Tuesday, May 13, 2025

அலை அலை-11

 அலை அலை-11

“தூங்கா இரவு,தொலைந்துபோன உறவு”


கடந்த வெள்ளிக்கிழமை இரவு (25.04.2025) பன்னிரெண்டரை மணியளவில் பிரபா போன் பண்ணி அங்கிள் வாந்தி எடுக்கிறார் கழுத்துவலி மாத்திரை சாப்பிட்டிருந்தார்  என்று கூறிய பொழுதுகூட ஏதோ அஜீர்ண பிரச்னையாக இருக்கலாம் க்ளினிக் கூட்டிவந்து IV Fluids ஏற்றினால் சரியாகிவிடுவார் என்ற நினைப்பில்தான் நானும் எழிலும் போனோம். நான் காரைத் திருப்பி நிறுத்தும்போது வீட்டினுள் சென்று அவரை அழைத்து வந்த எழில் உடனடியாக ECG எடுக்க வேண்டுமென்று சொன்ன நிமிடத்தில் நிலைமை தலை கீழாகிவிட்டது. அளவற்ற வேர்வை, கைகால்கள் ஜில்லென்று குளிர்ந்த நிலைமை. இருதய நோய்தான் என எழில் உணர்ந்துவிட்டதால் பரபரப்பாகிவிட்டது.அந்த நேரத்திலும் “ஒண்ணுமில்லை பாஸ், ஊசி போட்டா சரியாகிவிடும், ECG எல்லாம் வேண்டியதில்லை” என்று மறுப்பு சொல்லிக் கொண்டுதான் பின் சீட்டில் உட்கார்ந்தார். ஒருவித பதட்டத்துடன்தான் வேகமாகக் காரை ஓட்டினேன்.   அசுர வேகத்தில் எமெர்ஜென்சி கூட்டிச் சென்று ECG எடுத்த நிமிடத்தில் மாரடைப்பு என அறியப்பட்டு நிமிடங்களை வீணாக்காமல் வைத்தியம் செய்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்த கணங்கள் திக் திக் எனவே இருந்தது. அடைப்பு நீங்க ஊசி போட வேண்டுமென்று கையெழுத்து கேட்டபோது Streptokinase தானே என வெள்ளந்தியாக பிரபா கேட்டபோதுகூட நிலைமையை அவங்களுக்கு விளக்குவது ஈஸியாக இருந்தது.  நாடித்துடிப்பும் BP யும் பதிவு செய்ய முடியாதபடி collapse ஆகி இருந்த நிலையில் அதற்குரிய வைத்தியமும் உடனடியாக செய்யப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் அடைந்த நிலையில்தான் நாங்களும் கொஞ்சம் தெம்பாக உணர்ந்தோம். அதன்பிறகுதான் பெங்களூருவில் இருந்த மகள் பிரியாவுக்கு விஷயத்தை விளக்கி, Angiogram பண்ணுவதற்குள் வந்து சேர்ந்துவிடும்படி சொன்னேன். மகன் சூர்யா சார்ஜா அருகில் கப்பல் பயணத்தில் இருந்ததால்  தொடர்புகொள்ள முடியாத நிலை. ANGIO முடித்துவிட்டு சொல்லிக் கொள்ளலாம் என நினைத்தோம்.


கார்டியாலஜிஸ்ட் காலையிலேயே Primary Angio பண்ணிவிடலாம்  என சொல்லியிருந்தார். அவர் வரக் காத்திருந்த நேரத்தில் டாக்டர்ஸ் ப்ரின்ஸ் & சித்ராவும் துணைக்கு வந்துவிட்டார்கள். இரவெல்லாம் முதுகுவலிதான் அதிகம் இருப்பதாக சொன்னதால் வலிநீக்கும் மருந்து கொடுத்து அப்போதுதான் தூங்க ஆரம்பித்திருந்தார். ஆனாலும் ப்ரின்ஸ் மெதுவாக கையைத் தடவியதும் கண்களைத் திறந்து டிரேட் மார்க் சிரிப்புடன் பாஸ் என்று அழைத்துவிட்டு மறுபடியும் தூங்க முயன்றார். எனவே அவரைத் தொந்தரவு செய்யாமல் அடுத்திருந்த   ICU Duty roomல் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். கார்டியாலஜிஸ்ட் வருவதற்குள் வீட்டிற்கு சென்று வருவதாக எழில் கீழிறங்கிப் போனார்கள். சில நிமிடங்கள் கழிவதற்குள் ICU Staff பதட்டத்துடன் கூப்பிட்டான். நாலே எட்டில் படுக்கையை அடைந்தபோது கண்ட காட்சி காலத்துக்கும் மனதை விட்டு மறையாது. இருதயம் சட்டெனத் துடிப்பை நிறுத்தியிருந்தது. கைகளை முறுக்கிக் கொண்டு வில்போல் வளைந்த நிலையில் கட்டையாகிப் போனவரைப் பார்த்து அதிர்ச்சி.  நொடிகூட வீணாக்காமல்  CPR கொடுத்து சுவாசக்குழாய் உட்புகுத்தி ஆக்ஸிஜன் செலுத்த ஆரம்பிக்கும்போது கீழே சென்ற எழிலுக்கும் செய்தி சொல்லப்பட்டு உடனே  வந்துவிட்டார்கள். தேவையான ஊசிகளெல்லாம் செலுத்த load பண்ணிய நிமிடத்தில் இருதயம் மறுபடியும் சீராக இயங்க ஆரம்பித்துவிட்டது. 


ANGIO  பண்ணுவதற்காக கார்டியாலஜிஸ்ட்டும் அதே சமயத்தில் வந்துவிட ECG,ECHO எல்லாவற்றையும் மறுபடி பார்த்து தீர்க்கமாக ஆராய்ந்தும் Cardiac Arrest போனதற்கான காரணத்தை அறுதியிட்டு கூறமுடியவில்லை. இதயத்தின் ரத்த ஓட்டம் சீராக இருந்தது, EF என சொல்லப்படும் இதயத்தின் இரத்த வெளியேற்றும் திறன் 50% இருந்தது. இரவில் முதுகுவலி அதிகமாக இருந்ததால் பெருந்தமனி (AORTA) போன்ற ரத்தக்குழாய்களில் ஏதேனும் தொந்தரவு இருந்தால் பெரிய மருத்துவமனையில் வைத்து ANGIO பன்ணுவது உகந்ததாக இருக்கும் என அவர் சொன்னதால் கோவைக்கு செல்ல ஏற்பாடு செய்தோம். Ventilator இல் இணைக்கப்பட்டு Duty Doctor, ரெண்டு ICU Technician, நான், பிரபா எல்லோருமாக ஆம்புலன்ஸில் கோவை ராயல்கேர் மருத்துவமனை கிளம்பினோம். தக்க சமயத்தில் பிரியாவும் வந்துவிட்டதால் காரில் எங்களைப் பின் தொடர்ந்தார்கள். Uncle இன் ஒன்றுவிட்ட சகோதரர் டாக்டர்.சந்திரசேகர் ராயல் கேர் கன்சல்டண்ட் என்பதால் நிமிஷ நேரம்கூட விரையமாக்காமல் நேரடியாக ICUவில் admit செய்துவிட்டார்கள். பெரிய மருத்துவ மனைகளில் டாக்டராக இருந்தாலும் நோயாளியின் உறவினராகவே கருதப்படுவதால் எங்களை வெயிட்டிங் ஹாலில் உட்கார வைத்துவிட்டார்கள். எங்களுடன் வந்த Duty Doctor hand-over பன்ணும்போதே மறுபடியும் இதயம் செயலிழந்து போனதாகக் கேள்வி. அங்கேயும் மிகுந்த பிரயாசைக்குப் பின்  மறுபடியும் இருதயம் துடிக்க ஆரம்பித்திருக்கிறது. 


எங்கே பிரச்னை என்பதை சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்து இரத்தக்கசிவு ஏதும் இல்லாவிட்டால் ANGIO பண்ணிவிடலாம் என்று சொன்னவுடன், அத்தனை பரிசோதனைகளுக்கும் எல்லோரும் ஒருமனதாக சம்மதிச்சுட்டாங்க. சிடி ஸ்கேன்  பண்ணியதில் இரத்தக் கசிவு எதுவும் இல்லை ஆனால் மூளையின் பெரும்பகுதி ஆக்ஸிஜன் கிடைக்காததால் வெளுத்து கிடந்தது மானிட்டரில் காட்டப்பட்டது.  உடனே ANGIOவுக்கும்  அனுப்பி விட்டார்கள். இதயத்துடன் மூளையின் ரத்தக் குழாய்களையும்  பரிசோதிக்கப் போவதாகக் கூறினார்கள். அதற்குள் எழிலும் வந்துவிட்டதால் உள்ளே சென்று Angio பற்றி விளக்கம் பெற்று வந்தார்கள். எஙளுக்கும் பின்பு விளக்கப்பட்டது. இப்போது ஏற்பட்ட அடைப்பு நன்றாக கரைந்து ரத்த ஓட்டம் சீராக இருந்தாலும் , ஐந்துக்கும் மேற்பட்ட பழைய பெரிய அடைப்புகள் மூன்று பெரிய ரத்தக்குழாய்களில் இருந்தது. எனக்கு அதன் தன்மை புரிந்தாலும் உறவினர்களுக்கு மருத்துவர் விளக்கிச் சொன்னார். பல வருடங்களாகவே இருந்திருக்கும், மூன்று குழாய் அடைப்பு என்பதால் stent போட முடியாது, இருதய அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டும், மூளையில் Hypoxic changes (ஆக்ஸிஜன் சப்ளை குறையும் போது வரும் செயலிளப்பு) இருப்பதால் 48 மணி நேரம் கழித்துதான் சொல்ல முடியும் என சினிமாவில் சொல்வது போல் சொல்லிவிட்டார்.


எல்லோரையும் ஊருக்குப் போகச் சொல்லிவிட்டு பிரியாவையும் சீனுவையும் மருத்துவமனையில் விட்டுவிட்டு ஈரோடு திரும்பினோம். ஆனால் காரில் வரும்போதே எழில் என்னிடம் நிலைமையைத் தெளிவாகச் சொல்லிட்டாங்க. மூளைக்கு எடுத்த  ANGIOவை எங்களுக்குக் காட்டவில்லை. கழுத்துக்கு மேல் ரத்த ஓட்டமே செல்லவில்லை, இருபுறமும் Carotid Artery block மூளைச்சாவு அடைந்துவிட்டார், பிழைப்பது கடினம் என்பதை அழுகையுடன் சொன்னாங்க.  மருத்துவர்கள் என்றாலும் நோயின் தன்மை புரிந்திருந்தாலும் மனம் நம்ப மறுத்தது. ஏதாவது அதிசயம் நடந்து எல்லாமே சரியாகிவிடாதா என்ற நப்பாசை.நாளை காலை கோவை செல்லும்போது படுக்கையில் உட்கார்ந்து நம்மை வரவேற்பார், நான் கனவில் இருக்கிறேன் தூங்கி முழிக்கும்போது அங்கிள் முன்னாடி நிற்பார் என்றெல்லாம் குழப்பமான மனநிலை. இரவெல்லாம் புலம்பலும் அழுகையுமாக கழித்தபோது, அதிகாலையிலேயே பிரியாவின் அழுகையோடு அந்த இடி எங்கள் எல்லோர் தலையிலும் இறங்கியது. “அங்கிள் அங்கிள்”  என நாலு திக்கிலிருந்தும் அவரை அழைக்கும் அவலக் குரல்கள் காதில் விழமுடியாத தூரத்திற்குச் சென்றுவிட்டார். “உறங்குவது போலும் சாக்காடு”- திருக்குறளுக்கு உதாரணமாக தூங்குவது போலவே காட்சி தந்துவிட்டு “உறங்கி விழிப்பதுபோன்றே பிறப்பு” என்ற சொற்களைப் பொய்யாக்கிவிட்டுக் கண்களைத் திறக்காமலே போய்விட்டார். 


ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் மீள்வதில்லை. ஆனாலும் சில இழப்புகளை ஜீரணிக்க முடிவதில்லை. உடன் பிறந்தவர்கள்,பெற்றெடுத்த பிள்ளைகள், உற்றார் உறவினர் என ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அங்கிள் என்ற ஆத்மார்த்த நண்பரைப் பிரிந்த நொடியில் அநாதைகளாகிப் போனோம். எங்கள் குடும்பத்தின் மழலை மாறா குழந்தைமுதல் எண்பதுகளைத் தாண்டிய அக்கா மாமியார் பெரியவர்கள் எல்லோருக்குமே அங்கிள் என்றால் சோம்ஸ் எனப்படும் டாக்டர்.சோமசுந்தரம்தான். தனது அப்பா அம்மா இறந்த சமயங்களில் கூட அமைதியுடன் அழுத எழில் அங்கிள் பிரிவில் ஆற்றாமையுடன் புலம்பி புலம்பி அழுத காட்சியைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. பத்து நாட்கள் கடந்தபின்னரும் கண்ணீருக்கு அணை போட முடியவில்லை. புலம்பித் தவிக்கும் மனதுக்கு ஆறுதலும் இல்லை. வழியனுப்பி வைத்துவிட்டு மறுபடியும் வந்துவிட மாட்டாரா என்று வாசல் பார்த்து ஏங்கிக் கிடக்கிறோம்.

அலை அலை-10

 அலை அலை-10

 “ஆள் பாதி ஆடை பாதி”.


”சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு” பாட்டு கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனால் இப்போதெல்லாம் புடவையில் பெண்களைப் பார்ப்பதுதான் அரிதாகிக் கொண்டிருக்கிறது. சுடிதார் ஜீன்ஸ் மிடி போன்ற ஆடைகளின் நடுவே புடவை நொந்து நூலாகிக் கந்தலாகிக் கொண்டிருக்கிறது. தற்போதைய அவசரம் மற்றும் நேரமின்மையால் இலகுவாக அணியும் ஆடைகளே தேர்வாகும்போது புடவை பின்னுக்குத் தள்ளப்படுகிறது. சேலை கட்டுவதுதான் தமிழர் பண்பாடு, கட்டாமலிருப்பது கலாச்சார சீரழிவு என்று பேசும் கும்பலுடன் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் சேலைமீதான காதலும் அது தொடர்பான பழைய நினைவுகளும் என்னுள் மிக நெருக்கம்.பதின்ம வயதுகளில் பாவாடை தாவணி (அரை சீலை) கட்ட ஆரம்பித்ததிலிருந்து அரை நூற்றாண்டுக்கும் மேல் தாண்டிய உறவு அது. 


அக்காவின் பாதியாகக் கிழித்த புடவைதான் முதல் முதலாகப் போட்ட தாவணி. அப்போது  தாவணி போடுவது அவ்ளோ இம்சையாகத் தெரியும். வகுப்புத் தோழி லக்ஷ்மி மட்டும் தாவணி அணியாமல் பாவாடை சட்டை போட்டு  ஸ்டைலாக வருவதைப் பார்க்கும்போது நாம மட்டும் எதுக்கு பாட்டி மாதிரி தாவணியைச் சுத்திக்கணும்னு கடுப்பாக இருக்கும். ஆனால் வளர்சிதை மாற்றம் நடக்கிற மாதிரி அப்போதிருந்தே சேலை உடம்பின் ஒரு அங்கம் போல் ஆகிவிட்டது. முதலில் எல்லாம் மரப்பாச்சிக்கு துணி சுத்தி விட்டமாதிரி காமா சோமா என்று தாவணி போடுவேன். அந்த பருவமும் டக்குன்னு போயிடுச்சு. மருத்துவக் கல்லூரி வந்ததும் சேலைதான் கட்டணும்னு dress Code இருந்துச்சு.தாவணிக் கனவுகளுக்கு டாட்டா சொல்லிட்டு பதினாறும் நிறையாத பருவ மங்கைகள் எல்லாம் பரிதாபமாக சேலையில் சுற்றினோம்.


சென்னை சில்க்ஸ் விளம்பரம் மாதிரி அடுக்கடுக்காக புடவைகள் எங்க யாரிடமும் இருக்காது, மொத்தமே நாலைந்துதான் இருக்கும். அதுவும்கூட கல்லூரிக்கு செல்வதற்கென்று அப்போதுதான் வாங்கித் தந்திருப்பாங்க. பள்ளிப் பருவத்திலிருந்தே விடுதிகளில் தங்கிப் படித்திருந்த நளினி, விஜி மாதிரி ஆட்கள் neat ஆக பெட்டிகளில் அடுக்கியும் ஒழுங்குபட கப்போர்டுகளில் எடுத்து வைத்தும் அம்சமாக settle ஆயிட்டாங்க. அவங்களுக்குப் புடவை கட்டுவதும் கைவந்த கலையாக இருக்கும். எப்படியோ நாங்களும் கொஞ்சம் கொஞ்சமா பழகி சேலை கட்டும் மாந்தர் குழுவில் சேர்ந்து கொண்டோம். கல்லூரியிலிருந்து வந்ததும் சேலையை உருவி மூலையில் எறிந்துவிட்டு வீட்டுக்குக் கட்டும் உடைக்கு மாறுவதுதான் அநேகமா எல்லோருக்கும் routineஆகப் பிடித்த விஷயம். நைட்டி, சுடிதார் போன்ற  ‘நாகரீக’ உடைகளெல்லாம் அப்போது கிடையாது. பாவாடை தாவணிதான் ஹாஸ்டல் டிரெஸ். மலையாளக் கரையிலிருந்து வந்தவர்கள் கைலி சட்டையுடன் சுற்றுவார்கள். அண்ணன்களின் பழைய சட்டைகளும் பாவாடையும்தான் எனக்குப் பிடிச்ச உடை. கொஞ்சம் பையன் மாதிரியே அலைவேன். சில ஆசாமிகள் ஹாஸ்டலிலும் சேலைதான் கட்டுவாங்க. சில வருஷங்களுக்குப் பிறகுதான் நைட்டியே பிரபலமானது. சரசக்காவும் நயினார் அண்ணனும்தான் எனக்கு நிறைய புடவைகள் எடுத்து தந்திருப்பாங்க. கல்லூரியின் முதல் நாள் அன்று அண்ணன் எடுத்துக் கொடுத்த பச்சைக்கலர் சுங்கிடி சேலையும் கையில் ஆங்கில நாவலுடனும் அமர்ந்திருந்த என்னைப் பார்த்து சீனியர் என்று நினைத்ததாக வகுப்புத் தோழியர் அப்புறமா சொன்னாங்க.


பெண்களுக்குப் புடவை என்பது default dress ஆகிப் போனதுபோல் ஆண்களுக்கு பேண்ட்தான் ஒரே அலங்காரம். ஜீன்ஸ் பேண்ட் எல்லாம் புழக்கத்தில் இருந்ததா என்றே தெரியவில்லை.  “ஒருதலை ராகம்” மாதிரி படங்கள் வந்ததிலிருந்து Bell-bottom, ELEPHANT-bottom என்று பேண்ட் அடிப்பாகம் பாவாடை ரேஞ்சுக்கு விரிந்துகொண்டே போனது. ரொம்ப அகலமா போட்டுட்டு வந்த நண்பர் ஒருவருக்குப் “பாவாடை” என்றே பட்டப்பெயர் சூட்டியிருந்தோம். பழைய டைட்ஸ் பேண்ட்களை யானைக்கால் ஆக்குவதற்காக முக்கோண வடிவத்தில் இணைப்புகள் வைத்து தைத்து  ஸ்டைலாக அலைபவர்களும் இருந்தார்கள். சினிமாவில் ஃபேஷன் மாறும்போது மறுபடியும் ஸ்டைல் மாறிவிடும். நல்ல வேளையாக ஆசிரியர்கள் யாரும் அந்த மாதிரி ஸ்டைல்களை பரிசோதனை செய்து பார்க்கவில்லை. எழிலை முதல் முதலில் பார்த்ததுகூட பெல் பாட்டம் பேண்ட்டில்தான். சட்டையில்தான் கொஞ்சம் மாடல் காட்டுவாங்க. முழுக்கை அரைக்கை, டக் பண்ணுவது, வித விதமா பெல்ட் போடுவது என்று எப்படியெல்லாமோ ஸ்டைல் காட்டுவாங்க. எத்தனை ஸ்டைல் மாற்றினாலும் ஆண்களின் உடைகள் ரெண்டு மூணு கலர்களில் முடிந்துவிடும். ஆனால் புடவைகளில் எத்தனை வகைகள், நிறங்கள், ஸ்டைல்கள். பெண்கள் பட்டாம்பூச்சியாய்ப் பறப்பது போல் தோன்றுவது நிச்சயமாய்ப் புடவையின் கருணையால்தான். 


புடைவை கட்டுவதிலேயே கூட பலவித ஸ்டைல் காட்டுவார்கள். மேல் முந்தானையைப் போர்த்திக்கொண்டு சிலர் போவார்கள்,புயலில் சிக்கியது போல் பறக்கவிட்டுக் கொஞ்சம் பேர்  செல்வார்கள். அழகாக மடிப்பெடுத்து பின் பண்ணிச் செல்லும் கோஷ்டியும் உண்டு. முந்தானையைப் போர்த்தி பிளவுஸில் சொறுகிக் கொள்வது  மீனாக்காவின்  ஸ்டைல். என் ரூம்மேட் விஜி அழகாகப் புடவை கட்டிக் கொள்வாள். எனக்கு எப்பவுமே கசமுசான்னுதான் கட்டத் தெரியும், ஒரு ஒழுங்குக்குள் கட்டத் தெரியாது. நெட்டை நெட்டையா இருக்கிற நளினி, ஹேமா, விசா எல்லாம் நீட்டாகக் கட்டுவாங்க. பானுவுக்குப் புடவை ரொம்ப அம்சமா இருக்கும். யாராக இருந்தாலும் கல்லூரிக்குள் நுழையும்போது  முந்தானையை இடுப்பில் சொறுகிக் கொண்டுதான் வர வேண்டும். கோட் போடும்போது எல்லா ஸ்டைலும் மூடப்பட்டுவிடும். “குஷி” ஸ்டைலில் நோயாளிகள் யாரும் சேட்டை பண்ணமுடியாது.


கல்லூரி விழாக்கள் வந்து விட்டால் யார் புடவை யார்மேல் போர்த்தியிருக்கிறது என்றே தெரியாது. நிறைய பேருக்குப் பட்டுப் புடவையே இருக்காது. நிறைய வைச்சிருக்கிறவங்க மத்தவங்களுக்குக் கடன் கொடுத்திடுவாங்க. கடுமையா ராகிங் பண்ணும் அக்காமார்கள் தங்கச்சிகளுக்கு தாராளமா கொடுப்பாங்க. எனக்கு நயினார் அண்ணன் இரண்டு பட்டுப் புடவைகள் எடுத்துத் தந்திருந்தான். மெரூன் கலரில் ஒன்றும் கருநீலக் கலரில் ஒன்றும்.  என்னோட எல்லா விசேஷத் தருணங்களிலும் அதைத்தான் உடுத்தியிருப்பேன். நிறைய புகைப்படங்களில் அவைதான் இருக்கும். முதல் முதலாக பரப்பாடியில் நண்பர் பாலுவின் திருமணத்திற்குத்தான் அந்த கருநீலப் புடவையைக் கட்டினேன்.  இன்னும் அதை பத்திரமாக வைத்திருக்கிறேன். இப்போது பீரோ நிறைய பட்டுப்புடவைகள் இருந்தாலும் அந்த நீலப் புடவை ரொம்ப ஸ்பெஷல். அலீஸ் கூட அந்தப் புடவையை அடிக்கடி ஆசைப்பட்டுக் கட்டியிருக்கிறாள். 


வருடங்கள் ஓடிப்போய் வயது கூடிய தருணங்களில்தான் சுடிதார் அணிய ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் ரெடிமேடு ரொம்பக் குறைவு. தையற்காரர் கருணையைப் பொறுத்து ஸ்டைல் சுடொதார் கிடைக்கும். முதலில் நெடுந்தூரப் பிரயாணங்களுக்கு மட்டும் என்றும் பிறகு சுற்றுலாக்களுக்கு செல்லும்போது மட்டும் என்றும் அணிய ஆரம்பித்தேன். மெதுவாக இரவு நேரங்களில் பிரசவத்துக்குப் போகும்போது அப்புறம் GH duty நாட்களில் என்றெல்லாம் அணியத்தொடங்கி இப்போது முழுநேர உடையே சுடிதார் என்பது போல் ஆகிவிட்டது. இலகுவாக வேகமாக கிளம்ப தோதாக இருப்பதால் புடவையை ஓரம் தள்ளிவிட்டு மெயின் ரேக்குகளில் சுடிதார்தான் இடம் பிடித்திருக்கிறது.ஆரம்பத்தில் சுடிதார் போடும் போதெல்லாம்  “ பூவே பூச்சூடவா” பத்மினி மாதிரி (பாட்டி மாதிரியாம்) இருப்பதாக எழில் கேலி பண்ணிக்கொண்டே இருப்பாங்க. அப்புறம் அவங்களே ரெக்கமண்ட் பண்ணும் நிலை வந்துவிட்டது. சிசேரியனுக்கு சேர்ந்து செல்லும்போது புடவை கட்ட ஆரம்பிச்சால் அவங்க பொன்னான நேரம்தானே விரயம் ஆகும். ஜீன்ஸ் எல்லாம்  நாப்பது வயசுக்கு மேலேதான் பரிச்சயமே ஆனது. நாத்தனார் மூத்தனார் எல்லாம் டெல்லி அமெரிக்கா என இருப்பதாலும் அடிக்கடி அங்கெல்லாம் ஊர் சுற்ற செல்வதாலும் மாடர்ன் டிரெஸ்கள் அன்றாட வாழ்க்கைக்குள் அத்தியாவசியமாகிவிட்டது. எங்க மகப்பேறு மருத்துவர் குழுமத்தின் டூர் கொள்கைகூட “ NO SAREE THEME”  என்பதால் எண்பது வயது முதுநிலை மேடத்துக்குக் கூட ஸ்பெஷலா சுடிதார் தைத்து போட வைத்து டூர் போனோம்.

எல்லாத்துக்கும் மேலாக மகளும் நானும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருப்பதால் புதுப் புது டிஸைன்களில் உடைகள் அவளிடமிருந்து சப்ளை ஆகிக் கொண்டே இருக்கும். நானும் அல்ட்ரா மாடர்ன் ஆச்சி ஆக வலம் வருகிறேன்.எங்க வீட்டிலும் ஏகப்பட்ட பெண்பிள்ளைகள் இருப்பதால் உடைகள் கைமாறிக் கொண்டே இருக்கும். நல்ல வேளையாக அடுத்தவங்க உபயோகித்த உடையை அணிய மாட்டோம்னு சொல்ற சூப்பர் சுத்தம் ஆசாமி யாரும் எங்க குடும்பத்தில் இல்லை. அவ்வப்போது எடுத்துக் கொடுத்தாலும்கூட அட்சய பாத்திரம் மாதிரி புடவை  கப்போர்டில் இருந்து வந்துகொண்டே இருக்கும். 


புடவைதான் கலாச்சாரமா சுடிதார்தான் சுகமா ஜீன்ஸ்தான் சிம்பிளா என்று அடுக்கடுக்கான விவாதத்துக்கான தலைப்பில் எங்கள் ஆடைகளின் சங்கமம் இருப்பது பெருமைதான். ஆனால் கருத்துக் கணிப்பில் புடவைதான் முதலில் இருக்கும் என்பது உறுதி. பெண்களுக்கு GIFT கொடுக்கணும்னா சேலை வாங்கிக் கொடுப்பது ஈஸி. அளவு வயசு கலர் எதுவுமே பார்க்க வேண்டியதில்லை. பர்ஸில் இருக்கும் பணத்தை மட்டும் பார்த்தால் போதும்.