருக்குள்ளும் இருந்தது.
இந்து மதத்தினரே பெரும்பான்மையாக இருந்த ஊர் ஆறுமுகநேரி. ஒவ்வொரு தெரு முனையிலும் ஒரு அம்மன் கோவிலோ பிள்ளையார் கோவிலோ சிவன் கோவிலோ இருக்கும். ஆனாலும் அதன் ஊடாகவே சிலுவை தாங்கிய சர்ச்சும் தனித்துவத்துடன் இருக்கும். ஊரின் முக்கிய சந்திப்பான பள்ளிவாசல் மசூதியின் அடையாளமாக ஊரின் நடுநாயகமாக இருக்கும். மார்கழி பஜனையும் நோன்பும், லெந்து கால பூஜைகளும், ரம்ஜான் நோன்பும் அதனதன் போக்கில் ஆரவாரமின்றி ஆன்மீகத்துடன் நடக்கும். இன்றைய காலகட்டத்தில்கூட விநாயகர் சிலைகள் காயல்பட்டிணம் ஊர்வழியே ஊர்வலமாகச் சென்று அங்குள்ள கடலில்தான் கரைக்கப்படுகின்றன.
“கண்ணாத்தா எங்க மாரியாத்தா” போன்ற பாடல்கள் லவுட் ஸ்பீக்கரில் பாடும்போது கேட்டு எப்படி மனப்பாடம் ஆகியிருக்குமோ அது போலவே “தந்தானைத் துதிப்போமே ” பாடலும் மனப்பாடம் ஆகியிருக்கும். மசூதியிலிருந்து ஒலிக்கும் அல்லாஹு அக்பரும் மனதை வருடிச் செல்லும். நாங்க உருண்டு புரண்ட மண்ணுக்கே தரம் பிரிக்கத்தெரியாது. திருச்செந்தூர் முருகனும், வீரபாண்டிய பட்டிணம் மேரி மாதாவும், காயல்பட்டிணம் மசூதிகளும் இரண்டு மூன்று கி.மீ.கள் இடைவெளியில் அடுத்தடுத்து இருக்கும். மூன்று ஊர்களுமே கடற்கரைக் கிராமங்கள். திருச்செந்தூர் கோபுரம்,மாதா கோவிலின் கோபுரம், மசூதியின் கோபுரம் எல்லாமே கடற்கரையின் பின்னணியில் கம்பீரமாக எழுந்து நின்று கண்ணைக் கவருமே தவிர ஒருநாளும் கலவரத்திற்கு வித்திட்டதில்லை. மூன்று ஊரின் குழந்தைகளும் கலந்து பயின்ற பள்ளிகளிலும் எந்த பிரிவினைகளும் போதிக்கப்படவில்லை.
மத நல்லிணக்கத்துக்கு சாட்சியாக உருவாக்கப்பட்டதுதான் நாங்கள் படித்த பள்ளி- “காயல்பட்டிணம் ஆறுமுகநேரி உயர்நிலைப் பள்ளி”. இரண்டு ஊர் குழந்தைகளும் சமமாகப் படித்து முன்னேறவேண்டும் என்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின் தங்கிய எண்ணற்ற மாணவர்கள் இன்று சமுதாயத்தில் மிகப்பெரிய பதவிகளை வகித்து ஊருக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்திருக்கிறோம். அப்போதெல்லாம் மதச்சார்பின்மை என்பது எல்லோருக்குள்ளும் இயல்பாகவே இருந்தது. அவையெல்லாம் தொலைந்துபோய் மதம் என்ற மதம் எல்லோரையும் எப்போது பிடித்தது என்பதே புரியவில்லை.
இப்ராஹிம் சார் , குழைக்காதன் சார், அந்தோணிமுத்து சார் என்ற பெயர்களே எங்கள் பள்ளியின் பெருமையைச் சொல்லும். எல்லாம் ஆண் வாத்தியார் பெயர்களே இருக்குதேன்னு தோணலாம். அலெக்ஸ் டீச்சர், ஏஞ்சலா டீச்சர், ஜெய ஜானகி டீச்சர் என்று ஏகப்பட்ட லிஸ்ட் இருக்குது. இப்ராஹிம் சார் கிட்டே கணக்கு கற்றுக் கொள்வது லட்டு சாப்பிடுவது மாதிரி. கணக்கை கல்கண்டு சாப்பிடுவதுபோல் இனிப்பாக்கியவர். நாங்களெல்லாம் அவர்மீது மாறா அன்பு கொண்டவர்கள், அவரோட அபிமான மாணவர்கள். கணக்கில் வீக் ஆக இருக்கும் மாணவர்களுக்கு எங்களை வைத்தே சாயங்காலம் சிறப்பு பயிற்சி அளிப்பார். ஆனால் தப்பு போட்டால் முட்டுக்குக் கீழே உரிச்சு எடுத்திடுவார். அந்த கால கட்டத்தில் ஆசிரியரிடம் அடி வாங்குவதும் சாதாரண விஷயம். இப்போ மாதிரி பெற்றோர்கள் போர்க்கொடி தூக்குவது எல்லாம் கிடையாது. ஒரு மாணவனைத் தண்டிக்க நேர்ந்தால் பெற்றோர்கள் அடித்த ஆசிரியரின் மதத்தை முன்னிறுத்தி சண்டை போடவும் வருவதில்லை.
குழைக்காதன் சாரின் மாணவியாக இருந்ததால்தான் இன்றுவரை பிழையில்லாமல் தமிழில் எழுதுகிறேன். தமிழை சுவாசிக்க வைத்தவர். ”எங்கே அவள்’ என்ற சினிமா பாடலை “எங்கே அவல்” என்று சாப்பாட்டு பட்ஷணமாக்கிய தமிழ்ப் ‘புலவர்’களுக்கும் சலிப்பின்றி தமிழை போதிப்பதில் சாருக்கு இணையே கிடையாது. தப்பு போடும்போது குனிய வைத்து அடிக்க கை ஓங்குவதைப் பார்த்தால் முதுகில் டின் கட்டிவிடுவது போல் தோன்றும். ஆனால் கை கீழே இறங்கும்போது தடவிக் கொடுப்பதுபோல் போய்விடுவார். எங்களுக்கெல்லாம் பிரியமான “பெரியப்பா”.
ஆங்கிலத்துக்கு அந்தோணிமுத்து சார்தான். அவரது உச்சரிப்பும் வகுப்பெடுக்கும் நேர்த்தியும் கிராமப்புற மாணவர்களைக் கூட ஆங்கிலம் இலகுவாக படிக்கும்படி செய்துவிடும். இதே வகையில் தான் அனைத்து ஆசிரியர்களும் எங்களை வழி நடத்தினார்கள், எங்களுக்கு சம தர்மத்தை மறைமுகமாகப் போதித்தார்கள், நாங்களும் சமுதாய உணர்வுமிக்க மாணவர்களாக வெளி வந்தோம். இன்றைய தலைமுறையின் உணர்வுகளும் வாழ்வியலும் மதங்களை முன்னிறுத்தியே செதுக்கப்படுவதுபோன்ற தோற்றம் கவலை அளிப்பதாக உள்ளது. ஆன்மீகமும் அரசியலும் கைகோர்த்துக்கொண்டு அவர்களின் தலைகளைக் கொட்டிக் கொண்டே இருக்கிறது.
நெற்றி நிறைய பூசப்படும் விபூதியும், கழுத்தில் அணியப்படும் சிலுவையும், தலையை மறைத்த முக்காடுகளும் அன்றும் இன்றும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. அவரவர் வழிபாட்டின் அடையாளங்களாக இருந்தவை இன்று பிரிவினையை வலுப்படுத்தும் ஆயுதங்களாக மாற்றப்பட்டுக் கொண்டு இருப்பது காலத்தின் கோலம்.
நாற்பது வருடங்களுக்கு முன்பு “அலைகள் ஓய்வதில்லை” படம் பார்த்துவிட்டு வந்தபோது என்ன உணர்வு இருந்ததோ அதே நிலைமைதான் இன்னும் இருக்கிறது என்பது அயர்ச்சியாக இருக்கிறது. அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகளுக்குள் மதம் என்ற வார்த்தையே இருக்காது கலப்புத் திருமணங்கள் பரவலாக நடந்து பெரிய சமுதாயப் புரட்சியே நடக்கும் என்று நினைத்தோம். ஆனால் முன்பிருந்ததைவிட மதத்தின் பேரால் வன்முறைகள்தான் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
மக்களுக்கான மதம் மக்களை மதம் கொள்ள வைக்காமல் இருக்கட்டும்.
All reactions:
Sivasubbu Kannan Meenakshisundaram, Baskara Pandian and 48 others
21 comments
4 shares
Like
Comment
Share